Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

மலையருவி (நாடோடிப் பாடல்கள்)
பர்ஸி மாக்வீன் (சேகரிப்பு),
கி.வா. ஜகன்னாதன் (தொகுப்பு)
பாகம் -2 (பாடல்கள்)

malaiyaRuvi - folk songs collection
Parsi Macqueen (collection),
ki.vA. jakkannAtan (edited)
part -2 (songs)
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a soft copy of this work
The etext has been generated using Google Online OCR tool and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2017.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/

-----------

மலையருவி
(நாடோடிப் பாடல்கள்)
பர்ஸி மாக்வீன் என்பவரால் சேகரிக்கப்பட்டு, கி.வா.ஜகந்நாதன்
அவர்களின் முகவுரையுடன்


Source:
மலையருவி
(நாடோடிப் பாடல்கள்)
Mr.பர்ஸி மாக்வீன்,I,C,S., என்பவரால் சேகரிக்கப்பட்டவை
கலைமகள் ஆசிரியர்: கி.வா.ஜகந்நாதன்,
அவர்களால் தொகுக்கப்பட்டு, நாடோடிப் பாடல்களைப் பற்றிய
விரிவான முகவுரையுடன் பதிப்பிக்கப்பட்டது
--------------
பாடல்கள் உள்ளடக்கம்


    1. தெம்மாங்கு
    2. தங்கரத்தினமே!
    3.ராசாத்தி!
    4. ஆண் பெண் தர்க்கம்
    5. தொழிலாளர் பாட்டு
    6. கள்ளன் பாட்டு
    7. குடும்பம்
    8. தாலாட்டு
    9. சிறுவர் உலகம்
    10. புலம்பல்
    11. கும்மி
    12. தெய்வம்
    13. பல கதம்பம்
    -------------

1. தெம்மாங்கு

செம்பிலே சிலைஎழுதி - மாமா
      செல்வத்திலே நான்பிறந்தேன்

வம்பிலேதான் கைகொடுத்து - மாமா
      வார்த்தைக் கிடம்ஆனேனே!         1

கண்டி கொளும்பும்கண்டேன் - சாமி
      கருங்குளத்து மீனுங்கண்டேன்

ஒண்டி குளமும்கண்டேன் - சாமி
      ஒயிலாளைக் காணலையே!         2

ஏழுமலைக் கந்தப்பக்கம் - சாமி
      இஞ்சிவெட்டப் போனபக்கம்

கண்சிவந்து வந்ததென்ன - சாமி
      கடுங்கோபம் ஆனதென்ன?         3

மூக்குத்திக் தொங்கலிலே - குட்டி
      முந்நூறு பச்சைக்கல்லு

ஆளைத்தான் பகட்டுதடி - குட்டி
      முந்நூறு பச்சைக்கல்லு.         4

சந்தனம் உரசுங்கல்லு - குட்டி
      தலைவாசலைக் காக்குங்கல்லு

மீன்உரசுங் கல்லுக்கடி - குட்டி
      வீணாசைப் பட்டாயோடி.         5

ஆசைக்கு மயிர்வளர்த்து - மாமா
      அழகுக்கொரு கொண்டைபோட்டுச்

சோம்பேறிப் பயலுக்குநான் - மாமா
      சோறாக்க ஆளானேனே!         6

வெள்ளைவெள்ளை நிலாவே - சாமி
      வெளிச்சமான பால்நிலாவே

கள்ள நிலாவேநீ - சாமி
      கருக்கலிட்டால் ஆகாதோ?         7

கும்பகோணம் ரெயிலுவண்டி - குட்டி
      குடிகெடுத்த தஞ்சாவூரு

தஞ்சாவூரு தாசிப்பொண்ணு - குட்டி
      தாயைமறக் கடிச்சாளடி.         8

வெட்டிப்போட்ட காட்டுக்குள்ளே - குட்டி
      வெறகொடிக்கப் போறபொண்ணே

கட்டைஉன்னைத் தடுத்திடாதா - குட்டி
      கரடிபுலி தாவிடாதா?         9

ஆத்திலே தலைமுழுகி - குட்டி
      ஆயிரங்கால் பட்டுடுத்தி

ஊத்துப்பக்கம் உட்காந்துநீ - குட்டி
      போட்டுக்கோடி வெற்றிலையை.         10

கொக்குப் பறக்குதடி - குட்டி
      கோணல்வாய்க்கால் மூலையிலே

பக்கத்திலே உட்கார்ந்துநீ - என்னைப்
      பதறவிட்டுப் போனாயேடி.         11

காப்புக் கலகலென்னக் - குட்டி
      கைவளையல் ரெண்டும்மின்ன

மூக்குத்தி வேறேமின்னக் - குட்டி
      முகமுங்கூட மின்னுதடி.         12

வண்டியும் வருகுதடி - குட்டி
      வடமதுரை டேசனிலே

தந்திபோய்ப் பேசுதடி - குட்டி
      தம்புசெட்டி மெத்தையிலே.         13

காளைநல்ல கறுப்புக்காளை - குட்டி
      கண்ணாடி மயிலைக்காளை
சூடுவச்ச வெள்ளைக்காளை - குட்டி
      சுத்துதடி மத்தியானம்.                         14

ஆறுசக்கரம் நூறுவண்டி - குட்டி
      அழகான ரெயிலுவண்டி
மாடுகண்ணு இல்லாமல்தான் - குட்டி
      மாயமாத்தான் ஓடுதடி.         15

பூத்தமரம் பூக்காதடி - குட்டி
      பூவில்வண்டு ஏறாதடி
கன்னிவந்து சேராவிட்டால் - என்
      காதடைப்பும் தீராதடி.         16

செக்கச் சிவந்திருப்பாள் - குட்டி
      செட்டிமகள் போலிருப்பாள்
வாரி முடிஞ்சிருப்பாள் - குட்டி
      வந்திருப்பாள் சந்தைக்கடை.         17

முட்டாயி தேங்குழலு - குட்டி
      முறுக்குலட்டுப் பூந்திவடை
தட்டாமே வாங்கித்தாரேன் - குட்டி
      தங்கமேநீ வாய்திறந்தால்.         18

பாசம் பிடிக்கும்தண்ணி - குட்டி
      பலபேர் எடுக்கும்தண்ணி
அத்தைமகள் எடுக்கும்தண்ணி - குட்டி
      அத்தனையும் முத்தல்லவோ?         19

நீட்டினகால் மடக்காமல்நீ - அடி
      நெடுமுக்காட்டை எடுக்காமலே
காட்டினாயே கருமூஞ்சியை - அடி
      கருங்கழுதை மூஞ்சிபோலே.         20

சக்கிலியப் புள்ளேநான் - குட்டி
      சாதியிலே எளியசாதி
சத்தியமாச் சொல்கிறேன்நான் - உன்னை
      எப்போதும் மறக்கமாட்டேன்.         21

பச்சைப் புடைவைக்காரி - அம்மா
      பாதிரிவீட்டுத் தண்ணிக்காரி
கண்டால் வரச்சொல்லுங்க - அம்மா
      காரமடை டேசனுக்கு.         22

கம்புநல் லாவிளைஞ்சு - குட்டி
      கதிர்விடும் நாளையிலே
கம்பைத்தின்னக் கும்பலாத்தான் - குட்டி
      காட்டுக்கிளி பறக்குதடி.         23

எல்லாரு வண்டியிலே - சாமி
      எதுக்கும்உத வாதுவரும்
என்புருசன் வண்டியிலே
      ஏலமும் கிராம்பும்வரும்.         24

உப்புப்பாரம் ஏத்தும்வண்டி - குட்டி
      உப்பிலிபாளையம் போகும்வண்டி
உப்புநல்லா வித்துச்சுண்ணா* - உனக்குக்
      கொப்புச்செஞ்சு போடுவேண்டி.         25
----------
* விற்றதென்றால்,
-----------------

கன்னியா குமரியிலே - குட்டி
      கடுங்குமரி வண்ணாத்தியே
குன்னிப்பழம் தின்னப்போய்க் - குட்டி
      குருவிநிறம் ஆனாயேடி.         26

ஆர்க்காட்டுக் காரப்பெண்ணே - குட்டி
      அழகுநடை நடக்கும்பொண்ணே
தஞ்சாவூரு ராசாவுக்குக் - குட்டி
      வெண்சாமரை வீசுறாயா?         27

கூடி இருந்தஇடம் - குட்டி
      கும்மாளம் போட்டஇடம்
வாழைப்பழம் தின்றஇடம் - குட்டி
      பாழாய்க் கிடக்குதடி.         28

நடையிலே பல்விளக்கிக் - குட்டி
      நாணயமாய்ப் போறபொண்ணே
இடையிலுனக்கு வாழ்வுவந்தால் - குட்டி
      என்னைநீ மதிப்பாயோடி?         29

நல்லநல்ல பில்லைக்காளை - மாமா
      நயனமுள்ள கொம்புக்காளை
கொம்புக்காளையை வித்துட்டாலும் - நீ
      குமரிகொள்ளப் போறதில்லை.         30

சந்தையிலே மருக்கொழுந்து - குட்டி
      சரசமாத்தான் விற்குதடி
கையிலொரு காசும்இல்லை - குட்டி
      கடன்கொடுப்பார் ஆரும்இல்லை.         31

ஆலம் விழுதுபோலே - குட்டி
      அந்தப்பிள்ளை தலைமயிரை
ஆளுஒண்ணும் பார்க்காமல்தான் - குட்டி
      ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே.         32

தெற்கத்தி அண்ணன்மாரே - அப்பா
      திருநெல்வேலித் தம்பிமாரே
என்புருசன் வண்டியைத்தான் - நீங்கள்
      எதிர்க்கவரக் கண்டீங்களா?         33

நெத்திக்குச் சுட்டிகட்டி - மாமா
      நேர்விழிக்கு மையெழுதிக்
கள்ள நடைநடக்கும் - அந்தக்
      கவுண்டப்பிள்ளை எந்தஊரு?         34

கார்த்தியில்நான்* கண்டெடுத்த - குட்டி
      கனகமணி ரத்தினத்தைப்
போட்டுத்தான் கழட்டிவைக்கக் - குட்டி
      புண்ணியம்நீ செய்தால்என்ன?         35
------------
* கார்த்தி - கார்த்திகை.
------

போறவனே போறவனே - அடே
      பெங்களூரு போறவனே
மாயவனைத் தந்தவனே - ஒரு
      மருந்துசொல்லிப் போடாமூடா.         36

கட்டையெல்லாம் வெட்டிவிட்டு - அடே
      காட்டைஉழப் போறவனே
கஞ்சிக்கவலை தீர்ந்திட்டாலும் - உனக்குக்
      காதடைப்பும் தீராதடா.         37

மூக்குச் சிவந்தபொண்ணே - அடி
      மூணுபணம் கேட்டபொண்ணே
நாக்குச் சிவந்தபொண்ணே - குட்டி
      நான்தாண்டி உன்புருசன்.         38

வட்டவட்டப் பாறையிலே - குட்டி
      வரகரிசி தீட்டையிலே
ஆர்கொடுத்த சாயச்சீலை - குட்டி
      ஆலவட்டம் போடுதடி?         39

ஆருங் கொடுக்கவில்லை - மச்சான்
      அவிசாரிநான் போகவில்லை
வன்பாடு பட்டுநானும் - மச்சான்
      வாங்கினேண்டா சாயச்சீலை.         40

சாயச்சீலை ரொம்பச்சிவப்பு - என்னைக்
      கண்டாக்கக் குறுஞ்சிரிப்பு
குறுஞ்சிரிப்பும் கொண்டாட்டமும் - என்
      கூடவந்தால் தெரியுமடி.         41

பாட்டுக்குப் பாட்டறிவேன் - குட்டி
      பலபாட்டு நான்அறிவேன்
எதிர்ப்பாட்டு பாடாவிட்டால் - நாக்கை
      இழுத்துப்பிடித் தறுத்திடுவேன்.         42

மஞ்சள் புடைவைகட்டி - குட்டி
      மதிலோரமாப் போறபொண்ணே
மஞ்சள்வாடை பட்டுநான் - குட்டி
      மாடோட்டவும் கூடலையே.         43

கூடைமேலே கூடைவச்சு - அடி
      கூடலூரு போறபொண்ணே
கூடைவந்து அரைப்பணமாம் - உன்
      கொண்டைப்பூக் கால்பணமாம்.         44

தண்டை கொலுசுக்காரி - குட்டி
      தாவார வீட்டுக்காரி
கொண்டையிலே பூவுவைக்க - இன்னும்
      கொஞ்சநாளு போகணுண்டி.         45

ஊரார் உறங்கையிலே - குட்டி
      உன்புருசன் தூங்கையிலே
சந்யாசி வேசங்கொண்டு - குட்டி
      சாமத்திலே நான்வருவேன்.         46

குடமெடுத்துக் கூடவந்த - அடி
      கோலவர்ண நீலவண்டே
படமெடுத்த பாம்புபோலே - குட்டி
      பத்துதடி என்மனசு.         47

மலைபோல மாமரமாம் - மாமா
      மாமரத்தில் ஒருஊஞ்சலாம்
மாயக்கிருஷ்ணனைப் போலேநீயும் - மாமா
      மாயஊஞ்சல் ஆடணுமா?         48

கொங்கப் பறச்சிநீ - குட்டி
      குலத்துக்கெல்லாம் கிழ்க்குலம்நீ
சங்குபோடும் கையினாலே - குட்டி
      தண்ணிதரப் பார்க்கிறாயோ?         49

தண்ணியும் நான்தருவேன் - இன்னம்
      தவிக்கும்போது பால்தருவேன்
கூடத்துக்கு வந்தாயானால் - மாமா
      குளிர்ந்ததண்ணி கூடத்தாரேன்.         50

பச்சைமரத்துக் கடியிலேதான் - குட்டி
      பாம்பிருக்கும் தேளிருக்கும்
தட்டுவாணி கொண்டையிலே - குட்டி
      தப்பாமல் பூவிருக்கும்.         51

மஞ்சி மணக்குதடி - குட்டி
      மகராசி கொண்டையிலே
இஞ்சி மணக்குதடி - குட்டி
      இளங்குமரி உன்மேலே.         52

துரையே துரைமகனே - மாமா
      துரைக்கேற்ற மேட்டிபையா
நாற்காலி தூக்கும்பையா - உனக்கு
      நாகரிகம் மிஞ்சுதடா,         53

குங்குமப் பொட்டுவச்சுக் - குட்டி
      கோட்டைவழி போறவளே
குங்கும வாடைபட்டு - எனக்குன்
      கூடவரக் கூடலையே.         54

உச்சி மலைமேலே - குட்டி
      ஊர்க்குருவி கூடுகட்டி
ஆளைக்கண்டு கத்துதடி - குட்டி
      அழகுள்ள அந்தக்குருவி.         55

கன்னி வருவாளென்று - குட்டி
      கட்டிவச்சேன் கூடாரம்
கூடாரம் ரெண்டாச்சேடி - குட்டி
      குறுக்கேஒரு மதிலாச்சடி.         56

நாமிரண்டு பேருஞ்சேர்ந்து - குட்டி
      நல்லஜோடி யாய்இருக்க
நாம்கட்டின கூடாரமே - குட்டி
      நமக்குப்பகை இழுத்துதடி.         57

ஓடுகிற தண்ணியிலே - மீன்
      ஆடுதடி கோரையிலே
பாடுறேண்டி உன்மேலே - குட்டி
      பஞ்சவர்ணக் கிளியேபொண்ணே.         58

ஓடுகிற தண்ணியிலே - அம்மா
      ஒருசொம்புத் தண்ணியெடுத்துப்
பாதம் பணிந்திட்டாலும் - அம்மா
      பையன்வரப் போறதில்லை.         59

முகத்திலே அருப்பமில்லை* - அடே
      முன்னங்கை தடிப்பமில்லை
உடம்பு சிறுத்தபையா - அடே
      உண்ணம்†ஏண்டா வெட்டிப்பேச்சு?         60
-------
* அருப்பம் - அரும்பிய மீசை. உண்ணம் - இன்னம்.
-------------

ரோட்டுக்கு அந்தப்பக்கம் - அவள்
      ஓட்டுவீட்டுக் குள்இருப்பாள்
கெண்டைக்கால் பெருத்தவள்டி - குட்டி
      என்கண்ணுக்குப் பிடிக்காதடி.         61

அரிசி அரிக்கையிலே - குட்டி
      ஆக்கஉலை வைக்கையிலே
சோறும் வடிக்கையிலே - குட்டி
      சோர்ந்துநீ விழுகாதேடி.         62

கஞ்சிக் கலயங்கொண்டு - குட்டி
      கருக்கரிவாள் தோளில்வச்சுப்
பில்லறுக்கப் போறபொண்ணே - ஒரு
      பில்லைமரம் காவலோடி?         63

கொடிபிடுங்கி எள்விதைத்துக் - குட்டி
      கொடிவழியாப் போறபொண்ணே
மழைபெய்து இலைவிழுந்தால் - குட்டி
      மறப்பேனோடி உன்ஆசையை?         64

வாழையடி உன்கூந்தல் - குட்டி
      வயிரமடி பல்லுக்காவி
ஏழையடி நான்உனக்குக் - குட்டி
      இரங்கலையா உன்மனசு?         65

கூடலூரு மேட்டுமேலே - குட்டி
      கூடைமண் எடுக்கும்பொண்ணே
அட்டை கடிக்குதோடி - உன்
      அழகான மேனியெல்லாம்.         66

கான மயிலேஉன்னைக் - குட்டி
      கைவிடுவ தில்லையென்று
மீனாட்சி கோயிலிலே - குட்டி
      வேட்டிபோட்டுத் தாண்டித்தாரேன்.         67

கறுத்தபையா தூண்டிற்காரா - அடே
      கறிக்குரெண்டு மீனுதாடா
சிவத்தபொண்ணே நீவந்தியின்னா - நான்
      சீமைக்கெண்டை ஒண்ணுதாரேன்.         68

கல்லைவெட்டி முள்ளைவெட்டிக் - குட்டி
      கற்றாழைச் சோத்தைவெட்டிக்
குத்துக்கட்டை ரெண்டுவெட்டி - குட்டி
      கோடாலியும் மழுங்கிப்போச்சே.         69

இருப்பதற் கிடமிருக்கோ - சாமி
      இந்திரனே உன்நாட்டிலே
படுப்பதற்குப் பாயிருக்கோ - சாமி
      பாதகனே உன்வீட்டிலே?         70

கட்டில்மெத்தை எல்லாம்இருக்கு - குட்டி
      கால்பிடிக்க ஆள்இருக்கு
தோட்டத்துக்குள் தொட்டில்இருக்கு - குட்டி
      துணைமாத்திரம் இல்லையடி         71

பல்லுப் பணம்பெறுமே - சாமி
      பல்காவியும் விலைபெறுமே
சொல்லும் விலைபெறுமே - சாமி
      சொந்தக்குள்ள மாமனுக்கு.         72

கேட்டேனடி உன்னைநான் - குட்டி
      கெஞ்சினேனே நெஞ்சுலர
மாட்டேனென்று சொன்னாயானால் - குட்டி
      நான்றுகொண்டு செத்திடுவேன்.         73

தங்கத்துக்குத் தங்கம்இருக்கக் - குட்டி
      தனித்தங்கம் நான்இருக்க
பித்தளைத் தங்கத்துக்குக் - குட்டி
      வீணாசை ஏண்டிபட்டாய்?         74

சோறுகொண்டு போறவளே - குட்டி
      செவத்தபொண்ணு சீதாலச்சுமி
கரைமேலே ஏண்டிபோனாய்? - குட்டி
      காற்றும்மணலும் வீசுதடி         75

மதுரைக்கு நேர்கிழக்கே - குட்டி
      மாரியம்மன் தெப்பக்குளம்
தெப்பக்குளம் பார்க்கப்போய் - என்னைத்
      தப்பவிட்டுப் போனவளே.        76

பட்டாக்கத்தியை நான்எடுத்துக் - குத்தி
      பாதையோரம் போகையிலே
காட்டுமிருக சாதியெல்லாம் - குட்டி
      கையெடுத்துக் கும்பிடுண்டி.         77

வெற்றிலை இல்லையடி - குட்டி
      வெறும்வாயா நான்போறேண்டி
கொடுக்கஉனக்கு மனசிருந்தால் - குட்டி
      கூலியாள் பிடிச்சனுப்பு.         78

வங்காள நாட்டுக்கொக்கே - அடி
      வனமேறி மேயுங்கொக்கே
சிங்கார வில்லெடுத்து - நான்உன்
      சிறகெல்லாம் முறிக்கிறேன்பார்.         79

வைக்கோல் துரும்புபோலே - குட்டி
      வயிரக்கட்டைச் செக்குபோலே
சித்ரபுத்ரன் தேரைப்போலே - குட்டி
      சுத்துறாளாம் சின்னப்பொண்ணு.         80

மூணு ஜிலுப்பாக்காரா - அடா
      முறுக்கிவிட்ட மீசைக்காரா
தாழம்பூ வேட்டிக்காரா - மாமா
      தங்கிப்போனால் ஆகாதோ?         81

ஈரோட்டுச் சாயச்சேலை - குட்டி
      இருபத்து நாலுமுழம்
சுத்துக்குப் பத்தலேண்ணு - குட்டி
      சுண்டுறாளாம் மூஞ்சியெல்லாம்.         82

மஞ்சள் புடவைக்காரி - குட்டி
      மாதுளம்பூக் கூடைக்காரி
மஞ்சள் புடவையிலே - குட்டி
      மருக்கொழுந்து வீசுதடி.         83

திண்டுக்கல் திருட்டுப்பொண்ணே - குட்டி
      திசைதப்பிப் போனவளே
பூப்பறித்து விற்கப்போய்க் - குட்டி
      புருசனைநீ தோற்றையடி?         84

ஆரடிநீ புல்லுக்காரி - குட்டி
      அறுகம்புல்லுச் சுங்குக்காரி
சுங்கிலேஒரு சூச்சம்வச்ச - குட்டி
      சுட்டிப்பையன் நான்தானடி.         85

காமத் தலைவலிடி - எனக்குக்
      கண்சிவந்த தலைவலிடி
மாயத் தலைவலிடி - குட்டி
      மருந்துபோட்டும் நிற்கலைடி.         86

சாதிக்கோ ழியைஅடிச்சுக் - குட்டி
      சாறுநல்லாக் காய்ச்சிவச்சு
நல்லெண்ணெய் கூடஊத்திக் - குட்டி
      நடத்துறாளாம் கைமருந்து.         87

வம்பொன்றும்நான் பண்ணலையே - சாமி
      வாக்குவாதம் பண்ணலையே
இன்பம்உங்கள் மேலிருந்தால் - சாமி
      இடைஞ்சல்ஒன்றும் வந்திடாதே.         88

ஆஸ்பத்திரி மூலையிலே - குட்டி
      ஆளடங்கும் சோலையிலே
காபித்தண்ணிநீ தந்ததாலே - குட்டி
      கசக்குதடி என்வாய்பூரா.         89

சந்திரரே சூரியரே - சாமி
      தருமகுல தேவர்களே
இந்திரரைப் பார்த்துத்தான்நான் - சாமி
      எடுத்துச்சொல்வேன் தெம்மாங்கைத்தான்.         90

தெம்மாங்குப் பாட்டுப்பாடிச் - சாமி
      தெருத்தெருவாய்ப் போய்விட்டாலும்
அன்பான வார்த்தைசொல்லிச் - சாமி
      அழைக்கத்தானும் நாதியில்லை.        91

ஆழக் கரையிலேதான் - அடி
      அழகான கல்புதைத்து
நீளக் கரையிலேதான் - அடி
      நின்றடிக்கும் வண்ணாத்தியே.         92

கசக்க அறுபதுநாள் - அடி
      கஞ்சிபோட முப்பதுநாள்
தூக்கியடிக்கத் தொண்ணூறுநாள் - அடி
      தோய்ச்சுப்போட முந்நூறுநாள்.         93

வடிவா வடிவழகா - மாமா
      வட்டமிட்ட பொட்டழகா
சாய்ந்த நடையழகா - மாமா
      சந்தனப் பொட்டழகா.         94

உன்னைநான் விடுவதில்லை - மாமா
      ஒருத்தர்முகம் பார்ப்பதில்லை
என்னஎன்ன நீதருவாய் - மாமா
      என்னைவச்சு ஆதரிக்க?         95

அத்திமர மானேனேநான் - குட்டி
      அத்தனையும் பிஞ்சானேனே
நத்திவரும் பொண்களுக்குக் - குட்டி
      முத்துச்சரம் நானானேனே.         96

கோட்டைக்குள்ளே கொடியிருக்கு - குட்டி
      கொடியைச்சுற்றிப் பழமிருக்கு
சீமையாளும் ராசாவுக்குக் - குட்டி
      சிங்கக்கொடி தானிருக்கு.         97

கண்டிகிண்டி என்னாதேடா - மாமா
      கண்டிக்குநீ போகாதேடா
முத்துவிற்கும் கண்டியிலே - மாமா
      முன்பழக்கம் ஆரும்இல்லை.         98

இடிஇடித்து மழைபெய்யக் - குட்டி
      இருண்டவெள்ளம் திரண்டோடக்
குடைபிடித்து நான்வாறேண்டி - குட்டி
      குமரிப்பொண்ணே எழுந்திரடி.         99

நாவல் பழமேஅடி - குட்டி
      நான்பூசும் சந்தனமே
ஏலம் கிராம்பே குட்டி - உன்னை
      என்னசொல்லிக் கூப்பிடுவேன்?         100

கூப்பிட்ட சத்தத்துக்குப் - பதில்
      குயில்கூவுதுண்ணு நான்இருந்தேன்
கொண்டவன்னு தெரியாமல்நான் - மாமா
      கூசாமல் ஓடியாரலைநான்*.         101
---------------
*. ஓடிவரவில்லை நான்.
----------
கூடார வண்டியிலே - பையா
      குயிலாளைத் தூக்கிவச்சு
தட்டிவிடடா வண்டியைத்தான் - பையா
      சத்திரம் போய்ப்படுப்போம்.         102

வண்டி அலையுதடா - பையா
      வண்டிஓட்டத் தெரியலையோ
மாடலைந்து போகுதடா - பையா
      மதிகெட்ட வண்டிக்காரா.         103

கறுத்த கறுத்தஆடு
      கருவேலங்காய் தின்றஆடு
மெத்தக் கறுத்தஆடு
      மேல்மலையை நோக்குதடி.         104

ஆத்தோரம் கொடிக்காலாம்
      அரும்பரும்பா வெற்றிலையாம்
போட்டால் சிவக்குதில்லை
      பொன்மயிலே உன்மயக்கம்.         105

கான மயிலேஉன்னைக்
      கைவிடலை என்றுசொல்லி
வேலவர் கோயிலிலே
      வேட்டிபோட்டுத் தாண்டித்தாரேன்.         106

சாலை கடந்துவாடி
      சந்தைப்பேட்டை தாண்டிவாடி
ஓடை கடந்துவாடி
      ஓடிப்போவோம் ரெங்கூனுக்கு         107

நேத்துச் சமைந்தபிள்ளை
      நெய்யும்சோறும் தின்றபிள்ளை
பார்த்துகிட்டுப் போறபிள்ளை - உன்
      பல்வரிசை பகட்டுதடி.         108

மூக்கெல்லாம் நீண்டபிள்ளை
      முன்னாலே போறபிள்ளை
நாக்குச் சிவந்தபிள்ளை
      நான்தாண்டி உன்புருசன்.         109

பச்சைப்பச்சைக் கொத்துமல்லி
      பகலெல்லாம் ரத்னவல்லி
நீலவர்ணக் கொத்துமல்லி
      நிற்கட்டுமா போகட்டுமா?         110

சித்தாடை வாங்கித்தாரேன்
      சின்னமடி கட்டித்தாரேன்
பார்த்துப் பொறுக்கிடுங்க
      பத்தினியே மதனியாரே.         111

ஆத்திலே ஊத்துப்பாரு
      அவன்போற நேர்த்திபாரு
முக்காத்துட்டுக் கொப்பைப்பாரு
      முக்காட்டையும் சேர்த்துப்பாரு.         112

தண்டட்டி போட்டபிள்ளை
      தானே வளர்ந்தபிள்ளை
கட்டிக் கொடுக்கலேண்ணு
      முட்டிமுட்டி அழுகிறாளே.         113

எட்டையா புரத்திலேயும்
      எட்டுநாள் பாவைக்கூத்து
பாவைக்கூத்துப் பார்க்கப்போய்ப்
      பசுங்கிளியைத் தப்பவிட்டேன்.         1                 14

எட்டையா புரத்திலேயும்
      நட்டுவச்ச தென்னந்தோப்பு
மகராசன் தென்னந்தோப்பில்
      மயில்வந்து மேய்ந்தடையும்.         115

சிவகிரி ராசாநம்ம
      செல்லத் துரைபாண்டியா
எங்கும்புகழ் பெற்ற எங்கள்
      இரக்கமுள் ளதுரையே.         116

கச்சேரி வாசலிலே
      லட்சம்பேரு நிற்கையிலே
கறுத்தசாமி இல்லாமே
      களையும் பொருந்தவில்லை.         117

கச்சேரி கண்டபிள்ளை
      கையெழுத்துப் போட்டபிள்ளை
போலீசு கண்டபிள்ளை
      போதுமடி உன்உறவு.         118

வண்டக் கிளிமாடென்று
      வாங்கினது அஞ்சுரூபா
வடக்குத்தோட்ட மூலையென்று
      கழற்றுறார்கள் வேலையிலே.         119

அறியாமே ஒருவார்த்தை
      தெரியாமே சொன்னாலும்
அருமை தெரிந்தவரே
      பொறுமை பொறுக்கவேணும்.         120

வெட்டின கையிலே
      தளிர்த்தது மருக்கொழுந்து
பந்து மருக்கொழுந்தைப்
      பாதையிலே கண்டேனடி         121

பல்லு வரிசைக்கல்லோ
      பட்டக்கரை நெற்றிக்கல்லோ
சொல்லு உறுதிக்கல்லோ - உங்களைச்
      சொந்தமென்று எண்ணியிருந்தேன்.         122

ஆசை உறவாகுமோ
      ஆதரவு சோறாகுமோ
வாய்நிறைந்த பல்லுக்காவி
      வயிற்றுப்பசி தீர்த்திடுமோ.         123

கஞ்சிக் கலயங்கொண்டு
      கரைவழியே போறதங்கா
ஓவாக் கலயங்கொண்டு
      உறவுசெய்ய எந்தவிதம்?         124

சீலை எடுத்துத்தாரேன்
      சிவப்புக்குறி போட்டுத்தாரேன்
சாயமுங் காய்ச்சித்தாரேன்
      சாமிபக்கம் போய்விடலாம்.         125

வெள்ளிப் பிடியரிவாள்
      விடலைப்பிள்ளை கையரிவாள்
சொல்லி அடிச்சரிவாள்
      சுழற்றுதடா நெல்கதிரை.         126

சாரட்டு வண்டிக்காரா
      சலங்கைபோட்ட மாட்டுக்காரா
மாட்டை விரட்டாதேடா
      நான்தாரேன் கேட்டுக்காசு.         127

வெள்ளாடு மேய்க்கமாட்டேன்
      வேனிலிலே நிற்கமாட்டேன்
கம்பங்காடு காக்கச்சொன்னால்
      காட்டைவிட்டுப் போகமாட்டேன்.         128

நத்தத்து ரோட்டுவழி
      நான்போறேன் ஒத்தைவழி
மின்னிட்டாம் பூச்சிபோலே
      முன்னேவாடி பொன்மயிலே.         129

ஆட்டுக்காரா மாட்டுக்காரா
      அடைமழைக்கு எங்கிருந்தாய்?
குறும்பன்கம் பிளிக்குள்ளே
      குறுகிக்கிட்டு நான்இருந்தேன்.         130

ஆல மரம்உறங்க
      அடிமரத்துக் கிளிஉறங்க
உன்மடிமேல் நான்உறங்க
      உலகம் பொறுக்கலையே.         131

பொட்டலிலே கிணறுவெட்டிப்
      பொறுக்குக்காளை ரெண்டும்பூட்டி
காப்புப்போட்ட கறுத்தமச்சான்
      கமலைபூட்டத் தெரியலையே.         132

பொட்டுமேலே பொட்டுவச்சுப்
      பொட்டலிலே போறசாமி
பொட்டலிலே பெய்தமழை - உன்
      பொட்டுருகப் பெய்யலையே.         133

ஓடையிண்ணா நல்லஓடை
      ஒளிந்திருக்கப் பூஞ்சோலை
தங்கக் கொழுந்தனுக்குத்
      தலைபார்க்க நல்லஓடை.         134

சதுரகிரி மலையோரம்
      சாய்ந்திருக்கும் திருகுகள்ளி
திருகுகள்ளிப் பூஎடுக்கத்
      திரிந்தேன் சிலகாலம்.         135

ஓணான் முகத்தழகி
      ஒட்டவச்ச காதழகி
ஒட்டவச்ச காதுக்கெல்லாம்
      இட்டேனடி தங்கநகை.         136

அரிசி கடன்வாங்கி
      அந்திக்கடை மீன்வாங்கி
போயிச் சமைக்கவேணும்
      பொல்லாத மச்சானுக்கு.         137

சந்தனமும் மருதமுத்தும்
      சமாசாரம் பேசையிலே
மஞ்சக்கண்ணு மாயாண்டி
      மண்ணுக்கவ்வப் போட்டாண்டி.         138

போன வருசத்திலே
      புகைவண்டிப் பஞ்சத்திலே
தாது வருசத்திலே
      தந்தேனடி வெள்ளிரூபா.         139

வெள்ளைவெள்ளைச் சீலைக்காரி
      வெகுநாள் உறவுக்காரி
வெள்ளைச்சீலை மங்கினாலும்
      வேடிக்கைதான் மங்காதடி.         140

வெற்றிலையைக் கையில்வச்சு
      வெறும்பாக்கை நாக்கில்வச்சுச்
சுண்ணாம்பு ஜாடைசொல்லி
      சுத்துறான்உன் அத்தைமகன்.         141

வாட்டத்து வெற்றிலையை
      வாய்நிறைந்த தம்பலத்தைப்
போட்டும் சிவக்கலையே
      புண்ணியரே என்னசெய்வேன்!         142

செம்பிலே சிலைஎழுதி
      சிவத்தபிள்ளை பேர்எழுதி
வம்பிலே தாலிகட்டி
      வாழமனம் கூடலையே!         143

வாழ்க்கைப்பட மூக்காசை
      வளையல்போடப் பேராசை
கொண்டவனைக் கண்டாக்கக்
      குடலைப் பிடுங்குதடி.         144

உழுகாத மாடேநீ
      உழவறியாக் காளைக்கண்ணே
நடக்காத மாடேநீ
      நாணயமாத் தாறுவாங்கு.         145

ஆலம் விழுதுபோலே
      அவபோகும் ரோட்டுப்பாதை
ஆல மரத்தைப்போலே
      அலைந்தலைந்து வளைந்திருக்கு.         146

கறுத்தபிள்ளை உன்ஆசை
      கழுத்தளவு தண்ணியிலே
சிவத்தபிள்ளை பேராசை
      செத்தாலும் மறப்பதில்லை.           147

இடுப்புச் சிறுத்தவளே
      என்குணத்துக் கேத்தவளே
நடையுஞ் சிறுத்தவளே
      நான்வாறேன் உன்னைத்தேடி.         148

மலைமங்கள தேவியே
      மலைக்குங்கீழே சடையாண்டியே
கொம்புதூக்கி ஐயனாரே
      குழந்தைமேலே வந்திறங்கு.         149

கூந்தல் பனையோரம்
      குளிரான கானலோரம்
ஏந்தும் பலகையிலே
      இருந்துவந்த பகவதியே!         150

ஏலை மலையுங்கண்டேன்
      ஏலமலைத் தோட்டங்கண்டேன்
பாவிப்பயல் பஞ்சம்வந்து
      பண்ணைப்புரத் தோட்டங்கண்டேன்.         151

நாட்டுக்கு நாட்டுமட்டம்
      நம்மரெண்டு ஜோடிமட்டம்
கோட்டுக்குப் போய்விட்டாலும்
      கோடிசனம் கையெடுக்கும்.         152

மலையிலே மாமரமாம்
      மாமனார் குத்தகையாம்
காயெறிந்த குற்றத்தாலே
      கடுங்காவல் கிடைத்ததம்மா.         153

ஏலப் பழம்எடுக்க
      இந்த ஆளு வேணாம்சாமி
கொண்டை போட்ட சண்டாளியைக்
      கொண்டாங்கடா ரெண்டுபேரு         154

கஞ்சாவைக் கொஞ்சம்வச்சுக்
      காகிதத்தை ரொம்பவச்சு
உட்கார்ந்து விற்கிறாராம்
      அப்பராணி செட்டியாரு.         155

முட்டியிலே கூழுக்காய்ச்சி
      மூடிவைக்கும் பண்ணைப்புறம்
அண்டாவிலே சோறாக்கி
      அள்ளிவைக்கும் கூடலூரு.         156

சுக்காங்கல்லுச் சரளைபோலே
      சுரிச்ச கிழவன்வந்து
குமரிகளைக் கண்டுக்கிட்டுக்
      கோதுறானாம் மீசைகளை         157

அத்தைமகன் தொத்தப்பயல்
      ஆளிலேயும் மட்டிப்பயல்
வேப்பெண்ணெய் குடிக்கிப்பயல்
      உதைத்தாண்டி முதுகுமேலே         158

வாழையடித் தோட்டத்திலே
      வடக்குப்பார்த்த ரோதையிலே
ரோதையிலே நான் இருக்க
      ரோட்டுவழி ஏண்டிபோறே?         159

தண்ணி கறுத்திருச்சு
      தவளைச்சத்தம் கேட்டுருச்சு
புள்ளை அழுதிருச்சு
      புண்ணியரே வேலைவிடு.         160

நாழிஎண்ணெய் தேச்சிட்டாலும்
      நயனக்கொண்டை போட்டுட்டாலும்
குலுக்கி நடந்திட்டாலும்
      குமரியாக மாட்டாய்நீயே.         161

ஒட்டஒட்டான் பூவே
      உசக்கஇருக்கும் தாழம்பூவே
கண்ணுவலிப் பூவேஉன்னைக்
      கண்டுரொம்ப நாளாச்சு.         162

குருவனூற்றுக் காட்டிலேநான்
      கூலிக்கு உழுகையிலே
படைத்த கடவுள்போலே
      பறக்குதம்மா மோட்டார்வண்டி         163

குளத்துக்கு அங்கிட்டுநான்
      குதிரைக்குக் கண்ணிவச்சேன்
குதிரைபடும் கண்ணியிலே
      குழந்தைப்பிள்ளை பட்டதம்மா         164

ஆத்துக்கு அங்கிட்டுநான்
      ஆனைக்குக் கண்ணிவச்சேன்
ஆனைபடும் கண்ணியிலே
      அத்தைமகள் பட்டுக்கிட்டாள்         165

பருத்தி எடுக்கையிலே
      பலநாளும் பார்த்தசாமி
ஒருத்தி எடுக்கையிலே
      ஓடிவரக் கூடாதோ?         166

வெள்ளைவெள்ளைச் சீலைக்காரி
      வெள்ளரிக்காய்க் கூடைக்காரி
கோம்பைமலை வெள்ளரிக்காய்
      கொண்டுவாடி தின்னுபார்ப்போம்.         167

கண்டாங்கிச் சீலைக்காரி
      கைரெண்டும் வளையல்காரி
கண்டால் வரச்சொல்லுங்கோ
      ரெண்டாம்நம்பர்த் தோட்டத்துக்கு.         168

ஆலம் விழுதுபோலே
      அந்தப்புள்ளை தலைமயிரு
தூக்கி முடிஞ்சிட்டாளாம்
      தூக்கணத்தாங் கூடுபோல         169

கானகக் கரிசலிலே
      களையெடுக்கும் பொண்மயிலே
நீலக் கருங்குயிலே
      நிற்கட்டுமா போகட்டுமா?         170

பாக்குத் துவர்க்குதடி
      பழையஉறவு மங்குதடி
போட்டால் சிவக்குதில்லை
      பொன்மயிலே உன்மயக்கம்         171

கச்சேரி கண்டபிள்ளை
      கையெழுத்து வச்சபிள்ளை
போலீசைக் கண்டபிள்ளை
      போதுமடி உன்உறவு         172

கறுத்தபிள்ளை முழிசுருட்டிக்
      கதவைஏண்டி திறந்துபோட்டாய்?
கறுத்தநாய் பூந்துக்கிட்டு
      இழுத்துதடி அப்பன்சோற்றை.         173

மண்வெட்டி தோளில்வச்சு
      மண்வெட்டப் போறவனே
மண்ணுத்தூக்க நானும்வாறேன்
      மன்னாஎன்னைக் கூட்டிப்போடா.         174

ரோட்டுமண்ணை யெல்லாம்வெட்ட
      ரோசத்தோடே போறவனே
பிக்காசு கூடஇல்லாமே
      பக்காச்சூரா எங்கேபோறாய்?         175

கூலிவேலை செய்றதுக்குக்
      கூடிப்போகும் கோமுட்டியே
கூடநீ வந்தாயிண்ணால்
      கோடிப்பணம் தாரேனடா.         176

தங்கத்திலே பீலிசெய்யத்
      தட்டான்கிட்டே கொடுத்தேன்பொன்னு
பீலிசெய்ய மாட்டாமே
      பின்வாங்கித்தான் போனானடா.         177

நல்லமூக் குத்திசெய்ய
      நானூறு பொன்கொடுத்தேன்
பொன்னையும் எடுத்துக்கிட்டுப்
      போய்விட்டானே ரங்கூனுக்கு.         178

பாதசரம் செய்யச்சொல்லிப்
      பத்தாயிரம் பொன்கொடுத்தேன்
பாதசரம் செய்யாமல்தான்
      பாவிமகன் ஓடிட்டானே.         179

தங்கத்துக்குத் தங்கங்கொடுத்துத்
      தனித்தங்கமும் சேர்த்துக்கொடுக்கப்
பித்தளைத் தங்கத்தாலே
      பீலிரெண்டாச் செய்தபையா!         180

அழுக்கு எடுக்கும்வண்ணான்
      ஆத்தோரம் போகும்வண்ணான்
உடுப்புத் துவைக்கும்வண்ணான்
      உண்ணம்வரக் காணோமடி.         181

வண்ணாரப் பொண்ணொருத்தி
      கிண்ணாரம் வாசிக்கிறதைக்
கண்ணாலே பார்த்துநானும்
      கண்கலங்கி நின்றேனடி.         182

ஆற்றங் கரையோரமாய்
      அழகாநல்ல கல்புதைத்து
அழுக்கைஅடித் துக்கசக்கும்
      அளகேசவண்ணான் வாறாண்டி.         183

கன்னார முருகாஅடா
      கனஇரும்பு என்னடாநீ
இந்நேரம் என்னடாநீ
      இரும்புத்தடி செஞ்சாச்சாடா?         184

இரும்பைநீ காயவச்சு
      சிறுசம்மட்டியி லேயடிச்சு
பட்டாரெண் டையும்முடிச்சுக்
      கட்டைவண்டி பூட்டிடடா.         185

கள்ளன்கிள்ளன் சாமத்திலே
      கதவுடைத்துப் புகுந்திடாமே
தனிஇரும்பி லேயடிச்சு
      தந்திடடா தாழ்ப்பாள்ரெண்டு.         186

குறும்பொண்ணுஞ் செய்யாதேடா
      இரும்படித்துப் பிழைக்கும்பையா
இரும்புக் குலுமைஒண்ணு
      திரும்பையிலே கொண்டாடாநீ.         187

கொத்துவேலைக் காரப்பையா
      கொத்துவேலை தெரியுமாடா?
கல்லுக்கொத்து வேலையில்லை
      கட்டட வேலையடா இது.         188

சாயக்கல்லெல் லாம்பதித்துச்
      சதுரமாநீ மண்ணுப்பூசி
கூடம்ஒண்ணு கூட்டிக்கட்டிக்
      கூரைபோட்டுத் தருவாயாடா?         189

கண்டவர்கள் சிரிக்காமே
      களிமண்ணிலே கட்டாதேடா
இசைக்கல்லு வரிதப்பாமே
      இரும்புபோலே கட்டணுண்டா.         190

அடிவரிசைக் கல்லுகளும்
      அஸ்திவாரமும் முக்கியண்டா
படிக்கட்டுகள் வைக்கும்போது
      பார்க்காதேடா பராக்குநீ.         191

கம்பு விளைந்துநல்லாக்
      கதிர்விடும் காலத்திலே
காட்டுவெட்டுக் கிளிகளெல்லாம்
      கம்பைவந்து தின்றதடி.         192

காடை கழுத்தறுத்து
      கவுதாரிப் பித்தெடுத்து
கோழி குடலெடுத்து
      கூட்டுறாளாம் கைம்மருந்து.         193

கறுப்பரிசிச் சோறாக்கிப்
      பருப்புக் குழம்புகாய்ச்சி
கிண்ணியிலே போடும்முன்னே
      கைவிலங்கு வந்திடுச்சாம்.         194

ரோட்டோரம் வீட்டுக்காரி
      ரோசாப்பூச் சேலைக்காரி
காதோரம் கொண்டைக்காரி
      கையலைப்பில் கெட்டிக்காரி.         195

குமிளியிலே மூங்கில்வெட்டிக்
      குருவனூற்றுப் பாலங்கட்டிப்
பாலத்து மேலிருந்து
      பந்தடித்தான் பாவிமகன்.         196

இத்தனை இடைஞ்சலிலே
      இருட்டடைஞ்ச கானலிலே
பாறை இடைஞ்சலிலே
      பயமும்ரொம்பப் பிடிக்குதம்மா.         197

கட்டக்கட்ட உச்சிநேரம்
      கரடிபுலி பாயும்நேரம்
ஏத்துமீனு ஏறாதம்மா
      எங்கள்பஞ்சம் தீராதம்மா.         198

சட்டைமேலே சட்டைபோட்டு
      சரிகைச்சட்டை மேலேபோட்டுத்
தோட்டா வெடிஎடுத்துத்
      துரைமாரை முன்னேவிட்டு.         199

சுட்டாராம் லோகன்துரை
      சுருளிமலை கிடுகிடுங்க
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
      . . . . . . . . . . . . . . .         200

ஆற்றிலே வெள்ளம்வர
      ஆளுமுங்கத் தண்ணிவர
தண்ணிவந்த ஆற்றோரம்
      தானா மயங்குறேனே.         201

ஏலத் தடையைநீ
      இணக்கமாக் களையெடுடி
தட்டுப் பலாவேநீ
      தட்டாமே பார்த்துக்கோடி.         202

கானலிலே ரெண்டுமரம்
      கருமிளகு காய்க்கும்மரம்
தன்னாலே காய்க்குமரம்
      தருமருடை ஏலத்தோட்டம்.         203

பொட்டியிலே பழமும்இல்லை
      பழமெடுக்க மனமும்இல்லை
சாக்கிலே போடச்சொல்லிச்
      சவட்டுறாராம் முதலாளி.         204

சிட்டம்பாறைத் தோட்டத்திலே
      சேர்ந்துகளை வெட்டையிலே
அகழுக்குள்ளே நின்னுக்கிட்டு
      அனத்துதம்மா கொம்பானை.         205

சக்குவெள்ளைத் தோட்டத்திலே
      சக்கிலியாள் வேலையிலே
மாட்டுக்கறி இல்லாமே
      மயங்குதம்மா கேப்பைக்களி.         206
------------

2. தங்கரத்தினமே!

தினைக்கொல்லையில்

காடுவெட்டிக் கல்பொறுக்கிக்
      கம்புசோளம் தினைவிதைத்துக்
காலைமாலை காட்டைக்காக்கத் - தங்கரத்தினமே
      கண்விழித் திருந்தாங்களாம் - பொன்னுரத்தினமே. 1

அள்ளிஅள்ளி விதைத்த
      அழகுத்தினை சாகாதடி
மொள்ளமொள்ள விதைத்த- தங்கரத்தினமே
      மொந்தத்தினை சாகாதடி - பொன்னுரத்தினமே. 2

கறுப்பானை ஓடிவரக்
      கள்ளரெல்லாம் தினைவிதைக்க
வெள்ளானை ஓடிவரத் - தங்கரத்தினமே
      வேடரெல்லாம் தினைவிதைக்கப் - பொன்னுரத்தினமே. 3

சின்னச்சின்ன வெற்றிலையாம்
      சேட்டுக்கடை மிட்டாயாம்
மார்க்கட்டு மல்லிகைப்பூ - தங்கரத்தினமே
      (உன்) கொண்டையிலே மணக்குதடி - பொன்னுரத்தினமே. 4

சாலையிலே ரெண்டுமரம்
      சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் - தங்கரத்தினமே
      உனக்கேத்த தூக்குமரம் - பொன்னுரத்தினமே. 5
------------
பாடபேதம் : மார்க்கட்டு மருக்கொழுந்தாம்.
5. சாலையிலே நெல்லிமரம்.
----------
எல்லோரும் கட்டும்வேட்டி
      ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி - தங்கரத்தினமே
      சரியான சரிகைவேட்டி - பொன்னுரத்தினமே. 6

ஒத்தத்தலை நாகன்வந்து
      ஒட்டக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் - தங்கரத்தினமே
      அழகான தினைப்பயிர்க்குப் - பொன்னுரத்தினமே. 7

தெய்வானையைக் காவல்வைத்தால்
      தீஞ்சிடுமே தினைப்பயிரு
வள்ளியைக் காவல்வைத்தால் - தங்கரத்தினமே
      வனத்துக்கொரு சேதமில்லை - பொன்னுரத்தினமே. 8

மூத்தண்ணன் பொண்சாதியை
      மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை - தங்கரத்தினமே
      ஏழுமாசம் காவல்வைப்போம் - பொன்னுரத்தினமே. 9

சாய்ந்திருந்து கிளிவிரட்டச்
      சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் - தங்கரத்தினமே
      முக்காலியும் பொன்னாலே - பொன்னுரத்தினமே. 10

வட்டவட்டப் பாறைதேடிக்
      கொட்டினாளா மடிக்கதிரை
மோதிரக் காலினாலே - தங்கரத்தினமே
      மொரமொரண்ணு மிதித்தாள்வள்ளி - பொன்னுரத்தினமே.11

பில்லிலே . . . . . . . . . . . . . . . . . . .
      . . . . . . . . . . . . . . . . . . . .
கல்லுலே உரலுசெஞ்சு - தங்கரத்தினமே
      கடமான்கொம் புலக்கைசெஞ்சு - பொன்னுரத்தினமே. 12

கொச்சிமலைத் தேனெடுத்துக்
      கூசாமே மாப்பிசைந்து
வாழைஇலை முறமுஞ்செஞ்சு - தங்கரத்தினமே
      வாருறாளாம் தினைமாவைத்தான் - பொன்னுரத்தினமே. 13

மூத்தண்ணன் பொண்சாதிக்கு
      மூணு பிடிகொடுத்தாள்
ஏழையண்ணன் பொண்சாதிக்குத் - தங்கரத்தினமே
      ஏழுபிடி தான்கொடுத்தாள் - பொன்னுரத்தினமே.                 14

நடுஅண்ணன் பொண்சாதிக்கு
      நாலுபிடி தான்கொடுத்தாள்
தனக்கும்தன் தாயாருக்கும் - தங்கரத்தினமே
      தகுந்தபடி தான்எடுத்தாள் - பொன்னுரத்தினமே. 15

பண்டாரத்துக் கொருபிடியும்
      பச்சைமாத் தேனும்கொடுக்க
தின்னத்தின்ன இனிக்குதென்றான் - தங்கரத்தினமே
      இன்னமுண்டோ தினைமாவென்றான் - பொன்னுரத்தினமே. 16
-------------
பல கதம்பம்

ஆத்திலே போகுந்தண்ணி
      அட்டைசெத்தை மிதக்குந்தண்ணி
நீகுடிக்கும் நல்லதண்ணியைத் - தங்கரத்தினமே
      நான்குடித்தால் ஆகாதோடி - பொன்னுரத்தினமே. 1

வாழைப்பூ வாழைப்பூ
      வாழாத பொண்களுக்கு
மையேது பொட்டேது - தங்கரத்தினமே
      மஞ்சள் குளிப்பேதடி - பொன்னுரத்தினமே. 2

கோடாலிக் கொண்டைபோட்டுத் - தங்கரத்தினமே
      கோயிலுக்குப் போறபெண்ணே - பொன்னுரத்தினமே.
ஆட்டாதே அந்தக்கொண்டையைத் - தங்கரத்தினமே
      அண்ணன்மார் பார்ப்பாங்க - பொன்னுரத்தினமே 3

ஆல மரத்துக்கீழே - தங்கரத்தினமே
      அசந்துநீ தூங்கையிலே - பொன்னுரத்தினமே
முந்தாணித் துணியெடுத்துத் - தங்கரத்தினமே
      முகந்துடைத்த நாளும்போச்சு - பொன்னுரத்தினமே 4

......
.......
ஆத்துக்கு அந்தப்பக்கம் - தங்கரத்தினமே
      ஆயிரம் பூவிருக்கு - பொன்னுரத்தினமே. 5

பின்னலு மோதிரமே - தங்கரத்தினமே
      உன்னைவிட்டுப் பிரியமாட்டேன் - பொன்னுரத்தினமே 6

படுத்தால் பலநினைவு - தங்கமாமாவே
      பாயெல்லம் கண்ணீரு - பொன்னுமாமாவே
உண்டால் உறக்கமில்லை - தங்கமாமாவே
      உறங்கினாலும் தூக்கமில்லை - பொன்னுமாமாவே. 7

ஜாதிக்காய் மலைமேலே - தங்கரத்தினமே
      ஜாதிப்புறா மேயுதடி - பொன்னுரத்தினமே
கூப்பிட்டுத் தீனிபோடு - தங்கரத்தினமே
      குந்திக்குந்தி ஓடிவரும் - பொன்னுரத்தினமே 8

சோலைக் கிளிபிடித்துத் - தங்கரத்தினமே
      சொல்லிச்சொல்லி நான்வளர்த்தேன் - பொன்னுரத்தினமே
சோலைக் கிளிவந்துதான் - தங்கரத்தினமே
      சொல்லாமல் ஓடிப்போச்சு - பொன்னுரத்தினமே. 9

ஓடுகிற தண்ணியிலே - தங்கரத்தினமே
      உரசிவிட்டேன் - சந்தனத்தைப் - பொன்னுரத்தினமே
சந்தனத்தை நம்பியல்லோ - தங்கரத்தினமே
      வெண்பிறப் பானேனடி - பொன்னுரத்தினமே. 10

காட்டுக் கிளிபிடித்துத் - தங்கரத்தினமே
      கையிலே நான்வளர்த்தேன் - பொன்னுரத்தினமே
காட்டுக் கிளியினாலே - தங்கரத்தினமே
      காணாமே ஓடிப்போனேன் - பொன்னுரத்தினமே. 11

ஓட்டைக் கரண்டகமாம் - தங்கரத்தினமே
      ஓசையிடும் வெண்கலமாம் - பொன்னுரத்தினமே
வெண்கலத்தை நம்பியல்லோ - தங்கரத்தினமே
      விதிமோசம் போனேனடி - பொன்னுரத்தினமே. 12

எங்கள் துரைவருவார் - தங்கரத்தினமே
      எனக்குச்சம் பளந்தருவார் - பொன்னுரத்தினமே
கிளிக்கூண்டு மேலேஏறித் - தங்கரத்தினமே
      கின்னாரம் வாசிப்பாரு - பொன்னுரத்தினமே. 13

வண்டியிருக்கு மாடிருக்கு - தங்கரத்தினமே
      வயற்காடு உழுதிருக்கு - பொன்னுரத்தினமே
எருமைத் தயிரிருக்கு - தங்கரத்தினமே
      ஏண்டிபோறே ரங்கோனுக்குப் - பொன்னுரத்தினமே.                 14

பழையசம்பா நெல்லிருக்கப் - பொன்னுரத்தினமே
      ஏழெருமைத் தயிரிருக்கத் - தங்கரத்தினமே
ஏண்டிபோறே ஏர்க்காட்டுக்குப் - பொன்னுரத்தினமே
      ஏண்டிபோறே ஏர்க்காட்டுக்குப் - பொன்னுரத்தினமே 15

கங்காணி பொண்டாட்டி - தங்கரத்தினமே
      காசுக்காரி யிண்ணியிருந்தேன் - பொன்னுரத்தினமே
பச்சைமலைத் தொங்கலிலே - தங்கரத்தினமே
      மொச்சைக்கொட்டை விற்கிறாளே - பொன்னுரத்தினமே 16

வங்காளம் சிங்கப்பூரு - தங்கரத்தினமே
      வருகுதடி சீமைக்கப்பல் - பொன்னுரத்தினமே
சீமைக்கப்பல் மேலேஏறித் - தங்கரத்தினமே
      சீமைபார்க்கப் போறேன்இப்போ - பொன்னுரத்தினமே 17

கள்ளுக்கடை ஓரத்திலே - தங்கரத்தினமே
      கறிக்கடை நமதுகடை - பொன்னுரத்தினமே
கறிவாங்க வந்தபிள்ளை - தங்கரத்தினமே
      கறுத்தபிள்ளை நம்மபிள்ளை - பொன்னுரத்தினமே. 18

ஜாடையிலே பார்க்கிறதும் - தங்கரத்தினமே
      சைஸ்நடை நடக்கிறதும் - பொன்னுரத்தினமே.
ஓடையிலே பார்க்கிறதும் - தங்கரத்தினமே
      உனக்கேற்ற வேலைதானே - பொன்னுரத்தினமே. 19
---------
19. சைஸ் - Size.

பூமணக்குது கொண்டையிலே - தங்கரத்தினமே
      பூவைவச்சு முடிஞ்சுக்கோடி - பொன்னுரத்தினமே
சந்தைக்குப் போயிண்ணாலும் - தங்கரத்தினமே
      பிள்ளைக்கு மோருவாங்கணும் - பொன்னுரத்தினமே 20

நீல வளையல்போட்டுத் - தங்கரத்தினமே
      நிச்சயமா வாடிபெண்ணே - பொன்னுரத்தினமே
நிற்கட்டுமா போகட்டுமா - தங்கரத்தினமே
      நிண்ணாஉன்னைப் பார்க்கலாமா - பொன்னுரத்தினமே 21

நிண்ணாலும் உன்பிரியம் - தங்கமாமாவே
      நிற்காட்டியும் உன்பிரியம் - பொன்னுமாமாவே
மாமனோடே பேச்சைக்கேட்டுத் - தங்கமாமாவே
      மதிமோசம் போனேனே - பொன்னுமாமாவே. 22

தண்ணிக்குப் போறையாடி - தங்கரத்தினமே
      தலைகுனிஞ்சு நடந்துவாடி - பொன்னுரத்தினமே
லாரிக்காரப் பயலைக்கண்டால் - தங்கரத்தினமே
      தலையெடுத்துப் பார்க்காதேடி - பொன்னுரத்தினமே. 23

வெள்ளைக்கல்லுக் கம்மல்போட்டுத் - தங்கரத்தினமே
      வேடிக்கையா வந்தபொண்ணே - பொன்னுரத்தினமே
உன்னையாரு கொண்டுவந்தது - தங்கரத்தினமே
      உன்மேலே பிரியம்வச்சேன் - பொன்னுரத்தினமே 24

ஓடுற ஓட்டத்திலே - தங்கரத்தினமே
      ஓலைப்பெட்டி கக்கத்திலே - பொன்னுரத்தினமே
கையைஊணிக் கரணம்போடும் - தங்கரத்தினமே
      காமாட்சி டொம்பப்பிள்ளை - பொன்னுரத்தினமே 25

ஊசிபோட்டுக் குத்தினகாது - தங்கரத்தினமே
      உலக்கைபோட்டு நெம்பினகாது - பொன்னுரத்தினமே
காசிக்கு நான்போனாலும் - தங்கரத்தினமே
      காதை மறக்கமாட்டேன் - பொன்னுரத்தினமே 26

கருமந் தொலையாது - தங்கரத்தினமே உன்னைக்
      கல்யாணம் செய்யவிட்டால் - பொன்னுரத்தினமே 27

. . . . . . . . . . . . . . . . .
---------------

3. ராசாத்தி!

திருவிழா

ரோடு எல்லாம் கொழுத் தாடை
      ரொம்பிக் கிடக்குதுபார் - ராசாத்தி
      ரொம்பிக் கிடக்குதுபார். 1

நல்ல கரும்பு கட்டுக் கட்டா
      நயமா விக்குதுபார் - ராசாத்தி
நயமா விக்குதுபார். 2

சர்க்கரை மிட்டாயும் பப்பர மிட்டாயும்
      சந்தெல்லாம் விக்குதுபார் - ராசாத்தி
      சந்தெல்லாம் விக்குதுபார். 3

கல்லுக் கண்டும் கடலை அவலும்
      கணக்காய் விக்குதுபார் - ராசாத்தி
கணக்காய் விக்குதுபார். 4

கும்பல் கும்பலாய்க் குட்டைப் பிள்ளைகள்
      குறுக்கே போறதைப்பார் - ராசாத்தி
      குறுக்கே போறதைப்பார். 5

நேரு நேராய் நெட்டைப் பிள்ளைகள்
      நின்று பாக்றதைப்பார் - ராசாத்தி
நின்று பாக்றதைப்பார். 6

நொண்டிப் பிள்ளையும் சண்டிப் பிள்ளையும்
      நொண்டி அடிக்குதுபார் - ராசாத்தி
      நொண்டி அடிக்குதுபார். 7

பால்குடி மறந்த பச்சைப் பிள்ளைகள்
      பட்டம் விடுவதுபார் - ராசாத்தி
      பட்டம் விடுவதுபார். 8

சாரட்டு வண்டியும் ஜட்கா வண்டியும்
      சரியா நிக்குதுபார் - ராசாத்தி
      சரியா நிக்குதுபார். 9

மல்லுக் கட்டுற மைனர் மார்கள்
      மாத்தி மாத்தி வாராங்க - ராசாத்தி
      மாத்தி மாத்தி வாராங்க. 10

பாறை மாதிரி பயில்வான் மார்கள்
      பாய்ச்சல் காட்டுறார்பார் - ராசாத்தி
      பாய்ச்சல் காட்டுறார்பார். 11

காசுக் காரரும் காசில்லா தவரும்
      பாய்ச்சலைப் பாக்குறாங்க - ராசாத்தி
      பாய்ச்சலைப் பாக்குறாங்க. 12

குட்டைப் பயலும் நெட்டைப் பயலும்
      குஸ்தி போடுறார்பார் - ராசாத்தி
      குஸ்தி போடுறார்பார். 13

தொடையிலே அடியும் தோளிலே கையும்
      துவக்கத்துக் கடையாளம் - ராசாத்தி
      துவக்கத்துக் கடையாளம்.                 14

ஒத்தைக் கையிலே உடம்பை வளைச்சு
      ஊதுறான் பார்ஒருத்தன் - ராசாத்தி
      ஊதுறான் பார்ஒருத்தன். 15

ரோசக் காரனும் மீசைக் காரனும்
      காசுக்குப் போடுறான்பார் - சண்டைதான்
      காசுக்குப் போடுறான்பார். 16

முக்கிமுக்கி மூச்சுப்பிடித்து
      முதுகைப் பார்க்கிறான்பார் - ராசாத்தி
      முதுகைப் பார்க்கிறான்பார். 17

கண்ணி னாலே பார்த்தவன் எல்லாம்
      கையைத் தட்டுறான் பார் - ராசாத்தி
      கையைத் தட்டுறான் பார். 18

பீட்டுக் காண்பித்த பீரங்கி வயிறவன்
      பெருமை பண்ணுறான் பார் - ராசாத்தி
      பெருமை பண்ணுறான் பார். 19

நோட்டு நோட்டா ஜோபிலே வச்சு
      ரோட்டுலே போகிறான்பார் - ராசாத்தி
      ரோட்டுலே போகிறான்பார். 20

தோத்துப் போனவன் ஆத்திரத் தோடே
      தொங்கோட்டம் ஓடுறான்பார் - ராசாத்தி
      தொங்கோட்டம் ஓடுறான்பார். 21
----------

அவள் பெருமை

தண்ணிக் குடத்தைத் தலையில் வைத்துத்
      தாளம் போட்டவளே - ராசாத்தி
      தாளம் போட்டவளே. 1

கோயிலுக்குப் போற வழியின் மேலே
      குளத்தைப் பார்த்தவளே - ராசாத்தி
      குளத்தைப் பார்த்தவளே 2

கூடவந்த தாதிப் பொண்ணுக்குக்
      கூலி கொடுத்தவளே - ராசாத்தி
      கூலி கொடுத்தவளே. 3

தண்ணிக்கு வராத தாதிப் பொண்ணுக்குத்
      தண்டனை கொடுத்தவளே - ராசாத்தி
      தண்டனை கொடுத்தவளே. 4

தலைசீவுகிற தாதிப் பொண்ணுக்குத்
      தாவணி கொடுத்தவளே - ராசாத்தி
      தாவணி கொடுத்தவளே. 5

தண்டை போட்ட தாதிப் பொண்ணுக்குத்
      தண்டட்டி கொடுத்தவளே - ராசாத்தி
      தண்டட்டி கொடுத்தவளே. 6

மேலுத் தேய்க்கிற தாதிப் பொண்ணுக்கு
      மேலடு கொடுத்தவளே - ராசாத்தி
      மேலடு கொடுத்தவளே. 7
---------
7. மேலடு - மேலாடை.
---------
காலு கழுவற தாதிப் பொண்ணுக்குக்
      காப்புக் கொடுத்தவளே - ராசாத்தி
      காப்புக் கொடுத்தவளே. 8

பூவு முடிக்கிற தாதிப் பொண்ணுக்குப்
      பூமி கொடுத்தவளே - ராசாத்தி
      பூமி கொடுத்தவளே. 9

பொட்டு வைக்கிற தாதிப் பொண்ணுக்குப்
      பட்டுக் கொடுத்தவளே - ராசாத்தி
      பட்டுக் கொடுத்தவளே. 10

மையி வைக்கிற தாதிப் பொண்ணுக்கு
      மாடு கொடுத்தவளே - ராசாத்தி
      மாடு கொடுத்தவளே. 11

அஞ்சன மைக்காரத் தாதிப் பொண்ணுக்கு
      ஆடு கொடுத்தவளே - ராசாத்தி
      ஆடு கொடுத்தவளே. 12

முழங்காலுத் தண்ணி யிலே
      முங்கிக் குளித்தவளே - ராசாத்தி
      முங்கிக் குளித்தவளே. 13

மந்திரம் தந்திரக் காரியெல் லாரையும்
      மானங் கெடுத்தவளே - ராசாத்தி
      மானங் கெடுத்தவளே.                 14

மாற்றாந் தாயி மாரெல் லாரையும்
      மானங் கெடுத்தவளே - ராசாத்தி
      மானங் கெடுத்தவளே. 15

வம்புக் காரப் பயல்கள் மேலே
      வர்மம் வச்சவளே - ராசாத்தி
      வர்மம் வச்சவளே. 16
-----------

கேள்வி

கூடு விட்டுக் கூடு பாய்கிற
      கூட்டாளிப் பொண்ணே - ராசாத்தி
      கூட்டாளிப் பொண்ணே 1

கூட்டாஞ் சோறு ஆக்க லையா
      கூட்டாளிப் பொண்ணே - ராசாத்தி
      கூட்டாளிப் பொண்ணே. 2

அங்கிட்டும் இங்கிட்டும் கல்லுப்பொறுக்கி
      அடுப்புக் கூட்டலையா - ராசாத்தி
      அடுப்புக் கூட்டலையா? 3

கொத்து மல்லி இலையைப் பிடுங்கிக்
      குழம்பு வைக்கலையா - ராசாத்தி
      குழம்பு வைக்கலையா? 4

அம்மியி லேமஞ்சள் மிளகாய் அரைத்து
      அலுத்துப் போகலையா - ராசாத்தி
      அலுத்துப் போகலையா? 5

சட்டிபா னையிலே சமையல் செய்து
      சலித்துளப் போகலையா - ராசாத்தி
      சலித்துளப் போகலையா? 6

வாழை இலையும் ஆலம் இலையும்
      வாங்கப் போகலையா - ராசாத்தி
      வாங்கப் போகலையா? 7

கண் டாங்கிச் சீலை வாங்கக்
      கடைக்குப் போகலையா - ராசாத்தி
      கடைக்குப் போகலையா? 8

வெள்ளிச் சரிகையும் தங்கச் சரிகையும்
      விலைக்கு வாங்கலையா - ராசாத்தி
      விலைக்கு வாங்கலையா? 9

காசிப் பட்டும் லேஞ்சுப் பட்டும்
      கடையில் விக்கலையா - ராசாத்தி
      கடையில் விக்கலையா? 10

மூக்குத்தி ஒட்டி யாணம் முருகு
      மூணும் விக்கலையா - ராசாத்தி
      மூணும் விக்கலையா? 11

காதுக் கொரு கம்மல் வாங்கக்
      கடைக்குப் போகலையா - ராசாத்தி
      கடைக்குப் போகலையா? 12

சால்வை ஒண்ணும் சரப்பளி ரெண்டும்
      சரியா வாங்கலையா - ராசாத்தி
      சரியா வாங்கலையா? 13

ரத்தினக் கல்லு எல்லாம் பதிச்ச
      ரவிக்கை வாங்கலையா - ராசாத்தி
      ரவிக்கை வாங்கலையா?                 14

மண்டையி லேவைக்கக் கொண்டைத்திருகொண்ணை
      மறந்து வந்தையாம்மா - ராசாத்தி
      மறந்து வந்தையாம்மா? 15

கடன் கிடன் பட்டுக் கஷ்டப் படாமே
      கடைக்குப் போய்வாம்மா - ராசாத்தி
      கடைக்குப் போய்வாம்மா. 16
--------

அரண்மனைக்காரி

பல் லாக்கு மேலே ஏறிப்
      பவனி போறவளே - ராசாத்தி
      பவனி போறவளே. 1

ஆனை மேலே அம்பாரி வச்ச
      அரம னைக்காரி - ராசாத்தி
      அரம னைக்காரி. 2

மேலுக் கெல்லாம் மஞ்சள் தேய்த்து
      மேனி மினுக்கினவளே - ராசாத்தி
      மேனி மினுக்கினவளே. 3
---------
பா-ம். 3. மேனாமினுக்கினவளே.
-----------
காலுக்கொரு மிஞ்சி போட்டுக்
      கால் கழுவினவளே - ராசாத்தி
      கால் கழுவினவளே. 4

கொசுவம் வச்சுப் பசுவைப் போலே
      கொஞ்சி நடந்தவளே - ராசாத்தி
      கொஞ்சி நடந்தவளே. 5

தாய் தகப்பன் இல்லதவ ருக்குத்
      தர்மம் கொடுத்தவளே - ராசாத்தி
      தர்மம் கொடுத்தவளே. 6

உதவி ஒண்ணும் இல்லாதவ ருக்கு
      உப்புக் கொடுத்தவளே - ராசாத்தி
      உப்புக் கொடுத்தவளே. 7

அக்கா தங்கச்சி இல்லாதவ ருக்கு
      அன்னம் கொடுத்தவளே - ராசாத்தி
      அன்னம் கொடுத்தவளே. 8

சின்னச் சின்னப் பிள்ளை களுக்குச்
      செல்லம் கொடுத்தவளே - ராசாத்தி
      செல்லம் கொடுத்தவளே. 9

பொண்ணென் றாலும் ஆணென் றாலும்
      பொன்னுக் கொடுத்தவளே - ராசாத்தி
      பொன்னுக் கொடுத்தவளே. 10

கண் மணியைப் போல இங்கே
      காலங் கழிச்சவளே - ராசாத்தி
      காலங் கழிச்சவளே. 11

கடுமை யான காவல் காரரைக்
      கலங்க வச்சவளே - ராசாத்தி
      கலங்க வச்சவளே. 12

பட்டாக் கத்தியும் தோட்டா வெடியும்
      பறக்குது பாரு - ராசாத்தி
      பறக்குது பாரு. 13

பளிங்குக் கல்லு மேலே நடக்கிற
      பத்தினிப் பொண்ணே - ராசாத்தி
      பத்தினிப் பொண்ணே.                 14

மெத்தை மேலே கொத்த ளமும்
      மினுமி னுக்குதே - ராசாத்தி
      மினுமி னுக்குதே. 15

கோடா கோடி தோழி எல்லாம்
      கோட்டைக் குள்ளேயே - ராசாத்தி
      கோட்டைக் குள்ளேயே. 16

வாடா மல்லிகைத் தோட்டத் திலே
      வண்டி பீரங்கி - ராசாத்தி
      வண்டி பீரங்கி. 17

கோட்டைக் குள்ளே டமா ருண்ணு
      குண்டு பீரங்கி - ராசாத்தி
      குண்டு பீரங்கி. 18

கோட்டை யைச்சுத்திக் கல்பொ றுக்கிப்
      கோபுரங் கட்டினவளே - ராசாத்தி
      கோபுரங் கட்டினவளே. 19

பட்டுப் புடவை கட்டிக் கிட்டுத்
      தண்ணிக்குப் போனவளே - ராசாத்தி
      தண்ணிக்குப் போனவளே. 20

தங்கத் தாலே புடைவை கட்டிச்
      சண்டைக்குப் போனவளே - ராசாத்தி
      சண்டைக்குப் போனவளே. 21

பட்ட ணத்து வீதி யெல்லாம்
      சுத்தப் போனவளே - ராசாத்தி
      சுத்தப் போனவளே. 22

ஆடு வரும் மாடு வரும்
      கோடா கோடியே - ராசாத்தி
      கோடா கோடியே. 23
-----------

சல்லிக்கட்டு

சல்லிக் கட்டும் மல்லுக் கட்டும்
      சண்டைக்குக் காரணமே - ராசாத்தி
      சண்டைக்குக் காரணமே. 1

அரண் மனை வாசல் முன்னே
      ஆயிரம் காளைகளாம் - ராசாத்தி
      ஆயிரம் காளைகளாம். 2

ஆள்ஒண் ணுக்குக் காளை ஒண்ணு
      அங்கே இருக்குதுபார் - ராசாத்தி
      அங்கே இருக்குதுபார். 3

காளை எல்லாம் சாயம் பூசிக்
      கருத்தாய் நிற்குதுபார் - ராசாத்தி
      கருத்தாய் நிற்குதுபார். 4

ரம்பம் போலே கொம்பு எல்லாம்
      ஜம்பமா நிற்குதுபார் - ராசாத்தி
      ஜம்பமா நிற்குதுபார். 5

கொம்பைச் சுற்றிக் கொம்பும் பட்டும்
      ஜொலிக்குது அங்கேபார் - ராசாத்தி
      ஜொலிக்குது அங்கேபார். 6

சாடை கண்டு காளை எல்லாம்
      ஓடப் பார்க்குதுபார் - ராசாத்தி
      ஓடப் பார்க்குதுபார். 7

காளைக்குப் பின்னே ஆளுகள் எல்லாம்
      சாடு றாங்கநீபார் - ராசாத்தி
      சாடு றாங்கநீபார். 8

நிண்ணு குத்திக் காளை எல்லாம்
      நிமிர்ந்து நிற்குதுபார் - ராசாத்தி
      நிமிர்ந்து நிற்குதுபார். 9

கறுத்த காளையும் செவத்த காளையும்
      கலந்து நிற்குதுபார் - ராசாத்தி
      கலந்து நிற்குதுபார். 10

வெள்ளைக் காளையும் மயிலைக் காளையும்
      வெருண்டு நிற்குதுபார் - ராசாத்தி
      வெருண்டு நிற்குதுபார். 11

வாலுப் பக்கம் வளைஞ்சு வளைஞ்சு
      வர்றாங்க வாலிவரு - ராசாத்தி
      வர்றாங்க வாலிவரு 12
--------
12. வாலிவரு - வாலிபர்.
-------
ஆத்திரம் புடிச்சு அப்பரா ணியைத்தான்
      அலாக்காய்த் தூக்குதுபார் - ராசாத்தி
      அலாக்காய்த் தூக்குதுபார். 13

மாலை போட்ட மாடு ஓடுது
      மறிக்க முடியாமே - ராசாத்தி
      மறிக்க முடியாமே.                 14

தொத்தல் மாடும் வத்தல் மாடும்
      துவண்டு நிற்குதுபார் - ராசாத்தி
      துவண்டு நிற்குதுபார். 15

உருமால் கட்டையும் திருமால் குட்டையும்
      ஊறான் புடுங்குறான்பார் - ராசாத்தி
      ஊரான் புடுங்குறான்பார். 16
------------

4. ஆண் பெண் தர்க்கம்

கெஞ்சலும் மிஞ்சலும்

ஐந்நூறு மைல்க டந்து
      அம்மா உன்னைத் தஞ்சமென்று
அலங்கோலப் பட்டு வந்தேன்
      ஆதரிக்க வேணும் தாயே
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 1

ஆரடா நீப யலே
      அநியா யமா அலப்புறியே
போடாநீ சொல்லடா
      பெரிய பேச்சுப் பேசாதேடா
வாது செய்யா தடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 2

அடாபு டாண்ணு என்னை
      அநியாயமா ஏன்பேசுறாய்
அத்தை மகள்னுதான் உன்னை
      ஆவலாநான் பார்க்க வந்தேன்
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 3

அத்தை மகள்னு நீஎன்னை
      அதிகாரமாச் சொன்னையேடா
உங்கப்பன் உங்கம்மா ஊரெதுடா
      வெட்கங் கெட்ட பையாநீ
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 4

அப்பன்பேர் ஆறுமுகம்
      ஆத்தாள்பேர் ஆராயம்மா
என்பேரு ஏகாம்பரம்
      எங்கஊர் ஏர்க்காடம்மா
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 5

கொள்வினையும் கொடுப்பினையும்
      கொண்டுவந்த குறப்பயலே
கொஞ்சங்கூட நெஞ்சஞ்சாமல்
      வஞ்சகமாய்ப் பேசுறையே
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச் சேரடா
      சேரடா ஆ ஆ. 6

கண்ணேஎன் கண்மணியே
      கல்நெஞ்சுக் காரியே
சொன்னேன் என்காரி யத்தைச்
      சொல்லால் அடிக்கிறையே
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 7

ஏண்டாநீ இங்கே வந்தாய்
      இரப்பிரந்த பறைப்பயலே
வேண்டாம் உனக்குவம்பு
      விரைவாப் போயிடு நம்பு
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 8

வாணாளை வீணாக்காமல்
      வம்பாக்கஷ் டப்படாமல்
போனால் நல்லதடாப்பா
      பொழுது விழுகுமுன்னே

வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 9

அஞ்சு வயசுமுதல்
      அரும்பாடு பட்டுநானும்
ஆயிரம் ரூபா சேர்த்தேன்
      அருமைக் கிளியைக் கொள்ள
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 10

அஞ்சு வயசுமுதல்
      அரும்பாடு பட்டால் என்ன
மிஞ்சிநீ பேசா தேடா
      நெஞ்சைப் பிளந்திடுவேன்
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 11

ஆயிரம் ரூபாநீ சேர்த்தால்
      ஆருக் கென்ன லாவமடா
ஆள்தப்பிக் கப்பாருடா
      அல்லா விட்டால் ஆபத்தடா
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 12

கண்ணேன்னும் கண்மணின்னும்
      கிளியேன்னும் புளியேன்னும்
சொன்ன நாக்கை அறுத்துடுவேன்
      சொல்லாமல் ஓடிடடா
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
சேரடா ஆ ஆ. 13

என்குலமும் உன்குலமும்
      என்சொத்தும் உன்சொத்தும்
ஏணி வைத்தால் எட்டுமாடா
      எருமை மாட்டுப் பயலே
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச் சேரடா
      சேரடா ஆ ஆ.         14

ஒருத்திக்கு ஒருமகண்டி
      உன்னைநம்பி வந்தவண்டி
பொறுமை பொறுத்தவண்டி
      போகவர ஏசாதேடி
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 15

ஆளிலொரு அழகன் நாண்டி
      ஆயிரரூபா சொத்துக் காரண்டி
பெரிய வீட்டுக் காரரில்எல்லாம்
      பெரியதலை நான்தானடி
அன்னமே பொன்னம்மா
      கண்ணிரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 16

பெரிய தலையா இருந்தாலும்
      சின்னத் தலையா இருந்தாலும்
பெரிசல்லடா எனக்கு மட்டும்
      போய்ப்பயலே ஓடிப் போடா
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 17

முச்சந்தி ரோட்டுப் பக்கம்
      மூணுகுழி நிலமும் வாங்கி
மூணுகுழி நிலத்தை வெட்ட
      மூணுநூறு ஆள்பிடிச்சேன்
அன்னமே பொன்னம்மா
      கண்ணிரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 18

முச்சந்தி ரோட்டி லேநீ
      முக்காடு போட்டால் என்ன
மூணுநூறு ஆளு உன்னை
      மொட்டை அடிச்சால் என்ன
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 19

பெருமைநீ பண்ணாதேடி
      பெருமைப் பேச்சுப் பேசாதேடி
அருமை குலைக்கா தேடி
      அட்ட காசஞ் செய்யாதேடி
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 20

பொன்னேநீ பேசி னாலும்
      என்னைநீ ஏசி னாலும்
என்னைநான் மறப்பே னோடி
      பின்னேநான் போவே னோடி
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சேருதடி
      அன்னமே ஏ ஏ. 21

நான்யாரு நீயாரடா
      சும்மா இங்கே நிற்காதேடா
சாமர்த்தியம் காட்டா தேடா
      ஏமாந்து போவே னோடா
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ 22

மறந்தால் என்னடா நீஎன்னை
      மறக்காட்டிப் போனால் என்ன
எல்லாம்எனக் கொண்ணு தாண்டா
      ஏமாற்றப் பார்க்கா தேடா
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 23

மானே மரகதமே
      மயிலே இளங்குயிலே
தேனே திரவியமே
      தேடிவந்தேன் உன்னை நானே
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 24

எப்படிநான் திட்டி னாலும்
      ஏளனம் செய்யப் பார்க்கிறாய்
சொற்படிநீ போகா விட்டால்நான்
      செருப்படி கொடுத்தி டுவேன்
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச் சேரடா
      சேரடா ஆ ஆ. 25

மரியாதையாய்ப் போய்விடடா
      மானங் கெட்ட மடப்பயலே
தெருத்தெருவாய்த் திரிந்த நாயே
      திரும்பிப்பார்க் காமே ஓடடா
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 26

ஆத்துக்குப் போன அண்ணன்மார்
      அமளி வந்து செய்யாமே
அமைதி யாய்நீ போய்விடடா
      அடிதப் பாமல் கிடைக்குமடா
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 27

அண்ணன்மார் இங்கே வந்து
      அமளிஏதும் செய்தால்நான்
அத்தாசமா உன்னைத் தூக்கி
      ஆகாசமாய்ப் பறந்திடுவேன்
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 28

அத்தாசமா என்னைத் தூக்கி
      ஆகாசமாப் பறந்தா யிண்ணா
பூமிக் குள்ளே நான்நுழைந்து
      புல்லா முளைத்திடுவேன்
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 29

பூமிக்குள்ளே நீநுழைந்து
      புல்லா முளைச்சை யிண்ணா
காராம்பசு வேசங்கொண்டு
      கரும்பிடுவேன் அந்தப்புல்லை
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 30

காராம் பசுவா நீவந்து
      கரும்பினாலும் அந்தப் புல்லை
ஊர்க்குருவி வேசங் கொண்டு
      உயரப் பறந்திடுவேன்
வாதுசெய் யாதேடா
      வந்தவழி போய்ச்சேரடா
      சேரடா ஆ ஆ. 31

ஊர்க்குருவி வேசங் கொண்டு
      உயரப் பறந்தியிண்ணாச்
செம்பருந்து வேசங்கொண்டு
      செந்தூக்காத் தூக்கிடுவேன்
அன்னமே பொன்னம்மா
      கண்ணி ரண்டும்சோருதடி
      அன்னமே ஏ ஏ. 32

வேணாமடி வாதும் வம்பும்
      சோராமலே நீயும் நானும்
தாராளமாத் தாலி கட்டி
      வாழ லாண்டி வருச மெல்லாம்
அன்னமே பொன்னம்மா
      கண்ணிரண்டும் சோருதடி
      அன்னமே ஏ ஏ. 33
------------------
வார்த்தை சண்டை

சாணிக்கூ டையை எடுத்துக் - குட்டி
      சாணிவாரப் போற பெண்ணே
சந்து பொந்திலே பாரடிநீ - குட்டி
      பந்து பந்தாக் கிடக்கும் சாணி. 1

மாடுமேய்க்கும் மாட்டுக் காரா - பையா
      வீடு வீடாய்த் தின்னும் பையா
போடா சோலியைப் பார்த்துக் கிட்டுக்
      கோளா றொண்ணும் சொல்லா தேடா. 2

எருமைச் சாணி யைஎ டுத்துக் - குட்டி
      எருவு தட்டப் போறவளே
எடுத்தெ றிஞ்சு பேசா தேடி - குட்டி
      எருமை மாட்டுத் தொண்டைக் காரி. 3

அதைப் புனக்கு ஏறிப் போச்சோ - பையா
      அக்ரமும் மிஞ்சிப் போச்சோ
அடக்கு றேண்டாஉன் ஆணவத்தைப் - பையா
      அடக்கி வையடா உன்நாக்கை. 4

உங்கப்பன் போட்ட சோற்றிலேயா - குட்டி
      உங்கம்மா போட்ட சோற்றிலேயா
அதைப்பெனக்கு ஏறிப் போச்சு - குட்டி
      ஆணவமும் மிஞ்சிப் போச்சு? 5

வாங்கிக் குடிச்சுப் பிழைத்தவனே - பையா
      வழியைப் பாத்துப் பிழைத்தவனே
மூஞ்சி வீங்கிப் போனவனே - பையா
      முகத்தி லுனக்கு மீசை யேண்டா? 6

சாணிச் சட்டியிலே சோறு தின்னு - குட்டி
      சந்தனப் பொட்டும் வச்சுக் கிட்டுச்
சளுக்குப் புளுக்கின்னு நடந்து விட்டால் - உன்னைச்
      சட்டை யாரடி பண்ணப்போறா? 7

மானங்கெட்ட மாட்டுக் காரா - அடா
      மரியாதை கெட்ட பிச்சைக் காரா
மயிரைப் பிடிச்சு வளைச்சுக் கிட்டு - உன்னை
      மாற்றாலே வாங்கி விட்டுடுவேன். 8

தலைதெறிச்ச தட்டு வாணி - அடி
      தலைகீழா விழுகாதடி
தட்டுவேன் பல்லை யெல்லாம் - குட்டி
      தப்பிச்சுநீ ஓடிவிடடி. 9

போடா போடா பேடிப் பையா - அடா
      பொழப்பில்லாத பொட்டைப் பையா
வாய்என் னடா நாய்க்குட்டியே - அடா
      வம்பாய்உதை வாங்கா தேடா. 10

பொட்டை பொட்டை யின்னி யின்னா - அடி
      பொட்டை சமத்தைக் காட்டணுமா
வட்டக் காட்டுக்கு வந்தி யின்னா - உன்னை
      வட்டம் போட வைக்கி றேண்டி. 11

உங்க ஆத்தா அக்கா கிட்டப் போய் - அடா
      உன்ச மத்தைக் காண்பியடா
காஞ்ச மரத்தில் கட்டி உன்னை - அந்தக்
      கட்டைபிய்ய அடிப்பேனடா. 12

சம்ப்ர தாயம் பேசாதடி - வீணாச்
      சமைஞ்ச பெண்ணோ சக்கி லிச்சி
வம்பு வளக்க வேணாமடி - குட்டி
      வந்தவழி போய்ச்சே ரடி. 13

சண்டை என்ன சாடி என்ன - அடா
      சாதி கெட்ட பறைப்பயலே
சக்கிலிச் சிண்ணு சொல்லாதேடா - உன்னைச்
      சந்து சந்தாக் கிழிச்சிடுவேன்       14
--------------

கண்ணாட்டியும் மச்சானும்

அன்ன நடையழகி
      அலங்கார நகையழகி
பின்னல் சடையழகி - என் ஆசைக்கண்ணாட்டி
      பெறப்புடுடி தேர்பார்க்க - என் நேசக்கண்ணாட்டி. 1

மதன வடிவழகா
      மாமோகச் சொல்லழகா
வர்ண உருவழகா - என் திலகமச்சானே
      வரமாட்டேன் தேர்பார்க்க - எங்குலகமச்சானே. 2

வரமாட்டேன் இண்ணுசொன்னால்
      வட்டப்பொட்டு வச்சவளே
குறைவான காரணத்தை - என் ஆசைக்கண்ணாட்டி
      கூசாமல் சொல்லிடடி - என் நேசக்கண்ணாட்டி. 3

முத்துமாலை வாங்கித்தாரேன்
      மேலான கம்மல்தாரேன்
பத்தினி யேஉனக்கு - என் ஆசைக்கண்ணாட்டி
      பளிங்கைப்போலப் பவளந் தாரேன் -
      என்நேசக்கண்ணாட்டி. 4

சம்மங்கி எண்ணெய் வேணும்
      சைனாப்பட்டுச் சீலைவேணும்
பம்பாய்ச் சோப்புவேணும் - என் திலகமச்சானே
      பயாஸ்கோப்பு ராவுக்கேவேணும் - எங்குலகமச்சானே. 5

கூனற் கிழவிமுண்டை
      குடிகெடுக்கும் லண்டிமுண்டை
வீணாசை வைக்காதடி - என் ஆசைக்கண்ணாட்டி
      வீரியங்கள் பேசாதடி - என்நேசக்கண்ணாட்டி. 6

கிழவி கிழவியிண்ணு
      கேவலமாய்ப் பேசுறாயே
கிழவியாநான் என்னைப்பாரு - என் திலகமச்சானே
      குளவிஉன்னைக் கொட்டிடாதோ - என்குலகமச்சானே. 7

பெண்ணேஎன் கண்மணியே
      பிரியமுள்ள பொன்மணியே
சொன்னேன்நான் கேலிக்காக - என் ஆசைக்கண்ணாட்டி
      கோவமா இருக்காதடி - என் நேசக்கண்ணாட்டி. 8

ரோசாப்பூச் செண்டுவேணும்
      ரோசாப்பூ வேறேவேணும்
ராசாராணி போலிருந்து - என்திலகமச்சானே நாம்
      ரெண்டுபேரும் போகவேணும் - எங்குலகமச்சானே. 9

தேனே இளங்குயிலே
      செங்கரும்பே சர்க்கரையே
மானே மரகதமே - என் ஆசைக்கண்ணாட்டி உன்
      மனம்போலக் கொண்டுவந்தேன் - என்நேசக்கண்ணாட்டி. 10

மாமா மருக்கொழுந்தே
      வாழை இளங்குருத்தே
ஏமாற்றிக் கொண்டுவந்த - என் திலகமச்சானே உன்
      இஷ்டம்போல வாறேன்இனி - என்குலகமச்சானே. 11

மாமாண்ணு கூப்பிட்டுக்கிட்டு
      மல்லிகைப்பூ வச்சுக்கிட்டுக்
கோயிலுக்குப் போறாயோடி - என் ஆசைக்கண்ணாட்டி
      கூட நடந்துவாடி - என் நேசக்கண்ணாட்டி. 12

ஆசைப் புருசனே
      அலங்காரம்நான் செய்தேனே
பேசலையே என்கிட்டே - என் திலகமச்சானே
      மோசம்பண்ணப் பார்த்துட்டையே-என்குலகமச்சானே. 13

கோயிலுக்குப் போனபிறகு
      கொண்டுவந்து தாரேண்டி
சாமிவற நேரண்டி - என் ஆசைக்கண்ணாட்டி நீ
      தாமசித்தால் மோசம்போச்சு-என் நேசக்கண்ணாட்டி. ;       14

தளுக்கு நடைக்குநான்
      தங்கச்சங்கிலி வாங்கித்தாறேன்
குலுக்கி நடந்துவாடி - என் ஆசைக்கண்ணாட்டி
      குருநாதன் சந்நிதிக்கு என் நேசக்கண்ணாட்டி. 15

பூக்கடைக்கு முதல்முதல்போய்ப்
      பூச்செண்டு வாங்கவேணும்
கோட்டைக்குள்ளே போகவேணும் - என் திலகமச்சானே
      கொண்டைக்குள்ளே வைக்கவேணும்-என் குலகமச்சானே. 16

வாங்கிக்கிட்டு வந்தேண்டி
      வஞ்சகம் இல்லாமலே
ராங்கிஇனிப் பண்ணாதேடி - என் ஆசைக்கண்ணாட்டி
      நடந்துவாடி தொடர்ந்தாற்போலே-என் நேசக்கண்ணாட்டி.17
------------

ஓடும் ஜோடி

சும்மா சும்மாப் பார்த்துக்கிட்டுச்
      சொகுசுநடை நடந்துக்கிட்டுக்
கம்மால்ரொம்பக் காட்டிக்கிட்டு
      கணக்காப்போகும் கறுத்தபெண்ணே. 1

ஆருண்ணு நெனச்சுக்கிட்டு
      அம்புட்டுப் பேசவந்தாய்
பேரெடுத்த போக்கிரியின்
      பெண்டாட்டி நானுபாரு 2

அண்ணைக்குச் சொன்னசொல்லு
      அம்புட்டையும் மறந்திட்டையோ
கண்ணாட்டி உன்னாலே
      கலங்குறேண்டி இந்தவேளை. 3

மூட்டைமுடிச்சுக் கட்டிக்கிட்டு
      மொத்தரூபா எடுத்துக்கிட்டு
ரோட்டுவழி போறபோது
      புருசன்பார்த்தால் என்னசொல்வேன்? 4

உன்புருசன் வல்லவனோ
      உஸ்தாதியோ குஸ்திக்காரனோ
ஓட்டம் பிடிக்கலாண்டி
      ரெங்கோன் கப்பற் குள்ளேஏறி. 5

எத்தனையோ கோடிஜனம்
      இம்சைப்பட்டார் பெண்களாலே
சத்தியமாய்ச் சொல்லுறேன்நான்
      பத்தினிதான் உண்மையிலே. 6

கத்தியாலே வெட்டினாலும்
      கண்டதுண்டம் ஆக்கினாலும்
பத்தினியே உன் ஆசையைச்
      செத்தாலும் மறக்கமாட்டேன். 7

கட்டுக் ககப்பட்டவன்
      கண்டுட்டால் என்புருசன்
எட்டி உதைச்சிடுவான்
      என்னையும் உன்னையும் சேர்த்துக்கட்டி. 8
--------
பா-ம். 8. கண்டுட்டால் சொந்த நாதன்.
--------
கண்ணுக்குத் தெரியாமே
      கம்பிஜல்தி நீட்டிடுவோம்
ரெங்கோன் கப்பல்ஏறிக்
      கடலைத்தாண்டிப் போயிடுவோம். 9

காரியம் ஆகுமட்டும்
      காலைநீ பிடிச்சுகிட்டு
வீரியமாய்ப் பேசிவிட்டால்நான்
      வீணாஅதை நம்புவேனா? 10

வீரியமா நான்பேசலை
      காரியமாத் தான்பேசுறேன்
பேருகெட்டுப் போறாப்பலே
      ஒண்ணும்நானு பேசவில்லை. 11

என்னதான் நீசொன்னாலும்
      ஏமாந்து போகமாட்டேன்
பொன்னான என்புருசன்
      என்னசெஞ் சான்எனக்கு 12

கலங்காதே கைவிடலை
      காளிகோயில் முன்னாலே
கற்பூரத்தை உனக்குமுன்னே
      கைபோட்டு அணைச்சிடுவேன். 13

உற்றார் உறமுறையார்
      ஊரைவிட்டு ஓட்டிடுவார்
பற்றாக் குறைக்குஎன்
      பல்லெல்லாம் உடைச்சிடுவார்.       14

உற்றார் உறமுறையார்
      உன்னைக்குத்தம் சாட்டமாட்டார்
உன்புருசன் நான்இருக்க
      உனக்கேண்டி அந்தப்பயம்? 15

நாடெங்கும் இழுத்துக்கிட்டு
      நம்பிக்கையா நடந்துக்கிட்டுப்
பாதியில்நீ விட்டோடினால்
      பாவிநானும் என்னசெய்வேன்? 16

நாடெல்லாம் இழுத்துக்கிட்டு
      நாயைப்போலத் திரியமாட்டேன்
நான்உனக்கு நாடுவாங்கப்
      பணமுங்கூடத் தந்திடுவேன். 17

எட்டுமெத்தை வீடுவேணும்
      எண்பதுவேலைக் காரர்வேணும்
தட்டாமல் செலவுபண்ணத்
      தாராளமாப் பணமும்வேணும். 18

ஆடிமுதல் தேதியிலே
      அம்மன்சந்நிதிக் கோயிலிலே
ஆணையிட்டுக் கொடுக்கிறேண்டி
      அழகான மாமயிலே. 19

அப்பண்ணா நான்வருவேன்
      எப்பக்கம் கூப்பிட்டாலும்
ஆகாயக் கப்பலிலே
      ஏறிவரச் சொன்னாலும். 20
-----------
20. அப்பண்ணா - அப்போதென்றால்.
-------
நத்திநீ வந்தியிண்ணா
      நான்உன்னைக் காப்பாத்துவேன்
பத்தினியே உன்னைநான்
      நித்தமும் களிக்கச்செய்வேன். 21

இச்சைக் கிசைந்தசிறு
      இன்பமுள்ள தங்கமாமா
இச்சணமே புறப்படலாம்
      இங்கிலாந்து தேசத்துக்கு. 22
-------------

காளைமாடு

பொழுதுசாயும் நேரத்திலே
      புலிஅலையும் காட்டுக்குள்ளே
தலைசாஞ்சு தவிக்கிறையோ - தங்கரத்தினமே, உன்
      தலைவிதியைச் சொன்னால்என்ன - பொன்னுரத்தினமே. 1

மாடடையும் நேரத்திலே
      காளைமாட்டைக் காணாமின்னு
மாற்றாந்தாயி அடிக்கவந்தாள் - தங்கமாமாவே, நான்
      ஓடிவந்தேன் உடல்நடுங்க - பொன்னுமாமாவே. 2

கோடைமழை பெய்யுதடி
      குலையெல்லாம் நடுங்குதடி
கூசாமல்நீ என்பிறகே - தங்கரத்தினமே, ஓடிக்
      குடிசைக்குள்ளே வந்திடடி - பொன்னுரத்தினமே. 3

கண்ணழகும் கட்டழகும்
      கழுத்தழகும் கொம்பழகும்
பொன்னான காளைமாட்டைத் - தங்கமாமாவே, நான்
      கண்ணாலே கண்டால்போதும் - பொன்னுமாமாவே. 4

கோடிகோடி காளைமாடு
      என்கிட்டே இருக்குதடி
கோவமில்லா மேவாடி - தங்கரத்தினமே, உனக்குக்
      கொடுக்கிறேன் அதிலேஒன்னு - பொன்னுரத்தினமே. 5

உன்காளை என்னத்துக்கு
      ஊரார்காளை என்னத்துக்கு
என்காளை எனக்கிருந்தால் - தங்கமாமாவே, அது
      எப்பவும் எனக்குதவும் - பொன்னுமாமாவே. 6

என்னடி மிஞ்சிப்போறே
      ஏமாந்து போகமாட்டேன்
உன்னைப்போல ஆயிரம்பேரைத் - தங்கரத்தினமே
      உலகமெல்லாம் பார்த்திருக்கேன் - பொன்னுரத்தினமே. 7

என்காளை இங்கிருந்தால்
      எட்டி உதைத்துக்கொல்லும்
கிட்டவந்து பேசாதேடா - மட்டிப்பயலே, உன்னைக்
      கொண்டுபோகும் கொள்ளைநோயி - சுட்டிப்பயலே. 8

உன்காளை என்னசெய்யும்
      உன்சாமி என்னசெய்யும்
உன்மாட்டைக் கொன்னுடுவேன் - தங்கரத்தினமே
      கையைச்சும்மா வீசாதடி - பொன்னுரத்தினமே. 9

வம்பாநீ பேசாதேடா
      வாய்ச்சாலம் பண்ணாதடா
கொம்பாலே குத்திக்கொல்லும் - என்காளைபயலே
      உன்பாடு திண்டாட்டந்தான் - ஓடிப்போடாபயலே. 10
வாடாபோடாண்ணு சொல்லாதேடி
      வாயால்வந்ததைத் திட்டாதேடி
கேடாநீ கெட்டுப்போவே - சண்டாளச்சிறுக்கி
      ஓடிநீ ஒளியாதேடி - பாழானசிறுக்கி. 11

என்குலத்துத் தெய்வங்களா
      எங்கொளித்து நிற்கிறீங்க
ஏழைமுகம் பார்த்திவனை - நாசம்பண்ணுங்களேன்
      காலிலேநான் கும்பிடுறேன் - காத்துக்கொள்ளுங்களேன்.12

உன்சாமி வந்திடுமா
      ஒண்ணுமில்லாமல் செஞ்சிடுமா
நான்தாண்டி உனக்குச்சாமி - சண்டாளச்சிறுக்கி
      நல்லாநீ சொல்றதைக்கேள் - பாழானசிறுக்கி. 13

சாமிகளைத் திட்டாதேடா
      சாம்பலாய்நீ போயிடுவே
பாவிஉன் கண்அழியும் - பாழாய்ப்போனவனே, உன்
      வீடும் எரிஞ்சுபோகும் - வீம்புக்காரப்பயலே.       14

சாமிஎங்கே பூதம்எங்கே
      கோயில்எங்கே குளம்எங்கே
சாபத்தைநீ வச்சுக்கோடி - வாயாடிமகளே, உன்னை
      சட்டினிநான் செய்திடுவேன் - சண்டாளிமகளே. 15

தெய்வங்களே என்வருத்தம்
      தெரிஞ்சும் ஒழிஞ்சீங்களா
பத்தினியா நான்இருந்தால் - பக்கம்வந்திடுங்க, இந்தப்
      பாவிப்பயல் பழியைவாங்கப் - பலங்கொடுத்திடுங்க. 16

கண்ணாட்டி கண்மணியே
      கற்புள்ளஎன் பொன்மணியே
கண்டேனடி உன்திறத்தைத் - தங்கரத்தினமே
      காளைமாடு நான்தாண்டி - பொன்னுரத்தினமே. 17

வேடன்வேசம் போட்டுஉன்னை
      வேணுமின்னு ஏச்சுப்பார்த்தேன்
சாமிபோல நீயிருக்கத் - தங்கரத்தினமே உன்னைச்
      சாஸ்டாங்கமாய்ப் பணிகிறேண்டி - பொன்னுரத்தினமே. 18
-------------

தாசியின் காதல் - வாக்கு வாதம்

மாமா நீங்க வாங்க
      மங்கைக் குறுதி தாங்க
ஏமா றுவமோ நாங்க
      சாமர்த் தியம்வே ணாங்க. 1

பட்ச மாக ஓடிப்
      பறந்து வந்தி யாடி
நிச்சய மாக நாண்டி
      இல்லை டிஒரு பேடி. 2

பணப்பேய் பிடிச் சவளே
      பிணம்போல் வாய்திறப் பவளே.
பணம்பி டுங்கிற வரைக்கும்
      பல்லை இளிப் பவளே. 3

பந்து உறமுறையார் கூட்டம்
      பண்ணு வாங்க திட்டம்
பச்சி லையுடைய காட்டம்
      பையன் பிடிப்பானே ஓட்டம். 4

தாசி யிண்ணும் வேசியிண்ணும்
      தாரா ளமாஇப் போதும்
பேசாதீங்க மாமா
      லேசாவிட மாட்டேன் ஆமா. 5

மெருகு நகையைப் பூட்டி - உன்
      மெல்லிசுக் கையை நீட்டி - என்
தெருவிலே வண்டி ஓட்டி - ஏன்
      திரிகிறா யடிநாய்க் குட்டி. 6

கட்டுவையே சாயச் சீலை அடி
பட்டானாலும் செட்டி வேலை - குடி
கெட்டாலும் உன் காதில் ஓலை - குட்டி
தட்டான் கை வேலை யாலே. 7

சிறுபிள் ளைகளைக் கூட்டி - ரொம்பச்
சிரிச்சு விரலை ஆட்டி - டம்ப
வரிசை யெல்லாம்நீ காட்டிச் - சும்மா
பறிப்பைநீ ரூபாய் கோடி. 8

திட்டி என்னை ஏசுகிற தாலே
தேனேசுகம் என்ன உனக்கு
மட்டிஎன் மடத்தனத் தாலே
மானங் கெட்டதுதான் சுகம்எனக்கு. 9

சொல்படியே நான்போய் வாறேன்
      சொல்லை மீற மாட்டேன்
கல்லான உன் மனசைக்
      கரைக்க என்ன செய்வேன்? 10

தண்ணியும் மூணு பிழையைத்
      தயவால் தான்பொறுக் கிறதே
என்னையும்நீ மன்னிச் சிட்டால்
      என்வீடு போய்வாறேன். 11

மாமாநான் உங்களை விட்டு
      மறைய மனம் வரலை
காமாஎன் கண்மணி நீங்க
      கல்லோ கட்டி இரும்போ? 12

இதுநாளும் என்வீட் டுக்கு
      எந்தப் பயலும் வரலே
எதினாலே உங்க ளுக்கு
      என்மேல் இந்தக் கவலை? 13

சமைந்த செவ்வாய்க் கிழமெருந்து
      உங்கள் மேலே நினைவு
சாமிநீங்க என்மேல் இப்போ
      கண்ட தென்ன குறைவு?     14

வீடும் வாணாம் வாசலும் வாணாம்
      சொத்துச் சுகமும் வாணாம்
ஏடும் வாணாம் எழுத்து வாணாம்
      நானே எனக்கு வாணாம். 15

நாதன் என்னைத் தேடி வந்தால்
      நானே அவருக் கடிமை
நான்மாத் திரம் இல்லை
      உனக்குள்ள தெல்லாம் அடிமை. 16

தேடுதல்

திருச்சிராப் பள்ளியிண் ணாளே
      தேரோடுற வீதியிண் ணாளே
தேடிவந்த பறப்பெண் ணாளை - மயிலே
      தெருவீதி தெரிய லையே. 17

குருமந்திரம் போலே அவள்
      குரல் காதிலே விழுகுதே
உருகி அழுதை யேடி - மயிலே
      உன்னைநான் மறப்பே னோடி. 18

மானே மரகதமே
      மயிலே இளங்குயிலே
தேனே உன்னைத் தேடி நானே -
      தெருவில் அலைகி றேனே. 19

உள்ள தைச்சொன் னாளோ
      இல்லாத தைச்சொன் னாளோ
ஒண்ணுந் தெரியலையே மயிலே
      ஒளிந்தையோ என்னை மறந்து? 20

சிங்காரப் பெண்கள் இருக்கும்
      தெருவீதி அதுதானையா
தேடுகிற காரணம் என்ன - ஐயா
      தேடும் ஆள்பேர் என்னஐயா? 21

ஆளுபேரு தெரியா தையா
      ஆளைப் பார்த்தால் தெரியும் ஐயா
ஏழடுக்கு மெத்தைக் காரி - ஐயா
      எனக்கம் புட்டுத் தான்தெரியும். 22

அந்த மாதிரிப் பெண்ணு
      அந்தா நிற்கிறாள் பாருங்க
ஆகாச மாயிருக்கும் - ஐயா
      அழகான ஏழாம் மெத்தையிலே. 23

ஐயா தாணாக் காரரே
      அதுதான் நான் சொன்ன வீடு
மெய்யாநான் உங்களுக்கு - ஐயா
      மேலான வந்தனம் சொல்றேன். 24

மாமா தயவு செஞ்சு
      மகள்மெத்தைக் கேறிப் போயி
சேமமாக் கேட்டு வாங்க - மாமா
      சேதிவந் தெனக்குச் சொல்லுங்க. 25

அப்பா மருமகனே
      அன்பான மன்மதனே
எப்பண்ணு காத்திருந்தாள் - என்மகள்
      இப்பவே உன்னை வரச்சொன்னாள். 26
------------

கூடுதல்

மோடி பண்ணின அருமை மாமா - என்னைத்
      தேடிவந்த காரணம் என்ன - மாமா
கோடிநமஸ் காரம் என்
      கும்பிடு உனக்குச் சொந்தம். 1

மோடிபண் ணாமே நீங்கஇருந்தா - இனிமேலாவது
      வீடுவாசலும் சொத்துச்சுகமும் உனக்குச் சொந்தம்
காடு கரையும் ஆடு மாடும்
      உனக்கே சொந்தம் 2

முன்னே நான் சொன்ன மாதிரி
      இன்னும் நூறு தரஞ் சொல்லுறேன்
என்னை அடிமை யாநினைங்க
      இனிமே லாவது. 3

உங்களை நினைச்சு நினைச்சு
      உருகுச்சே என் மனசு
சொந்த வீடு போல நீங்க
      நினைச்சுஇருந் தால்சொகுசு. 4

ஓயாமல் தவம்செய்து
      உருக்கமாய் பெற்றெடுத்த
தாயையும் தகப்பனையும்
      மறந்தேன் உங்களாலே. 5

ஒப்பில் லாத என்னதெல்லாம்
      உங்களுக்கு ஒப்படைத்தேன்
தப்பாமலே நான் என்னைத்
      தத்தஞ் செய்தேன் தங்களுக்கு. 6

ஆகாஎன் கண்மணியே
      அன்புள்ள கண்மணியே
ஓகோ நான் பாவியானேன்
      மன்னி மன்னி மன்னி. 7

உன்குணம் தெரியாமே
      ஊளை யிட்டேன் நாயைப் போலே
என் குணம் கெட்ட துண்ணு
      உணர்ந்தேன் உணர்ந்தேன் இப்போ. 8

வேறொரு பெண்ணைப் போலே
      வெறிபிடித் தலையாமலே
பேரைக்காப் பாற்றினையே
      பொன்னே பொன்னே பொன்னே. 9

சங்கதி அறியாமே
      சண்டாள னானநான்
சண்டித்தனம் பண்ணி னேனே
      பெண்ணே பெண்ணே பெண்ணே. 10

தாசி யிண்ணும் வேசி யிண்ணும்
      தப்பாநான் சொன்ன சொல்லைத்
தயவாநீ மன்னிக்கணும்
      தாயே தாயே தாயே. 11

உன்குணத்துக் காகஎன்
      உயிரையே தத்தஞ் செய்வேன்
மாங்கனியே என்சொத்தும் - நானும்
      உனக்கே உனக்கே உனக்கே. 12

அப்பன் அண்ணன் மார்களும்
      அம்மா அக்கா மார்களும்
துப்பாமே துப்பினாங்க என்
      முகத்திலே முகத்திலே முகத்திலே. 13

நான்தான் பெரிய மனுச னுண்ணு
      நினைச்சேன் நான்
நான்தான் பணக் காரனுண்ணு
      நினைச்சேன் கண்மணி கண்மணி.     14

உன்பணத்தில் ஒருபங்கும்
      என்கிட்டே இல்லையே
ஏமாந்து போனேகண்மணி
      கண்மணி கண்மணி. 15

ராசாவும் மந்திரியும்
      ராவெல்லாம் திரிந்தாலும்
ராணி யான உன்கிட்ட
      நாடுவாங்க ளோநாடு. 16

இப்படி எல்லாம் இருக்க
      இந்த மூடனான நான்
எப்படிஉன் மனசைநான்
      கலக்கினேன் கலக்கினேன் கலக்கினேன்? 17

உன்னைப் பார்த்த நாள்முதலா
      ஒருநாளும் சாப்பிடலை
உன்முகம் என்மனசில்
      பதிஞ்சுச்சே பதிஞ்சுச்சே பதிஞ்சுச்சே. 18

சும்மாநான் வெட்டிப் பேச்சும்
      வெறும்பேச்சும் பேசினேனே
அம்மாஉன் பாதம்கதி
      அம்மணி அம்மணி அம்மணி 19

மனசுக்கிசைந்த பசுந்தேனே
      மாமா கோமானே
கண்ணிய மாநம்ம
      ரெண்டு பேரும் இருப்போம். 20

கம்பீரமா இருக்கலாம்
      காமா சோமா மாமா
உன்னைவிட வேறேகதி
      உலகத்திலே இல்லை மாமா. 21

என்னைப் போலே உங்க ளுக்கு
      எத்தனையோ பேர் இருப்பார்
உண்மையாநான் சொல்லுறதை
      ஊக்கமாய்க் கேளுங்கள் மாமா. 22

அப்படிச் சொல்லாதேம்மா
      என் கண்ணே ஆசைக் கிளியே
அநியாயமா நான் உன்னை
      அவதூறு பேசினாலும். 23

அன்பாக நீ அழைத்து
      ஆதரிக் கிறையே கண்ணே
பொன்மணியே என் பாவத்தைப்
      பொறுத்த தயவுக்காக. 24
--------------

சண்டைப் பேச்சு

ஆலமர ரோட்டுவழி
      அலைந்தலைந்து போறபெண்ணே
சாலைவழி ஏண்டிபோறே - ஏடிதங்கமே
      சருக்காரு ரோட்டுவழி - அடிபொன்னம்மா. 1

சாமைக் கதிரறுக்க நான்
      சருக்காரு ரோட்டுவழி
மாமன் கூடப் போறேனடா - ஏலேதங்கையா
      மலையடி வாரத்துக்கு - அடேபொன்னையா. 2

சாமைக் கதிரறுக்கநீ
      சாமத்திலே ஏண்டிபோறே
சாலைவழி பேயிருக்கும் - ஏடிதங்கமே
      சந்தடி அடங்கிப் போச்சே - அடிபொன்னம்மா. 3

சாலைவழி போகையிலே
      மாமன்கூட என்ன சோலி
நான்வந்தால் போதாதோடி - ஏடிதங்கமே
      சாமத்திலே சரிசோடியா - அடிபொன்னம்மா. 4

சாமைக் கதிர்அறுக்க - யாரும்
      சாமத்திலே போவாங்களா
சரசம்நீ பண்ணாதேடா - ஏலேதங்கையா
      சனியன் பிடித்த பையா - அடேபொன்னையா. 5

மாமரத்துக் கடியிலேதான்
      மாமன் நிண்ணு பார்க்கிறாரு
ஏமன்கையில் வேல்பாருடா - ஏலேதங்கையா
      ஏமன்ஊருக் கென்னை அனுப்பிடுவார் -
      அடே பொன்னையா. 6

சாமைக்கதிர் அறுக்கணும்டா
      சாதிகெட்ட சக்கிலியா
ஏமன் கையில் அகப்படாதே - ஏலேதங்கையா
      என்மேல் ஒண்ணும் குத்தம் இல்லை -
      அடேபொன்னையா. 7

சாமையைநீ அறுத்தால் என்ன
      பூமியைப் பொளந்தால் என்ன
மாமன் என்ன செய்வானடி - ஏடிதங்கம்மோ
      மண்ணைக் கவ்வ வைப்பேனடி -
      அடேபொன்னம்மா. 8

போடா பொடிக்கொசுகு
      பொழுதோடே சேருவீடு
சாமைக்காட்டுக் கெருவாகாதே - ஏலேதங்கையா
      சமராசியாப் போகலாம்டா - அடேபொன்னையா. 9

பெரட்டாசி மாசத்திலே
      பெரியகடை வீதியிலே
பேரீச்சம் பழந்தானடி - ஏடிதங்கம்மா
      பெரியபடி ரெண்டுவாங்கினேன் -
      அடிபொன்னம்மா. 10

கத்திரிக்காய் மாங்காயும்
      கனிஞ்ச பழங்களும் நான்
கண்டேனடி அங்கேநான் - ஏடிதங்கம்மா
      காசிருந்தும் வாங்கவில்லை - அடிபொன்னம்மா. 11

பெரியகடை வீதியிலே
      பேரீச்சை வாங்கையிலே
பொறுமைஒண்ணும் இல்லாத - ஏலே தங்கையா
      எருமைக்கடா பார்த்தேன் நான் -
      அடேபொன்னையா 12

நான்பார்த்த எருமைக்கடா
      உன்ஜாடை இருந்திச்சடா
கஞ்சாக் குடிச்ச கடா - ஏலேதங்கையா
      நெஞ்சுஅஞ் சாதகடா - அடேபொன்னையா 13

கன்னங் கறேலெண்ணுதான்
      கருங்கடாப் பார்த்தேன் ஒண்ணு
சின்னக்கடை வீதியிலே - ஏலேதங்கையா
      சீப்பும் காப்பும் வாங்கையிலே -
      அடேபொன்னையா.     14

உன்னைநான் ஒசத்திப் பேச
      என்னைநீ இறக்கிப் பேச
உலகம் பொறுக்குமோடி - ஏடிதங்கமே
      ஒத்து வாழணுமேடி - அடிபொன்னம்மா. 15

மரத்தடியி லேநிற்கிற
      மாமன் இதைக் கேட்டாருண்ணா
மானங்கெட்டுப் போகுமடா - ஏலேதங்கையா
      மரியாதையாப்போயிரடா -
      அடேபொன்னையா.16

முன்னேநான் சொன்னேனடி
      இன்னம் என்ன பயம்டி
பின்வாங்கவே மாட்டேனடி - ஏடிதங்கம்மா
      என்னவந் தாலுஞ்சரி - அடிபொன்னம்மா. 17

மாமன்மாத் திரமில்லை
      மாமியாருங் கூடஇருக்காள்
மச்சான்மாரு ரெண்டுபேரு - ஏலேதங்கையா
      மல்லுக்கட்டிலே கெட்டிக் காரரு -
      அடேபொன்னையா.18

மல்லுக்கட்டிலே அவுங்க என்னை
      மடக்கமுடி யாது பொண்ணே
பில்லுக் கட்டைப் போல்அவரை - ஏடிதங்கம்மா
      பிரியைக் கட்டி இழுத்திடுவேன் -
      அடிபொன்னம்மா. 19

பில்லுக்கட்டைப் போல்அவரைப்
      பிரியைக்கட்டி இழுத்தி யிண்ணா
வீச்சரிவாள் உன்தலையை - ஏலேதங்கையா
      வீசி டுண்டா வேகத்திலே -
அடேபொன்னையா. 20

ஆணாப் பிறந்திருந்தால்
      வீணாப்போ காதென்பலம்
காணாமற் போவாங்கடி - ஏடிதங்கம்மா உன்
      கண்ணுக்கு முன்னா லேயே -
      ஏடிபொன்னம்மா. 21

துள்ளுகிற மாடெப் போதும்
      துள்ளித் துள்ளிப் பொதிசுமக்கும்
துள்ளாத டாமடையா - ஏலேதங்கையா
      பொல்லாத வங்க அவுங்க -
      அடேபொன்னையா 22

வெட்டி உருட் டுருட்டி
      விருதாவாப் பேசலைடி
வேலைக்காரன் நானடி - ஏடிதங்கம்மா
      வெளியே வந்தால் தெரியுமடி -
      ஏடிபொன்னம்மா. 23

முன்ஒரு காலத்திலே
      முனியாண்டி மகன்ஒருத்தன்
என்னமோ சொன்னத்துக்கு - ஏலேதங்கையா
      எமலோகம் சேர்ந்தானடா - அடேபொன்னையா.24

உங்கள் வீட்டு முருங்கைக் கீரை
      எங்கள் வீட்டுக் கிள்ளுக் கீரை
தங்கம்நீ தயங்குறேடி - ஏடிதங்கம்மா
      பங்கம் செய்யப் பார்க்கி றேடி -
      அடிபொன்னம்மா. 25

உன்னைப் போல முரட னெல்லாம்
      ஓடிஓடி ஒளிகையிலே
எந்த மூலை யடாநீமூடா - ஏலேதங்கையா
      சொந்தப் பேச்சாப் பேசாதேடா -
      அடேபொன்னையா. 26

என்கூடப் பிறந்த வங்க
      ஏழாணு ரெண்டு பொண்ணு
பத்துப் பேரிலே நான்தாண்டி - ஏடிதங்கம்மா
      பயில்வா னுக்குப் பிறந்த குட்டி -
      அடிபொன்னம்மா. 27

எங்கள் அக்கா தங்கச்சிகூட
      எப்போதாவ தொருத்தன்
சக்காந்தம் பேசினாக்க - ஏலேதங்கையா
      சண்டைவரு மாவராதா - அடேபொன்னையா. 28
-------
28. சக்காந்தம் - பரிகாசம்.
--------
இரும்புத் தலையன்கூட
      என்தங்கச்சி அக்காள் கிட்ட
இடும்பு பேச நான்கேட்டால் - ஏடிதங்கம்மா
      இடுப்பை ஒடிச்சிடுவேன் -
      அடிபொன்னம்மா. 29

மூணு கொம்பு முளைச்சவனும்
      சாணுபத்து வளந்தவனும்
சாமானியமா எங்கிட்டே - ஏடிதங்கம்மா
      சமர்த்துப் பண்ண முடியாதடி -
      அடிபொன்னம்மா 30

மும்மூர்த்தி வந்தால்கூட
      முடிச்சிடுவேன் நொடிப்பொழுதில்
கம்மால்பண்ண முடியாதடி - ஏடிதங்கம்மா
      நம்மபலம் தெரியாதடி - அடிபொன்னம்மா. 31

அந்தக்காலத்தி லேஇருந்த
      அர்ச்சுணன் வீமன் காமனும்
எந்தமூலை யடிஎனக்கு - ஏடிதங்கம்மா
      சந்து சந்தாக் கிழிச்சிடுவேன்
      அடிபொன்னம்மா. 32

அளவுக்கு மிஞ்சினாக்க
      அமுதமும் நஞ்சு டாப்பா
அளவுக்கு மிஞ்சா தேடா - ஏலேதங்கையா
      அலசடி பட்டுப் போவே - அடேபொன்னையா. 33

உனக்கி ருக்கும் ரோசந்தான்
      எனக்கும் இருக்கு முண்ணுநினை
உனக்குமேல் இருப்பேனடா - ஏலேதங்கையா
      மனப்பால் குடிக்காதேடா - அடேபொன்னையா. 34

ஒத்தையிலே இருக்கிறேண்ணு
      ஒருகாலும் நினைக்காதேடா
கத்திக்கிரை யாகாதேடா - ஏலேதங்கையா
      அத்தைமக்கள் வாறாங்கடா -
      அடேபொன்னையா. 35

அத்தைமக்கள் வந்தால் என்ன
      கத்தியெல்லாம் வந்தால் என்ன
கத்தி ரிக்காய் போல்அவரை - ஏடிதங்கம்மா
      சுத்தமா அரிஞ்சிடுவேன் - அடிபொன்னம்மா. 36

புளியமரப் பொந்துக் குள்ளே
      புடிச்சமுக்கி உன்உடம்பை
அடிஅடிண்ணு அடிப்பாங்கடா - ஏலேதங்கையா
      அநியாயமாச் சாகாதேடா - அடேபொன்னையா.
ஆகாத காரியத்தை
      அடிக்கடிநீ பேசாதேடி
சாகாத வரம்பெத்தேண்டி - ஏடிதங்கம்மா
      சண்டித்தனம் பண்ணாதேடி - அடிபொன்னம்மா. 38

பத்துத்தலை ராவணனும்
      எப்படியோ மாண்டானடா
எம்புட்டடா நீமடையா - ஏலேதங்கையா
      வம்புத்தனம் பண்ணாதேடா - அடேபொன்னையா. 39

சீதையைச் சிறைஎடுத்த
      செம்பொன்னுக் கிரீடத்தானும்
போனவழி தெரியலைடா - ஏலேதங்கையா
      போக்கிரித்தனம் பண்ணாதேடா -
      அடேபொன்னையா. 40

என்பாணம் ராம பாணம்
      ஏழுலகம் நடுங்கும் பாணம்
பேமானிப் பயலைஎல்லாம் - ஏடிதங்கம்மா
      பேரைக் கொடுக்கும்பாணம் - அடிபொன்னம்மா. 41

அல்லிஅர சாணிகிட்டே
      அர்ச்சுனன் செக்குச்செல்லலே
அப்படிஎன் பாணத்துக்குமுன் - ஏலேதங்கையா
      எப்படிஉன் பாணம்நிற்கும் - அடேபொன்னையா. 42

எத்தனையோ இடைப்பொண்ணுங்க
      என்னைப் பார்த்து மயங்கினாங்க
பத்தினியே நீமாத்திரம் - ஏடிதங்கம்மா
      பாறைக் கொப்பா இருக்கிறையே -
      அடிபொன்னம்மா. 43

இடைப்பெண்ணையும் என்னையும்ஒண்ணு
      எடைபோட்ட மடப்பயலே
துடைப்பக்கட்டை அடிவேணுமா - ஏலேதங்கையா
      தொடராதேடா தொட்டியப்பிசாசே -
      அடேபொன்னையா. 44

சமாதானப் பேச்சு

அடிச்சாலும் மிதிச்சாலும்
      ஆறுகூறு போட்டாலும்
ஆதரிக்க வேணுமடி - ஏடிதங்கம்மா
      ஆரு மில்லாப் பாவி நாண்டி -
      அடிபொன்னம்மா. 45

தாயே தர்மபுத்திரி
      தயவாய்என்னை மன்னியடி
வாயாலே பேசினதை - ஏடிதங்கம்மா
      வகைவைக்காமல் மன்னியடி -
      அடிபொன்னம்மா. 46

தண்ணியும் மூணுபிழை
      தயவாப் பொறுக்குதப்பா
உன்னையும் நான்பொறுத்தேன் - அப்பாதங்கையா
      ஒண்ணுக்கும் அஞ்சாதேநீ - நல்லபொன்னையா. 47

பச்சைமலையி லேயிருக்கும்
      பச்சைக்கிளி யேநான்உன்னை
பாத்துரொம்ப நாளாச்சம்மா - என்கண்ணம்மா
      மாற்றுத்தங்கத்தைத் தானம்மா -
கண்ணுபொன்னம்மா. 48

ஆணால் அழகன்நீ
      அருமந்த ஆளியன்நீ
தோளுக்குத் தோளும்நீ - என்கண்ணையா, உன்னைத்
      தொட்டாலும் தோசமில்லை - என்பொன்னையா. 49

கண்ணேநான் உன்னைக்கண்டு
      கருத்துக் கிசைந்திருக்க
என்னதவஞ் செய்தேனோ - என்கண்மணி
      சொன்னாலும் மனம்ஆறாதடி -
பொன்னுக்கண்மணி. 50

தமயந்தியைக் கட்டணுண்ணு
      சனிபகவான் பட்டபாடு
நானுந்தான் பட்டேனம்மா - ஆனால்கண்மணி
      நல்லநேரம் வந்துச்சம்மா - பொன்னுக்கண்மணி. 51

கட்டணுண்ணா எத்தனையோ
      காவாலியைக் கட்டலாம்நீ
கட்டுத் தாலி நான்நடத்தக் - கண்ணுத்தங்கமே
      காவாலி நம்மளை நெருங்குவானா -
      கட்டித்தங்கமே 52

கல்யாண விமரிசை

ஊருலகம் போலேநாம்
      ஒழுங்கான தாலிகட்டி
உறமுறையார் கூடநாம் - கண்ணுத்தங்கமே
      ஊர்கோலம் போய்வரணும் - கட்டித்தங்கமே. 53

யோக்கியமாய்ப் பேசுற என்
      யோசனையுள்ள மச்சானே
பாக்கியந்தான் நான்பெற்றேனே - கண்ணுமச்சானே
      பந்துசனமெல் லாம்புகழப் - பொன்னுமச்சானே. 54

ஆட்டுக்கிடாய் நாலடிச்சு
      ஆயிரம்பேரைக் கூப்பிட்டு
அழகான விருந்துவச்சு - கண்ணுத்தங்கமே
      ஆசையைத் தீர்க்கணுமே - கட்டித்தங்கமே. 55

ஏழைகளும் பாழைகளும்
      எங்கிருந்தாலும் கூப்பிட்டு
வாழைஇலை போட்டுச்சோறு - கண்ணுமச்சானே
      வரிசையாக் கொடுக்கணுமே -
பொன்னுமச்சானே. 56

மாமன்மார் மச்சான்மார்
      மத்தவங்க எல்லாருக்கும்
மாலைகூடப் போடணுமே - கண்ணுத்தங்கமே
      மரியாதைகள் செய்யணுமே - கட்டித்தங்கமே. 57

அண்ணனுக்கும் அக்காளுக்கும்
      அதிசயத் துணிவாங்கணும்
தம்பிக்கும் தங்கச்சிக்கும் - கண்ணுமச்சானே
      தாராளமாத் துணிவாங்கணும் -
பொன்னுமச்சானே. 58

கொட்டு முழக்கத்தோடே
      கொண்டாடும் வரிசைகளை
கொண்டுவந்த பேருக்கெல்லாம் - கண்ணுத்தங்கமே
      கொடுக்கணும்பதில் சீர்வரிசை -
      கட்டித்தங்கமே. 59

கலியாணத் துணிமணியை
      காரிகையே நீவாங்கணும்
தெரியாதம் மாஎனக்குக் - கண்ணுத்தங்கமே
      சரியான வழிமுறைகள் - கட்டித்தங்கமே. 60

முகூர்த்தக்காலு ஊணறதும்
      ஊர்வெற்றிலை வைக்கிறதும்
முதல்வேலைண்ணு சொல்வாங்க - கண்ணுமச்சானே
      முன்னோர் எல்லோருமே - பொன்னுமச்சானே. 61

சம்பந்தக் காரருக்குச்
      சரியான பழம்பாக்குச்
சட்டப்படி வைக்கணுமாம் - கண்ணுமச்சானே
      திட்டவட்டஞ் செய்யணுமாம் - பொன்னுமச்சானே. 62

நாளுதேதி நட்சத்திரம்
      நல்லாப்பார்த்துக் குறிச்சுவச்சு
நாகசுரக் காரனையும் - கண்ணுமச்சானே
      நயந்து அழைக்கணுமாம் - பொன்னுமச்சானே. 63

கண்ணேஎன் கண்மணியே
      கலியாணத்துக்கு உண்ணம்
என்னென்ன வேணும் அம்மணி - கண்ணுத்தங்கமே
      எனக்குச்சொல்ல ணும்விவரம் - கட்டித்தங்கமே. 64

பூமிஎல் லாம்புகழும்
      புரோகிதருக் காளனுப்பி
சேமலாப நேரத்தையும் - கண்ணுமச்சானே
      செம்மையா அறிஞ்சுவரணும் - பொன்னுமச்சானே. 65

வீட்டிலிருக்கும் கிழடுகட்டை
      வேலையெல்லாம் நடத்தையிலே
நாட்டிலிருக்கும் மனிசரெல்லாம் - கண்ணுத்தங்கமே
      நம்மைத்தேடி வருவாங்களாம் - கட்டித்தங்கமே. 66

புரோகிதரு சொல்லுப்படி
      பொய்ப்பந்தல் ஒண்ணுபோட்டுப்
பொறுமையா உள்ளேஉட்கார்ந்து - கண்ணுமச்சானே
      அருமையா உச்சரிக்கணும் - மந்தரங்களை. 67

தாம்பாளத் தட்டிலேதான்
      சாமானம் வைக்கணுமே
என்னென்ன சாமானம்ணு - கண்ணுமச்சானே
      இப்பநான் சொல்லுவேனே - பொன்னுமச்சானே. 68

மல்லிகைப்பூ மருக்கொழுந்து
      நெல்அரிசி நல்லமஞ்சள்
தாலிக்கயி றுட்படவே - கண்ணுமச்சானே
      தாலியும் வைக்கணுமே - பொன்னுமச்சானே. 69

தேங்காய் பழமும்கொஞ்சம்
      தாம்பாளத் தட்டிலேவச்சு
தாம்பூலம் சேர்த்துவச்சுக் - கண்ணுமச்சானே
      தம்பதிக்குக் கொடுக்கணுமே -
பொன்னுமச்சானே. 70

வந்தவங்க எல்லோருக்கும்
      சந்தனமும் குங்குமமும்
வகைவகையாக் கொடுக்கணுமே - கண்ணுத்தங்கமே
      வரிசைகளும் கொடுக்கணுமே - கட்டித்தங்கமே. 71

நல்ல சகுனத்திலே
      நாட்டாரெல் லாமறிய
நாம்ரெண்டு பேருமே - கண்ணுத்தங்கமே
      சம்மணங்கால் போட்டுட்காரக் - கட்டித்தங்கமே. 72

பூசாரிக்கும் நமக்கும்
      பொதுவாத் திரையுங்கட்டி
சாஸ்திர ஒழுங்குப்படி - கண்ணுத்தங்கமே
      சமாதானத் தாலிகட்டக் - கட்டித்தங்கமே. 73

தாம்தாமிண் ணொருபக்கம்
      தீம்தீமிண் ணொருபக்கம்
நாலாபக்க மும்முழங்கக் - கண்ணுத்தங்கமே
      நாம்நமஸ் காரஞ்சொல்வோம் - கட்டித்தங்கமே. 74

நம்மரெண்டு பேர்மேலேயும்
      வந்தசின்னப் பிள்ளையெல்லாம்
வாரிவாரிப் பூஇறைக்கக் - கண்ணுத்தங்கமே
      மாறிமாறிப் பாட்டுப்பாடக் - கட்டித்தங்கமே. 75

கலியாணப் பாட்டவுங்க
      கனிவாய்த்தான் படிக்கையிலே
கண்எல்லாம் நம்மேலேதான் - கண்ணுத்தங்கமே
      கடவுள்அரு ளாலேதான் - கட்டித்தங்கமே. 76

ஆலாத்தி எடுக்கத்தானும்
      அத்தைமாரு முன்வரவே
காலாட்டிப் போவோம்நாம - கண்ணுத்தங்கமே
      கவலையில்லா மல்போவோம் - கட்டித்தங்கமே. 77

உன் அண்ணன்மாரும் தம்பிமாரும்
      உன் அக்காமாரும் தங்கைமாரும்
என்னைப்பரி யாசம்பண்ண- கண்ணுத்தங்கமே
      எதிர்க்கவரு வாங்களம்மா – கட்டித்தங்கமே. 78

மச்சினன்மார் எல்லாம்சேர்ந்து
      மரியாதையாய்க் கிட்டவந்து
மஞ்சள் தண்ணி ஊத்தையிலே – கண்ணுத்தங்கமே
      பஞ்சைப்போல நான்பறப்பேன் – கட்டித்தங்கமே. 79

மஞ்சள்தண்ணிக் குப்பயந்து
      பஞ்சாப் பறப்பவரே
கொஞ்சம் நிண்ணு பேசுங்கோ – என் அத்தானே
      கிஞ்சித்துமே வெக்கம் இல்லையே – பொன்னத்தானே. 80

வேட்டிபோனால் தான் என்ன
      சட்டைபோனால் தான் என்ன
மச்சான் தயவுவேணுமே – கண்ணாத்தானே
      மஞ்சள்தண்ணிக்குப் பயமாகுமோ – பொன் அத்தானே. 81

வேட்டிபோனால் பரவாயில்லை
      சட்டைபோனால் பரவாயில்லை
சாணியை நல் லாக்கரைச்சு – என்கண்மணி
      சட்டைமேலே ஊத்துவாங்க – கண்ணுப் பொன்மணி. 82

மலையேறிப் போனாலும்
      மச்சான் தயவுவேணி,
மச்சான் தயவு இல்லாவிட்டால் – என் அத்தானே
      மனிசர் மதிப்பாங்களோ – பொன் அத்தானே. 83

கொழுந்தி மார்களைப்பற்றியும்
      கோழிக்கால் களைப்பற்றியும்
கோளாறு சொல்லித்தாரேன் - கண்ணத்தானே
      கொஞ்சம்நிண்ணு கேட்டுப்போங்கோ -
      பொன்அத்தானே. 84

சாக்கடை யைக்கிளறும்
      காதிக்கோழி ரெண்டடித்துச்
சாப்பிடுற நேரத்திலே - கண்ணேஉங்களுக்குச்
      சாதிக்கோழிக் கால்வருமே -
பொன்அத்தானே. 85

வாறதைப் பார்க்கையிலே
      வருத்தப் படாமல்நீங்க
கறுத்தகோழி காலைத்தான் - கண்ணத்தானே
      காண்பிக்கணும் கொழுந்திமாருக்குப் -
      பொன்அத்தானே. 86

காண்பிக்க மறந்திங்கண்ணா
      சாமமிண்ணா லும்அவுங்க
சாணியெல் லாங்கரைச்சுக் - கண்ணத்தானே
      சட்டையெல்லாம் ஊத்துவாங்க - பொன்னத்தானே. 87

வேண்டியவை

கண்ணேஎன் கண்மணியே
      என்னவே ணும்உனக்குக்
கண்ணாலே கண்டதெல்லாம் - என்கண்மணி
      காண்பித்தால்நான் வாங்கித்தாரேன் -
      கண்ணுப்பொன்மணி. 88

ஒட்டியாணம் வேணுமா
      பட்டுத்துணி வேணுமா
எட்டுக்கல் கம்மல்வேணுமா - என்கண்மணி
      சட்டுண்ணுநீ சொல்லித்தீரம்மா -
      கண்ணுப்பொன்மணி. 89

ரத்னக்கல் நகையும்
      முத்துப் பதக்கங்களும்
சத்திக்குத் தகுந்தாப்போலே - கண்ணத்தானே
      பத்திரமாத் தான்வாங்கணும் -
பொன்னத்தானே. 90

மெத்தைவீடு ஒண்ணுவேணும்
      மேலான படுக்கைவேணும்
சுத்தமா நாம்இருக்கக் - கண்ணத்தானே
      சொகுசான உடுப்பும்வேணும் -
பொன்னத்தானே. 91

வீட்டுவேலை யைப்பார்க்க
      வேலைக்காரி ஒருத்திவேணும்
வெளிவேலை யும்பார்க்கக் - கண்ணத்தானே
      வேலைக்காரன் வேறேவேணும் -
பொன்னத்தானே. 92

நாலாறு மாசத்திலே
      நம்மவீட்டுக் காளுவரும்
கோலாரு போகணுமே - கண்ணத்தானே
      குழந்தையும் பெத்தெடுக்கப் -
பொன்னத்தானே. 93
---------------

மாமன் அழைத்தல்

ஆற்றோரத்து வீட்டுக்காரி - தங்கம்தையலாளே
      ஆனைமலை வாறியாடி - தங்கம்தையலாளே
நாற்றுநடப் போறவளே - தங்கம்தையலாளே
      நாகமலை வாறியாடி - பொன்னுகுயிலாளே. 1

எட்டுவச்சுப் போறவளே - தங்கம்தையலாளே
      ஏர்க்காடு வாறியாடி - பொன்னுகுயிலாளே
பட்டுப் புடைவைக்காரி - தங்கம்தையலாளே
      பட்டுமலை வாறியாடி - பொன்னுகுயிலாளே. 2

நல்ல நடையழகி - தங்கம்தையலாளே
      நடையாறு வாறியாடி - பொன்னுகுயிலாளே
பில்லறுக்கப் போறவளே - தங்கம்தையலாளே
      பீலிமேடு வாறியாடி - பொன்னுகுயிலாளே. 3

தண்டட்டி போட்டவளே - தங்கம்தையலாளே
      தங்கமலை வாறியாடி - பொன்னுகுயிலாளே
ஒட்டியாணம் போட்டவளே - தங்கம்தையலாளே
      ஒத்தைப்பாறை வாரியாடி - பொன்னுகுயிலாளே. 4

மூணுகல்மூக் குத்திக்காரி - தங்கம்தையலாளே
      மூணூரு வாறியாடி - பொன்னுகுயிலாளே
தேவலோகம் போலிருக்கும் - தங்கம்தையலாளே
      தேவிகுளம் வாறியாடி - பொன்னுகுயிலாளே. 5

கருங்குரங்கு நிறைந்திருக்கும் - தங்கம் தையலாளே
      கருங்குளம் வாறியாடி - பொன்னுகுயிலாளே
செல்வம் பொழிஞ்சிருக்கும் - தங்கம்தையலாளே
      செண்டுவரை வாறியாடி - பொன்னுகுயிலாளே.6

சிட்டுக்குருவி யாயிருக்கும் - தங்கம்தையலாளே
      சிட்டிவரை வாறியாடி - பொன்னுகுயிலாளே
சிவலோகம் போலிருக்கும் - தங்கம்தையலாளே
      சிவன்மலை வாறியாடி - பொன்னுக்குயிலாளே. 7

ஊசிமூக் கழகுக்காரி - தங்கம்தையலாளே
      ஊசிமலை வாறியாடி - பொன்னுகுயிலாளே
கண்ணடிக்கக் கெட்டிக்காரி - தங்கம்தையலாளே
      கருமலைக்கு வாறியாடி - பொன்னுகுயிலாளே. 8

தையல் விடை

ஆளுக்கட்ட வந்தவனே - தங்கமாமாவே
      ஆனைமலை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
நாளெல்லாம் ஆளப்போற - தங்கமாமாவே
      நாதமலை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே. 9

ஏச்சுமாடு பிடிக்கவாற - தங்கமாமாவே
      ஏர்க்காடு வரமாட்டேன் - பொன்னுமாமாவே
பட்டுக்கரை வேட்டிக்காரா - தங்கமாமாவே
      பட்டுமலை வரமாட்டேன் நான் -
      பொன்னுமாமாவே. 10

நயமாத்தான் பேசிவாற - தங்கமாமாவே
      நடையாறு வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
பில்லைத்தன மாப்பிழைக்கத் தங்கமாமாவே
      பீலிமேடு வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே. 11

தங்கத்தைநீ குமிச்சிட்டாலும் - தங்கமாமாவே
      தங்கமலை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
ஒய்யார நடைநடக்கும் - தங்கமாமாவே
      ஒற்றைப்பாறை வரமாட்டேன்நான் -
      பொன்னுமாமாவே. 12

முன்னம்பல் வரிசைக்காரா - தங்கமாமாவே
      மூணூரு வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
தெய்வங்குடி இருந்திட்டாலும் - தங்கமாமாவே
      தேவிகுளம் வரமாட்டேன்நான் -
பொன்னுமாமாவே. 13

கண்உருண்டு திரண்டிருக்கும் - தங்கமாமாவே
      கருங்குளம் வரமாட்டேன்நான் -
பொன்னுமாமாவே
செல்லமா வளர்ந்துவந்த - தங்கமாமாவே
      செண்டுவரை வரமாட்டேன்நான் -
பொன்னுமாமாவே.       14

லட்டு கொடுத்திட்டாலும் - தங்கமாமாவே
      சிட்டிவரை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
சிவன்குடி இருந்திட்டாலும் - தங்கமாமாவே
      சிவன்மலை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே. 15

காசுபணம் கொடுத்திட்டாலும் - தங்கமாமாவே
      ஊசிமலை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
கண்ணுகிண் ணடிக்கலைநான் - தங்கமாமாவே
      கருமலை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே. 16

மாமன் அழைத்தல்

அஞ்சணாக் கூலிகிடைக்கும் - தங்கம்தையலாளே
      ஐயர்பாடி வாறியாடி - பொன்னுகுயிலாளே
செக்குச்செக்காத் தான்கொடுக்கும் - தங்கம்தையலாளே
      சேக்கல்முடி வாறியாடி - பொன்னுக்குயிலாளே. 17

ரஸகுண்டு போலேஇருக்கும் - தங்கம்தையலாளே
      கஜமுடிக்கு வாறியாடி - பொன்னுகுயிலாளே
கண்டநேரம் கள்குடிக்கத் - தங்கம்தையலாளே
      கண்டிதேசம் வாறியாடி - பொன்னுக்குயிலாளே. 18

தாய்போலே பாதுகாக்கும் - தங்கம்தையலாளே
      தாயமுடி வாறியாடி - பொன்னுகுயிலாளே
அறியாத பருவம்நீ - தங்கம்தையலாளே
      பெரியாறு வாறியாடி - பொன்னுகுயிலாளே. 19

நாளெல்லாம் பாலுபொங்கும் - தங்கம்தையலாளே
      பாலாறு வாறியாடி - பொன்னுகுயிலாளே
தாய்க்குத் தலைப்பிள்ளைநீ - தங்கம்தையலாளே
      தலையாறு வாறியாடி - பொன்னுகுயிலாளே. 20

இஞ்சிநல்லா விளைந்திருக்கும் - தங்கம்தையலாளே
      இஞ்சிக்காடு வாறியாடி - பொன்னுகுயிலாளே
மஞ்சள்நல்லா விளைந்திருக்கும் - தங்கம்தையலாளே
      மஞ்சிமலை வாறியாடி - பொன்னுகுயிலாளே. 21

கும்புகும்பாக் கோழிமேயும் - தங்கம்தையலாளே
      கோழிக்கானம் வாறியாடி - பொன்னுகுயிலாளே
பாம்புபோலே நெளிந்திருக்கும் - தங்கம்தையலாளே
      பாம்பனாறு வாறியாடி - பொன்னுகுயிலாளே. 22

காடெல்லாம் கரடிஓடும் - தங்கம்தையலாளே
      கரடிக்குழி வாறியாடி - பொன்னுகுயிலாளே
வாழைபலா மாங்காய்இருக்கும் - தங்கம்தையலாளே
      வாழையடி வாறியாடி - பொன்னுகுயிலாளே. 23

ஆயிரமா ஆனைமேயும் - தங்கம்தையலாளே
      ஆனைக்கடவு வாறியாடி - பொன்னுகுயிலாளே
பெரியதுரை குடியிருக்கும் - தங்கம்தையலாளே
      பெரியவரை வாறியாடி - பொன்னுகுயிலாளே. 24

தையல் மறுத்தல்

அஞ்சுரூபாய் கொடுத்தாலுந்தான் - தங்கமாமாவே
      ஐயர்பாடி வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
செக்கெல்லாம் இங்கேஇருக்கு - தங்கமாமாவே
      சேக்கல்முடி வரமாட்டேன்நான் -
பொன்னுமாமாவே. 25

ரஸகுண்டு உருண்டுபோகும் தங்கமாமாவே
      கஜமுடிக்கு வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
கள்குடிச்சால் மயக்கம்வரும் - தங்கமாமாவே
      கண்டிதேசம் வரமாட்டேன்நான் -
      பொன்னுமாமாவே. 26

தாய்மலை போலிருக்காள் - தங்கமாமாவே
      தாயமுடி வரமாட்டேன்நான் -
பொன்னுமாமாவே
அறியாப் பருவத்திலே - தங்கமாமாவே
      பெரியாறு வரமாட்டேன்நான் -
பொன்னுமாமாவே. 27

பாலுபழம் கொடுத்திட்டாலும் - தங்கமாமாவே
      பாலாறு வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
தலைக்குத்தலை நானிருக்கத் - தங்கமாமாவே
      தலையாறு வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே. 28

இஞ்சிதின்ற குரங்குபோலே - தங்கமாமாவே
      இஞ்சிக்காடு வரமாட்டேன்நான் பொன்னுமாமாவே
மஞ்சள்நான் பூசமாட்டேன் - தங்கமாமாவே
      மஞ்சிமலை வரவும்மாட்டேன் - பொன்னுமாமாவே. 29

கோழிக்கறி தின்னமாட்டேன் - தங்கமாமாவே
      கோழிக்கானம் வரவுமாட்டேன்நான் -
      பொன்னுமாமாவே
பாம்பைப்பார்த்தால் பயமாய்இருக்கும் - தங்கமாமாவே
      பாம்பனாறு வரமாட்டேன்நான் -
      பொன்னுமாமாவே. 30

வாழைமேலே பிரியம்இல்லை - தங்கமாமாவே
      வாழையடி வரமாட்டேன்நான் -
      பொன்னுமாமாவே
ஆனைண்ணாதெய் வானைக்கும்பயம் - தங்கமாமாவே
      ஆனைக்கட்டு வரமாட்டேன்நான் -
      பொன்னுமாமாவே. 31

பெரியதுரை உனக்கொசத்தி - தங்கமாமாவே
      பெரியவரை வரமாட்டேன்நான் -
பொன்னுமாமாவே.
      . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 32

மாமன் மீண்டும் அழைத்தல

ஆள்ஒண்ணுக்கு அஞ்சுரூபா - தங்கம்தையலாளே
      அட்வான்ஸு நான்கொடுப்பேன் -
பொன்னுகுயிலாளே
அஞ்சுமணி வண்டியேறித் - தங்கம்தையலாளே
      அங்குலக் குறிச்சிபோவோம் - பொன்னுகுயிலாளே. 33

சொல்லும்கதை கேளுபெண்ணே - தங்கம்தையலாளே
      சொல்மீறிப் போகாதேடி - பொன்னுகுயிலாளே
வருசவேலை செஞ்சியின்னா - தங்கம்தையலாளே
      வாங்குவாயடி கைநிறையப் -
பொன்னுகுயிலாளே. 34

பெரட்டுக்களம் போய்நீ - தங்கம்தையலாளே
      பேர்கொடுத்தால் போதுமடி - பொன்னுகுயிலாளே
அஞ்சுராத்தல் கொழுந்தெடுத்தால் - தங்கம்தையலாளே
      அஞ்சணாக் கிடைக்குமடி - பொன்னுகுயிலாளே. 35

ஆறுநாளுக் காறுபடி - தங்கம்தையலாளே
      அரிசிதானும் கிடைக்குமடி - பொன்னுகுயிலாளே
வாரத்துக்கு ரூவாஒண்ணு - தங்கம்தையலாளே
      வாங்குவாயடி செலவுக்குத்தான் - பொன்னுகுயிலாளே. 36

சீக்கில்லாமல் வேலைசெய்தால் - தங்கம்தையலாளே
      சீலைவேறே இனாம்கிடைக்கும் - பொன்னுகுயிலாளே
கொழுந்தில்லாத காலத்திலே - தங்கம்தையலாளே
      களையெடுத்தால் காசுவேறே - பொன்னுகுயிலாளே. 37

கணக்குத்தீர்க்கும் காலத்திலே - தங்கம்தையலாளே
      கம்பிளி இனாமும்வேறே - பொன்னுகுயிலாளே
பிள்ளைபெறும் காலத்திலே - தங்கம்தையலாளே
      பிள்ளைரூவா அஞ்சுவேறே - பொன்னுகுயிலாளே. 38

மலைஇறங்கி ஊர்போகத் - தங்கம்தையலாளே
      வழிச்செலவுக் காசுவேறே - பொன்னுகுயிலாளே
மார்கழி இருபத்தஞ்சிலே - தங்கம்தையலாளே
      மகராசா காசுவேறே - பொன்னுகுயிலாளே. 39

மாதவிடாய்க் காலத்திலே - தங்கம்தையலாளே
      மகாராசா லீவுவேறே - பொன்னுகுயிலாளே
கலியாண காலத்திலே - தங்கம்தையலாளே
      கண்டிராசா காசுவேறே - பொன்னுகுயிலாளே. 40

தையல் மறுத்தல்

பண்ணைவேலை நீசெஞ்சால் - தங்கமாமாவே
      பண்ணைக்கூலி போட்டுத்தாரேன் - பொன்னுமாமாவே
எட்டாத பழத்துக்குநீ - தங்கமாமாவே
      கொட்டாவிஏன் விட்டுப்போறே -
பொன்னுமாமாவே. 41

ஏட்டுச் சுரைக்காய்வந்து - தங்கமாமாவே
      கறிக்குதவுமா நீசொல்லு - பொன்னுமாமாவே
வருசவேலை ஒண்ணும்வாணாம் - தங்கமாமாவே
      வாரவேலை ஒண்ணும்வாணாம் - பொன்னுமாமாவே. 42

------------------- பெரட்டுக் களத்துக்குப்போய்த் - தங்கமாமாவே
பெரண்டழுகப் பிரியமில்லை - பொன்னுமாமாவே
கஞ்சியில்லா விட்டால்தானே - தங்கமாமாவே
அஞ்சுராத்தல் கொழுந்துவேணும் - பொன்னுமாமாவே. 43

அரிசிவாணாம் பருப்புவாணாம் தங்கமாமாவே
அரிசிப்பஞ்சம் எனக்குஇல்லை - பொன்னுமாமாவே
பிச்சைக்காரி இண்ணுநீஎண்ணித் - தங்கமாமாவே
பிதற்றாதே கண்டபடி - பொன்னுமாமாவே. 44

காடுகரை இங்கேஇருக்கத் - தங்கமாமாவே
காணாதசீமை ஏன்போகப் - பொன்னுமாமாவே
எள்ளுக்காடு களைஎடுக்கத் - தங்கமாமாவே
எட்டாளு எனக்குவேணும் - பொன்னுமாமாவே. 45

நல்லநிலா வெளிச்சத்திலே - தங்கமாமாவே
நான்படுப்பேன் காற்றோட்டமா - பொன்னுமாமாவே
கலியாணம் பண்ணுமுந்தித் - தங்கமாமாவே
கன்னிகுளி குளிப்பாளா - பொன்னுமாமாவே. 46

மலைக்குமுதல் போனால்தானே - தங்கமாமாவே
மலைஇறங்கி ஊர்வரணும் - பொன்னுமாமாவே
பொய்க்காலுக் குதிரையிலே - தங்கமாமாவே
பொண்ணுவேசம் உனக்குச்சரி -பொன்னுமாமாவே. 47

உன்அக்காதங் கச்சிக்குவேணும் - தங்கமாமாவே
      இப்படியாக் கொத்தலீவு - பொன்னுமாமாவே
கலியாணம் வேணுமிண்ணா - தங்கமாமாவே
      கட்டழகன் இங்கேஇருக்கான் -பொன்னுமாமாவே. 48
----------

சந்தை வியாபாரம்
காதலி கேட்டல்


மானாமதுரைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
மருக்கொழுந்து வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 1

தாடிப்பத்திச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
தாழம்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
      என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 2

ரோட்டோரத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
ரோசாப்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 3

மண்டபத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
மல்லிகைப்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 4

குத்தாலத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
கொண்டைத்திருகு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
      என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 5

செட்டிகுளம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
செந்தாமரை வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 6

பூலத்தூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
பூலாங்கிழங்கு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
      என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 7

செவ்வாய்ப்பேட்டைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
செவந்திப்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 8

மஞ்சக்குப்பம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
மாலைரெண்டு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
      என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 9

வேலூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
வெட்டிவேரு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 10

ஆரப்பாளையம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
அரளிப்பூவு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
      என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 11

வாணியம்பாடிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
வாடாமல்லிகை வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 12

வடமதுரைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
வாழைப்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 13

மூக்குப்பேரிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
மூக்குத்தியும் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா.     14

மூக்குப்பேரிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
முருங்கைப்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 15

காரைக்கால் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
கம்மல்ரெண்டு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
      என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 16

பில்லானூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
பில்லாக்கொண்ணு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 17

காரைக்குடிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
கால்தண்டை வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 18

பாவநாசம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
பாதரசம் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 19

ஒலவக்கோட்டுச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
ஒட்டியாணம் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 20

வைகையாற்று ஓரத்திலே - ஏலங்கிடி லேலோ
கைவளையல் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 21

மயிலாடியூர்ச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
மயிர்மாட்டியும் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 22

மோருக்கடைப் பக்கத்திலே - ஏலங்கிடி லேலோ
மோதிரங்கள் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா 23

வந்தவாடிச் சந்தையிலே ஏலங்கிடி லேலோ
வைரக்கல் வாங்கணுமே ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா 24

சத்திரப்பட்டிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
சரடுஒண்ணு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 25

பட்டுக்கோட்டைச் செட்டிகிட்டே - ஏலங்கிடி லேலோ
பதக்கம்ஒண்ணு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா 26

நாட்டுக்கோட்டைச் செட்டிகிட்டே - ஏலங்கிடி லேலோ
நாலுநகை வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 27

காசுக்கடை வீதியிலே - ஏலங்கிடி லேலோ
காசிப்பட்டு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 28

ராவிலே கடைக்குப்போய் - ஏலங்கிடி லேலோ
ரவிக்கைத்துணி வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 29

பம்பாய்க் கடைக்குப்போய் - ஏலங்கிடி லேலோ
பாவாடை வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 30

அலர்மேல்செட்டி கடைக்குப்போய் - ஏலங்கிடி லேலோ
அரிசிபருப்பு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 31

ஆடலூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
ஆடுரெண்டு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 32

கோயம்புத்தூர்ச் சந்தையிலே ஏலங்கிடி லேலோ
கோழிரெண்டு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 33

நெய்யூருச் சந்தையிலே ஏலங்கிடி லேலோ
நெய்கொஞ்சம் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா 34

நல்லகறுப்பன் பட்டியிலே - ஏலங்கிடி லேலோ
நல்லெண்ணெய் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 35

காயங்குளத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
காய்கறியும் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 36

கண்டிகொழும்பு தேசம்போய் - ஏலங்கிடி லேலோ
கடைச்சாமான் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 37

நாகலாபுரம் நாகசுரம் - ஏலங்கிடி லேலோ
நாம்ஒழுங்கு செய்யணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 38

நல்லநாள் எல்லாம்பார்த்து - ஏலங்கிடி லேலோ
நல்லமுகூர்த்தம் வைக்கணும் - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 39

ஊர்நாடெல் லாம்அறிய - ஏலங்கிடி லேலோ
ஒழுங்காத்தாலி கட்டணுமே - ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம் மாமா - நாம்
      ஏது செய்யலாம் மாமா. 40

காதலன் விடை

மானாமதுரைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
மருக்கொழுந்து வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னும் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 41

தாடுபத்திரிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
தாழம்பூ வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 42

ரோட்டோரத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
ரோசாப்பூ வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 43

மண்டபத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
மல்லிகைப்பூ வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 44

குத்தாலத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
கொண்டைத்திருகு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 45

செட்டிகுளம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
செந்தாமரை வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 46

பூலத்தூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
பூலாங்கிழங்கு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 47

செவ்வாய்ப்பேட்டைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
செவந்திப்பூவு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 48

மஞ்சக்குப்பம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
மஞ்சள்பூவு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 49

வேலூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
வெட்டிவேரு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 50

ஆரப்பாளையம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
அரளிப்பூவு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 51

வாணியம்பாடிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
வாழைப்பூ வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 52

வடமதுரைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
வாடாமல்லிகை வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 53

மூக்குப்பேரிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
மூக்குத்தியும் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 54

மூக்குப்பேரிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
முருங்கப்பூ வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 55

காரைக்காலுச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
கம்மல்ரெண்டும் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 56

பெருமாள்கோயில் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
பீலிரெண்டு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 57

பில்லானூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
பில்லாக்கொண்ணு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 58

காரைக்குடிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
காலுத்தண்டை வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 59

பாவநாசம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
பாதரசம் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 60

ஒலவக்கோட்டுச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
ஒட்டியாணம் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே 61

வைகையாற்று ஓரத்திலே - ஏலங்கிடி லேலோ
கைவளையல் வாங்கித்தாரேன் - ஏலங்கடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 62

மோருக்கடைப் பக்கத்திலே - ஏலங்கிடி லேலோ
மோதிரங்கள் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 63

மயிலாடியூர்ச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
மயிர்மாட்டி வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 64

வந்தவாசிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
வைரக்கல்லு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 65

சத்திரப்பட்டிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
சரடுஒண்ணு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 66

பட்டுக்கோட்டைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
பதக்கம்ஒண்ணு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 67

நாட்டுக்கோட்டைச் செட்டிகிட்டே - ஏலங்கிடி லேலோ
நாலுநகை வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 68

காசுக்கடை வீதியிலே - ஏலங்கிடி லேலோ
காசிப்பட்டு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 69

ராவிலே கடைக்குப்போயி - ஏலங்கிடி லேலோ
ரவிக்கைத்துணி வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 70

பம்பாய்க் கடைக்குப்போய் - ஏலங்கிடி லேலோ
பாவாடையும் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 71

அலமேல்செட்டி கடைக்குப்போய் - ஏலங்கிடி லேலோ
அரிசிபருப்பு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 72

ஆடலூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
ஆடுரெண்டு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 73

கோயம்புத்தூர்ச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
கோழிரெண்டு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 74

நெய்யூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
நெய்கொஞ்சம் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 75

நல்லகருப்பம் பட்டியிலே - ஏலங்கிடி லேலோ
நல்லெண்ணெயும் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே 76

காயங்குளத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
காய்கறியும் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 77

கண்டிகொழும்பு தேசம்போயி - ஏலங்கிடி லேலோ
கடைச்சாமானம் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 78

தாராபுரம் போய்நாம் - ஏலங்கிடி லேலோ
தாய்பிள்ளையைக் கூப்படலாம் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 79

நாகலாபுரம் நாகசுரம் - ஏலங்கிடி லேலோ
நாம்ஒழுங்கு செய்யலாம் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 80

நல்லநாள் எல்லாம்பார்த்து - ஏலங்கிடி லேலோ
நல்லமுகூர்த்தம் வைக்கலாம் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே 81

ஊர்நாடெல் லாம்அறிய - ஏலங்கிடி லேலோ
ஒழுங்காத்தா லியுங்கட்டலாம் - ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
      கேது வேணும் கண்ணே. 82
------------


4. தொழிலாளர் பாட்டு


சுண்ணாம்பு குத்தும் பாட்டு

சிம்பிசிம்பிஐயா எடுத்துலக்கை
      சிற்றெலும்பை நோவுதையா. 1

மன்னிமன்னி எடுத்துலக்கை
      மணிக்கட்டெல்லாம் நோவுதையா. 2

கார்த்தாலே வந்தபெண்கள்
      கானலிலே மாளுறோமே. 3

விடியலிலே வந்தபெண்கள்
      வெய்யிலிலே மாளுறோமே. 4

வயிறுரொம்பப் பசிக்குதையா
      வடித்தகஞ்சி பார்த்துவாரேன். 5

குலையைப்பசி தாவுதையா
      கூழ்ப்பானை பார்த்துவாரேன். 6

வாழைமரம் வெட்டப்போய்
      வாய்போச்சே கோடாலி. 7

வாய்போன கோடாலியைக்
      கொல்லன்வீடு சேர்த்துப்போங்க 8

தென்னமரம் வெட்டப்போய்த்
      தெறிச்சுப்போச்சே கோடாலி. 9

தெறிச்சுப்போன கோடாலியை
      கொல்லன்வீடு சேர்த்துப்போங்க. 10

வேறு

அந்தஅரிவாள் இந்தஅரிவாள் -
      ஏலேலக்குயிலேலல்லோ
உருக்கிவைச்ச கருக்கரிவாள் -
      ஏலேலக்குயிலேலல்லோ 1

சாயம்நல்ல பிடியரிவாள் -
      ஏலேலக்குயிலேலல்லோ
சாயுதம்மா நெல்லும்புல்லும் -
      ஏலேலக்குயிலேலல்லோ 2

நெல்லும்புல்லும் அறுத்தறுத்து -
      ஏலேலக்குயிலேலல்லோ
நேரான கட்டுக்கட்டி -
      ஏலேலக்குயிலேலல்லோ 3

கட்டுக்கட்டித் தூக்கையிலே -
      ஏலேலக்குயிலேலல்லோ
கண்டுக்கிட்டான் காட்டுக்காரன் -
      ஏலேலக்குயிலேலல்லோ 4

மாலைநல்லா மயங்கலையே -
      ஏலேலக்குயிலேலல்லோ
மல்லிகைப்பூ வாடலையே -
      ஏலேலக்குயிலேலல்லோ 5

சின்னமலை ஓரத்திலே - ஏலேலக்குயிலேலல்லோ
      சீலையைப் பறிகொடுத்தேன்
      ஏலேலக்குயிலேலல்லோ 6

தங்கமலை ஓரத்திலே - ஏலேலக்குயிலேலல்லோ
      தாலியைப் பறிகொடுத்தேன் -
      ஏலேலக்குயிலேலல்லோ 7

ஊதவந்த நாதசுரம் - ஏலேலக்குயிலேலல்லோ
      ஊரைவிட்டுத் தாண்டலையே -
      ஏலேலக்குயிலேலல்லோ 8

அடிக்கவந்த மேளகாரன் - ஏலேலக்குயிலேலல்லோ
      ஆற்றங்கரையைத் தாண்டலையே -
      ஏலேலக்குயிலேலல்லோ 9

பந்தல்நல்லாப் பிரிக்கலையே -
      ஏலேலக்குயிலேலல்லோ
      பாதிமணம் கொள்ளலையே -
      ஏலேலக்குயிலேலல்லோ 10

பணியாரம் சுட்டசட்டி - ஏலேலக்குயிலேலல்லோ
      பாதிமணம் கொள்ளலையே -
      ஏலேலக்குயிலேலல்லோ 11

ஆறுகாசுக்குச் சேவல்வாங்கி -
      ஏலேலக்குயிலேலல்லோ
      அதுக்குரொம்பக் காரம்வச்சு -
      ஏலேலக்குயிலேலல்லோ 12

கொத்தமல்லி பத்தலேண்ணு -
      ஏலேலக்குயிலேலல்லோ
      கூவுதம்மா என்சேவல் -
      ஏலேலக்குயிலேலல்லோ 13

கல்லாலே ராணிவீடு - ஏலேலக்குயிலேலல்லோ
      கருங்கல்லாலே ராசாவீடு -
      ஏலேலக்குயிலேலல்லோ         14

செங்கல்லாலே சேர்மன்வீடு -
      ஏலேலக்குயிலேலல்லோ
      மண்கல்லாலே மாட்டுக்கொட்டம் -
      ஏலேலக்குயிலேலல்லோ 15

ஆரஞ்சுத் தோல்பொறுக்கி -
      ஏலேலக்குயிலேலல்லோ
      ஆறுலட்சம் தேருகட்டி -
ஏலக்குயிலேலல்லோ 16

தேருமேலே போறபெண்ணே -
      ஏலக்குயிலேலல்லோ
      தேவலோகம் பார்த்துவாடி -
      ஏலேலக்குயிலேலல்லோ 17

நெட்டையா வளர்ந்ததம்பி -
      ஏலேலக்குயிலேலல்லோ
      நீலக்கோட்டுப் போட்டதம்பி -
      ஏலேலக்குயிலேலல்லோ 18

ஆலுக்குள்ளே இருக்கிறியே -
      ஏலேலக்குயிலேலல்லோ
      ஆரைவிட்டுக் கூப்பிடுவேன் -
      ஏலேலக்குயிலேலல்லோ 19
-------
19. ஆல் - Hall
----------
கல்லுகளை எறிஞ்சுபார்த்தேன் -
      ஏலேலக்குயிலேலல்லோ
      கதவையும் திறந்துபார்த்தேன் -
      ஏலேலக்குயிலேலல்லோ 20

உறக்கம் பெரிசுண்ணுதான் -
      ஏலேலக்குயிலேலல்லோ
      உறவைநீ மறந்துட்டியா -
      ஏலேலக்குயிலேலல்லோ 21

ஆற்றுத்தண்ணீர் சலசலங்க -
      ஏலேலக்குயிலேலல்லோ
      அவள்மடியில் நான்உறங்க -
      ஏலேலக்குயிலேலல்லோ 22

வேலிஒடிஞ்சிச்சின்னு - ஏலேலக்குயிலேலல்லோ
      விறகொடிக்க நீவாடி -
      ஏலேலக்குயிலேலல்லோ 23

கன்றுக்குட்டி காணோமென்று -
      ஏலேலக்குயிலேலல்லோ
      கயிறெடுத்து நான்வாறேண்டி -
      ஏலேலக்குயிலேலல்லோ 24

ஏரிக் கரையோரம் - ஏலேலக்குயிலேலல்லோ
      எனக்கேத்த நல்லபையன் -
      ஏலேலக்குயிலேலல்லோ 25

ஓடி மடக்குங்கடி - ஏலேலக்குயிலேலல்லோ
      ஒருரூவாய் தட்டிடலாம் -
      ஏலேலக்குயிலேலல்லோ 26

ஒருகப்பல் ஓடிவர - ஏலேலக்குயிலேலல்லோ
      ஒருகப்பலை அலையடிக்க -
      ஏலேலக்குயிலேலல்லோ 27

கப்பல்வந்து கரைசேர - ஏலேலக்குயிலேலல்லோ
      கல்லாலேதான் மண்டபமாம் -
      ஏலேலக்குயிலேலல்லோ 28

வில்லாலேதான் மண்டபமாம் -
      ஏலேலக்குயிலேலல்லோ
      வீதிப்புறம் சந்நிதியாம் -
      ஏலேலக்குயிலேலல்லோ 29

கப்பல்வந்து நிற்கையிலே - ஏலேலக்குயிலேலல்லோ
      கடவுளைத் தொழுதாங்கடி -
      ஏலேலக்குயிலேலல்லோ 30

ஒருகட்டு மூங்கில்வெட்டி - ஏலேலக்குயிலேலல்லோ
      ஒருசாளை இறக்கினேண்டி -
      ஏலேலக்குயிலேலல்லோ 31

ஆவாரம் பூவினாலே - ஏலேலக்குயிலேலல்லோ
      தாவாரம் இறக்கச்சொன்னேன் -
      ஏலேலக்குயிலேலல்லோ 32

துரைமகன் வருகை*
------
* சுண்ணாம்பு குத்தும் பாட்டு.
------------

வருதடி வருதடி - ஏலங்கிடி லேலோ
      வண்டியெல்லாம் வருதடி - ஏலங்கிடி லேலோ 1

ஒண்ணொண்ணா வருதடி - ஏலங்கிடி லேலோ
      ஓட்டம்ஓட்டமா வருதுடி - ஏலங்கிடி லேலோ 2

மடமடண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ
      கிடுகிடுண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ 3

தடதடண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ
      சடசடண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ 4

திடுதிடுண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ
      புடுபுடுண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ 5

கடகடண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ
      கலகலண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ 6

படபடண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ
      பலேபலேண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ 7

மட்டக்குதிரை மாட்டிக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
      மாஞ்சுமாஞ்சு வருதடி - ஏலங்கிடி லேலோ 8

குட்டைக்குதிரை குதிச்சுகிட்டு - ஏலங்கிடி லேலோ
      கூடிக்கூடி வருதடி - ஏலங்கிடி லேலோ 9

பொட்டைக்குதிரை கனைச்சுக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
      புதுபுதுண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ 10

தட்டுக்குதிரை தலைதெறிக்க - ஏலங்கிடி லேலோ
      தாண்டித்தாண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ 11

ரெட்டைக்குதிரை ரொம்பஜோரா - ஏலங்கிடி லேலோ
      ரெண்டுரெண்டா வருதடி - ஏலங்கிடி லேலோ 12

மாட்டுவண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ
      சாரட்டுவண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ 13

பொட்டிவண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ
      கட்டைவண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ         14

ஒத்தைவண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ
      ஓடிஓடி வருதடி - ஏலங்கிடி லேலோ 15

ஜட்காவண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ
      ரிச்சாவண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ 16

மோட்டார்வண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ
      லாரிவண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ 17

சைகிள்வண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ
      சாமான்வண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ 18

தாண்டித்தாண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ
      சத்தம்அங்கே கேட்குதடி - ஏலங்கிடி லேலோ 19

தாசிவேசி பாடுறாங்க - ஏலங்கிடி லேலோ
      ஓசைரொம்பக் கேட்குதடி - ஏலங்கிடி லேலோ 20

சிவப்புத்தூளு பறக்குதடி - ஏலங்கிடி லேலோ
      சீக்கிரம்சீக்கிரம் வருதடி - ஏலங்கிடி லேலோ 21

கருப்புத்தூளு பறக்குதடி - ஏலங்கிடி லேலோ
      காடெல்லாம் கறுப்பா இருக்கு
      - ஏலங்கிடி லேலோ 22

சிட்டான்சிட் டாண்ணுதானே - ஏலங்கிடி லேலோ
      சேர்ந்துசேர்ந்து வருதடி - ஏலங்கிடி லேலோ 23

காத்தாப் பறந்துகிட்டு - ஏலங்கிடி லேலோ
      கிட்டக்கிட்ட வருதடி - ஏலங்கிடி லேலோ 24

குதிரையெல்லாம் கூடிக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
      கும்மாளந்தான் போடுதடி -
      ஏலங்கிடி லேலோ 25

கோணிக்கோணி நடக்குதடி - ஏலங்கிடி லேலோ
      கொஞ்சிக்கொஞ்சி நடக்குதடி -
      ஏலங்கிடி லேலோ 26

குட்டிக்குதிரை நிமிந்துக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
      குதிச்சுக்குதிச்சு ஓடுதடி - ஏலங்கிடி லேலோ 27

பொண்ணுவருது பொண்ணுவருது -
      ஏலங்கிடி லேலோ
      பொன்னுபோட்ட வண்டியிலே -
      ஏலங்கிடி லேலோ 28

பொண்ணைப்பெத்த தாயிவருது - ஏலங்கிடி லேலோ
      பட்டுப்போட்ட வண்டியிலே -
      ஏலங்கிடி லேலோ 29

வண்டியிலே வந்ததுரை - ஏலங்கிடி லேலோ
      எங்கள்எல்லா ருக்கும்முறை -
      ஏலங்கிடி லேலோ 30

எந்திரிச்சுப் பார்த்துப்பார்த்து - ஏலங்கிடி லேலோ
      முந்திமுந்திப் போறானடி - ஏலங்கிடி லேலோ 31

ஆளுகளைப் பார்த்துப்பார்த்து - ஏலங்கிடி லேலோ
      அமலெல்லாஞ் செய்யறாண்டி -
      ஏலங்கிடி லேலோ 32

தீனி தயாருசெய்ய - ஏலங்கிடி லேலோ
      திடுதிடுண்ணு ஓடுராண்டி - ஏலங்கிடி லேலோ 33

தானேஎல்லாம் செய்யுறாண்டி - ஏலங்கிடி லேலோ
      தயவெல்லாம் காட்டுறாண்டி -
      ஏலங்கிடி லேலோ 34

தேமேசை போடச்சொல்லி - ஏலங்கிடி லேலோ
      திட்டித்திட்டிச் சாடுறாண்டி -
      ஏலங்கிடி லேலோ 35

தண்ணிகொண்டாரச்சொல்லி - ஏலங்கிடி லேலோ
      தலைதெறிக்க ஓடுறாண்டி - ஏலங்கிடி லேலோ 36

வெந்நீர் தயார்செய்ய - ஏலங்கிடி லேலோ
      வேகுவேகுண்ணு ஓடுறாண்டி -
      ஏலங்கிடி லேலோ 37

எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
      எட்டிஎட்டிப் பார்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ 38

மச்சான்வரக் காணாமிண்ணு - ஏலங்கிடி லேலோ
      மயங்கிமயங்கி நிற்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 39

தேங்கித்தேங்கி நிற்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      ஏங்கிஏங்கி நிற்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ. 40

முக்கிமுக்கிப் பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      முழிச்சு முழிச்சுப் பார்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 41

குனிஞ்சுகுனிஞ்சு பார்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ
நிமிர்ந்துநிமிர்ந்து பார்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 42
குந்திக்குந்திப் பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      வீங்கிவீங்கிப் பார்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 43

சந்துசந்தாப் பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      சாஞ்சுசாஞ்சு பார்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 44

தெருத்தெருவாய் பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      திண்ணைமேலே பார்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 45

பரபரண்ணு பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      பயந்துபயந்து பார்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 46

ரோட்டுமேலே பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      மோட்டுமேலே பார்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 47

காட்டுவழி பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      வீட்டுவழி பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ. 48

பார்த்துக்கிட்டே இருக்கும்போது -
      ஏலங்கிடி லேலோ
      மாமன்மகன் வந்துட்டாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 49

பல்லைப்பல்லை இளிக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      கலர்சோடா உடைக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 50

அல்லோஅல்லோ என்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      கையைப்பிடிச்சுக் குலுக்குறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 51

சாப்புத்தண்ணி குடிக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      சாராயத்தண்ணி குடிக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 52

பீருத்தண்ணி குடிக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      பிராந்தித்தண்ணி குடிக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 53

பீப்பாய்த்தண்ணி குடிக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      போதைத்தண்ணி குடிக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 54

பொட்டணத்தைத் திறக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      புகையிலைப்பொடி குடிக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 55

சோறுபோட்டு வைக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ
சுருட்டெடுத்துக் குடிக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ. 56

வாழைப்பழத்தைக் கொடுக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ
மாதுளம்பழத்தைக் கொடுக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ. 57

சீதாப்பழம் கொடுக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
சீமைஆப்பிள் வைக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ. 58

பலாப்பழத்தைக் கொடுக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ
கொய்யாப்பழத்தைக் கொடுக்கிறாண்டி
ஏலங்கிடி லேலோ. 59

ஆரஞ்சுப்பழத்தைக் கொடுக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ
      அன்னாசிப்பழமும் சேர்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 60.

மாம்பழத்தை அறுக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      சாம்பிராணி போடுறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 61

சேட்டுக்கடை மிட்டாயடி - ஏலங்கிடி லேலோ
      சேமியாவும் கொடுக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 62

பூந்திலட்டு நெய்ஜிலேபி - ஏலங்கிடி லேலோ
      பூராவுங் கொடுக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ. 63

தாராக்கறி பாயாசம் - ஏலங்கிடி லேலோ
      தப்பாமலே கொடுக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 64

கோழிக்கறி ரோஸ்டுக்கறி - ஏலங்கிடி லேலோ
      கோளாறாக் கொடுக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 65

பொட்டியிலே ரொட்டியிருக்கு - ஏலங்கிடி லேலோ
      பொழுதுசாயக் கொடுக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 66

காரவடை கைமாவடை - ஏலங்கிடி லேலே
      கருத்தோடே கொடுக்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 67

மச்சானைக் கூட்டிக்கிட்டு - - ஏலங்கிடி லேலோ
      மத்தைவீடு போறாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 68

இத்தனையும் செஞ்சுக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
      எத்தாவீட்டைக் காண்பிக்கிறான்
      ஏலங்கிடி லேலோ. 69

மெத்தைவீட்டுக் குள்ளேதானே - ஏலங்கிடி லேலோ
      மெதுவாமச்சான் போறானடி -
      ஏலங்கிடி லேலோ. 70

மெத்தைவீட்டுக் குள்ளேபோய் - ஏலங்கிடி லேலோ
      மெத்தையெல்லாம் சுத்திப்பார்த்தேன் -
      ஏலங்கிடி லேலோ. 71

சோபாவெல்லாம் போட்டிருக்கு - ஏலங்கிடி லேலோ
      நாற்காலியும் போட்டிருக்கு -
      ஏலங்கிடி லேலோ. 72

சமுக்காளம் பட்டிலடி - ஏலங்கிடி லேலோ
      சன்னலெல்லாம் பட்டுப்பிடி -
      ஏலங்கிடி லேலோ. 73

அறைக்குள்ளே இருக்கிறது - ஏலங்கிடி லேலோ
      ஆயிரம் விளக்குகுட்டி - ஏலங்கிடி லேலோ. 74

பஞ்சுமெத்தை பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
      பார்க்கப்பார்க்கப் பகட்டுதடி -
      ஏலங்கிடி லேலோ. 75

பூந்தோட்டத்தைப் பார்க்கிறாண்டி -
      ஏலங்கிடி லேலோ
      பூலோகமே அங்கிருக்கு - ஏலங்கிடி லேலோ. 76

ராசாவீட்டில் இருக்கிறாப்போல் - ஏலங்கிடி லேலோ
      ரோசாப்பூ நிற்குதடி - ஏலங்கிடி லேலோ. 77

மல்லிகைப்பூ மருக்கொளுந்து - ஏலங்கிடி லேலோ
      மரம்மரமா நிற்குதடி - ஏலங்கிடி லேலோ. 78

செவந்திப்பூவுஞ் செந்தாமரையும் - ஏலங்கிடி லேலோ
      செங்கனியும் இருக்குதடி - ஏலங்கிடி லேலோ. 79

பாக்குத்தோப்பு ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
      பனந்தோப்பு ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ. 80

தென்னந்தோப்பு ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
      தெவிட்டாத வாழைத்தோப்பாம் -
      ஏலங்கிடி லேலோ. 81

காப்பித்தோட்டம் ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
      கள்ளுக்கடை கணக்கில்லையாம் -
      ஏலங்கிடி லேலோ. 82

எல்லாத்தோட்டமும் அங்கிருக்கு -
ஏலங்கிடி லேலோ
      ஏலத்தோட்டமும் கூடஇருக்கு -
      ஏலங்கிடி லேலோ. 83

சாப்புக்கடை ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
      காப்பிக்கடை ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ. 84

ஜவுளிக்கடை ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
      வளையல்கடை ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ. 85

காசுக்கடை ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
      தாசிக்கடை ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ. 86

கோடிவெள்ளைக் காரருங்கூட - ஏலங்கிடி லேலோ
      லேடியோடே இருக்கிறாங்க -
      ஏலங்கிடி லேலோ. 87

ஜோடிபோட்டுப் போறாங்களாம் -
      ஏலங்கிடி லேலோ
      பாடிப்பாடி வாறாங்களாம் -
      ஏலங்கிடி லேலோ. 88

ஆளும் அழுகுதாண்டி - ஏலங்கிடி லேலோ
      அவன் நடை தளுக்குத்தாண்டி -
ஏலங்கிடி லேலோ. 89

வேட்டிமேலே கோட்டுத்தாண்டி -
      ஏலங்கிடி லேலோ
      கோட்டுக்குள்ளே நோட்டுத்தாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 90

வாயிலே சுருட்டுத்தாண்டி - ஏலங்கிடி லேலோ
      வகைவகையா வண்டிதாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 91

மூக்குக்கண் ணாடிதாண்டி - ஏலங்கிடி லேலோ
      முறுக்கிவிட்ட - மீசைதாண்டி
      ஏலங்கிடி லேலோ. 92

பாட்டுக்காரன் தாண்டிஅவன் - ஏலங்கிடி லேலோ
      பாடப்பாட ஆடலாண்டி - ஏலங்கிடி லேலோ. 93

பட்டுப்பா வாடைதாண்டி - ஏலங்கிடி லேலோ
      பட்சமாத் தருவாண்டி - ஏலங்கிடி லேலோ. 94

பொட்டுத்தா வணிதாண்டி - ஏலங்கிடி லேலோ
      புத்தம் புதிசாப்பாத்து - ஏலங்கிடி லேலோ. 95

பொன்னே உனக்குத்தாண்டி - ஏலங்கிடி லேலோ
பொட்டிபொட்டியாக் கொடுப்பாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 96

பம்பாய் சீட்டிதாண்டி - ஏலங்கிடி லேலோ
      பலவிதமாக் கொடுப்பாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 97

தங்கஒட்டி யாணமும் - ஏலங்கிடி லேலோ
      தாங்கித்தாங்கிக் கொடுப்பாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 98

ரெங்கோன் ரத்தினக்கல்லு - ஏலங்கிடி லேலோ
      ரெட்டைரெட்டையாக் கொடுப்பாண்டி
      ஏலங்கிடி லேலோ. 99

வெள்ளியாலே தண்டைசெஞ்சு - ஏலங்கிடி லேலோ
      விதம்விதமாக் கொடுப்பாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 100

கைகாப்புக் கலகலென்ன - ஏலங்கிடி லேலோ
      கண்டபடி கொடுப்பாண்டி -
      ஏலங்கிடி லேலோ. 101

உலகத்திலே குறைவில்லையடி - ஏலங்கிடி லேலோ
      உனக்குமிஞ்சி எவளும்இல்லை
      ஏலங்கிடி லேலோ. 102

ஒய்யார நடைக்காரி - - ஏலங்கிடி லேலோ
      உன்னைப்போல ஆர்இருப்பாள் -
      ஏலங்கிடி லேலோ. 103

சொத்தான சொத்துக்காரி - ஏலங்கிடி லேலோ
      சொகுசாத்தான் நீஇருப்பே -
ஏலங்கிடி லேலோ. 104

அத்தான் உனக்குத்தானே - ஏலங்கிடி லேலோ
      அல்லாத்தையும் கொடுத்திடுவான் -
      ஏலங்கிடி லேலோ. 105

என்னதான் இருந்தாலும் - ஏலங்கிடி லேலோ
      என்னைமட்டும் மறந்துடாதே -
      ஏலங்கிடி லேலோ. 106
_______

கப்பல் ஏறினவள்*
-----
* சுண்ணாம்பு குத்தும் பாட்டு
--------
சின்னக் குட்டி நாத்தனாள் - ஏலங்கிடி லேலோ
      சில்லறையை மாத்தினாள் - ஏலங்கிடி லேலோ
ராவெல்லாம் பேசினாள் - ஏலங்கிடி லேலோ
      ரயிலுவண்டி ஏறினாள் - ஏலங்கிடி லேலோ. 1

புருசன்கூடக் கோவிச்சுக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
      புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
போறாள்ரெங்கோன் சிங்கப்பூரு - ஏலங்கிடி லேலோ
      பொழைப்புத்தழைப்புப் பார்க்கறதுக்கு - ஏலங்கிடி லேலோ. 2

மாமனாருக்குக் கொண்டாட்டமாம் - ஏலங்கிடி லேலோ
      மாமியாளுக்குங் கொண்டாட்டமாம் -
      ஏலங்கிடி லேலோ
பூமாதேவியைச் சாக்கிவச்ச - ஏலங்கிடி லேலோ
      புருசனுக்குத் திண்டாட்டமாம் - ஏலங்கிடி லேலோ. 3

கடல்கரைக்குப் போய்த்தானும் - ஏலங்கிடி லேலோ
      கண்டாங்கிச் சீலைவாங்கி - ஏலங்கிடி லேலோ
கங்காணி சொல்படிதான் - ஏலங்கிடி லேலோ
      கப்பலிலே ஏறினாளாம் - ஏலங்கிடி லேலோ. 4
-------------

கள்ளப் பெண்

கும்பல்கும்ப லாத்தானையா - ஏலங்கிடி லேலோ
      குசாலாத்தான் கோலடித்து -
      ஏலங்கிடி லேலோ. 1

கும்மிப்பாட்டுங் கூடப்பாடி - ஏலங்கிடி லேலோ
      சும்மாட்டைத் தலையில்வைத்து -
      ஏலங்கிடி லேலோ. 2

அக்காஅம்மா மாரெல்லாம் - ஏலங்கிடி லேலோ
      அரிவாளைத்தான் சரியாவைத்து -
      ஏலங்கிடி லேலோ. 3

அலங்கனுக்குப் பின்னேபோய் -
      ஏலங்கிடி லேலோ
      ஆளுக்கொரு சால்பிடித்து -
      ஏலங்கிடி லேலோ. 4
----------
4. அலங்கன் - மேஸ்திரி


மம்மாரியக் கதிரறுத்து - ஏலங்கிடி லேலோ
      மலைபோலக் குவித்துவைத்து -
      ஏலங்கிடி லேலோ. 5

சரிவரத்தான் புரிமுறுக்கி - ஏலங்கிடி லேலோ
      அரிக்கட்டெல்லாம் அடுக்கிக்கிட்டு -
      ஏலங்கிடி லேலோ. 6

களங்கமற்ற அலங்கிகூட - ஏலங்கிடி லேலோ
      களம்வரைக்கும் போவார்களாம் -
      ஏலங்கிடி லேலோ. 7

குச்சுக்குள்ளே குறும்பப்பையன் -
      ஏலங்கிடி லேலோ
      அச்சுவெல்லம் விற்கிறானாம் -
      ஏலங்கிடி லேலோ. 8

கடலையவலும் கருப்பட்டியும் - ஏலங்கிடி லேலோ
      கலந்துபோட்டு விற்கிறானாம் - ஏலங்கிடி லேலோ. 9

கரும்புக்கட்டிலே எறும்புஏறி - ஏலங்கிடி லேலோ
      காலாகோலம் பண்ணுதம்மா -
      ஏலங்கிடி லேலோ. 10

களம்போகிற வழியிலேதான் - ஏலங்கிடி லேலோ
      கள்ளப்பொண்ணு கடையைப்பார்த்தாள் -
      ஏலங்கிடி லேலோ. 11

கட்டுநெல்லைக் களத்திலேபோட்டு -
      ஏலங்கிடி லேலோ
      கடைக்குப்போறாள் கள்ளப்பொண்ணு -
      ஏலங்கிடி லேலோ. 12

கையிலேதான் காசில்லாமே - ஏலங்கிடி லேலோ
      கலங்குறாளாம் கள்ளப்பொண்ணு -
      ஏலங்கிடி லேலோ. 13

கால்படி நெல்கொடுத்து - ஏலங்கிடி லேலோ
      கடலைஅவல் வாங்குறாளாம் - ஏலங்கிடி லேலோ.     14

அரைப்படி நெல்கொடுத்து - ஏலங்கிடி லேலோ
      அச்சுவெல்லம் வாங்குறாளாம் -
      ஏலங்கிடி லேலோ. 15

முக்கால்படி நெல்கொடுத்து - ஏலங்கிடி லேலோ
      மொச்சைக்கொட்டை வாங்குறாளாம் -
      ஏலங்கிடி லேலோ. 16

மாகாணிப்படி நெல்கொடுத்து - ஏலங்கிடி லேலோ
      மஞ்சள்கொஞ்சம் வாங்குறாளாம் -
      ஏலங்கிடி லேலோ. 17

ஒருபடி நெல்கொடுத்து - ஏலங்கிடி லேலோ
      கரும்புரெண்டு வாங்குறாளாம் -
      ஏலங்கிடி லேலோ. 18

கழுத்துக்கொரு கருகுமணி - ஏலங்கிடி லேலோ
      கடையிலேதான் வாங்குறாளாம் -
      ஏலங்கிடி லேலோ. 19

சோடிசோடியாக் காளையெல்லாம் - ஏலங்கிடி லேலோ
      சூடடிக்கப் போகுதையா - ஏலங்கிடி லேலோ. 20

----------------

நிலத்தைப் பார்த்தல்

சாலை கடந்துபோயி - ஏலங்கிடி லேலோ
      சருக்காரு நிலத்தைப்பார்த்து -
      ஏலங்கிடி லேலோ. 1

ஆறு கடந்துபோயி - ஏலங்கிடி லேலோ
      அந்தநல்ல நிலத்தைப்பார்த்து -
      ஏலங்கிடி லேலோ. 2

கற்றாழைகாட்டைக் கடந்துபோயி - ஏலங்கிடி லேலோ
      கரிசல்காட்டைக் கண்ணாலேபார்த்து -
      ஏலங்கிடி லேலோ. 3

ஓடையெல்லாம் தாண்டிப்போயி - ஏலங்கிடி லேலோ
      ஒண்ணரைக்குழி நிலமும்பார்த்து -
      ஏலங்கிடி லேலோ. 4

மத்தியான வேளையிலே - ஏலங்கிடி லேலோ
      கட்டுச்சோத்தை அவிழ்த்துப்பார்த்து -
      ஏலங்கிடி லேலோ. 5

ஆத்தோரம் உட்கார்ந்துதான் - ஏலங்கிடி லேலோ
      அழகான ஊத்துத்தோண்டி -
      ஏலங்கிடி லேலோ. 6

கால்படிசோத்தைக் கணக்குப்பார்த்து -
      ஏலங்கிடி லேலோ
      களைப்புத்தீரத் தண்ணீர்குடித்து -
      ஏலங்கிடி லேலோ. 7

கணக்குப்பிள்ளைக்குக் காசுங்கொடுத்து -
      ஏலங்கிடி லேலோ
      கரிசல்காட்டை மால்பிடித்து - ஏலங்கிடி லேலோ. 8

சந்தனத்தேவன் வாரானையா - ஏலங்கிடி லேலோ
      சருக்காருக்கும் பணங்கொடுத்து -
      ஏலங்கிடி லேலோ. 9
_______

நாற்று நடவு

அரண்மனையார் வாசலிலே - ஏலங்கிடி லேலோ
      அலங்கன்வந்து நிற்கையிலே.
      ஏலங்கிடி லேலோ. 1

அரசமரத்துத் தெருவிலிருந்து - ஏலங்கிடி லேலோ
      அம்பதுபேர் வாறாங்களாம் - ஏலங்கிடி லேலோ. 2

கள்ளத் தெருவிலிருந்து - ஏலங்கிடி லேலோ
      கணக்கில்லாமே வாறாங்களாம் -
      ஏலங்கிடி லேலோ. 3

நாயக்கன்மார் தெருவிலிருந்து - ஏலங்கிடி லேலோ
      நானூறுபேர் வாறாங்களாம் - ஏலங்கிடி லேலோ. 4

குறத்தெருவி லிருந்துதானும் - ஏலங்கிடி லேலோ
      கொஞ்சம்பேர் வாறாங்களாம் -
      ஏலங்கிடி லேலோ. 5

அக்கிரகாரத் தெருவுவழி - ஏலங்கிடி லேலோ
      ஆடிப்பாடி வாறாங்களாம் - ஏலங்கிடி லேலோ. 6

அங்கேரெண்டு இங்கேரெண்டு - ஏலங்கிடி லேலோ.
      ஆடிப்பாடி வாறாங்களாம் - ஏலங்கிடி லேலோ. 7

சமைந்தபெண்கள் எல்லாங்கூடி - ஏலங்கிடி லேலோ
      சந்துவழி வாறாங்களாம் - ஏலங்கிடி லேலோ. 8


மாராப்புப் போட்டபொண்ணு - ஏலங்கிடி லேலோ
      மறைஞ்சுமறைஞ்சு வாறாள்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 9

குட்டைப்பொண்கள் எல்லாங்கூடி -
      ஏலங்கிடி லேலோ
குனிந்துகுனிந்து வாறாள்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 10

வாடல்வெற்றிலை போட்டுக்கிட்டு -
      ஏலங்கிடி லேலோ
      வாறாள்பார் வதங்கினகிழவி -
      ஏலங்கிடி லேலோ. 11

கொழுந்துவெற்றிலை போட்டுக்கிட்டு -
      ஏலங்கிடி லேலோ
      குமரிப்பிள்ளை வாறாள்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 12

கொண்டையிலே பூவும்வச்சு - ஏலங்கிடி லேலோ
      குமரிப்பிள்ளை வாறாள்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 13

கருகுமணி கட்டிக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
      கருத்தப்பிள்ளை வாறாள்பாரு -
      ஏலங்கிடி லேலோ.         14

அக்கம்பக்கம் வீட்டாரெல்லாம் -
      ஏலங்கிடி லேலோ
      அடுத்தடுத்து வாறாங்களாம் -
      ஏலங்கிடி லேலோ. 15

குருவிகுடைந்த கொய்யாப்பழம் -
      ஏலங்கிடி லேலோ
      கொண்டாறாள்பார் குமரிப்பிள்ளை -
      ஏலங்கிடி லேலோ. 16


வெள்ளரிக்காய் தின்னுகிட்டு - ஏலங்கிடி லேலோ
      வெடலைப்பிள்ளை வாறாள்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 17

வெட்டிவெடாயி பண்ணி - ஏலங்கிடி லேலோ
      வெடலைப்பயல் வாறான்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 18

காட்டுக்குப் போறதுக்கு - ஏலங்கிடி லேலோ
      காவாலியும் வாறான்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 19

வேலைக்குப் போறதுக்கு - ஏலங்கிடி லேலோ
      வெறும்பயலும் வாறான்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 20

அன்னம்மாளும் பொன்னம்மாளும் -
      ஏலங்கிடி லேலோ
      அலங்கன்கிட்டே வாறாங்களாம் -
      ஏலங்கிடி லேலோ. 21

அலுத்தமேலுக் காரிகூட - ஏலங்கிடி லேலோ
      அஞ்சிஅஞ்சி வாறாள்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 22

ஆலமரத் தண்டையிலே - ஏலங்கிடி லேலோ
      ஆளுபிள்ளையை ஆட்டுறாள்பார் -
      ஏலங்கிடி லேலோ. 23

குளியாமேஇருக்கிற பொண்ணுங்கூட -
      ஏலங்கிடி லேலோ
      சலியாமேத்தான் வாறாள்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 24

பச்சைமேலுக் காரிகூட - ஏலங்கிடி லேலோ
      பையப்பைய வாறாள்பாரு -
      ஏலங்கிடி லேலோ. 25

கஞ்சிக் கலயங்கொண்டு - ஏலங்கிடி லேலோ
      கருத்தாவாறாள் காளியம்மா -
      ஏலங்கிடி லேலோ. 26

அன்னநடை நடந்துக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
      அலங்கியும்வாறாள் ஆளுகூட -
      ஏலங்கிடி லேலோ. 27

சுப்பம்மாளும் குப்பம்மாளும் - ஏலங்கிடி லேலோ
      சொகுசுநடை நடந்துவாறா -
      ஏலங்கிடி லேலோ. 28

ஆளுஒண்ணு குச்சிஒண்ணு - ஏலங்கிடி லேலோ
      தோளிலேவச்சு வாறாங்களாம் -
      ஏலங்கிடி லேலோ. 29

குச்சியோடே வைக்கோல்பிரி - ஏலங்கிடி லேலோ
      பட்சமாத்தான் கொண்டாறாங்க -
      ஏலங்கிடி லேலோ. 30

அலங்கன்வந்து அலங்காரமாய் - ஏலங்கிடி லேலோ
      ஆளுகூடப் போறானடி - ஏலங்கிடி லேலோ. 31

சூலம்பார்த்துக் காலையிலே - ஏலங்கிடி லேலோ
      சூட்டிக்கையாக் கூட்டிபோறான் -
      ஏலங்கிடி லேலோ. 32

வாரியிலே வந்ததண்ணீர் - ஏலங்கிடி லேலோ
      வயலுக்குள்ளே பாயுதடி - ஏலங்கிடி லேலோ. 33

வரப்புமேலே வழிந்தோடுது - ஏலங்கிடி லேலோ
      வயலுக்குள்ளே வந்ததண்ணீர் -
      ஏலங்கிடி லேலோ. 34

நல்லநல்ல பொந்திருக்கு - ஏலங்கிடி லேலோ
      நண்டுகளும் கூடருக்கு - ஏலங்கிடி லேலோ. 35

சீலையெல்லாம் வரிஞ்சுக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
      சேற்றுக்குள்ளே இறங்குறாங்க -
      ஏலங்கிடி லேலோ. 36

ஆம்பளையும் பொம்பளையும் - ஏலங்கிடி லேலோ
      ஆலாய்ப் பறக்கிறாங்க - ஏலங்கிடி லேலோ. 37

நாற்றெல்லாம் பிடுங்கையிலே - ஏலங்கிடி லேலோ
      நண்டுஞ்சேர்த்துப் பிடிக்கறாங்க -
      ஏலங்கிடி லேலோ. 38

முடிஞ்சுவச்ச முடிச்சையெல்லாம் -
      ஏலங்கிடி லேலோ
      முழங்காலிலே மோதியடிப்பார் -
      ஏலங்கிடி லேலோ. 39

கட்டுச்சின்னக் கட்டுகளெல்லாம் -
      ஏலங்கிடி லேலோ
      கணுக்காலிலே அடிப்பாங்களாம் -
      ஏலங்கிடி லேலோ. 40

பிரித்துவைத்த கட்டைத்தானும் -
      ஏலங்கிடி லேலோ
      பிரியிலேதான் செரிசாக்கட்டி -
      ஏலங்கிடி லேலோ. 41

பெரியகட்டைச் சரியாவைத்து -
      ஏலங்கிடி லேலோ
      பெருமையாத்தான் தலையில்வைத்து -
      ஏலங்கிடி லேலோ. 42

இடுப்பிலொரு கையும்வைத்து - ஏலங்கிடி லேலோ
      அடுத்தவயல் போறாங்கடி -
      ஏலங்கிடி லேலோ. 43

கண்டாங்கிச் சீலைக்காரி - ஏலங்கிடி லேலோ
      கட்டெல்லாம் இறக்குங்கடி -
      ஏலங்கிடி லேலோ. 44

சும்மாடு கட்டிவந்த - ஏலங்கிடி லேலோ
      சுருக்குப்பைக் காரிகளே - ஏலங்கிடி லேலோ. 45

சும்மாநான் விடுவேனோடி - ஏலங்கிடி லேலோ
      கம்மால்நீங்கள் பண்ணாதடி -
      ஏலங்கிடி லேலோ. 46

நெற்றிவேர்வை சொட்டுச்சொட்டா -
      ஏலங்கிடி லேலோ
      நிலத்திலே விழவேணுமா - ஏலங்கிடி லேலோ. 47

ஆளொண்ணுக்கு அளந்துவிட்டேன் -
      ஏலங்கிடி லேலோ
      அம்பது நிறையுந்தானே - ஏலங்கிடி லேலோ. 48

முழுநிரையும் முடிக்காக்கட்டி - ஏலங்கிடி லேலோ
      மூணுதுட்டும் கிடைக்காதடி -
      ஏலங்கிடி லேலோ. 49
-------------
49. முடிக்காக்கட்டி - முடிக்காவிட்டால்.

ஐயா அலங்கனாரே - ஏலங்கிடி லேலோ
      ஆதரிக்க வேணுமையா - ஏலங்கிடி லேலோ. 50

அழுதழுது புரண்டாலுமே - ஏலங்கிடி லேலோ
      அவள்தானையா பெறணும்பிள்ளை -
      ஏலங்கிடி லேலோ. 51

பாழும்பயல் வயற்றுக்குத்தான் - ஏலங்கிடி லேலோ
      பணம்ஒண்ணுதான் வேணுமையா -
      ஏலங்கிடி லேலோ. 52

ஆள்ஒண்ணுக்கு ஆயிரம்நாற்று - ஏலங்கிடி லேலோ
      அழகாத்தானும் நடுவோமையா -
      ஏலங்கிடி லேலோ. 53

காலமழைக் காலத்திலே - ஏலங்கிடி லேலோ
      கருத்தாய்நாற்று நடுவோமையா -
      ஏலங்கிடி லேலோ. 54

ஏலேலங்கிடிப் பாட்டுப்பாடி - ஏலங்கிடி லேலோ
      எடுப்போமையா கருத்தாநாற்றை -
      ஏலங்கிடி லேலோ. 55

தில்லாலங்கிடிப் பாட்டுப்பாடி - ஏலங்கிடி லேலோ
      திருப்பித்திருப்பி நடுவோமையா -
      ஏலங்கிடி லேலோ. 56

கள்ளப்பாட்டையும் கலந்துபாடி -
      ஏலங்கிடி லேலோ
      நல்லமனசா நடுவோமையா -
      ஏலங்கிடி லேலோ. 57

தெம்மாங்குப் பாட்டுப்பாடி - ஏலங்கிடி லேலோ
      கம்மால்பண்ணவே மாட்டோமையா -
      ஏலங்கிடி லேலோ. 58

வண்டிக்காரன் பாட்டுப்பாடி - ஏலங்கிடி லேலோ
      வழிவிலக மாட்டோமையா -
      ஏலங்கிடி லேலோ. 59

கால்நோகுது களிமண்ணாலே -
      ஏலங்கிடி லேலோ
      கண்பாரையா கங்காணியே -
      ஏலங்கிடி லேலோ. 60

கைகாலெல்லாம் சுருங்கிப்போச்சு -
      ஏலங்கிடி லேலோ
      கஞ்சிகுடிக்க நேரமாச்சு - ஏலங்கிடி லேலோ. 61

ஒருசாணுக்கு ஒருநாற்றுத்தான் -
      ஏலங்கிடி லேலோ
      ஓடிஓடி நட்டோமையா -
      ஏலங்கிடி லேலோ. 62

முழங்கால்வலி எடுக்கஎடுக்க - ஏலங்கிடி லேலோ
      மூணுகுழி முடித்தோமையா -
      ஏலங்கிடி லேலோ. 63

முட்டியோடே முட்டியொட்டி - ஏலங்கிடி லேலோ
      முகக்களையும் மங்கிப்போச்சு -
      ஏலங்கிடி லேலோ. 64

மத்தியான நேரமாச்சு - ஏலங்கிடி லேலோ
      மக்கள்மயங் கவுமாச்சு - ஏலங்கிடி லேலோ. 65

கையிலொரு பணமும்வாங்கி - ஏலங்கிடி லேலோ
      கடைக்குப்போறாள் காளியம்மா -
      ஏலங்கிடி லேலோ. 66

முக்குறுணிச் சோளம்வேணும் - ஏலங்கிடி லேலோ
      மொளகாய்வற்றல் கூடவேணும் -
      ஏலங்கிடி லேலோ. 67

வம்பாடு பட்டதுக்கு - ஏலங்கிடி லேலோ
      வறுத்தபயறுங் கூடவேணும் -
ஏலங்கிடி லேலோ. 68
_______

விளைந்த கதிர்

கம்மாய்த்தண்ணி மம்மாரியா - ஏலங்கிடி லேலோ
      கழுத்தளவு நிற்கையிலே - ஏலங்கிடி லேலோ. 1

காக்காய்கத்தும் நேரத்திலே - ஏலங்கிடி லேலோ
      காட்டுக்காரன் கம்மாய்போவான் -
      ஏலங்கிடி லேலோ. 2

கோழிகூப்பிடும் நேரத்திலே ஏலங்கிடி லேலோ
      கோணமம்புட்டி தானெடுப்பான் -
      ஏலங்கிடி லேலோ. 3
----------
3, மம்புட்டி - மண்வெட்டி
----------
மடமடண்ணு மடைவழியே - ஏலங்கிடி லேலோ
      மண்குளிரத் தண்ணீர்பாய - ஏலங்கிடி லேலோ. 4

பச்சைநாற்றுப் பளபளென்ன - ஏலங்கிடி லேலோ
      பாயுதம்மா ஏரித்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ. 5

சாலுசாலாத் தாளுவிட்டு - ஏலங்கிடி லேலோ
      நாலுநாளா வளருதம்மா - ஏலங்கிடி லேலோ. 6

காலத்திலே கதிருவாங்கி - ஏலங்கிடி லேலோ
      கண்குளிர வளருதம்மா - ஏலங்கிடி லேலோ. 7

பாவிப்பயல் பழுப்புநாற்று - ஏலங்கிடி லேலோ
      சாவியாத்தான் போச்சுதம்மா -
      ஏலங்கிடி லேலோ. 8

மணிபோலப் பால்பிடித்து - ஏலங்கிடி லேலோ
      மணியெல்லாம் மயங்குதம்மா -
      ஏலங்கிடி லேலோ. 9

வழுக்கைக்கீரை வயற்காட்டிலே - ஏலங்கிடி லேலோ
      வளருதம்மா களைமாதிரி - ஏலங்கிடி லேலோ. 10

குருவிகளும் சிறுவிட்டியும் - ஏலங்கிடி லேலோ
      கதிருமேலே கண்ணுவைக்கும் -
      ஏலங்கிடி லேலோ. 11
-----------
11. விட்டி - விட்டில்பூச்சி
----------
திருடன் கதிரைக் களவாடாமே - ஏலங்கிடி லேலோ
      கருத்தாயிருப்பான் காவல்காரன் -
      ஏலங்கிடி லேலோ. 12

சாமத்திலே சாமக்கள்ளன் - ஏலங்கிடி லேலோ
      சாக்கைக்கொண்டு வாறானம்மா -
      ஏலங்கிடி லேலோ. 13

பஞ்சாப் பறந்துட்டானாம் - ஏலங்கிடி லேலோ
      பாவிப்பயல் மாயக்கள்ளன் -
      ஏலங்கிடி லேலோ.         14

மானங்கெட்ட மாயக்கள்ளன் - ஏலங்கிடி லேலோ
      மறைஞ்சிட்டானாம் மத்யானத்திலே -
      ஏலங்கிடி லேலோ. 15

கதிரறுக்குங் காலத்திலே - ஏலங்கிடி லேலோ
      கனத்தமழை பெய்யுதம்மா -
      ஏலங்கிடி லேலோ. 16

காட்டெலியும் வீட்டெலியும் - ஏலங்கிடி லேலோ
      கதிரைப்பொந்திலே சேர்க்குதம்மா -
      ஏலங்கிடி லேலோ. 17

காட்டுப்புறாவும் வீட்டுப்புறாவும் - ஏலங்கிடி லேலோ
      கதிரைநல்ல பதமாத்தின்னும் -
      ஏலங்கிடி லேலோ. 18

சிற்றெறும்பும் கட்டெறும்பும் - ஏலங்கிடி லேலோ
      புற்றில்சேர்க்கும் புதுநெல்லைத்தான் -
      ஏலங்கிடி லேலோ. 19

பச்சைக்கிளியும் வெட்டுக்கிளியும் -
      ஏலங்கிடி லேலோ
      பச்சைநெல்லைப் பதமாய்த்தின்னும் -
      ஏலங்கிடி லேலோ. 20
-----------

ஆள் தேடுதல்

தெருத்தெருவாத் தேடிவாறான் - ஏலங்கிடி லேலோ.
      திண்ணைதிண்ணையாத் தாண்டிவாறான் -
      ஏலங்கிடி லேலோ. 1

சந்திலேபொந்திலே சாஞ்சுபார்த்து -
      ஏலங்கிடி லேலோ
      சயிக்கினையும் செஞ்சுவாறான் -
      ஏலங்கிடி லேலோ. 2
---------
2. சயிக்கினை - சமிக்ஞை; சைகை.

முன்னுக்கும்பின்னுக்கும் பார்த்துப்பார்த்து -
      ஏலங்கிடி லேலோ
      முணுமுணுன்னு பேசிவாறான் -
      ஏலங்கிடி லேலோ. 3

ஆளுப்பிடிக்க ஏழுமணிக்கு - ஏலங்கிடி லேலோ
      ஆலாப் பறந்துவாறான் - ஏலங்கிடி லேலோ. 4

அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் - ஏலங்கிடி லேலோ
      அட்டுவான்சும் கொடுத்துவாறான் -
      ஏலங்கிடி லேலோ. 5
--------
5. அட்டுவான்சு - Advance.
------------
ஆளுக்கொரு அரிவாள்தானும் - ஏலங்கிடி லேலோ
      ஆறுமுழக் கயிறுரெண்டும் -
      ஏலங்கிடி லேலோ. 6

சும்மாடும் சேர்த்தெடுத்து - ஏலங்கிடி லேலோ
      சுறுசுறுப்பாய்ப் போறாங்களாம் -
      ஏலங்கிடி லேலோ. 7
________

விறகொடிக்கும் பெண்

வேகாத வெயிலுக்குள்ளே - ஏதில்லலோ லேலோ
      விறகொடிக்கப் போறபெண்ணே -
      ஏதில்லலோ லேலோ. 1

காலுனக்குப் பொசுக்கலையோ -
      ஏதில்லலோ லேலோ
      கற்றாழைமுள்ளுக் குத்தலையோ -
      ஏதில்லலோ லேலோ. 2

காலுப் பொசுக்கினாலும் - ஏதில்லலோ லேலோ
      கற்றாழைமுள்ளுக் குத்தினாலும் -
      ஏதில்லலோ லேலோ. 3

காலக் கொடுமையாலே - ஏதில்லலோ லேலோ
      கஷ்டப்படக் காலமாச்சு -
      ஏதில்லலோ லேலோ. 4

கஞ்சிக் கலயங்கொண்டு - ஏதில்லலோ லேலோ
      காட்டுவழி போறபெண்ணே -
      ஏதில்லலோ லேலோ. 5

கல்உனக்குக் குத்தலையோ - ஏதில்லலோ லேலோ
      கல்லளுத்தி வந்திடாதோ -
      ஏதில்லலோ லேலோ. 6
-----------
6. கல்லளுத்தி - கல்லழுத்தி என்ற நோய்.
-----------
கல்எனக்குக் குத்திட்டாலும் -
      ஏதில்லலோ லேலோ
      கல்லளுத்தி வந்திட்டாலும் -
      ஏதில்லலோ லேலோ. 7

விதிவசம்போ லாகணுமே - ஏதில்லலோ லேலோ
      வெயிலிலேயும் நடக்கணுமே -
      ஏதில்லலோ லேலோ. 8

மத்தியான வேளையிலே - ஏதில்லலோ லேலோ
      வளைகுலுங்கப் போறபெண்ணே -
      ஏதில்லலோ லேலோ. 9

கஞ்சி குடிக்கையிலே - ஏதில்லலோ லேலோ
      கடித்துக்கொள்ள என்னசெய்வாய் -
      ஏதில்லலோ லேலோ. 10

கஞ்சிகண்டு குடிக்கிறதே - ஏதில்லலோ சாமீ
      கடவுள்செய்த புண்ணியமே -
      ஏதில்லலோ சாமீ. 11

கம்பங்கஞ்சிக் கேற்றாப்போல - ஏதில்லலோ சாமீ
      காணத்துவையல் அரைச்சிருக்கேன் -
      ஏதில்லலோ சாமீ. 12

கஷ்டப்பாடு பட்டுப்பட்டு - ஏதில்லலோ லேலோ
      கழுத்தொடியச் சுமக்கும்பெண்ணே -
      ஏதில்லலோ லேலோ. 13

ஏங்கேபோய் விறகொடித்து -
ஏதில்லலோ லேலோ
      என்னசெய்யப் போறாய்பெண்ணே -
      ஏதில்லலோ லேலோ.         14

காட்டுக்குள்ளே விறகொடித்து - ஏதில்லலோ சாமி
      வீட்டுக்கதைச் சுமந்துவந்து -
      ஏதில்லலோ சாமி. 15

கால்ரூபாய்க்கு விறகுவிற்று - ஏதில்லலோ சாமி
      கஞ்சிகண்டு குடிக்கணுமே - ஏதில்லலோ சாமி. 16
_________

எங்கும் நெல்

களத்துக்குள்ளே காலைவைத்து - ஏலங்கிடி லேலோ
கிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ. 1

கிழக்கத்திமா டெல்லாங்கூடி - ஏலங்கிடி லேலோ
கீழேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ. 2

மேற்கத்திமா டெல்லாங்கூட - ஏலங்கிடி லேலோ
மேலேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ. 3

வடக்கத்திமா டெல்லாங்கூட - ஏலங்கிடி லேலோ
வாரிவாரி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ. 4

தெற்கத்திமா டெல்லாங்கூட - ஏலங்கிடி லேலோ
திரட்டித்திரட்டி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ. 5

நாட்டியக் குதரைபோல - ஏலங்கிடி லேலோ
நாலுகாலில் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ. 6

குள்ளிமாடும் புள்ளிமாடும் - ஏலங்கிடி லேலோ
குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ. 7

பால்கொடுக்கிற பசுவுங்கூட - ஏலங்கிடி லேலோ
பையப்பைய மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ. 8

பல்லுப்போடாத காளைக்கன்றும் -
      ஏலங்கிடி லேலோ
பால்மறந்த கிடாரிக்கன்றும் - ஏலங்கிடி லேலோ. 9

பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ
பாய்ந்துபாய்ந்து மிதிக்குதையா -
      ஏலங்கிடி லேலோ 10

எல்லாமாடும் சேர்ந்துதானும் - ஏலங்கிடி லேலோ
ஏகமாத்தான் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ. 11

கால்படவும் கதிருபூரா - ஏலங்கிடி லேலோ
கழலுதையா மணிமணியா - ஏலங்கிடி லேலோ. 12

நெல்லுவேறே வைக்கோல்வேறே -
      ஏலங்கிடி லேலோ
நல்லாஇருக்கு பார்க்கப்பார்க்க - ஏலங்கிடி லேலோ. 13

வயிற்றுப்பசி மாட்டுக்கெல்லாம் -
      ஏலங்கிடி லேலோ
வைக்கோலோடே போகுதையா -
      ஏலங்கிடி லேலோ       14

ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும் -
      ஏலங்கிடி லேலோ
ஆளுக்கொரு மரக்கால்நெல்லு - ஏலங்கிடி லேலோ. 15

அலங்கன்அலங்கி ரெண்டுபேருக்கும் -
      ஏலங்கிடி லேலோ
ஆறுமரக்கால் நெல்லுக்கூலி - ஏலங்கிடி லேலோ. 16

வண்டிவண்டியா நெல்லுத்தானும் -
      ஏலங்கிடி லேலோ
வருகுதையா அரண்மனைக்கு - ஏலங்கிடி லேலோ. 17

அரண்மனைக் களஞ்சியம்பார்க்க -
      ஏலங்கிடி லேலோ
ஆயிரங்கண் வேணுமையா - ஏலங்கிடி லேலோ. 18

புழுங்கல்நெல்லுக் குத்தித்தானும் -
      ஏலங்கிடி லேலோ.

புள்ளைகளுக்கு வேகுதையா - ஏலங்கிடி லேலோ. 19

வெள்ளிசெவ்வா வேளையிலே - ஏலங்கிடி லேலோ
வேகுதையா காய்கறியும் - ஏலங்கிடி லேலோ. 20

கும்பல்கும்பலா நெல்லுத்தானும் - ஏலங்கிடி லேலோ
குளுமையெல்லாம் நிறைக்குதையா -
      ஏலங்கிடி லேலோ. 21

தப்புநெல்லும் தவறுநெல்லும் - ஏலங்கிடி லேலோ
தாராளமாக் கெடக்குதையா - ஏலங்கிடி லேலோ. 22

கூனற்கிழவி கூடைமுறத்தை - ஏலங்கிடி லேலோ
கூனிக்கூனிக் கொண்டுபோறாள் - ஏலங்கிடி லேலோ. 23

கூட்டிப்பொறுக்கிக் கூடையைரொப்பி -
      ஏலங்கிடி லேலோ
வீட்டுக்குப்போறா வேடிக்கையாத்தான் -
      ஏலங்கிடி லேலோ. 24

சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு -
      ஏலங்கிடி லேலோ
சாக்கடையெல்லாம் நெல்லுக்கிடக்கு -
      ஏலங்கிடி லேலோ. 25

வயலெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
வழியெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ. 26

சந்தனத்தேவன் பெருமை

எல்லாரு காடுதானும் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற கரட்டுக்காடு ஏலங்கிடி லேலோ. 1

சந்தனம் காடுதானும் - ஏலங்கிடி லேலோ
      சரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ 2

எல்லாரு வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற குச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 3

சந்தனம் வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
      சரியான மச்சுவீடு - ஏலங்கிடி லேலோ. 4

எல்லாரும் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடி லேலோ. 5

சந்தனம் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
      சரியான சரிகைவேட்டி - ஏலங்கிடி லேலோ 6

எல்லோரும் போடும்சட்டை - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை -
      ஏலங்கிடி லேலோ. 7

சந்தனம் போடும்சட்டை - ஏலங்கிடி லேலோ
      சரியான பட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ. 8

எல்லாரு திருட்டுத்தானும் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற ராத்திருட்டு - ஏலங்கிடி லேலோ. 9

சந்தனம் திருட்டுத்தானும் - ஏலங்கிடி லேலோ
      சரியான மாயத்திருட்டு - ஏலங்கிடி லேலோ. 10

எல்லாரும் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற பெருநெல்சோறு -
      ஏலங்கிடி லேலோ. 11

சந்தனம் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
      சரியான சம்பாச்சோறு - ஏலங்கிடி லேலோ. 12

எல்லாரும் ஏறும்வண்டி - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற கட்டைவண்டி -
      ஏலங்கிடி லேலோ. 13

சந்தனம் ஏறும்வண்டி - ஏலங்கிடி லேலோ
      சரியான ஜட்காவண்டி - ஏலங்கிடி லேலோ.         14

எல்லாரும் வெட்டும்கத்தி - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி -
      ஏலங்கிடி லேலோ. 15

சந்தனம் வெட்டும்கத்தி - ஏலங்கிடி லேலோ
      சரியான பட்டாக்கத்தி - ஏலங்கிடி லேலோ. 16

எல்லாருங் கட்டும்பொண்ணு - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற கறுத்தப்பொண்ணு -
      ஏலங்கிடி லேலோ. 17

சந்தனம் கட்டும்பொண்ணு - ஏலங்கிடி லேலோ
      சரியான சிவத்தபொண்ணு -
      ஏலங்கிடி லேலோ. 18

எல்லாரும் போடும்மிஞ்சி - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற கல்வெள்ளிமிஞ்சி -
      ஏலங்கிடி லேலோ. 19

சந்தனம் போடும்மிஞ்சி - ஏலங்கிடி லேலோ
      சரியான வெள்ளிமிஞ்சி - ஏலங்கிடி லேலோ. 20

எல்லோரும் போடும்வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற முரட்டுவெற்றிலை -
      ஏலங்கிடி லேலோ. 21

சந்தனம் போடும்வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
      சரியான கொழுந்துவெற்றிலை -
      ஏலங்கிடி லேலோ. 22

எல்லாரு துணிப்பெட்டியும் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற கூடைப்பெட்டியாம் -
      ஏலங்கிடி லேலோ. 23

சந்தனம் துணிப்பெட்டிதான் - ஏலங்கிடி லேலோ
      சரியான தேக்குப்பெட்டியாம் -
      ஏலங்கிடி லேலோ. 24

எல்லாரும் படுக்குங்கட்டில் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற கயிற்றுக்கட்டில் -
      ஏலங்கிடி லேலோ. 25

சந்தனம் படுக்குங்கட்டில் - ஏலங்கிடி லேலோ
      சரியான சந்தனக்கட்டில் - ஏலங்கிடி லேலோ. 26

எல்லாரு கழுத்திலேதான் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம் -
      ஏலங்கிடி லேலோ. 27

சந்தனம் கழுத்திலேதான் - ஏலங்கிடி லேலோ
      சரியான செம்பகப்பூவாம் - ஏலங்கிடி லேலோ. 28

எல்லாரும் குடிக்கிறது - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர் -
      ஏலங்கிடி லேலோ. 29

சந்தனம் குடிக்கிறது - ஏலங்கிடி லேலோ
      சரியான சாப்புத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ. 30

எல்லாரும் சாப்பிடும்இலை - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற ஆலம்இலை - ஏலங்கிடி லேலோ. 31

சந்தனம் சாப்பிடும் இலை - ஏலங்கிடி லேலோ
      சரியான வாழைஇலை - ஏலங்கிடி லேலோ. 32

எல்லோரும் படுக்கும்பாயி - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற கோரைப்பாயி - ஏலங்கிடி லேலோ. 33

சந்தனம் படுக்கும்பாயி - ஏலங்கிடி லேலோ
      சரியான ஜப்பான்பாயி - ஏலங்கிடி லேலோ. 34

எல்லோரும் போடும்மோதிரம் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற ஈயமோதிரம் -
      ஏலங்கிடி லேலோ. 35

சந்தனம் போடும்மோதிரம் - ஏலங்கிடி லேலோ
      சரியான வைரமோதிரம் - ஏலங்கிடி லேலோ. 36

எல்லாரும் பண்ணும்சவரம் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற முகச்சவரம் -
      ஏலங்கிடி லேலோ. 37

சந்தனம் பண்ணுஞ்சவரம் - ஏலங்கிடி லேலோ
      சரியான தலைச்சவரம் - ஏலங்கிடி லேலோ. 38

எல்லாரும் குளிக்கிறது - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற ஆற்றுத்தண்ணீர் -
      ஏலங்கிடி லேலோ. 39

சந்தனம் குளிக்கிறது - ஏலங்கிடி லேலோ
      சரியான ஊற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ. 40

எல்லாரும் போடும்சண்டை - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற வாய்ச்சண்டை -
      ஏலங்கிடி லேலோ. 41

சந்தனம் போடும்சண்டை - ஏலங்கிடி லேலோ
      சரியான வாளுச்சண்டை - ஏலங்கிடி லேலோ. 42

எல்லாரும் படிக்கும்இடம் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற பள்ளிக்கூடம் -
      ஏலங்கிடி லேலோ. 43

சந்தனம் படிக்கும்இடம் - ஏலங்கிடி லேலோ
      சரியான ஜெயிலுக்கூடம் - ஏலங்கிடி லேலோ. 44

எல்லாரும் திருடுவது - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற கிழட்டுஆடு - ஏலங்கிடி லேலோ. 45

சந்தனம் திருடுவது - ஏலங்கிடி லேலோ
      சரியான கொழுத்தஆடு - ஏலங்கிடி லேலோ. 46

எல்லாரு கூட்டாளிகள் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற சமுசாரிகள் - ஏலங்கிடி லேலோ. 47

சந்தனம் கூட்டாளிகள் - ஏலங்கிடி லேலோ
      சரியான தில்லுமாறிகள் - ஏலங்கிடி லேலோ. 48

எல்லாரும் குடியிருப்பு - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற பட்டிக்காடு - ஏலங்கிடி லேலோ. 49

சந்தனம் குடியிருப்பு - ஏலங்கிடி லேலோ
      சரியான கரட்டுக்காடு - ஏலங்கிடி லேலோ. 50

எல்லாரு துடைக்குள்ளேதான் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற சதைஎலும்பாம் -
      ஏலங்கிடி லேலோ. 51

சந்தனம் துடைக்குள்ளேதான் - ஏலங்கிடி லேலோ
      சரியான நரிக்கொம்புதான் -
      ஏலங்கிடி லேலோ. 52

எல்லாரும் போலீசென்றால் - ஏலங்கிடி லேலோ
      ஏழைக்கேற்ற நடுக்கந்தான் -
      ஏலங்கிடி லேலோ. 53

சந்தனத்துக்குப் போலீசென்றால் - ஏலங்கிடி லேலோ
      சரியான சக்காந்தமாம் - ஏலங்கிடி லேலோ. 54
--------
54. சக்காந்தம் - பரியாசம்.
------------

ரங்கோன் வாழ்க்கை

பஞ்சம் பிழைக்க ரங்கோன் போனேன்
      கல்லைப் பிளக்கச்சொன்னான்
கல்லைப் பிளக்க வகைதெரியாமே
      கையைப் பிளந்துக்கிட்டேன். 1

காளி சிலையைக் கணக்கா வரைந்துதான்
      கல்லிலடிக்கச் சொன்னான்
கல்லுருட்டித் திரட்டி அடிக்கையிலே
      காலை ஒடிச்சுக்கிட்டேன். 2

வீட்டுக்கு மூலைக் கல்லடிக் கச்சொன்னான்
      வீடெல்லாம் கட்டச்சொன்னான்
வீட்டிலே குற்றங் குறையிருந்த தாலே
      வீசினான் சாட்டையாலே. 3

கோடிகோ டிக்கல்லு கொண்டா ரச்சொன்னான்
      குறுக்குக்கல் அடிக்கச்சொன்னான்
குறுக்குக்கல் குட்டையாப் போனத னாலே
      கொடுத்தானே கன்னத்திலே. 4

நிலைக்குமந் தாங்கியெல் லாமடிக்கச் சொன்னான்
      நிலையள வெல்லாஞ்சொன்னான்
நேராஎல் லாத்தையும் பிளக்கா ததனாலே
      நிமிர்த்தினான் குச்சியிலே. 5

மூலமட் டத்தைக்கல் மேலேவைக் கச்சொன்னான்
      முலைவ ருவச்சொன்னான்
மூலையி லேகொஞ்சம் கோணினத னாலே
      மூஞ்சிபோச் சொருகுத்திலே. 6

சொல்லா வரட்டிச் சொகுசா நடக்கிறான்
      பல்லாயி ரந்தச்சன்தான்
எல்லாக்கல் தச்சனும் நல்லாப்பே சையிலே
      எனக்கே னடிமுதுகிலே. 7

ரோதைஓ டையிலே காதைவைச் சுக்கேட்டேன்
      ரோதை போட்ட சத்தத்தைப்
பாதிஓ டையிலே பாதகன் பண்டாரம்
      பக்கென் றுதைத்தான்என்னை. 8

அலுப்பாநான் ரோட்டிலே அசந்து தூங்கையிலே
      சலுக்காராள் அங்கேவந்து
தளுக்காஎன் ஊர்பேரெல் லாமே விசாரித்து
      இழுத்தான் முதுகிலே ரெண்டு. 9
---------
9. சலுக்கார் ஆள் - சர்க்கார் அதிகாரி
-------
ஆனி முடிந்தாடி மாசக் கடைசியில்
      ஆவடிக்குப் போனேன் நான்
ஆடிமா சம்அடி வைக்கக்கூ டாதுண்ணு
      அப்பத்தான் கண்டேனேநான். 10

ஆவடி டாக்டரு அருமையாத் தான்பேசி
      அரையெல்லாம் பார்க்கணுமின்னு
திரையெல்லாம் இழுத்து அரையெல்லாம் சோதிச்சு
      அனுப்பினார் கப்பலுக்கு. 11

மாலைபோட்டு மாட்டைப் பொங்கல்வைச் சாப்போலே
      ஆளையெல் லாம்கூப்பிட்டு
ஆளுக் கொருஊசி அருமையாத் தான்ஏத்தி
      அனுப்பினார் கப்பலுக்கு. 12

ஆணையும் பொண்ணையும் ஆடுமாடு போலே
      அடுக்கினான் கப்பலிலே
ஆவடி யில்ஏழு நாளு இருந்தசுகம்
      அமைஞ்சுச்சே கப்பலிலே. 13

போனோம்அம்மா அம்மா போனோம்அம் மாஅம்மா
      பொழுது விடியுமட்டும்
குருவி மலையிலே குருவியைக் கண்டோமே
      மருநாளோர் ஊர்கண்டோமே.       14

அஞ்சுநா ளும்போச்சு ஆறுநா ளும்போச்சு
      நெஞ்சுந் துடிக்கலாச்சு
கொஞ்சங் கூடச்சுதி மதியில்லா மேபோச்சு
      சஞ்சலம் மிகுந்துபோச்சு. 15

தேயிலை ரப்பரு தோட்டத்துக் குஆளு
      திரண்டுதிரண்டு போச்சு
தட்டுமுட் டெல்லாந்தோள் மேலெடுத்து வச்சுத்
      தட்டுத்தடு மாறிப்போச்சு. 16

பாலெடுக்க ஆளு பாதிராத் திரியிலே
      பரந்தடிச் சோடணுமே
பாலொண்ணு ஆளொண்ணு
      சாலொண்ணு கோலொண்ணு
      பார்த்தால்வே டிக்கைதானே. 17

கல்லுடைக் கையிலே பல்லெல்லாம் போச்சம்மா
      களைக்காடு போனேனம்மா
கணக்குக் குறைஞ்சதால் களைக்காட்டு மேஸ்திரி
      கட்டிவைத் தடித்தானம்மா. 18

களைக்கொத்தைப் போட்டுட்டுக்
குழிவெட்டப் போய்நான்
      கணக்கைம் பதுமுடித்து
கள்ளுக் கடைக்குள்ளே களையாற்றப் போய்நான்
      கலயத்தை உடைத்துட்டேன்நான். 19

இட்டிலி தோசை இருபது பட்சணம்
      இருந்துச்சே கடைக்குள்ளே தான்
ஒருவெள்ளிச் சாக்கணா ஒண்ணு முழுங்கினேன்
      மறுவெள்ளி யும்முடிச்சேன். 20

காட்டையா வீட்டிலே ஆட்டுக் குட்டிஒண்ணு
      கத்திக்கிட் டிருந்துச்சம்மா
கள்ளுப்போ தையிலே கண்ணுத் தெரியாமே
      கழுத்தைத் திருகிவிட்டேன். 21

ஒத்தைவெள் ளிபெறும் ஆட்டுக்குட் டிக்குநான்
      பத்துவெள் ளிகொடுத்தும்
பத்தரதுண் ணுஅந்தப் பாதகன் காட்டையா
      பத்துதை யுங்கொடுத்தான். 22

மார்கழி மாசம் இருபத்தஞ் சாந்தேதி
      மகராசன் தோட்டத்திலே
தேரு திருவிழா கொட்டு முழக்கென்ன
      சேசு பிறந்ததாலே. 23
-----------
23. சேசு - ஏசு கிறிஸ்து.
---------

சேசு பிறந்தாரு கேசுந் துறந்தாரு
      பீசுங் கிழிச்சாரம்மா
கண்டாங்கிச் சீலையும் கலருப்பா வாடையும்
      கணக்கில் அடங்காதம்மா. 24
------
24. கலரு - Colour.
-------
புள்ளைபெற் றால்வெள்ளி புள்ளைசெத் தால்வெள்ளி
      புண்ணியன் டங்கன்துரை
இல்லையென் னாமே கொடுத்தா தரிச்சாலும்
      இஷ்டம்போல் உதைகொடுப்பான். 25

ராத்திரி வேலைக்கு ராச்சம் பளம்வேறே
      ராசாஎன் டங்கன்துரை
சேத்துக் கொடுத்தாலும் சேட்டைபண் ணுவாரே
      சின்னப்பெண் ணைக்கண்டுட்டால். 26

காலுச்சட் டைபோட்டுக் கையைஉள் ளேவிட்டுக்
      கண்ணைநல் லாச்சிமிட்டிக்
கங்காணி மாரைத்தான் கைக்குள்ளே தான்போட்டுக்
      காசு களையிறைச்சு. 27

காடுண்ணு மில்லை மேடுண்ணு மில்லை
      வீடுண்ணும் இல்லையம்மா
கண்ட இடமெல்லாம் கண்டகண்ட பொண்ணைக்
      கையைப் பிடிச்சிழுப்பார். 28

பஞ்சம் பிழைக்க ரெங்கோனுக் குப்போயி
      பட்டேனம் மாபாடெல்லாம்
பட்டபாட் டையெல்லாம் விட்டுச்சொன் னேனுண்ணா
      பகவானுக் கேற்காதம்மா. 29

முக்கிமுக் கிமூணு நாளுசொன் னாலுமே
      முடியாதம் மாஎன்கதை
தப்பிச்சுப் பிழைத்து ஊர்வந்து சேர்ந்தது
      தம்பிரான் புண்ணியமே. 30

அண்ணன்மா ரேஎங்கள் அக்காமா ரேநானு
      அலசடிப் பட்டகதை
அஞ்சுநா ளுசொல்லி நெஞ்சுலர்ந் திட்டாலும்
      ஆறாதே என்துயரம். 31

ஆயிரம் ரூபாயி கொடுத்திட்டா லும்அந்த
      அனாதிப் பயல்காட்டுக்கு
அடியெடுக் கமாட்டேன் ஆடிமா சத்திலே
      அம்புட்டுப் போதுமம்மா. 32
--------------------------

மீனாம் பாட்டு

1. அன்னேநன்னே நானேநன்னே மீனாம்போ
ஏண்டிஅப்படி நானேநன்னே நானேநன்னே
      இப்போ (அன்னே)

2. உன்னரிவாள்என் அரிவாள் மீனாம்போ - ஏண்டிஅப்படி
உருக்குவைத்த கருக்கரிவாள் இப்போ (அன்னே)

3. சாயப் பிடிஅரிவாள் மீனாம்போ - ஏண்டிஅப்படி
சன்னுதடி நெல்லம்பில்லு இப்போ (அன்னே)

4. அறுப்பறுத்துப் புரிமுறுக்கி மீனாம்போ - ஏண்டிஅப்படி
அன்னம்போலக் கட்டுக்கட்டி இப்போ (அன்னே)

5. தூக்கிவிடு கொத்துக்காரா மீனாம்போ - ஏண்டிஅப்படி
தோப்புக்களம் போய்ச்சேர இப்போ (அன்னே)

6. புல்லறுத்துப் புரிமுறுக்கி மீனாம்போ - ஏண்டிஅப்படி
அன்னம்போலக் கட்டுக்கட்டி - இப்போ (அன்னே)

7. வாரிவந்து போடுங்கடி மீனாம்போ - ஏண்டிஅப்படி
வட்டப் பொட்டுக் காரனுக்கு இப்போ (அன்னே)

8. தாவிவந்து போடுங்கடி மீனாம்போ - ஏண்டிஅப்படி
சாய்ந்தகொண்டைக் காரனுக்கு இப்போ (அன்னே)

9. தூக்கிவந்து போடுங்கடி மீனாம்போ - ஏண்டிஅப்படி
தொங்குகொண்டைக் காரனுக்கு இப்போ (அன்னே)

10. சோறுபொங்கி ஆறுதடி மீனாம்போ - ஏண்டிஅப்படி
தண்ணிவைத்துக் காயுதடி இப்போ (அன்னே)

11. வாறேனென்று போனமன்னன் மீனாம்போ - ஏண்டிஅப்படி
இன்னம்வரக் காணலையே இப்போ (அன்னே)

12. வெள்ளிநல்லா விடியவேணும் மீனாம்போ - ஏண்டிஅப்படி
விடியக்காலம் ஆகவேணும் இப்போ (அன்னே)

13. வட்டப்பொட்டு வைக்காதடா மீனாம்போ - ஏண்டிஅப்படி
வாசல்வழி வராதேடா இப்போ (அன்னே)

14. வாழாத பெண்களுக்கு மீனாம்போ - ஏண்டிஅப்படி
வார்த்தைக்கடன் வைக்காதேடா இப்போ (அன்னே)

15. சாய்ந்தகொண்டை போடாதேடா மீனாம்போ -
      ஏண்டிஅப்படி
சாலைவழி வராதேடா இப்போ (அன்னே)

16. தாளாத பெண்ணாளை மீனாம்போ - ஏண்டிஅப்படி
சங்கத்திலே வைக்காதேடா இப்போ (அன்னே)

17. தொங்குகொண்டை போடாதேடா மீனாம்போ -
      ஏண்டிஅப்படி
ஊர்வழி வராதேடா இப்போ (அன்னே)

18. பிழையாத பெண்ணாளுக்கு மீனாம்போ - ஏண்டிஅப்படி
பொல்லாப்புச் சொல்லாதேடா இப்போ (அன்னே)

19. மண்ணை நிரவிவிட்டு மீனாம்போ - ஏண்டிஅப்படி
மருக்கொழுந்து நாற்றுவச்சு இப்போ (அன்னே)

20. கிள்ளத் தெரியாமல் மீனாம்போ - ஏண்டிஅப்படி
கிளிகள்வந்து உராஞ்சுதடி இப்போ (அன்னே)

21. கிழக்கே மழைபெய்ய மீனாம்போ - ஏண்டிஅப்படி
கீரை அறுக்கையிலே இப்போ (அன்னே)

22. பயனை நினைக்கையிலே மீனாம்போ - ஏண்டிஅப்படி
பட்டுடுத்தே பொன்னரிவாள் இப்போ (அன்னே)
------------
22. பட்டுடுத்தே - பட்டுவிட்டதே.
----------
23. நாற்று நடவுகாலம் மீனாம்போ - ஏண்டிஅப்படி
நான்வளர்க்கும் பயிருகாலம் இப்போ (அன்னே)

24. வேலைச் சமையத்திலே மீனாம்போ - ஏண்டிஅப்படி
வேசிகூடப் பேசிக்கிட்டாங்கோ இப்போ (அன்னே)

25. பருத்தி யிலைபிடுங்கி மீனாம்போ - ஏண்டிஅப்படி
பச்சரிசி மைசேர்த்து இப்போ (அன்னே)

26. சிவத்தபிள்ளை நெற்றிக்கின்னா மீனாம்போ - ஏண்டிஅப்படி
சேர்ந்திடுமோ சாந்துப்பொட்டு இப்போ (அன்னே)

27. எல்லாரும் வைக்கும்பொட்டு மீனாம்போ - ஏண்டிஅப்படி
அந்தப்பொட்டு இந்தப்பொட்டு இப்போ (அன்னே)

28. சரசக்காரன் வைக்கும்பொட்டு மீனாம்போ - ஏண்டிஅப்படி
சரியான சாந்துப்பொட்டு இப்போ (அன்னே)

29. நெஞ்சு பகல்போல மீனாம்போ - ஏண்டிஅப்படி
முழிகள்ரெண்டும் கிளிகள்போல இப்போ (அன்னே)

30. மைக்கண்ணுச் சாமியாலே மீனாம்போ - ஏண்டிஅப்படி
மாண்டிட்டாலும் குற்றமில்லை இப்போ (அன்னே)

31. வேட்டி இளங்கறுப்பா மீனாம்போ - ஏண்டிஅப்படி
என்னைக்கண்டால் குறுஞ்சிரிப்பா இப்போ (அன்னே)

32. குறுஞ்சிரிப்புச் சாமிகூட மீனாம்போ - ஏண்டிஅப்படி
கூடவந்தால் ஆகாதோ அப்போ (அன்னே)

33. நண்டுவங்கு மண்எடுத்து மீனாம்போ - ஏண்டிஅப்படி
நாகபடம் உண்டுபண்ணி இப்போ (அன்னே)

34. பெண்டுகளைச் சிறையெடுக்க மீனாம்போ - ஏண்டிஅப்படி
பிறந்தாங்கோ சிங்கம்போல இப்போ (அன்னே)

35. காலைச்சுற்றிக் கம்பிவெட்டி மீனாம்போ - ஏண்டிஅப்படி
கண்ணைச்சுற்றித் தூறுதூறு இப்போ (அன்னே)

36. வேப்பம்பூப் பூக்காதோ மீனாம்போ - ஏண்டிஅப்படி
விடிந்தால் மலராதோ இப்போ (அன்னே)
-------------

ஓடப் பாட்டு

குண்டாற்று - ஏலேலோ பள்ளத்திலே ஐலசா
குறுக்குப்பாதை - ஏலேலோ பார்ப்போமடி ஐலசா. 1

பள்ளத்திலே - ஏலேலோ பார்ப்போமடி - ஐலசா
பளியன்மாரை - ஏலேலோ பார்ப்போமடி - ஐலசா. 2

மாஞ்சோலையும் - ஏலேலோ பூஞ்சோலையும் - ஐலசா
மலையிலேதான் - ஏலேலோ பார்ப்போமடி - ஐலசா. 3

வழிமேலே - ஏலேலோ வாழைத்தோட்டம் - ஐலசா
வகைவகையா - ஏலேலோ பார்ப்போமடி - ஐலசா. 4

வழியெல்லாம் - ஏலேலோ மழைபெய்து - ஐலசா
வழுக்குமடி - ஏலேலோ தளுக்குப்பெண்ணே - ஐலசா. 5

காட்டுக்குள்ளே - ஏலேலோ காலுவைக்க - ஐலசா
கரடிவழி - ஏலேலோ மறிக்குமடி - ஐலசா. 6

மதம்பொழிந்த - ஏலேலோ மதயானை - ஐலசா
அதம்பண்ணிடும் - ஏலேலோ ஆளைப்பார்த்தால் - ஐலசா. 7

வெயிலடிக்கும் - ஏலேலோ வேளையிலே - ஐலசா
விரட்டுமடி - ஏலேலோ வேங்கைப்புலி - ஐலசா. 8

சோலைக்குள்ளே - ஏலேலோ செந்தொட்டிதான் ஐலசா
சொறியவைக்கும் - ஏலேலோ சிறங்குபோலே - ஐலசா. 9

மருந்துக்கேற்ற - ஏலேலோ மந்திகூட - ஐலசா
மரத்துமேலே - ஏலேலோ மறைஞ்சிருக்கும் - ஐலசா. 10

வரையாடும் - ஏலேலோ மரையாடும் - ஐலசா
வந்தடையும் - ஏலேலோ வழிமேலேதான் - ஐலசா. 11

வண்டுகளும் - ஏலேலோ நண்டுகளும் - ஐலசா
வந்தடையும் - ஏலேலோ வழிமேலேதான் - ஐலசா. 12

மலைநேரத்திலே - ஏலேலோ மலைப்பாம்பும் - ஐலசா
மரப்பொந்திலே - ஏலேலோ மறைந்திருக்கும் - ஐலசா. 13

காற்றடிக்கும் - ஏலேலோ நேரத்திலே - ஐலசா
கழுதைப் புலியும் - ஏலேலோ வழிமறிக்கும் - ஐலசா.       14

ஊளையிடும் - ஏலேலோ நரியுங்கூட - ஐலசா
உயரவந்து - ஏலேலோ வழிமறிக்கும் - ஐலசா. 15

பக்கத்திலே - ஏலேலோ பச்சைஓந்தி - ஐலசா
பதுபதுங்கி - ஏலேலோ பயமுறுத்தும் - ஐலசா. 16

ஆற்றுப்பக்கம் - ஏலேலோ ஆமைகூட - ஐலசா
அருட்டப்பார்க்கும் - ஏலேலோ அசைந்திருந்தால் - ஐலசா. 17

நிறைதண்ணியில் - ஏலேலோ அரைத்தவளை - ஐலசா
அருட்டப்பார்க்கும் - ஏலேலோ அசந்திருந்தால் - ஐலசா. 18

நடையாற்று - ஏலேலோ தொங்கலிலே - ஐலசா
நம்மதோட்டம் - ஏலேலோ நடந்துவாடி - ஐலசா. 19

களைக்காட்டிலே - ஏலேலோ கணக்குப்பிள்ளை - ஐலசா
கம்புவச்சு - ஏலேலோ நிற்கிறாண்டி - ஐலசா. 20

கூழ்குடித்து - ஏலேலோ குடிசைவிட்டு - ஐலசா
வேலைசெய்ய - ஏலேலோ வெளியேவாடி - ஐலசா. 21

கங்காணிக்கு - ஏலேலோ ஏற்றாப்போலே - ஐலசா
கணக்குப்பிள்ளை - ஏலேலோ களையாள் கொடுப்பான் -
      ஐலசா. 22

ஆளொன்றுக்கு - ஏலேலோ ஆயிரம்தடை - ஐலசா
அன்றாடு - ஏலேலோ அளந்துவிடுவான் - ஐலசா. 23

களையாளொன்று - ஏலேலோ களைக்கொட்டொன்று - ஐலசா
கங்காணிதான் - ஏலேலோ கணக்காக் கொடுப்பான் -
      ஐலசா. 24

குரங்குபோல - ஏலேலோ கொங்காணியும் - ஐலசா
குடைக்குப்பதிலா - ஏலேலோ கொடுத்திடுவான் - ஐலசா. 25

மழையானாலும் - ஏலேலோ களையெடுக்கணும் - ஐலசா
களையானாலும் - ஏலேலோ வளைந்தெடுக்கணும் - ஐலசா. 26

பால்குடிக்கிற - ஏலேலோ பச்சைப்பிள்ளை - ஐலசா
பாலுக்கழுதாலும் - ஏலேலோ பறந்தெடுக்கணும் - ஐலசா. 27

செடியைச்சுற்றி - ஏலேலோ பழமிருக்கும் - ஐலசா
செந்தொட்டியும் - ஏலேலோ கூடஇருக்கும் - ஐலசா. 28

பழமெடுக்கிற - ஏலேலோ காலத்திலே - ஐலசா
பழையகூடை - ஏலேலோ தானிருக்கு - ஐலசா. 29

புதுக்கூடை - ஏலேலோ கேட்கப்போனால் - ஐலசா
புத்திகெட்டவன் - ஏலேலோ திட்டுவானாம் - ஐலசா. 30

சாட்டுக்கூடை - ஏலேலோ ஓட்டைக்கூடை - ஐலசா
போட்டுக்கிடணும் - ஏலேலோ பொடனியிலே - ஐலசா. 31

களையெடுக்கும் - ஏலேலோ கண்ணாராவி - ஐலசா
கதைசொன்னாலும் - ஏலேலோ தீராதம்மா - ஐலசா. 32

பாட்டாத்தாள் - ஏலேலோ படிக்கணுமே - ஐலசா
பழமெடுக்கிற - ஏலேலோ பரிதாபத்தை - ஐலசா. 33

களையெடுத்தும் - ஏலேலோ பழமெடுத்தும் - ஐலசா
கணக்குப்பிள்ளை - ஏலேலோ கம்பாலடிப்பான் - ஐலசா. 34

பெரியரைட்டன் - ஏலேலோ பிரம்பெடுத்து - ஐலசா
பெறப்படுவான் - ஏலேலோ பழக்காட்டுக்கு - ஐலசா. 35

பழக்காட்டிலும் - ஏலேலோ களைக்காட்டிலும் - ஐலசா
பறந்தடிப்பான் - ஏலேலோ பாவிப்பயல் - ஐலசா. 36

பெறப்படணும் - ஏலேலோ பொழுதுசாய - ஐலசா
பெரட்டுக்களம் - ஏலேலோ பேர்கொடுக்க - ஐலசா. 37

ஐம்பதுபேருக் - கேலேலோ அரைப்பேரு - ஐலசா
முப்பதுபேருக் - கேலேலோ முழுப்பேரு - ஐலசா. 38

அரைப்பேராலே - ஏலேலோ கங்காணிக்கு - ஐலசா
தலைக்காசு - ஏலேலோ தவறிப்போச்சு - ஐலசா. 39

கோலத்தோடே - ஏலேலோ கங்காணியும் - ஐலசா
குதிக்கிறானே - ஏலேலோ கூச்சல்போட்டு - ஐலசா. 40

ஆண்கள்பெண்கள் - ஏலேலோ அடங்கலுமே - ஐலசா
அவனைப்பார்த்து - ஏலேலோ அரளுமே - ஐலசா. 41

ஒலம்பிடியும் - ஏலேலோ உருளைச்சட்டியும் - ஐலசா
உடைத்துவிட்டான்- ஏலேலோ முரட்டுப்பயல் -ஐலசா. 42

சின்னக்கானல் - ஏலேலோ தோட்டத்துக்கு - ஐலசா
சிவத்தபிள்ளை - ஏலேலோ ஓடிவிட்டாள் - ஐலசா. 43

கருங்குளத்து - ஏலேலோ தோட்டத்துக்கு - ஐலசா
கறுத்தகுட்டி - ஏலேலோ ஓடிவிட்டாள் - ஐலசா. 44

பத்துப்பிள்ளை - ஏலேலோ பெற்றவள்தான் - ஐலசா
புத்தியாத்தான் - ஏலேலோ பொறுத்துக்கிட்டாள் - ஐலசா. 45

சிவத்தகுதிரை - ஏலேலோ மேலே ஏறி - ஐலசா
வெண்ணீட்துரை - ஏலேலோ வாறாராம் - ஐலசா. 46

லாடமடிச்ச - ஏலேலோ நாட்டியக்குதிரை - ஐலசா
வயலுப் பக்கம் - ஏலேலோ வருகுதையா - ஐலசா. 47

கங்காணிமார் - ஏலேலோ எல்லோரையும் - ஐலசா
கையலைத்து - ஏலேலோ கூப்பிட்டாராம் - ஐலசா. 48

தலை நடுங்க - ஏலேலோ குலை நடுங்க - ஐலசா
கை நடுங்க - ஏலேலோ கால் நடுங்க - ஐலசா. 49

கங்காணிமார் - ஏலேலோ கண்டவுடனே - ஐலசா
கைகட்டித்தான் - ஏலேலோ கையெடுப்பார் - ஐலசா. 50

தர்மதுரை - ஏலேலோ தயவாத்தானும் - ஐலசா
கங்காணிமாருக் - கேலேலோ காசு கொடுப்பார் - ஐலசா. 51

குளிருக்கேற்ற - ஏலேலோ கம்பிளியும் - ஐலசா
கொடுத்திடுவார் - ஏலேலோ தர்மதுரை - ஐலசா. 52

சீக்குக்காரருக்கு - ஏலேலோ சீமைச்சாராயம் - ஐலசா
சீசாவிலே - ஏலேலோ தந்திடுவார் - ஐலசா. 53

காட்டுக்குப்போகாத- ஏலேலோ காய்ச்சல்காரருக்கு - ஐலசா
கொடுத்திடுவார் - ஏலேலோ கொய்னாத்தானும் - ஐலசா. 54

வேறு

நாலு தட்டு - ஏலேலோ மண்ணெடுத்து - ஐலசா
நான் போட்டேன் - ஏலேலோ சாலை வழி - ஐலசா. 1

நெட்டைநெட்டை - ஏலேலோ பனமரமே - ஐலசா
நீ இப்படி - ஏலேலோ ஏன் வளர்ந்தாய் - ஐலசா. 2

காலையிலே - ஏலேலோ வந்த பெண்கள் - ஐலசா
கானலிலே - ஏலேலோ காய்கிறோமே - ஐலசா. 3

விடியலிலே - ஏலேலோ வந்த பெண்கள் - ஐலசா
வெய்யிலிலே - ஏலேலோ வேகிறோமே - ஐலசா. 4

மண்வெட்டிக்காரா - ஏலேலோ மாயாவி - ஐலசா
மண் வெட்டிவிட்டு - ஏலேலோ வேலைவிடு - ஐலசா. 5

பிக்காசுக்காரா - ஏலேலோ பெரும்பாவி - ஐலசா
பிக்காசுவிட்டு - ஏலேலோ வேலைவிடு - ஐலசா. 6

கொத்தனாரே - ஏலேலோ கொடும்பாவி - ஐலசா
கொத்தைநிறுத்தி - ஏலேலோ வேலைவிடு - ஐலசா. 7

முள்ளுக்காரா - ஏலேலோ முறிந்தகாலா - ஐலசா
முள்ளைவிட்டு - ஏலேலோ வேலைவிடு - ஐலசா. 8

தச்சன் மாரு - ஏலேலோ வேலை விட்டு - ஐலசா
தனி வழியா - ஏலேலோ போறாங்களே - ஐலசா. 9

கொல்லன்மாரு - ஏலேலோ வேலைவிட்டு - ஐலசா
கொடிவழியா - ஏலேலோ போறாங்களே - ஐலசா. 10
-----------------

ஏழுமலை - ஏலேலோ ஏறிப் போய் - ஐலசா
ஏலமலை - ஏலேலோ ஏறுங்கடி - ஐலசா. 1

சாமைகுத்தி - ஏலேலோ சாறு காய்ச்சி - ஐலசா
நாமெல்லாரும் - ஏலேலோ நடந்திடலாம் - ஐலசா. 2

கட்டுச் சோற்றுக் - கேலேலோ கம்பங்கஞ்சி - ஐலசா
கடலைத்துவையல் - ஏலேலோ கலந்திடலாம் - ஐலசா. 3

காட்டுக்குள்ளே - ஏலேலோ கடையுமில்லை - ஐலசா
கடையிருந்தால் - ஏலேலோ கஞ்சியில்லை - ஐலசா. 4

வாற வேளைக்கே - ஏலேலோ தாராளமா - ஐலசா
வாங்கலாண்டி - ஏலேலோ சாமானமே - ஐலசா. 5

மூட்டைக்குள்ளே - ஏலேலோ கேப்பை மாவும் - ஐலசா
போட்டு நல்லா - ஏலேலோ தாட்டிடலாம் - ஐலசா. 6

மேட்டுருக்கு - ஏலேலோ மேல் மலையில் - ஐலசா
துட்டு மாத்திரம் - ஏலேலோ தட்டக்கூடா - தைலசா. 7

ரயிட்டன் வந்து - ஏலேலோ லயிட்டுப் போட்டு - ஐலசா
சயிட்டடிப்பான் - ஏலேலோ நயிட்டிலேதான் - ஐலசா. 8
-----------
8. Writer, Light, Sight, Night.
-----------
நாளெல்லாம் - ஏலேலோ நாற்பது மைல் - ஐலசா
நடக்கணுமே - ஏலேலோ நங்கைமாரே - ஐலசா. 9

காட்டுரோட்டில் - ஏலேலோ காட்டுப்பறவை - ஐலசா
மூலைமுக்கிலே - ஏலேலோ முள்ளம்பன்றி - ஐலசா. 10

ஆனைக்காடும் - ஏலேலோ சண்டைக்காடும் - ஐலசா
அங்கிருக்குது - ஏலேலோ அண்ணன்மாரே - ஐலசா. 11

மேட்டுப்பக்கம் - ஏலேலோ பொட்டிக்கடை - ஐலசா
தட்டுத்தட்டா - ஏலேலோ சுட்டுவச்சான் - ஐலசா. 12

காரவடை - ஏலேலோ பூந்திலட்டும் - ஐலசா
கனமாவாங்கி - ஏலேலோ சாப்பிடலாம் - ஐலசா. 13

ஆப்பக்கடையும் - ஏலேலோ காப்பிக்கடையும் - ஐலசா
அகப்படுமாம் - ஏலேலோ சாப்பிடலாம் - ஐலசா.       14

காசில்லாட்டி - ஏலேலோ கங்காணிதான் - ஐலசா
கணக்குப்பார்த்து - ஏலேலோ கொடுத்தடைப்பான் - ஐலசா. 15

கண்ணிலேபார்ப்போம் - ஏலேலோ களைக்காட்டைத்தான் - ஐலசா
கால்நடையோ ஏலேலோ சாரமில்லை - ஐலசா. 16
__________


6. கள்ளன் பாட்டு


மேடைமேலே நான்வந்து
      போட்டி செய்வேனே - கள்ளரெல்லாம்
      ஓட்டி அடிப்பேனே. 1

நான்பிறந்தது அந்தமான்மலை
      ஆர்பருக் கடலு - எனக்குவந்து
      ஆயிரம் மெடலு - எதிராளிக்குத்
      தொங்கிப்போகும் குடலு. 2

போறபோக்கிலே பிராந்திசாப்பிலே
      போட்டுக்கிட்டேன் ரெண்டு போலீஸ்காரப்
      புலிகளைக்கண்டு - ஓடிப்
      போயிட்டேன் கள்ளுக்கடைச் சந்து. 3

கள்ளுவிற்கிற கண்ணப்பனைக்
      கட்டாயம் உதைப்பேன் - கள்ளு ஜாடியைக்
      கரைச்சுநான் குடிப்பேன்
      கண்ணப்பனுக்கு எசமானாய் இருப்பேன். 4

கள்ளுக்கடை அண்ணாச்சி
      என்கணக்கு என்னாச்சு?
      வெள்ளிப்பணம் ஒண்ணாச்சு
      விடியற்கால நேரமாச்சு. 5

காலையிலே எழுந்திருச்சு
      கைகாலைச் சுத்தம்பண்ணி
      கால்படிகள்ளுக் குடிக்காமல் இருக்கிறவன்
      கழுதைக்குச் சமானம். 6
----------------

மாந்தோப்புக் குள்ளேபோயி
      மலையாளம் எல்லாம்பேசித்
தென்னந்தோப்புக் குள்ளேபோயி
      செந்தமிழும் நல்லாப்பேசி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 1

எப். ஏ. பி. ஏ. படித்து
      எப்போதும் இங்கிலீஷ்பேசி
தப்பாமே தாய்ப்பாஷையும்
      சிப்பாய்போலே தான்படித்து
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 2

ஆளிலே அழகானவன்
      ஆசார போசனவன்
தோள்கள் பருத்தமன்னன்
      தொடைஉருண்டு திரண்டமன்னன்
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 3

முறுக்கிவிட்ட மீசையோடே
      முன்னம்பல் வரிசையோடே
மினுக்கிவைத்த கத்தியோடே
      மின்னுங்கையில் வெடிகளோடே
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 4

தாய்பிள்ளை எல்லாம்விட்டுத்
      தன்வீட்டையும் கூடவிட்டுத்
தர்மத்தை மனசில்வைத்துத்
      தைர்யத்தைக் கையில்பிடித்து
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 5

எட்டாள தேசமெல்லாம்
      எட்டுதம்மா இந்தச்சேதி
பட்டாளத் திலேயும்பாதி
      பதுபதுங்கி நிற்கையிலே
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 6

ஆறாயிரம் புலிகரடி
      அடைந்திருக்கும் கானலிலே
அம்சமுள்ள சிம்மம்போலே
      அமுலோடதான் பாட்டுப்பாடி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 7

மோட்டார் பறக்குதடி
      முடுக்கெல்லாம் நிற்குதடி
தோட்டாப்போட்டு நீட்டிக்கொண்டு
      சொகுசுநடை நடந்துகொண்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 8

செந்தலைப் புலிகளெல்லாம்
      ஜம்புலிங்கம் பேரைக்கேட்டு
வம்பிலேஏன் மாளணுமுண்ணு
      வண்டியிலே ஏறையிலே
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 9

அத்தைமக்களைச் சட்டைபண்ணாமே
      அந்நியப் பெண்கள்மேலே
ஆசைவைத்துப் போனதாலே
      மோசம்போகப் பாசத்தோடே
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 10

ஏட்டுஇன்ஸ் பெக்டரெல்லாம்
      எட்டிஎட்டிப் பார்க்கையிலே
எட்டிச் சுவரிலேறிக்
      கட்டிடத்தைப் பூராத்தாண்டி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 11

மூளிசண்டாளி அந்த
      முண்டைச்சி பெற்றமகள்
காக்காய் நிறத்துக்காரி
      காட்டிக் கொடுக்கும்ராத்திரி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 12

காசிராஜா பேரெடுத்த
      காசிநாடார் ஓடிவர
கட்டழகன் மைத்துனனைந்
      தப்பியோடக் கண்ணடித்து
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 13

சோற்றுக்கையில் சோட்டாத்தடி
      பீச்சைக்கையில் பிச்சுவாவாம்
மாற்றிமாற்றி வீசிக்கொண்டு
      மானைப்போலே துள்ளிக்கொண்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம்.       14

பழையபனங் காட்டுநரி
      சலசலப்புக் கஞ்சாதென்று
பழமொழிதான் சொன்னாற்போலே
      பயம்ஒன்றும் நெஞ்சில்லாமே
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 15

பணக்காரப் பெண்பிள்ளைகள்
      பழமைபேசிப் போகையிலே
பதனமா நகைகளெல்லாம்
      பயமில்லாமே பறித்துக்கொண்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 16

கட்டைவண்டி மேலேஏறி
      காட்டுவழி போகையிலே
கஷ்டம்ஒன்றும் இல்லாமலே
      எட்டுப்பேரை யும்எதிர்த்து
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 17

காதுநகை கழுத்துநகை
      கைநகை காலுநகை
கணக்கில்லாமே கழற்றிக்கொண்டு
      காதுகளைப் பிணைத்துப்பூட்டி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 18

லட்சாதி பதியைஎல்லாம்
      லட்சியம்ஒன்றும் பண்ணாமே
வெட்கப்படுத்தியும் பற்றாமே
      விரட்டிவிரட்டி அடித்துவிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 19

உயிரைக்கையி லேபிடித்து
      ஓடினாரே பணக்காரர்
சாடி அவரைப்பிடித்து
      சங்கிலியில் கட்டிவைத்து
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 20

பணக்காரரைப் பழித்துக்காட்டப்
      பாவப்பட்ட வர்களைக்கூட்டிப்
பணத்தையும் பறித்துக்கொண்டு
      பதறப்பதற விட்டுவிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 21

மேல்மெத்தைமே லேதான்ஏறி
      மேல்மாடிக்குள் ளேதான்போயி
நேராய்த்துப்பாக் கியைநீட்டி
      ஜோராய்ப்பணம் எல்லாம்வாங்கி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 22

ஆறுவயசி லேயும்சாவு
      நூறுவயசி லேயும்சாவு
சாவுக்குப் பயப்படாமே
      சர்க்காரு ரோட்டுவழி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 23

ஆயிரரூ பாயைஅவர்
      அரைக்காசென்று தான்எண்ணி
அள்ளிஏழைக் கிறைத்துவிட்டு
      அன்னதானம் செய்துவிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 24

பில்லுக்காரப் பெண்பிள்ளைக்குப்
      பேரைச்சொல்லிப் பிழைத்துக்கண்ணு
நல்லநல்ல நகைகளெல்லாம்
      நல்லமனசாப் பூட்டிவிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 25
---------
25. பிழைத்துக்கண்ணு - பிழைத்துக்கொள்ளென்று.

நெல்லறுக்கப் போனவளை
      நிற்கவைத்துப் பாதையிலே
சொக்கத்தங்க நகைகளெல்லாம்
      பக்குவமாய்ப் பூட்டிவிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 26

கையெடுத்த பேருக்கெல்லாம்
      கைநிறையப் பணங்கொடுத்து
பைகளைத் திறக்கச்சொல்லி
      பற்றாததுக்கும் போட்டுரொப்பி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 27

தங்கம்பொன் வெள்ளியெல்லாம்
      தண்ணிக்குச் சமமாய்எண்ணித்
தர்மத்தை மனசில்எண்ணித்
      தானதர்மம் எல்லாம்பண்ணி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 28

உள்ளுக்குஓ ராளைவிட்டு
      உளவெல்லாம் அறிந்துகொண்டு
நல்லமாதிரி யேபோயி
      சொல்லாலேகா செல்லாம்வாங்கி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 29

ஆறும்இல்லை நூறும்இல்லை
      ஆளும்இல்லை பேரும்இல்லை
தானேதான் மச்சானோடே
      தக்கபடி அடிச்சுக்கிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 30

காட்டுக்குள்ளே ஆடுபோக
      ஆட்டிடையன் பின்னேபோக
ஆட்டிலே கொழுத்ததொன்றைத்
      தோட்டிக்குத் தர்மம்பண்ணி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 31

கைஇல்லாத ஏழைகளுக்கும்
      கால்இல்லாத ஏழைகளுக்கும்
கண்இல்லாத ஏழைகளுக்கும்
      கஞ்சிதர்மம் கொடுத்துவிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 32

பணக்காரனை இளைக்கவைத்துப்
      பாவங்களைத் தழைக்கவைத்து
பக்கத்திலே யேஉட்கார்ந்து
      பசிகளெல்லாம் அமர்த்திவிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 33

பப்பிளிக்கு ரோட்டுமேலே
      பட்டப்பகல் வேளையிலே
பந்தோபஸ்து பீட்டுகளைப்
      பரக்கடிக்க வைத்துவிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 34
------
34. Public Road.
---------
சப்இன்ஸ்பெக்டர் சட்டையை
      சந்தடிஒன்றும் இல்லாமே
சல்லாபமாத் தான்கழற்றி
      உல்லாசமாப் போட்டுக்கொண்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 35

ராத்திரி வேளையிலே
      காத்திருந்த போலீஸை
சாதுரிய மாகத்தானும்
      சந்துசந்தாச் சந்திச்சிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 36

குதிரைமேலே ஏறிவர
      குதிரைக்காரன் ஓடிவர
குறுக்கேநின்ற போலீஸ்காரன்
      கும்பிட்டொரு பக்கம்நிற்க
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 37

ஜேப்புக்குள்ளே கையைவிட்டுச்
      சின்னப்பென் சலைஎடுத்துப்
பீட்டுநோட்டை யுந்திறந்து
      போட்டுவிட்டுக் கையெழுத்து
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 38

முச்சந்தி ரோட்டுமேலே
      மூன்றுபோலீஸ் பாராநிற்க
முதுகுப்பக்கம் திரும்பச்சொல்லி
      மூன்றடி கொடுத்துவிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 39

முந்நூறு பேர்வளைக்க
      முள்ளம்பன்றி போலுலுப்பி
மூன்றுபேரைப் பஸ்பம்பண்ணி
      முள்ளுவேலி யெல்லாந்தாண்டி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 40

ராவெல்லாம் சேவகர்கள்
      ரோந்துசுற்றிப் போகையிலே
சாவைமன சில்நினைத்துச்
      சத்தமில்லாமே போகவைத்து
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 41

உசுலுப் பறந்துபோக
      உசுலுக்காரன் உயரப்போக
உச்சிக் குடுமிபறக்க
      உதைஉதைண்ணு உதைத்துவிட்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 42
------------
42. உசுல் - Whistle.
-------
நாடாரு சாதியிலே
      நாயமான குடும்பத்திலே
நல்லதாய் கும்பியிலே
      நல்லநாளி லேபிறந்து
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 43
------
43. கும்பி - வயிறு.
----------
பிச்சை எடுக்கவும்இல்லை
      பெற்றோரைப் பழிக்கவும்இல்லை
மெத்தவும் படித்துவிட்டு
      மேன்மையான வேலைபார்க்க
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 44

கண்டபெண்ணும் ஆசைப்பட
      கையலைத்துத் தான்கூப்பிட
மையலிலே தான்மயங்கச்
      சைகையிலே பேசவுங்க
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 45

தர்மராசா வாப்பிறந்து
      தர்மத்திலே யேவளர்ந்து
தன்சுகத்தை யும்பார்க்காமே
      மேம்பதவி யைப்பெறவே
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 46

ராசாதி ராசரெல்லாம்
      ராக்காச்சி பெண்களாலே
நாசமாய்ப் போனாற்போலே
      மோசம்போற துக்குத்தானே
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 47

நொண்டிநொண்டி நடந்திட்டாலும்
      சண்டித்தனம் போகாமல்தான்
தண்டவாளத் தையுங்கூடத்
      தாண்டிக்கிட்டுத் தவ்வித்தவ்வி
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 48

எரிந்த குலைகள்அமர
      ஈரக்குலைகள் குளிரப்
போலீசுப் புலிகளெல்லாம்
      புகழ்ந்துமகிழ்ந்து பேச்சுப்பேச
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 49

மலையாள பகவதியே
      மறைந்தையோடி அந்தநேரம்
பூமியெல்லா மேபுகழ
      பூமிக்குள்ளே தான்மறைய
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 50

என்னகைத் துப்பாக்கியோ
      என்னபட் டாக்கத்தியோ
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
      எமலோகம் போவதற்கு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 51

கைவிலங்குக் ககப்படாமே
      கால்விலங்குக் ககப்படாமே
மெய்மறக்க வைத்துவிட்டுக்
      கையைவீசி நடந்துகொண்டு
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 52

சிவலோகம் போனாலுங்கூடச்
      சென்மத்துக்கும் பேர்இருக்க
செகம்புகழும் ஜம்புலிங்கம்
      பேருமாத்தி ரம்எடுக்க
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 53

மன்னாதி மன்னனையும்
      வீராதி வீரனையும்
வீறாப்புக் காரனையும்
      வீம்புக்கார னையும்மடக்க
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 54

தாய்பிள்ளை அழுதுவர
      சார்ந்தவர்கள் பின்தொடர
மாய உலகம்போயி
      மறைவாய்க் குடியிருக்க
      வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
      நாடார்ஜம்பு லிங்கம். 55

ஆழமான ஆற்றையெல்லாம்
      ஆனைபுலி கரடியெல்லாம்
அஞ்சாமல்தான் நம்பலாம்
      ஆனால் பதினாறுமுழச்
      சீலைக்காரி பத்திரம் - அப்பா
      சீலைக்காரி பத்திரம். 56

வெற்றிலை மடித்துக்கொடுப்பாள்
      வெறும்பேச்செல்லாம் பேசுவாள்
கூடச்சாகி றேனென்னுவாள்
      கூந்தலை விரித்துப்போட்டு
      ஏமாந்து மோசம்போகாதே - தம்பி
      ஏமாந்து மோசம் போகாதே. 57
_______

கள்ளன் பாட்டு

தந்தானமடி தந்தானமடி
      தந்தானக் குயிலே - மயிலே
      தந்தானக் குயிலே - மயிலே
      தந்தானக் குயிலே. 1

தந்தானென்கிற பாட்டுப்பாடி
      வந்தேன் சபையிலே - அப்பாடா
      வந்தேன் சபையிலே - அப்பாடா
      வந்தேன் சபையிலே. 2

கோட்டைகொத்தளம் மேலேஏறி
      கூசாமே ஓடிடுவேன் - அப்பாடா
      கூசாமே ஓடிடுவேன் - அப்பாடா
      கூசாமே ஓடிடுவேன். 3

கொத்தவால் கண்டு பிடிக்கவந்தால்
      காலை வெட்டிடுவேன்
      கையை வெட்டிடுவேன் - கூடஒரு
      கையை வெட்டிடுவேன். 4

படுத்திருக்கும் பெண்கள்மேலே
      பதமாக் கைவைப்பேன் - அப்பாடா
      பதமாக் கைவைப்பேன் - அப்பாடா
      பதமாக் கைவைப்பேன். 5

பக்கத்திலேஆளும் கண்டுகொண்டால்
      பாய்ந்து வெட்டுவேன் - அப்பாடா
      பாய்ந்து வெட்டுவேன் - அப்பாடா
      பாய்ந்து வெட்டுவேன். 6

மெட்ராசு ஜெயிலிலேநான்
      மெடலு பெற்றவண்டா - அப்பாடா
      மெடலு பெற்றவண்டா - அப்பாடா
      மெடலு பெற்றவண்டா. 7

கோயம்புத்தூரு ஜெயிலிலேநான்
      கோருப் பெற்றவண்டா - அப்பாடா
      கோருப் பெற்றவண்டா - அப்பாடா
      கோருப் பெற்றவண்டா. 8
---------
8. கோரு - Score.
_______

திருடன் பாட்டு

தண்டைசிலம்பு சலசலங்க
      தாராபுரம் தங்கை - நடந்துவாடி மங்கை
மாமன்நான் கூடவாரேன்
      மத்தியான வேளையிலே
மாமன்செய்த கூத்தையெல்லாம்
      மரியாதையாக் கேட்கையிலே
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 1

எண்டப்புளி ரோட்டுவழி
      இடைவாழைக் காட்டுக்குள்ளே
திண்டுமுண்டு செய்தகதை
      செம்மையாநீ கேட்கையிலே
தாடிப்பத்திரி சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 2

அம்பதுகள் ளர்களுக்கு
      அதிகாரியா நான்இருந்தேன்
அம்பதும்என் னைப்பார்த்துட்டால்
      அடிபணிந்து நிற்கவேணும்
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 3

பாதிப்பேரைப் படுக்கவைத்தேன்
      பாதிப்பேரை நிற்கவைத்தேன்
பக்கத்திலே நான்பதுங்கிப்
      பலவேலையும் காட்டினேண்டி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 4

ஒருகூட்டம் சாணாசனம்
      ஒய்யாரம்பேசி வருகையில்தான்
ஒரேபாய்ச்சலாப் பாய்ந்துநான்
      ஒசந்தவனைப் பிடிச்சேனடி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 5

அரவங்கேட்டு அரைநொடியிலே
      ஒளித்துவைத்த ஆளம்பதும்
அரண்மனைச் சுவருபோலே
      ஆணித்தரமா வளைந்தாரடி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 6

சந்தடிஒண் ணுஞ்செய்யாமே
      சாணாசனம் எல்லோருமே
சருக்காருக்குப் பயந்தாப்போலே
      கப்சுப்பென்று நின்றார்களே
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 7

தண்டட்டி மேலடுஎல்லாம்
      தப்பாமே்போட்ட பெண்கள்எல்லாம்
தாம்புத்தி இல்லாமல்தான்
      தத்தளித்து நின்றாரடி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 8

நகையெல்லாம் கழற்றச்சொன்னேன்
      நாகரிக வார்த்தையாலே
நடுங்குகின்ற பெண்களெல்லாம்
      நகையெல்லாம் கழற்றையிலே
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 9

அசப்பிலேநாங்கள் நிற்கும்போது
      அதிலேபத்து ஆண்பிள்ளைகள்
அந்தரடித்துத் தவ்விப்போயி
      அப்பால்தள்ளி நின்றாரடி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 10

எட்டிஅவ னைவளைக்க
      இசைவில்லாமல் நிற்கையிலே
பஞ்சாப் பறந்தவர்கள்
      அஞ்சுக்கொன் றெதிர்த்தாரடி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப் போத்தடி மேலே. 11

ஆகாஎன்ன அதிசயம்
      அன்பானஎன் மங்கையே
அடித்தான்பாரு ராமபாணம்
      அம்பதுபேரும் அலமலக்க
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 12

வேலுக்காரன் ஏழுபேரு
      சிலம்பக்காரன் ரெண்டுபேரு
மண்ணைக்கவ்வ வச்சானடி
      கவ்வாங்கல்லுக் காரனடி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 13

வில்லை வளைத்தானடி
      வேலுக்காரன் ஏழுபேரும்
கல்லைவைத் தடித்தானடி
      களிமண்ணுருண்டை தீரவுந்தான்
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.       14

எங்களிலே எட்டுப்பேரு
      எமலோகம் போய்ச்சேர்ந்தாரடி
தங்கநகை போட்டபெண்கள்
      தப்பித்து ஓடினார்களடி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 15

குண்டு மருந்துக்கடி
      கொள்ளை செய்யலாச்சடி
குண்டொன்றும் பலிக்கல்லேடி
      ரெண்டுங்கெட் டோடினோமடி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 16

வேலுக்கம்பும் கீலுக்கம்பும்
      பிச்சுவாளும் கிச்சவாளும்
வெடிமருந்தும் எல்லாம்சேர்ந்து
      வெட்டியாத்தான் போயிடுச்சே
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 17

கண்ணாலேயும் பார்த்ததில்லை
      காதாலேயும் கேட்டதில்லை
கம்புக்காரன் கையிரண்டும்
      பம்பரமா ஆடினதே
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 18

உருட்டுக்கம்பு ஒண்ணரைமுழம்
      உருண்டுதடி உள்ளங்கைக்குள்ளே
விரட்டிவிரட்டி அடித்தானடி
      வெடிகுண்டுக்கும் பயப்படாமல்
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 19

வேட்டைநல்ல வேட்டையென்று
      வீணாநாங்கள் நினைத்துப்போக
வெடிகுண்டையும் பறிகொடுத்து
      வெறுங்கையாத்தான் போனோமடி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 20

எண்டப்புள்ளி ரோட்டிலேநான்
      எக்குத்தப்பாப் பட்டபாட்டை
என்றைக்கும் மறக்கமாட்டேன்
      என்னைக்கேலி பண்ணாதடி
தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 21
-----------------

வேறு

பறங்கிமலை பல்லாவரம்
      பன்றி மேய்ச்சவனே - லோட்டா
      கூழ்குடிச்சவனே - துண்டு
      பீடி அடிச்சவனே. 1

சீப்புவிற்கும் சென்னையிலே
      பறக்குதே கருடன் - உலகத்திலே
      ஆறாம்நம்பர் திருடன் - பாடவந்த
      கண்தெரியாக் குருடன். 2

கள்ளப்பாட்டுக் கற்றுக்கொண்டு
      கணக்கா வந்தேனே - கன்னக்கோலைக்
      கையில் எடுத்தேனே - கட்டிடத்தை
      நாசம் செய்தேனே. 3

கன்னக்கோலைக் கையில்எடுத்தால்
      கட்டிடம் நாசம் - டெலிபோன்
      என்னோ டேபேசும் - போலீசு
      என்மேலே நேசம.் 4

கத்திக்குத்து பாணாவந்தால்
      கைதேர்ந்த கேடி - சென்னையிலே
      பேர்போன ரவுடி - வந்தாலும்
      ஜெயிப்பேன் கில்லேடி. 5

வண்ணாரப்பேட்டையில் கிண்ணாரம்வாசிக்கும்
      பண்டாரக் கேசவலே - என்கூடப்
      பாடும் சவ்வாலே - மரத்திலே
      தொங்கும் வௌவாலே. 6

தஞ்சாவூரு கோவிந்தனுக்குத்
      தலைமேலே செம்பு - கையிலே
      அரைபாணாக் கம்பு - எதிராளி
      பறக்குதே கும்பு. 7

மானாமதுரை மகராஜன்ராத்திரி
      ஒருமணி தேட்டை - என்னைக்கண்டு
      சிரிக்குது மூட்டை வாயெடுத்துப்
      படிப்பனே பாட்டை. 8

போட்டாபோட்டிக்கு வந்தவனைப்
      பொம்பரம் போலாட்டி - மெத்தைமேலே
      சிங்கக்கொடி நாட்டிச் - செய்யப்போறேன்
      செரியான கோஷ்டி. 9

கள்ளனென்று வெளியேவந்தால்
      முகத்திலே கறுப்பு - நம்கிட்டே
      பண்ணாதே முறைப்பு - தொங்கிப்போகும்
      அஞ்சுபலம் துறப்பு. 10

முந்திப்பிந்திப் பேசினையென்றால்
      ஏறுவேன் ரெயிலு - பின்னாலே
      வருகுதே மெயிலு - ஓசையிட்டுக்
      கூவுதே குயிலு. 11
-----------

அகப்பட்டுக்கொண்ட திருடன்
      செங்காங் கடைத்தெருவு ரோட்டு - நான்
சென்றேன் தாசிவீடு கேட்டு
      கொல்லைப் புறத்தில்கன்னம் போட்டு
ஏறிக் குதித்தசத்தம் கேட்டு

ஓடிவந் தானொரு ஏட்டு - முன்னேதள்ளிப்
      பின்னாலே ரெண்டுமூணு போட்டு
அழகான சம்மாஸ்திரிட் கோர்ட்டு - என்னை
      அனுப்பினார் ஆறுமாசம் சீட்டு.
----------


7. குடும்பம்


கல்யாணப் பாட்டு

கலியாணமே ஒரு கலியாணமே - மனசில்
      களிப்பூறும் கலியாணமே
சலியாத சந்தோஷக் கலியாணமே - ரொம்பச்
      சனங்கள் கூடும் கலியாணமே. 1

வருசம்மாசம் தேதிநாள் கிழமை - நல்ல
      புருசன் பெண்ணுக்கும் பொருத்தமாமே
கோடிசனம் வந்து பந்தலிலே - நல்ல
      குருவோடு சேர்ந்து உட்கார்ந்தாங்களே. 2

வந்த பூக்களெல்லாம் தாராளமே - பன்னீர்
      சந்தனம் தேங்காயும் தாராளமே
நாகசுரமும் புல்லாங்குழலும் - நல்ல
      மேளமும் கொட்டும் பிளக்குதுபார். 3

கப்பல் மோட்டார் கட்டைவண்டியிலே - சனம்
      கும்புகும்பாக வாறாங்களே பார்
மாப்பிள்ளை பொண்ணுக்குத் தாலிகட்டிக் - கொஞ்சம்
      பாலும் பழமும் அவளுக்கூட்டி. 4
_______

பரிகாசப் பாட்டு
[கொழுந்தியாள் மாப்பிள்ளையைக் கேலிபண்ணுவது.]

வாங்க வாங்க அத்தானே
      வர்ணச் சட்டையும் போட்டு
தேங்காத் தலையும் வச்சுத்
      தெருவிலே அலைஞ்சவரே. 1

கலியாணம் இல்லேண்ணு
      கவலையா இருந்தீங்களே
காலியாப் போகுமுண்ணு
      கலங்கிக்கிட் டிருந்தீங்களே. 2

ஆத்திலேயும் குளத்திலேயும்
      வாய்க்கால்ஓ ரத்திலேயும்
காத்திருந்து பொண்ணுகளைக்
      கலக்கி மயக்கலையோ? 3

பார்த்துப்பார்த்து அவங்களைப்
      பரியாசம் பண்ணலையோ
ஊத்துப்பக்கம் நீங்கள்போயி
      உட்கார்ந்து பார்க்கலையோ? 4

மண்டை வறண்டவருக்கு
      மச்சினிச்சி மார்களாச்சு
மண்வெட்டிப் பல்லருக்கு
      மாமியாரும் கிடைச்சுப்போச்சு. 5

புண்ணாக்கும் புளியம்பிஞ்சும்
      மல்லாக்கொட்டையும் தின்னவருக்குக்
கண்மணிஎங்கள் அக்காகிட்டக்
      கணக்காச் சாப்பாடுமாச்சு. 6

காட்டிலேபோய் மாடுமேச்சுக்
      கஞ்சிகுடித்த அத்தான்
கட்டிலிலே மெத்தைபோட்டு
      இங்கேவந்து படுக்கணுமோ? 7

முன்பிறப்பி லேசெஞ்ச
      மோசமான வேலைக்காக
இப்பிறப்பிலே எங்கஅக்கா
      இப்படித் தவிக்கிறாளே. 8

அக்காளைக் கூட்டிக்கிட்டு
      வற்றாத சீர்பெற்றார்
நாகரிகம் அவருக்கில்லை
      நாட்டுப்புற வழக்கத்திலே. 9

பம்புக்குழா யின்னுசொன்னால்
      வம்பொண்ணும் வாணாமுன்னுவார்
சம்பந்த முன்னுசொன்னால்
      சாணிப்பந்தம் கட்டிடுவார். 10

கச்சேரி என்றுசொன்னால்
      பறைச்சேரி என்றுசொல்வார்
மோட்டார்கார் என்றுசொன்னால்
      ஓட்டம் பிடித்திடுவார். 11

உடுப்புப்போட்ட வங்களைக்கண்டால்
      அடுப்பைவிட்டுப் போகமாட்டார்
பஞ்சுமெத்தை என்றுசொன்னால்
      இஞ்சிதின்ற குரங்காவார். 12

மஞ்சத்திலே படுக்கணுண்ணா
      பஞ்சம்ஏறுதுண்ணுவார்
பாவிஎங்கே போறேஇண்ணா
      சாவிஎடுக்க ஓடுவார். 13

மல்லுவேட்டி கட்டுங்கண்ணா
      மல்லுக்கட்ட மாட்டேண்ணுவார்
சில்லுத்தேங்கா வேணுமுண்ணா
      புல்லுக்கட்டைக் கொண்டுவருவார்.         14

சாப்பாடு வேணுமாண்ணா
      கூப்பாடு போட்டழுவார்
பத்துவரை எண்ணச்சொன்னால்
      சுற்றுமுற்றும் பார்த்தழுவார். 15

காப்பிகுடிங்க அத்தானுண்ணா
      கஞ்சித்தண்ணி போதுமென்பார்
பாயாசம் வேணுமாண்ணா
      பாசாணம் வேணாமுண்ணுவார். 16

ஆகாசக் கப்பலுண்ணா
      ஆவேசம் போல்முழிப்பார்
சக்கர வர்த்தியிண்ணாச்
      சக்கரத்தை உருட்டிப்பார்ப்பார். 17

ஆப்பம்கொஞ்சம் வேணுமாண்ணா
      அப்பன்ஊரில் இல்லேண்ணுவார்
கோப்பையிலே பால்இருந்தால்
      மோப்பம்நல்லாப் பிடிச்சிடுவார். 18

பம்பாய்ப்பட்டு வேணுமாண்ணா
      பம்பரத்தை ஆட்டிப்பார்ப்பார்
குண்டக்கல்லுக்குப் போகணுண்ணா
      குண்டை உருட்டிப்பார்ப்பார். 19

பேனாஎங்கே இருக்குதுண்ணா
      பேனைக்குத்தி உடனேபார்ப்பார்
புத்தகத்தைப் படிக்கச்சொன்னால்
      பொடிஎடுத்து உறிஞ்சிடுவார். 20

பணியாரத்தைத் தின்னச்சொன்னால்
      பொத்தலெல்லாம் எண்ணிடுவார்
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
      . . . . . . . . . . . . . . . . . . . . . . . 21

ஈரவேட்டி யைஎடுத்து
      இடுப்பிலே இறுக்கிக்கட்டி
ஏரியைச் சுற்றிவந்து
      எருமைமாட்டை மேச்சிடுவார். 22

தாமரைக் குளத்துக்குள்ளே
      தடாலென்று இறங்கிப்போயி
தான்மேய்க்கிற எருமைக்கடாவைத்
      தாற்றுக்கம்பிலே குத்திடுவார். 23

குச்சுவீட்டில் இருந்தவரை
      மச்சுவீட்டிலே வச்சதுக்கு
மச்சினிச்சி எல்லாரையும்
      மதிப்பில்லாமே பேசிடுவார். 24

அட்டைமாதிரி இருக்கிறவரைக்
      கட்டிலிலே போட்டதுக்குக்
கட்டிலைவிட் டிறங்கிப்போய்க்
      கொட்டத்திலே படுத்திடுவார். 25

அத்தான் மறந்திடுங்க
      ஆடுமேய்க்கிற வேலையெல்லாம்
புத்தியாஎங்கள் அக்காளைப்
      பூசைநெஞ்சு பிழைச்சிடுங்க. 26
_________

பெண்ணுக்கு அறிவுரை

ஆக்கவேணாம் அரிக்கவேணாம் -
சுண்டெலிப்பெண்ணே
அறிவிருந்தால் போதுமடி -
சுண்டெலிப்பெண்ணே. 1

காத்திருந்தவன் பெண்டாட்டியைச் -
சுண்டெலிப்பெண்ணே
நேத்துவந்தவன் கொண்டுபோனான் -
சுண்டெலிப்பெண்ணே. 2

அதனாலேதான் பயமாஇருக்கு -
சுண்டெலிப்பெண்ணே
அக்கம்பக்கம் போகாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 3

கண்ணடிக்கிற பயலைக்கண்டால் -
சுண்டெலிப்பெண்ணே
கண்ணெடுத்துப் பாராதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 4

கடைக்குப்போற பயலைக்கண்டால் -
சுண்டெலிப்பெண்ணே
கையலைப் பழைக்காதடி - சுண்டெலிப்பெண்ணே. 5

காவாலிப் பயலைக்கண்டால் -
சுண்டெலிப்பெண்ணே
காலாட்டிக்கிட்டு நிற்காதடி -
சுண்டெலிப்பெண்ணே. 6

நெற்றியிலே பொட்டுவைச்சு -
சுண்டெலிப்பெண்ணே
நெருங்கிநிண்ணு பேசாதடி -
சுண்டெலிப்பெண்ணே. 7

புருவத்திலே மையைவச்சு - சுண்டெலிப்பெண்ணே
பொய்ஒண்ணுமே சொல்லாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 8

ஜோட்டியிலே மாட்டல்வச்சு -
சுண்டெலிப்பெண்ணே
ஜோக்குநடை நடக்காதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 9

வெற்றிலைபாக்குப் போட்டுகிட்டுச் -
சுண்டெலிபெண்ணே
வெறும்பயலைப் பார்க்காதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 10

புகையிலையைப் போட்டுக்கிட்டுச் -
சுண்டெலிப்பெண்ணே
பொடிப்பயலைப் பார்க்காதடி -
சுண்டெலிப்பெண்ணே 11

வாறவனையும் போறவனையும் -
சுண்டெலிப்பெண்ணே
வழிமறிச்சுப் பேசாதேடி - சுண்டெலிப்பெண்ணே. 12

சந்தைக்குப்போற சனங்களைநீ -
சுண்டெலிப்பெண்ணே
ஜாடைப்பேச்சுப் பேசாதடி -
சுண்டெலிப்பெண்ணே. 13

சலுக்காரு ரோட்டிலேநீ - சுண்டெலிப்பெண்ணே
சண்டைகிண்டை போடாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.       14

பக்கத்துவீட்டுப் பெண்களைச் -
சுண்டெலிப்பெண்ணே
பரிகாசம்நீ பண்ணாதேடி - சுண்டெலிப்பெண்ணே. 15

இடுப்புச் சிறுத்தவளே - சுண்டெலிப்பெண்ணே
இறுமாப்புநீ பேசாதேடி - சுண்டெலிப்பெண்ணே. 16

மண்டை பெருத்தவளே - சுண்டெலிப்பெண்ணே
தண்டுமுண்டு பேசாதேடி - சுண்டெலிப்பெண்ணே. 17

விரிச்சநெற்றிக் காரியே - சுண்டெலிப்பெண்ணே
வீறாப்புநீ பேசாதேடி - சுண்டெலிப்பெண்ணே. 18

இரும்புநெஞ்சு படைத்த - சுண்டெலிப்பெண்ணே
குறும்பொண்ணும்நீ செய்யாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 19

மயிர்சுருண்டு நீண்டுவளர்ந்த -
சுண்டெலிப்பெண்ணே
மரியாதைகெட்டுத் திரியாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 20

கிளிமூக்குக் காரியேடி - சுண்டெலிப்பெண்ணே
கிரித்துருவம் பண்ணாதேடி - சுண்டெலிப்பெண்ணே. 21

உருட்டிஉருட்டி முழிக்கும் - சுண்டெலிப்பெண்ணே
திருட்டுத்தனம் பண்ணாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 22

உதட்டழகுக் காரியேடி - சுண்டெலிப்பெண்ணே
      ஒருத்தரையும் வையாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 23

பல்வரிசைக் காரியேடி - சுண்டெலிப்பெண்ணே
பழிஇழுத்துப் போடாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 24

குறுங்கழுத்துக் காரியேடி - சுண்டெலிப்பெண்ணே
கோள்குண்டுணி சொல்லாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 25

ரதிமாருக் காரியடி - சுண்டெலிப்பெண்ணே
ராங்கியோடு நிற்காதேடி - சுண்டெலிப்பெண்ணே. 26

வழியில்போற வாலிபனைச் -
சுண்டெலிப்பெண்ணே
வம்பாக்கூப்பிட்டுப் பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 27

சொல்லழகில் நீதாண்டி - சுண்டெலிப்பெண்ணே
தோற்கவைப்பை எல்லாப்பெண்ணையும் -
சுண்டெலிப்பெண்ணே. 28

அதனாலேநீ அளவுக்குமிஞ்சி -
சுண்டெலிப்பெண்ணே
ஆங்காரம் படைக்காதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 29

உன்நடையும் கைவீச்சும் - சுண்டெலிப்பெண்ணே
உசத்தியிண்ணு நினைக்காதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 30

விருந்தும்மருந்தும் மூணுநாள் -
சுண்டெலிப்பெண்ணே
வீண்பீற்றலெல்லாம் பீற்றாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 31

கழுத்தில்தாலி இருக்கும்போது -
சுண்டெலிப்பெண்ணே
கண்டவனைப் பார்க்காதேடி -
      சுண்டெலிப்பெண்ணே. 32

கொண்டவன் உசிராயிருக்கையில் -
சுண்டெலிப்பெண்ணே
கண்டவன்கூடப் பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 33

கொண்டவன்நல்லாப் பார்க்கையிலே -
சுண்டெலிப்பெண்ணே
ரெண்டகம்நீ செய்யாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 34

கல்லுண்ணாலும் கணவனடி -
சுண்டெலிப்பெண்ணே
புல்லுண்ணாலும் புருசனடி -
சுண்டெலிப்பெண்ணே. 35

நாயம் பண்ணினாலும் இல்லையிண்ணாலும் -
சுண்டெலிப்பெண்ணே
நான்சொல்றதைக் கேட்டுக்கோடி -
சுண்டெலிப்பெண்ணே. 36

காலையிலே எளுந்திரிச்சுச் - சுண்டெலிப்பெண்ணே
வாசலுக்குச் சாணிபோடு - சுண்டெலிப்பெண்ணே. 37

சட்டிபானை லொட்டுலொசுக்கு -
சுண்டெலிப்பெண்ணே
சகலத்தையும் கழுவிவை - சுண்டெலிப்பெண்ணே. 38

செம்புபித்தளைப் பாத்திரங்களைச் -
சுண்டெலிப்பெண்ணே
செம்மையா விளக்கிவை - சுண்டெலிப்பெண்ணே. 39

வெள்ளிசெவ்வாய்க் கிழமையிலே -
சுண்டெலிப்பெண்ணே
வீடுபூரா மெழுகணுண்டி - சுண்டெலிப்பெண்ணே. 40

ஆடிஅமா வாசையிலே - சுண்டெலிப்பெண்ணே
ஆண்டவனைக் கும்பிடணும் -
சுண்டெலிப்பெண்ணே. 41

காடுகரை வீடுவாசல் - சுண்டெலிப்பெண்ணே
கவலையாநீ கவனிக்கணும் - சுண்டெலிப்பெண்ணே. 42

கிழிஞ்சுபோன கந்தலைக்கூடச் -
சுண்டெலிப்பெண்ணே
எறிஞ்சிடாமே தைக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே. 43

செல்லாத காசைக்கூடச் - சுண்டெலிப்பெண்ணே
செல்வமா நினைச்சுவை - சுண்டெலிப்பெண்ணே. 44

லெச்சுமிவீடு தங்கணுண்ணா - சுண்டெலிப்பெண்ணே
எச்சியைவீட்டில் துப்பாதடி -
சுண்டெலிப்பெண்ணே. 45

கார்த்திகை தீபாவளியிலே - சுண்டெலிப்பெண்ணே
கடவுளைநீ கும்பிடணும் - சுண்டெலிப்பெண்ணே. 46

சூடம்சாம்பி ராணிபோட்டு - சுண்டெலிப்பெண்ணே
சொக்கநாதரைக் கும்பிடடி -
சுண்டெலிப்பெண்ணே. 47

கைகாலெல்லாம் சுத்தம்பண்ணி -
சுண்டெலிப்பெண்ணே
கந்தசாமியைக் கும்பிடடி - சுண்டெலிப்பெண்ணே. 48

மாரியாத்தாளையும் காளியாத்தாளையும்
சுண்டெலிப்பெண்ணே
மறந்திடாமே கும்பிடடி - சுண்டெலிப்பெண்ணே. 49

மச்சான்கொழுந்தன் மாருக்கெல்லாம் -
சுண்டெலிப்பெண்ணே
மரியாதை கொடுக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே. 50

மாமன் மாமியாள் ரெண்டுபேரையும் -
சுண்டெலிப்பெண்ணே
மேன்மையா நடத்தணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே. 51

அண்ணன்தம்பி மாரைநீ - சுண்டெலிப்பெண்ணே
அரவணைச்சுப் பார்க்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே. 52

அன்னியரையும் அடுத்தவரையும் -
சுண்டெலிப்பெண்ணே
அன்பா ஆதரிக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே. 53

பிச்சைகொடுக்க ணும்னாக்கூடச் -
சுண்டெலிப்பெண்ணே
பட்சமாக் கொடுக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே. 54

மஞ்சள்குளிச்சு கொண்டைப்பூவச்சுச் -
சுண்டெலிப்பெண்ணே
மனிசரை மயக்காதேடி - சுண்டெலிப்பெண்ணே. 55

பட்சபாதம் ஒண்ணும்இல்லாமே -
சுண்டெலிப்பெண்ணே
பகுந்தாகாரம் கொடுக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே. 56

ஏழைபாழை ஏதுங்கேட்டால் -
சுண்டெலிப்பெண்ணே
எடுத்தெரிந்து பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 57

தர்மம் தலைகாக்குண்டி - சுண்டெலிப்பெண்ணே
தயவைக்கை விடாதேடிநீ - சுண்டெலிப்பெண்ணே. 58

தர்மம்செஞ்ச வேடனடி - சுண்டெலிப்பெண்ணே
தர்மராசா வாப்பிறந்தான் -
சுண்டெலிப்பெண்ணே. 59

ஆறிலேயும் சாவுதாண்டி - சுண்டெலிப்பெண்ணே
நூறிலேயும் சாவுதாண்டி - சுண்டெலிப்பெண்ணே. 60

அநியாயமா ஆளுகளைச் - சுண்டெலிப்பெண்ணே
அடிச்சு விரட்டாதேடிநீ - சுண்டெலிப்பெண்ணே. 61

ஊரார்பிள்ளையை ஊட்டிவளர்த்தால் -
சுண்டெலிப்பெண்ணே
உன்பிள்ளை தானாய்வளரும் -
சுண்டெலிப்பெண்ணே. 62

காராம்பசுவைப் போலேநீ -
சுண்டெலிப்பெண்ணே
கடவுளுக்கு உகந்துநட - சுண்டெலிப்பெண்ணே. 63
_______

மாமியார் மருமகள் சண்டை

மாமியாள் : தடிச்சிறுக்கி உடல்
      வளையாத மடச்சிறுக்கி
      கடைபொறுக்கி கெட்ட
      தறுதலைச் சிறுக்கி. 1

சட்டிகழுவத் தெரியாத
      சாகசக்கார மட்டிநாயே
      எட்டி உதைப்பேன்
      எழுந்திரடி ஈனநாயே. 2

கெட்டிக் காரியடிநீ
      கேடுகெட்ட சாதிநாயே
      தட்டுவேண்டி பல்லை
      தட்டுவாணி பெற்றநாயே. 3

ஏறிப்போச்சோ பையன்
      கொடுத்த கொழுப்புனக்கு
      எழுந்திரடி அடி
      மதம்பிடிச்ச தேவடியாள். 4

மந்திபோல ஏண்டிநீ
      இன்னம்தூங்கிக் கிட்டிருக்கே
வந்தேண்ணா பாத்துக்கடி
      வள்ளலெல்லாம் இறக்கிடுவேன். 5

குந்தக்குந்தப் பிடிச்சுத்தள்ளிக்
      குமுகுமுன்னு உதைச்சிடுவேன்
எந்தமாமி உன்னைக்கட்டி
      மாரடிச்சிக் கிட்டிருப்பா. 6

இந்தியாவில் எங்கேயானாலும்
      போய்க்கொஞ்சம் பார்த்துவாடி
ஏண்டிஎகத்தாளமாப் பார்க்கிறாய்
      தோண்டிடுவேன் உன்கண்ரெண்டையும். 7

மருமகள் : அத்தைஎன்னை அடிக்காதே
      அடிபணிவேன் நான்உனக்கு
      மெத்தஎன்னை மிரட்டாதே
      சுத்தபுண்ணியம் உனக்கு. 8

சுத்தமான வேலைசெய்வேன்
      கற்றுக்கொடு நீஎனக்குப்
      பத்திரமா வீட்டுவேலை
      பார்த்துச்செய்வேன் நான்உனக்கு. 9

அத்தை அடிஎங்கள்
      அப்பன்கூட வேபிறந்த
      அத்தை அடிஒரு
      முத்தங்கூடக் கொடுக்கிறேண்டி. 10

அத்தைஎன்னை வையாதே
      அநியாயமாய்த் திட்டாதே
      குற்றம்ஒண்ணும் செய்யலையே
      குந்திக்கிட்டு ஏன்இருக்கே? 11

ஒத்தையிலே நான்இருக்கேன்
      உதவிக்கொருத்தர் கூடஇல்லை
உன்மகன் கூடஎன்னை
      ஓடிஓடி அடிக்கிறாரு. 12

என்னசெய் வேன்நானு
      ஏதுசெய்வேன் அத்தை
சொன்னசொல்லை எல்லாம்
      தட்டாமல்செய்வேன் அத்தை. 13

மாமியாள் : எதிர்த்துச்சும்மா பேசாதேடி
      இழுத்துப்போட்டு உதைப்பேண்டி
      குதிச்சுச்சும்மா ஆடாதேடி
      கும்மாங்குத்துக் கொடுப்பேண்டி         14

பதைக்குதடி கைகாலு
      பாதகிஇப்போ பாரடி
      வதைக்கிறேண்டி பாருஇப்போ
      வாயைஉட னேமூடுடி. 15

வாதாடா தேஉன்
      சூதெல்லாம்நான் பார்க்கிறேன்
      சாகாம லேஉன்
      சதையெல்லாம் வகுந்திடுவேன். 16

என்ன திமிரடிஇது
      எங்கே படிச்சைஇது
      சொன்னசொல்லெல் லாம்உனக்குச்
      சோதிக்கலை யாகழுதை? 17

கன்னத்தைத் திருகிடுவேன்
      கடிச்சிடுவேன் உன்காதை
      தின்னத்தீனி வேணுமா
      திருடிபெற்ற குட்டிக்கழுதே. 18

தேம்பித்தேம்பி ஏண்டி
      திணறிக்கிட் டழுகிறாய்
சோம்பேறி நாயேநீ
      சும்மாஏண்டி அழுகிறாய்? 19

மருமகள் : அடக்குசும்மா உன்னை
      அத்தையிண்ணு பார்த்தேனம்மா
      அடக்குசும்மா வாயை
      அடக்குசும்மா கையை. 20

உனக்கிருக்கு துடைப்பக்கட்டை
      எனக்கிருக்கு பழையமுறம்
      உனக்கிருக்கு திருட்டுக்கை
      எனக்கிருக்கு முரட்டுக்கை 21

பணக்கொழுப் போஉனக்குப்
      பார்க்கிறேண்டி ஒருகை
      இணக்கமாப் போனால்போச்சு
      இல்லாட்டி வணக்குவேண்டி. 22

ஏண்டிஎன்னை இப்படி
      ஏமாற்றப் பார்க்கிறே
      தலைநரைச்ச பெருச்சாளிக்குத்
      தலையில்கொம்பு முளைச்சிருக்கு. 23

எலும்புக்கூடு கிழக்கிழவிக்கு
      எகத்தாள மாயிருக்கு
      இலையும்குழையும் தின்னவளுக்கு
      எடுப்புமுறுக்கு ரொம்பஇருக்கு. 24

தலைசீவத் தெரியாதவளுக்குத்
      தலைகாணி வேறிருக்கு
      . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . 25

உன்குலையை அறுத்திடுவேன்
      குரங்கே நாயேபேயே
      உன்மயிரை அறுத்திடுவேன்
      போபோ மூதேவியே. 26

மாமியாள் : சோறாக்கத் தெரியாத
      சோம்பேறிப் பெண்ணுக்கு
      வீறாப்பு ஏதுக்கடி - கள்ளி
      வீறாப்பு ஏதுக்கடி? 27

தாவாரம் பெருக்கத்
      தெரியாத பெண்ணுக்குப்
      பூமாலை ஏதுக்கடி - கள்ளி
      பூமாலை ஏதுக்கடி? 28

புருசனைச் சாமிண்ணு
      பணியாத பெண்ணுக்குப்
      பொன்தாலி ஏதுக்கடி - கள்ளி
      பொன்தாலி ஏதுக்கடி? 29

பெருந்தீனி யைத்திண்ணும்
      பேயான பெண்ணுக்கு
      விருந்தாளி ஏதுக்கடி - கள்ளி
      விருந்தாளி ஏதுக்கடி? 30

மரியாதை இல்லாமல்
      வாய்பேசும் பெண்ணுக்கு
      மாமியாள் ஏதுக்கடி - கள்ளி
மாமியாள் ஏதுக்கடி? 31

தாய்சொல்லைக் கேட்காத
நாடோடிக் கழுதைக்குத்
      தங்கநகை ஏதுக்கடி - கள்ளி
      தங்கநகை ஏதுக்கடி? 32

அண்ணன் தம்பிமாரை
      அழுகவச் சவளுக்கு
      அரண்மனை ஏதுக்கடி - கள்ளி
      அரண்மனை ஏதுக்கடி? 33

கறுப்புப் பொட்டுவச்சுக்
      கண்ணடிக் கிறவளுக்குப்
      புருசனும் ஏதுக்கடி - கள்ளி
      புருசனும் ஏதுக்கடி? 34

மருமகள் : சும்மாவா யாடாதேமெத்தச்
      சொன்னேண்டி அத்தை
      . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . 35

நங்குபண் ணாதடி
      நாயைப்போல் குலைக்காதடி
      நம்மடி பொல்லாதஅடி
      நாட்டுப் புறத்தடி. 36

உன்னையும் உன்பிள்ளையையும்
      ஒருதூணி லேகட்டி
      உலக்கையால் இடிச்சிடுவேன்
      தெரியு மாடி? 37

என்னைநீ யாருண்ணு
      நினைச்சுக்கிட் டிருக்கிறே
      எட்டிஉதைப் பேண்டிஅத்தை
கடலு நத்தை. 38

தேவடியா கிழச்சிறுக்கி
      தேம்பிஏண்டி அழுகிறே
      மாவிடிக் கிறாயாஇல்லையா
      நான்தாண்டி இப்போமாமியா. 39

செக்குஇனிச் செல்லாதடி
      பக்குவமாப் பிழைச்சுக்கோடி
      மொச்சைக்கொட்டை வாங்கித்
      தாரேண்டி கொரிச்சுக்கோடி. 40

மூலையிலே உட்காரடி
      முக்காட்டைப் போட்டுக்கோடி
      பல்லில்லாத கிழடி
      பட்டாணி வேணுமாடி? 41

ஓட்டைப்பாய் தாரேண்டி
உட்காருடி உன்பாட்டிலே
      பொத்தல் தலைகாணி
      தாரேண்டி பொறுத்துக்கோடி? 42

மாமியாள் : கட்டையடிதின்னக் காலமாச்சு - இந்தக்
      குட்டைச்சிறுக்கிக்குக் கேலியாச்சு
      மட்டிச்சிறுக்கியால் மானம்போச்சு - இந்தப்
      பட்டிப்பொறுக்கியால் பங்கமாச்சு. 43

தட்டுவாணிபிள்ளைக்குத் தங்கமாச்சு
      ஊருசிரிக்கவும் காலமாச்சு - எங்கள்
      பேருபறக்கவு நேரமாச்சு
      வம்சத்தில்இல்லாத இக்குரங்கு - எங்களை
      இம்சைப்படுத்துறா செங்குரங்கு. 44

மருமகள் : குரங்குகுரங்குண்ணு சொன்னியின்னால் - உன்
      கோடாலிக்கொண்டையை அறுத்திடுவேன்
      கேலிபண்ணாதடி கிழக்குரங்கே - உன்
      சோலியைப்பாரடி மடக்குரங்கே. 45

மாமியாகொடுமைக்கு ஏத்தாப்போல - இந்த
      மருமகஇருப்பாண்ணு நினைச்சியாடி?
      . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 46

மாமியாஉடைச்சுட்டால் மண்சட்டியாம் - ஆனால்
      மருமகள் உடைச்சுட்டால்
பொன்சட்டியாம்
      அடக்குடிஅம்மாஉன் ஆங்காரத்தை - இனி
      இடிப்பேண்டிஉன்னைஎன்
      இஷ்டம்போலே. 47

பல்லும்இல்லைஉனக்குச்
சொல்லும்இல்லை - இப்போ
      பாசாங்குபண்ணினால் மோசம்போவாய்
      நாட்டியக்குதிரைபோல் ஆடாதேடி - நான்
      நாட்டுத்தட்டுண்ணு தெரியுமாடி? 48

மாமியாள் : தாயேஎன்தங்கமே தயவுசெய்துஎன்னைப்
      பேயைப்போல்ஆட்டாதே பொன்மணியே
      சொன்னசொல் லெல்லாம்நான் கேட்கிறேண்டி
      சொர்க்கலோ கம்போய்ச் சேருமட்டும். 49

கண்ணேஉன்னைஇனித் திட்டமாட்டேன்
      என்னையும் நீஇனித் திட்டிடாதே
      . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 50

மழையைநம்பி ஏலேலோ
      மண்இருக்க ஐலசா
      மண்ணைநம்பி ஏலேலோ
      மரம்இருக்க ஐலசா. 51

மரத்தைநம்பி ஏலேலோ
      கிளைஇருக்க ஐலசா
      கிளையைநம்பி ஏலேலோ
      இலைஇருக்க ஐலசா. 52

இலையைநம்பி ஏலேலோ
      பூவிருக்க ஐலசா
      பூவைநம்பி ஏலேலோ
      பிஞ்சிருக்க ஐலசா. 53

பிஞ்சைநம்பி ஏலேலோ
      காயிருக்க ஐலசா
      காயைநம்பி ஏலேலோ
      பழம்இருக்க ஐலசா. 54

பழத்தைநம்பி ஏலேலோ என்
      மகன்இருக்க ஐலசா
      மகனைநம்பி ஏலேலோ
      நீஇருக்க ஐலசா. 55

உன்னைநம்பி ஏலேலோ
      நான்இருக்க ஐலசா
      என்னைநம்பி ஏலேலோ
      எமன்இருக்க ஐலசா. 56

எமனைநம்பி ஏலேலோ
      காடிருக்க ஐலசா
காட்டைநம்பி ஏலேலோ
      புல்லிருக்க ஐலசா. 57

மருமகள் : அளுகாதே அத்தைஇனி
      ஆதரிப்பேன் உன்னைநான்
      . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . 58

கண்மணி போலேஇனிக்
      காத்து வருவேன்நான்
      பொன்மணி போலேஉன்னைப்
      போற்றி வருவேன்நான். 59

மகளுன்னு என்னைநினைச்சால்
      மகராசியா இருப்பாய்
      மாதாண்ணு நான்நினைச்சு
      மரியாதையாய் இருப்பேன். 60

வேலைஒண்ணும் செய்யாதே
      வெட்டிஒண்ணும் செய்யாதே
      காலையிலே எழுந்திருச்சு
      வேலையெல்லாம் செய்வேன்நானே. 61

வெள்ளிக்கிழமை குளிக்க
      வெந்நீர்த்தண்ணி யுங்கொடுப்பேன்
      வியாழக் கிழமையிலே
      வெற்றிலைமடித்துக் கொடுப்பேன். 62

செல்லப் பிள்ளையைப்போலே
      செழிப்பாக நீஇருப்பாய்
      இல்லேண்ணு சொல்லமாட்டேன்
      இனிப்பாநீ கேட்கிறதை. 63

எள்ளுக்குள்ளே இருக்கும்
      எண்ணெயைப் போலேநாம்
      எந்நாளு மேஇணை
பிரியாமே இருப்போமே. 64
------------


<
8. தாலாட்டு


ஆர் அடித்தார்?

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ. 1

ஆரடித்தார் நீஅழுக கண்ணேஉன்னை
      அடித்தவரைச் சொல்லிஅழு.

மாமன்உன்னை அடித்தாரோ - கண்ணேஉன்னை
      மல்லிகைப்பூச் செண்டாலே?

விம்மிவிம்மி அழுகாதே - கண்ணேநீ
      வீமனுடை மருமகளே.

பாட்டிஉன்னை அடித்தாளோ - கண்ணேஉனக்குப்
      பால்ஊற்றும் கையாலே? 5

நீட்டிஉன்னை அடித்தாளோ - கண்ணேஉனக்கு
      நெய்ஊற்றும் கையாலே?

நல்லம்மான் கொல்லையிலே - கண்ணேஉன்
      புள்ளிமான் மேயுதம்மா.

புள்ளிமானைப் பிடித்துக்கட்டக் - கண்ணேஉனக்குப்
      பிடிகயிறும் பொன்னாலே.

தூங்காதே கண்ணுக்குக் - கண்ணேஉனக்குத்
      தூங்குமஞ்சம் தான்இருக்கு.

ஓங்காத கண்ணுக்குக் - கண்ணேஉனக்கு
      ஊஞ்சல்கூடத் தான்இருக்கு. 10

அக்காள் அடித்தாளோ - கண்ணேஉன்
      அருமையான கன்னத்திலே?

மச்சான் அடித்தானோ - கண்ணேஉன்
      மஞ்சள்தேய்த்த கன்னத்திலே?

அண்ணன்உன்னை அடித்தானோ - கண்ணேநீ
      அழுகிறதைப் பார்ப்பதற்கு?

ஆத்தாள்உன்னை அடித்தாளோ - கண்ணேஉன்
      அழகான கன்னத்திலே?

நேத்தெல்லாம்நீ எங்கேபோனாய் - கண்ணேநீ
      நெல்வயலைப் பார்த்தையாடி? 15

காத்திருந்தான் காவல்காரன் - கண்ணேநீ
      கண்டையாடி பொன்கண்ணாலே

களமெல்லாம் கதிர்இருக்கு - கண்ணேநம்
      காளியம்மா காவல்காப்பாள்.

மூட்டைப்பூச்சி கடிச்சிருச்சோ - கண்ணேஉன்
      மேனியெல்லாம் நடுநடுங்க?

தெள்ளுப்பூச்சி கடிச்சிருச்சோ - கண்ணேஉன்
      தேகம்எல்லாம் நடுநடுங்க?

மெத்தைமேலே தொட்டிலிலே - என்கண்ணே
      மெதுவாகப் படுத்தஉன்னைப் 20

பூவிரித்த தொட்டிலிலே - கண்ணேஉன்னைப்
      பூச்சிவந்து கடிச்சிருச்சோ?

குடைக்குங்கீழே படுத்தஉன்னைக் - கண்ணே
      கொசுகுவந்து கடிச்சிருச்சோ?

பஞ்சணைமேல் படுத்தஉன்னைக் கண்ணே
      பல்லிபய முறுத்திருச்சோ?

பச்சைக்கிளி பட்டுக்கிளி - கண்ணேநீ
      பயப்படாதே பல்லிக்கெல்லாம்.

பஞ்சவர்ணப் பட்டுக்கிளி - கண்ணேநீ
      படுத்துத்தூங்கு பயமில்லாமே. 25

அட்டை கடிச்சிருச்சோ - கண்ணேநீ
      அசந்துநல்லாத் தூங்கையிலே?

தாதிப்பெண்ணு கூடிவரக் - கண்ணேநீ
      தங்கஊஞ்சல் ஆடிவர

நாலுமணி நேரத்திலே - கண்ணேஉன்னை
      நாகராசன் காவல்காப்பான்.

அஞ்சாதே கலங்காதே - கண்ணேஉன்னை
      அரண்மனையே காவல்காக்கும்.

பஞ்சுமெத்தை பட்டுமெத்தை கண்ணேஉனக்கு
      பரமசிவன் கொடுத்தமெத்தை. 30

மாமனார் கொடுத்தமெத்தை - கண்ணேஉனக்கு
      மல்லிகைப்பூச் செண்டுமெத்தை.

அக்கா கொடுத்தமெத்தை - கண்ணேஉனக்கு
      அழகான தங்கமெத்தை.

மேலு வலிக்காமே - கண்ணேநீ
      மெத்தைமேலே படுத்துறங்கு. 33
--------------------------

மீன் பாட்டு

அயலூர்க் குளத்திலேதான் - கண்ணே
      அயிரைமீனு ஆயிரமாம்.

அயிரைமீன் பிடிக்கப்போய் - கண்ணேஉன்
      அப்பன்இப்போ வந்திட்டாரே

அயிரைமீனும் ஆரல்மீனும் - கண்ணே
      அம்புட்டுதாம் அப்பனுக்கு.

வாளைமீனும் வழலைமீனும் - கண்ணடி
      விதவிதமா அம்புட்டுச்சாம்.

அரண்மனைக்கு ஆயிரமாம் - கண்ணேஉன்
      அப்பனுக்கு ஆயிரமாம். 5

ஆயிரமும் கொண்டுபோய்க் - கண்ணடி
      அப்பன்விற்று வீடுவர

அண்டைவீடும் அடுத்தவீடும் - கண்ணடி
      ஆச்சரியப் பட்டார்களாம்.

கெண்டைமீனும் கெளுத்திமீனும் - கண்ணடி
      குரவைமீனும் பரவைமீனும்

எல்லாமீனும் ஏழாயிரம் - கண்ணேநான்
      ஆயிரத்தைப் பிரித்துவச்சேன்

பிரித்தமீனு ஆயிரத்திலே - கண்ணேநான்
      பிரியமாக ஆறெடுத்தேன். 10

அயலூரு சந்தையிலே - கண்ணேநான்
      ஆறுமீனை விற்றுப்போட்டேன்.

அரைச்சவரன் கொண்டுபோய்க் - கண்ணேஅதை
      அரைமூடியாச் செய்யச்சொன்னேன்.

அரைமூடியைஉன் அரைக்குப்போட்டுக் - கண்ணேநான்
      அழகுபார்த்தேன் ஆலத்தியிட்டு.

அத்தைமாரும் அண்ணிமாரும் - கண்ணே உன்
      அழகைப்பார்த்து அரண்டார்களே

அரண்மனையார் ஓடிவந்து - கண்ணேஉன்னை
      அதிசயமாப் பார்த்தார்களே. 15

ஆராய்ச்சி மணியடித்து - கண்ணேஉன்னை
      அயலூராரே பார்த்தார்களே.
________

கோயில்

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ.

ஆடிருக்கு மாடிருக்கு - கண்ணேஉனக்கு
      அழகான வீடிருக்கு.

அத்தையம்மாள் வீட்டிலேதான் - கண்ணேஉனக்கு
      ஆளியனும் தான்இருக்கான்.

ஆலம் விழுதுபோல - கண்ணேநீ
      அழகான மயிரழகி.

சுப்ரமண்யர் கோயிலிலே - கண்ணே
      சொகுசான தேரிருக்கு. 5

மோளங்களும் தாளங்களும்
      முழங்குதடி கோயிலிலே.

ஆண்பிள்ளையும் பெண்பிள்ளையும் - கண்ணேஅங்கே
      ஆடுறாங்க பாடுறாங்க.

தாசிகளும் வேசிகளும் - கண்ணேஅங்கே
      தாளம்போட்டு ஆடுறாங்க.

பறத்தெரு வீதியிலே - கண்ணேஅங்கே
      பறச்சிகூடி நிற்கையிலே.

இடைத்தெரு வீதியிலே - கண்ணேஅங்கே
      இடைச்சிகூடி நிற்கையிலே. 10

வலைத்தெரு வீதியிலே - கண்ணேஅங்கே
      வலைச்சிகூடி நிற்கையிலே.

ஊர்கோலம் வாறாராம் - கண்ணே
      உசத்தியான சுப்பிரமண்யம்.

பாவிகளும் கோவிகளும் - கண்ணே
      பறந்தடிச்சு ஓடிவராங்க.

கள்ளன்களும் பள்ளன்களும் - கண்ணே
      கலந்தடிச்சு ஓடிவராங்க.

கடலவலைக் கலந்துக்கிட்டு - கண்ணே
      கடவுளுக்குக் கொடுக்கிறாங்க. 15

கண்மணியே பொன்மணியே - கண்ணேநீ
      கண்டையாடி காட்சியெல்லாம்?

பூஇறைச்சான் பூசாரி - கண்ணேநம்
      பூமிக்கெல்லாம் மழைபெய்ய.

நெய்விளக்கு ஏத்திவச்சான் - கண்ணே
      நிறையநம்ம நிலம்விளைய.
--------------

தந்தையின் பயணம்

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ.

சட்டைமேலே சட்டைபோட்டு - உங்கப்பன்
      சரிகைச்சட்டை மேலேபோட்டுத்

தலைச்சவரம் பண்ணிக்கிட்டு - உங்கப்பன்
      தலைப்பாவும் வச்சுக்கிட்டு

நெல்லிக்குப்பம் போறத்துக்கு - உங்கப்பன்
      நெற்றியிலே பொட்டுவச்சு

புதுக்கோட்டை போறதுக்கு - உங்கப்பன்
      புருவமெல்லாம் மைஎழுதி 5

கோயம்புத்தூர் போறதுக்கு - உங்கப்பன்
      குடைகையி லேபிடித்து

பாதம்ரெண்டும் நோகாமே - உங்கப்பன்
      பாதக்குறடும் போட்டுக்கிட்டு

வண்டேவர் ணக்குயிலே - உங்கப்பன்
      வாராரு வழியனுப்ப.

வண்டிமாடு கட்டிஇப்போ - உங்கப்பன்
      வாராரு வழியனுப்ப.

சாரட்டு வண்டிகட்டி - உங்கப்பன்
      சலங்கைபோட்ட மாடுகட்டி 10

சாதிப் பிராமணன்போல் - உங்கப்பன்
      சல்லாபமா உட்கார்ந்து

கோயம்புத்தூர் போறாரு - உங்கப்பன்
      கோழிகூப்பிடும் நேரத்திலே.

பகையாளி பதுங்கிநிற்க - உங்கப்பன்
      பார்க்காமல் போகையிலே

பறந்துபாய்ந்தான் பகையாளி - உங்கப்பன்
      பம்மினாரு பயமில்லாமே.

பட்டாக்கத்தி வீசையிலே கண்ணேஅவன்
      பஸ்பமானான் பகையாளி. 15

மாடுரெண்டும் மிரண்டோட - உங்கப்பன்
      மதயானைபோல் பின்ஓடி

மடக்கினாரு மாடுகளைக் - கண்ணே அவர்
      மத்தியான வேளையிலே.
_______

வேட்டை

அடுப்புமூட்டி ஆணங்காய்ச்சிக் கண்ணேநீ
      அசந்துநல்லாத் தூங்கையிலே

ஆரடித்தார் நீஅழுக - கண்ணேநீ
      அப்பன்கிட்டே சொல்லிவிடு

கானலிலே நாணற்புல் - கண்ணேஅந்தக்
      கலைமான் ஒதுங்கும்புல்

பளப்பளப்பாப் பச்சைப்புல் - கண்ணேநம்
      பசுமாடெல்லாம் தின்னும்புல்

கருகருன்னு வளரும்புல் - கண்ணேநம்
      காளைமாடு தின்னும்புல் 5

பசுங்கிளியே பாத்தையாடி - கண்ணேநம்
      பரமசிவன் படுத்தபுல்லு?

கரடிபுலி ஆனைசிங்கம் - கண்ணேநீ
      கண்டையாடி கானலிலே?

காட்டுமாடும் கேளையாடும் - கண்ணேநீ
      காராம்பசுவும் கண்டையாடி?

தேனேஎன் திரவியமே - கண்ணேநீ
      தெவிட்டாத செங்கரும்பே

மானே மரகதமே - கண்ணேநீ
      மகராசன் மருமகளே. 10

வில்லுகொண்டு வேட்டைக்குப்போய்க் - கண்ணேஅந்த
      வேடரெல்லாம் வெலவெலக்க

ஈட்டிகொண்டு காட்டுக்குப்போய் - மகாராசா
      மாட்டினாராம் எட்டுப்புலி.

மானுமரை தான்நடுங்க - மகாராசா
      மந்திரவாள் சுற்றிட்டாராம்.

சிறுபுலியும் கரும்புலியும் - மகாராசா
      சின்னபின்னம் செஞ்சுட்டாராம்.

முள்ளம்பன்றி குள்ளம்பன்றி - கண்ணே
      முணுமுணுத்த முரட்டுப்பன்றி 15

காட்டுப்பன்றி மேட்டுப்பன்றி - மகாராசாவைக்
      கண்டோடிச்சாம் கானலிலே.
_______

அறுவடை

ஆராரோ ஆரிரரோ - கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ.

கரிசல்காட்டுப் புழுதியிலே - கண்ணேநான்
      கதிரறுக்கப் போகையிலே

கஞ்சிக் கலயங்கொண்டு - கண்ணேநான்
      களத்துக்கிட்டப் போகையிலே

அரிவாளைத்தான் இடுப்பில்வைச்சு - கண்ணேநான்
      ஆடிப்பாடிப் போகையிலே

வெற்றிலையும் போட்டுக்கையைக் - கண்ணேநான்
      வீசிவீசிப் போகையிலே 5

சுருக்குப்பையைச் சொருகிக்கிட்டுக் - கண்ணேநான்
      சுற்றிமுற்றிப் பார்க்கையிலே

சாமைக்கதிர் அறுக்கையிலே - கண்ணேநல்ல
      சாரல்மழை பெய்ததடி.

கம்பங்கதிர் அறுக்கையிலே - கண்ணேநல்ல
      கனத்தமழை பெய்ததடி.

நெல்லுக்கதிர் அறுக்கையிலே - கண்ணே அங்கே
      நல்லமழை பெய்ததடி.

சோளக்கதிர் அறுக்கையிலே - கண்ணேஅங்கே
      சோனைமாரி பெய்ததடி. 10

கதிரெல்லாம் கட்டுக்கட்டாக் - கண்ணேநான்
      கட்டிவச்சேன் கைவலிக்க.

நாலாயிரம் சனத்தோடே - கண்ணேஅங்கே
      நானும்போனேன் நாற்றுநட.

ஆளுக்கு நாலாயிரம் - கண்ணேநான்
      அடுக்கிவச்சேன் அலங்கியைப்போல்.

குவித்துவச்ச நாற்றெல்லாம் - கண்ணேஆள்
      கும்பலிலே பறந்திருச்சு.

பாத்திகட்டி நாற்றுநட்டேன் - கண்ணேநான்
      பரமசிவன் தயவாலே. 15

பூமாதேவி தயவாலே - கண்ணேநம்
      பூமியெல்லாம் விளைஞ்சிருச்சு.

சோழவந்தான் காளைசோடி - கண்ணேஇன்னம்
      பாளையங்கோட்டைக் காளைசோடி

நெல்லூரு நெட்டைச்சோடி - கண்ணேஇன்னம்
      கடலூரு கட்டைச்சோடி

சமுத்தூரு காளைகூடக் - கண்ணேஅங்கே
      சூட்டிக்கையாச் சூடடிக்கும்.

வட்டமாத்தான் வருகுதம்மா - கண்ணேஅந்த
      வடிவழகுக் காளையெல்லாம். 20

வருகுதம்மா ஒண்ணொண்ணாய்க் - கண்ணேஅந்த
      வளத்தியான காளையெல்லாம்.

குடுகுடுன்னு வருகுதம்மா - கண்ணேஅந்தக்
      குட்டையான காளையெல்லாம்.

கொஞ்சணுமோ அம்மாஉன்னைக் - கண்ணேநீ
      பஞ்சவர்ணக் கிளிதானோ?

ரத்தினமே பத்தினியே - கண்ணேநீ
      பத்தியான ரதிதானோ? 30
__________

உபதேசம்

மார்கழி மாசத்திலேதான் - கண்ணேநீ
      மகாராசாவைப் பாக்கையிலே

தைப்பொங்கலு காலத்திலே - கண்ணேநீ
      தயிருஞ்சோறும் தின்கையிலே

மாசிமாசக் கடைசியிலே - கண்ணேநீ
      மாமன்வீடு போகையிலே

பங்குனி மாசத்திலே - கண்ணேநீ
      பங்குச்சொத்தை வாங்கையிலே

சித்திரைமாசத் துவக்கத்திலே - கண்ணேநீ
      சீர்வரிசை வாங்கையிலே 5

வைகாசி மாசத்திலே - கண்ணேநீ
      வயலைச்சுற்றிப் பார்க்கையிலே

ஆனிமாசக் கடைசியிலே - கண்ணேநீ
      அண்ணன்வீடு போகையிலே

ஆடிமாசம் முடியுமுன்னே - கண்ணேநீ
      அடியெடுத்து வைக்கையிலே

அகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணேநீ
      அரண்மனைக்குப் போகையிலே

பெரட்டாசி மாசத்திலே - கண்ணேநீ
      பேறுகாலத்துப் போகையிலே 10

ஐப்பசி மாசமெல்லாம் - கண்ணேநீ
      அப்பன்வீடு தங்கையிலே

கார்த்திகை மாசத்திலும் - கண்ணேநீ
      கடவுளுக்குக் கையெடடி.

திங்கட் கிழமையிலேதான் - கண்ணேநீ
      தேர்பார்க்கப் போகையிலும்

செவ்வாய்க் கிழமையிலேதான் - கண்ணேநீ
      செவந்திப்பூ வைக்கையிலும்

புதன்கிழமை விதம்விதமாக் - கண்ணேநீ
      பூந்திலட்டுத் தின்கையிலும் 15

வியாழனெல்லாம் வெளியேறாமே - கண்ணேநீ
      வீட்டுக்குள்ளே இருக்கையிலும்

வெள்ளியிலே விளக்கேற்றிக் - கண்ணேநீ
      வீணைச்சுதி ஏற்றையிலும்

சனிக்கிழமை பணத்தைஎண்ணிக் - கண்ணேநீ
      சந்தோசமா இருக்கையிலும்

ஞாயிற்றுக் கிழமையிலும் - கண்ணேநீ
      ஞாயவழி நடந்துபோடி.
-------------

கதம்பம்

மாங்காய் எறிந்தகம்பு - கண்ணே
      மண்டபமே போய்விழுகும்.

தேங்காய் எறிந்தகம்பைக் - கண்ணேநீ
      தள்ளிநட கொண்டாரேன்.

பச்சை இலுப்பைவெட்டிக் - கண்ணே
      பால்வடியத் தொட்டில்கட்டித்

தொட்டிலுக்கும் கீழிருக்கும் - கண்ணே
      துணையிருக்கும் சம்மனசு.

கோபாலனைக் கூப்பிடுங்கள் - கண்ணே
      கோபாலுக்கு மாலையிட. 5

சங்குபோ லேமின்னிக் - கண்ணே
      சமுத்திரம்போல் காலூணி

முத்திடிச்சு மாக்கொழித்துக் - கண்ணே
      முற்றமெல்லாம் கோலமிட்டுப்

பச்சைமூங்கில் லட்சம்வெட்டிக் - கண்ணே
      பலமுள்ள மூங்கில்நட்டு

முந்நூறு மூங்கில்வெட்டிக் - கண்ணே
      முதல்மூங்கில் தான்எடுத்து

நானூறு மூங்கில்வெட்டிக் - கண்ணே
      நல்லமூங்கில் தான்எடுத்து 10

ஐந்நூறு மூங்கில்வெட்டிக் - கண்ணே
      அந்தமூங்கில் தான்எடுத்து

கோம்பையிலே கூடாரம் - உன்மாமன்
      கொத்துமல்லி யாவாரம்
-------
12. யாவாரம் - வியாபாரம்.

கொத்துமல்லி விற்றவுடன் - கண்ணே
      குவளைசெஞ்சு வருவாரு.

மதுரையிலே கூடாரம் - உன்மாமன்
      மல்லிகைப்பூ யாவாரம்

மல்லிகைப்பூ விற்றவுடன் - உன்மாமன்
      மாலைசெஞ்சு வருவாரு. 15

வைகை பெருகிவரநீ - கண்ணே
      வாளைமீன் துள்ளிவரத்

துள்ளிவந்த மீனுக்கெல்லாம் - உங்கப்பன்
      தூண்டிவளை போட்டாரு.

பச்சைமூங் கில்வெட்டிக் - கண்ணே
      பசுமூங்கில் நாருரிச்சுக்

காட்டுக் கரும்பே - கண்ணே
      கணுவில்லாச் செங்கரும்பே

வேலிக் கரும்பே - கண்ணே
      விலையில்லா மாணிக்கமே 20

சாய்ந்துகணக் கெழுதுவார் - கண்ணே
      சமத்துள்ள உன்தகப்பன்.

குந்திக் கணக்கெழுதும் - கண்ணே
      கோபாலனோ உன்மாமன்?

வாழைவச்சேன் கரும்புவச்சேன் - கண்ணே
      வாழைக்குள்ளே தேனைவச்சேன்.

தேன்எடுக்கப் போகையிலே - கண்ணே
      தேனீவந்து கொட்டிருச்சு.

மூணுதட்டுக் கறியெடுத்துக் - கண்ணே
      முட்டியிலே ஆணங்காச்சி 25

எலும்பு விழுகலேண்ணு - கண்ணே
      எட்டி உதைக்கிறையோ?

குழம்புனக்குப் பத்தலேண்ணு - கண்ணே
      கோவங்கூட வந்திடுமா?
________

மாமன் பரிசு

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ.

      கொத்துமல்லி யாவாரம்.

கொத்துமல்லி விற்றவுடன் - உங்கமாமா
      கொலுசுபண்ணிக் கொண்டாருவார்.

_______

நோயும் மருந்தும்

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ.

இருமக்கூடச் சத்தில்லையோ - கண்மணியே
      இடிஇடித்த சத்தத்திலே?

சாரல்மழை பெய்யுதம்மா - கண்மணியே
      சனங்களெல்லாம் ஓடுதம்மா.

நெஞ்சுச்சளி பிடிச்சுக்கிட்டுக் - கண்ணேஉனக்கு
      நிற்கக்கூடச் சத்தில்லையோ?

மண்டையிடி பொறுக்கலையோ - கண்ணேஉனக்கு
      மருந்துரைத்துப் போடட்டுமா? 5

கோரோசனை கொடுக்கட்டுமா - கண்ணேஉனக்குக்
      குருமாத்திரை கொடுக்கட்டுமா?

உடம்பெல்லாம் நோகுதம்மா - கண்ணே உனக்கு
      ஒத்தடம்நான் கொடுக்கட்டுமா?

ஏலமும் இஞ்சிச்சாறும் - கண்ணே உனக்கு
      எட்டுச்சொட்டுக் கொடுக்கட்டுமா?

மண்டையிடித் தைலங்கூடக் - கண்ணே உனக்கு
      மாமன்வாங்கி வாராரு.

தொந்தரவு செய்யாமேநீ - கண்மணியே
      தொட்டியிலே தூங்கிடம்மா. 10

மயங்காதே கலங்காதே - கண்ணேஉனக்கு
      மாரியாத்தாள் சுகங்கொடுப்பாள்

கைகாலு வீக்கத்துக்கு - கண்ணேஉனக்குக்
      கணைஎண்ணெய் வாங்கித்தாரேன்.

மலைபோல வந்தாலும் - கண்மணியே
      பனிபோல விலகிடும்மா.

அம்மாவாசி போயிடுச்சுக் - கண்ணேநீ
      அஞ்சவேண்டாம் ஒண்ணுக்குமே.

ஆயாசமா இருக்குதம்மா - கண்ணே காளி
      யம்மா உன்னைக் காப்பாளம்மா. 15

பழனியாண்டவன் கோயிலுக்குக் - கண்ணேநாம்
      பங்குனிமாசம் போகலாமே.

நேத்திக்கடன் முடியெடுப்பைக் - கண்ணேநாம்
      நிறைவேற்றி வரலாமம்மா.

வயிற்றுளைச்சல் மிஞ்சிப்போய்க் - கண்ணேஉனக்கு
      வயிற்றுவலி வந்திருச்சா?

வெற்றிலையும் உப்பும்வச்சுக் - கண்மணியே
      வெறும்வயிற்றில் தின்னுடம்மா.

குடலேற்றம் என்றிட்டாலும் - கண்ணேகறுப்பி
      குடல்தட்டுவாள் பயப்படாதே. 20


ஆராரோ ஆராரோ கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ.

கண்ணே நவமணியே - கண்ணேநீ
      கானலிலே பிறந்தாயோ?

என்னநான் சொல்வேனோ - கண்ணேநீ
      இந்திரனோ சொல்லிவிடு?

கொட்டிவைத்த முத்தே - கண்ணேநீ
      குவித்திவைத்த ரத்தினமே

கட்டிப் பசும்பொன்னே - கண்ணேநீ
      கட்டிமுத்தம் கொடுப்பாயே. 5

சிரியம்மா சிரிச்சிரு - கண்ணேநீ
      சித்திரப்பூந் தொட்டியிலே.

கரும்புரசமே - கண்ணேநீ
      கசக்காத கல்கண்டே

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
      ஆறுமுகன் பிறந்தானோ?

மாத்துயர்ந்த பொன்னே - கண்ணேநீ
      மண்டலத்து ராசாவோ?

பூத்த புதுப்பூவே - கண்ணேஉன்
      பொக்கிசத்தைப் பார்த்தாயோ? 10

மானே மருக்கொழுந்தே - கண்ணேநீ
      மலர்விரிந்த மல்லிகைப்பூ

காட்டுக் குயிலே - கண்ணேநீ
      கண்டெடுத்த பாட்டுக்குயில்.

புள்ளைக்கலி தீர்க்கவந்த - கண்ணேஎன்
      பொன்மானே தூங்கம்மா.

மாயன் மகளுக்குக் - கண்ணேநீ
      மாப்பிள்ளையாய் வந்தவனோ?

தாய்சொல்லைத் தட்டாதே - கண்ணேநீ
      தகப்பன் சொல்லைத் தவறாதே. 15

சீதைக்கு அதிபதியோ - கண்ணேநீ
      சிலையேந்தும் ரகுபதியோ?

ஒருமாங்கனிக்குக் - கண்ணேநீ
      உலகமெல்லாம் சுற்றினையோ?

பெருமாள் மருமகனோ - கண்ணேநீ
      பெண்ரதிக்கு மாப்பிள்ளையோ?

கருப்புச் சிலையானோ - கண்ணேநீ
      கன்னிவள்ளி நாயகனோ?

பரமசிவ னைஅடித்த - கண்ணேநீ
      பாண்டியன் நீதானோ? 20

ஆரடித்து நீஅழுதாய் - கண்ணேநீ
      அழுதகண்ணீர் வடிகிறதே.

பேரைநீ சொல்லிவிடு - கண்ணே அவனைப்
      பெருவிலங்கு போட்டிடுவேன்.

அத்தைஅடித்தாளோ - கண்ணேநீ
      அழுதகண்ணைத் துடைத்தாளோ?

கொஞ்சம் பொறுத்துக்கொள் - கண்ணேநான்
      சந்திரனைக் கூப்பிடுறேன்.

பாட்டி அடித்தாளோ - கண்ணேஉனக்குப்
      பால்ஊற்றும் கையாலே! 25

கூப்பிட்டுநான் கேக்கட்டா - கண்ணேநான்
      கொஞ்சம்அவளைப் பார்க்கட்டா?

மாமி அடித்தாளோ - கண்ணேஉனக்கு
      மைவைக்கும் கையாலே?

தம்பி அடித்தானோ - கண்ணேஉனக்குத்
      தயிர்ஊற்றும் கையாலே?

அக்காள் அடித்தாளோ? - கண்ணேஉன்
      அம்மான்மார் வைதார்களோ?

வீம்புக்கு ஏன்தேம்புறாய் - கண்ணேநீ
      வீணாக ஏன்தேம்புறாய்? 30

பெரியம்மா அடித்தாளோ - கண்ணேஉன்னைப்
      பெற்றவள்தான் அடித்தாளோ?

அறியாமே செய்தாலும் - கண்ணேநீ
      ஆர்கிட்டேயும் சொல்லாதே.

தொட்டிக்குள்ளே துள்ளித்துள்ளிக் - கண்ணேஎன்
      துரையேநீ தூங்கிடம்மா.

ஆலம் பூப்போலே - கண்ணேநீ
      அத்திமரப் பூப்போலே

தேம்பி அழுகாதே - கண்ணேஎன்னைத்
      திட்டிக்கிட்டு இருக்காதே. 35

வாடாத பூவே - கண்ணேநீ
      வானத்திலே தாராவோ?

தேடாத திரவியமோ - கண்ணேநீ
      தெவிட்டாத தெளிதோனோ?

கோட்டை அதிகாரி - கண்ணேஉன்
      கொடிபறக்கு தாகாசம்.

கேட்டதெல்லாம் நான்தருவேன் - கண்ணேநீ
      கெஞ்சாமே கொஞ்சிக்கேளு.

ஆனைவிற்கும் வர்த்தகனாம் - உன்மாமன்
      சேனைக்கெல்லாம் அதிகாரியாம். 40

சின்னண்ணன் வந்தானோ - கண்ணேஉனக்குச்
      சின்னச்சட்டை கொடுத்தானோ?

பட்டுஜவுளிகளும் - கண்ணேஉனக்குப்
      பலவர்ணச் சட்டைகளும்

பட்டுப்புடவைகளும் - கண்ணேஉனக்குக்
      கட்டிக்கிடக் கொடுத்தானோ?

பொன்னால் எழுத்தாணியும் - கண்ணேஉனக்கு
      மின்னோலைப் புஸ்தகமும்.

கன்னாரே பின்னாரெண்ணு - கண்ணே
      கவிகளையும் கொடுத்தானோ? 45

சின்னஞ்சிறு விரலுக்குக் - கண்ணே
      சிறப்பான மோதிரமும்

தன்னந் தனியாவந்து
      தந்தானோ சின்னண்ணன்?

வஞ்சிமார் கையேந்திக் - கண்ணே
      வகைவகையாய்த் தாலாட்டிக்

கொஞ்சி முலைகொடுப்பார் - கண்ணேநீ
      கோணாமல் குடிச்சுக்கம்மா.

வட்டக் கலசத்திலே - கண்ணேநீ
      வாய்நிரம்பப் பால்குடிச்சு 50

வாகான தொட்டியிலே - கண்ணேநீ
      வச்சிரம்போல் தூங்கிடம்மா.

_________

ஆற்று வருணணை

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ.

ஆறோடுதாம் ஆறோடுதாம் - கண்ணேநம்
      அல்லிமுடி போல்சுருண்டு.

விடியற்கால நேரத்திலே - கண்ணேநம்
      வீமன்முடி போல்சுருண்டு.

கஞ்சிப்பொழுது நேரத்திலே - கண்ணேநம்
      காளிமுடி போல்சுருண்டு.

மத்தியான நேரத்திலே - கண்ணேநம்
      மாரிமுடி போல்சுருண்டு. 5

பொழுதுசாயும் நேரத்திலே - கண்ணேநம்
      பொம்மிமுடி போல்சுருண்டு

மாடடையும் நேரத்திலே - கண்ணேநம்
      மதனன்முடி போல்சுருண்டு.

விளக்குவைக்கும் நேரத்திலே - கண்ணேநம்
      வீரிமுடி போல்சுருண்டு.

ராப்பொழுது நேரத்திலே - கண்ணேகெட்ட
      ராக்கச்சிசடை போல்சுருண்டு.

நடுச்சாம நேரத்திலே - கண்ணேநம்
      நளன்முடிபோ லேசுருண்டு. 10

குருவிகத்தும் நேரத்திலே - கண்ணேநம்
      குப்பிமுடி போல்சுருண்டு.

விடிவெள்ளி நேரத்திலே - கண்ணேநம்
      விக்ரமாதித் தன்முடிபோல்.

நெளிநெளியா ஓடுதம்மா - கண்ணேஅந்த
      நீலவர்ணத் தண்ணீரெல்லாம்.

சுளிசுளியா ஓடுதம்மா - கண்ணேஅந்தச்
      சுத்தமான ஆற்றுத்தண்ணீர்.

புரட்டாசி மாசத்திலே - கண்ணேரெம்பப்
      புரண்டோடுதாம் மழைத்தண்ணீரும். 15

ஆற்றிலிறங்க முடியாதே - கண்ணேஅந்த
      அடைமழைக் காலத்திலே.

அழகான பாலம்ஒண்ணு - கண்ணேநம்
      ஆற்றுமேலே இருக்குதம்மா.

ஆடுகளும் மாடுகளும் - கண்ணேஉன்
      அம்மான்வீட்டுப் பிள்ளைகளும்

வரிசைவரிசையா வருகுதம்மா - கண்ணேநல்ல
      வர்ணம்போட்ட வண்டிகளும்.

பாலத்திலே பலவிதமாம் - கண்ணேநீ
      பயப்படாதே பார்த்தாலும். 20

கால்வாயிலே கனதண்ணின்னா - கண்ணேஅதைக்
      கடக்கரெண்டு கம்புபோதும்.

ஓடையிலே கனதண்ணின்னா - கண்ணேஅதுக்கு
      உத்தரம்ஒண்ணு ரெண்டுபோதும்.

சின்னஆற்றைக் கடக்கணுன்னா - கண்ணேஅதுக்குச்
      சின்னமரப் பாலம்போதும்.

பெரியாற்றைக் கடக்கணுன்னா - கண்ணேஅதுக்குப்
      பெரியமரம் போதாதடி.

சர்க்காரு கட்டும்பாலம் - கண்ணேஅது
      சரியான இரும்புப்பாலம். 25

கால்வாய்க்கெல்லலம் கட்டும்பாலம் - கண்ணேஅது
      கணக்கான கல்லுப்பாலம்.

தொட்டிபோலச் செய்துவைத்த - கண்ணேஅந்தத்
      தொங்குபாலம் சர்க்கார்பாலம்.

பாலத்துக்கு ஏற்றாப்போலே - கண்ணேஅதுக்கு
      ஓரத்தில்கை பிடிச்சுவராம்.

மாடுகளைக் குளிப்பாட்டக் - கண்ணேஅந்த
      மழைக்காலம் வசதிஇல்லை.

ஆற்றில்வெள்ளம் அடித்துவரக் - கண்ணேஉன்
      அண்ணன்கூட அலைமோதுவான். 30

நாகரிகக் காரருக்குக் - கண்ணேஆற்றில்
      நல்லமாதிரி போட்இருக்கும்.
------
31. போட் - Boat.

குறைப்படிப்புக் காரருக்குக் - கண்ணேநல்ல
      சுரைக்குடுக்கை தானிருக்கும்.

காட்டு மிருகத்துக்கும் - கண்ணேநம்
      வீட்டு மிருகத்துக்கும்.

கைகாலுக்குப் பலங்கொடுத்துக் - கண்ணேநீச்சுக்
      கடவுள்கற்றுக் கொடுத்தாராம்.

கணக்கில்லாத மீன்களுக்கும் - கண்மணியே
      கணக்கில்லாத தவளைக்குமே. 35

தாவரமாம் தண்ணிக்குள்ளே - கண்மணியே
      தண்ணிப்பாம்புக்குங் கூடத்தான்.

வெயிலடிக்கும் நேரத்திலே - கண்மணியே
      வெளிவருமாம் மீன்களெல்லாம்.

நாரைகளும் கொக்குகளும் - கண்மணியே
      நல்லநல்ல குருவிகளும்.

பறக்குமாம் தண்ணிக்குமேலே - கண்மணியே
      பயம்கொஞ்சங்கூட இல்லாமே.

சின்னஞ்சிறு மீனையெல்லாம் - கண்ணேஅது
      செந்தூக்காத் தூக்கிடுமாம். 40

வெயிலடிக்கும் நேரமெல்லாம் - கண்ணேதண்ணி
      வெள்ளிபோலே மின்னுமடி.

குடிதண்ணியும் குளிதண்ணியும் - கண்மணியே
      குடம்குடமா எடுப்பாங்களாம்.

தண்ணிக்கொரு தீட்டுமில்லை - கண்ணேஅதைத்
      தடுக்கஒரு நாதியில்லை.

பாப்பானுக்கும் பச்சைத்தண்ணி - கண்மணியே
      பறையனுக்கும் பச்சைத்தண்ணி.

காசித்தீர்த்தம் ஆடப்போனால் - கண்ணேஅங்கே
      காண்கிறதும் பச்சைத்தண்ணி. 45

பட்டிக்காட்டில் பலசாதியாம் - கண்மணியே
      பறையன்முதல் பாப்பான்வரை.

தோட்டிமுதல் தொண்டைமான்வரை - கண்மணியே
      தொழுந்தண்ணி பச்சைத்தண்ணி.

சண்டையிழுக் குந்தண்ணியும் - கண்மணியே
      சாதிக்குள்ளே பச்சைத்தண்ணி.

தெய்வம்போலே இருக்குந்தண்ணி - கண்மணியே
      திருடனுக்கும் பச்சைத்தண்ணி.

ஏழைபாழை எல்லாருக்கும் - கண்மணியே
      இருக்கிறது பச்சைத்தண்ணி. 50

எண்பதடிக் கிணற்றிலேயும் - கண்மணியே
      இறைக்கிறது பச்சைத்தண்ணி.

மலைமேலேயும் பச்சைத்தண்ணி - கண்மணியே
      குழிக்குள்ளேயும் பச்சைத்தண்ணி.

உயிர்கொடுப்பதும் பச்சைத்தண்ணி - கண்மணியே
      உயிர்எடுப்பதும் பச்சைத்தண்ணி.

ஊருக்குள்ளே ஆறுபோகக் - கண்ணே அங்கே
      ஊராரெல்லாம் குளிக்கப்போகத்

தென்கரையும் வடகரையும் - கண்மணியே
      திரண்டோடுதாம் பெரியவெள்ளம். 55

கரைமேலே படிப்படியாய்க் - கண்மணியே
      கல்கட்டடம் கட்டியிருக்கும்.

வடகோடி மூலையிலே - கண்மணியே
      வடபத்ரகாளி கோயில்ஒண்ணு.

ஆண்களும் பெண்களும் - கண்மணியே
      அயலூரு ஆளுகளும்

பத்ரகாளி கோயிலுக்குக் - கண்மணியே
      பயபக்தியாய்ப் போவார்களாம்.

தெற்கத்திக்காற் றடிக்கையிலே - கண்மணியே
      திரும்பிவீடு போவார்களாம். 60

தென்கோடி மூலையிலே - கண்மணியே
      திருவாழத்தான் வீடிருக்கு.

ராசாமகள் குளிப்பதற்குக் - கண்மணியே
      நாலுமூலைக் கட்டிடமாம்.

பத்துமுழத்துக் கொருவரிசை - கண்மணியே
      படிகளெல்லாம் பளிங்குக்கல்லாம்.

பாதம்ரெண்டும் வலிக்காமே - கண்மணியே
      தாதிப்பெண்கள் தாங்கிவர

வெயிலடித்து வேர்க்காமே - கண்ணேஅவள்
      வெண்சாமரை வீசிவர. 65

அரண்மனைக்கும் ஆற்றோரத்துக்கும் - கண்மணியே
      அங்கங்கே செந்தலையன்நிற்க
-----
66. செந்தலையன் - போலீஸ்காரன்

ஆளுக்கொரு வெடிபிடித்துக் - கண்மணியே
      அவன்எல்லோரும் நிற்கையிலே

ஆளுக்கொரு தடிபிடித்துக் - கண்ணேஅவர்
      ஆஜராத்தான் நிற்கையிலே

அந்தப்பாதை ஊராளுகள் - கண்மணியே
      அவசரமாய்ப் போகையிலே

அவசரமாப் போறஆளைக் - கண்ணேஅவர்
      அளவுமீறி அமல்செய்கையிலே. 70

வாறாளாம் ராசாமகள் - கண்மணியே
      வர்ணமயில் நடைநடந்து.

ராசாமகள் வாறபாதை - கண்மணியே
      பாசம்வழுக் கிறாற்போலே.

பாதமெல்லாம் வழுக்குமம்மா - கண்மணியே
      பளபளென்னு சொல்லுக்குமம்மா.

ஒருகரையிலே தென்னந்தோப்பு - கண்மணியே
      மறுகரையில் மாந்தோப்பு.

தென்னந்தோப்புக் குள்ளேஒரு - கண்மணியே
      சின்னக்குடிசு இருக்குதம்மா. 75

கிடுகுபோட்டு மேய்ஞ்சகுடிசு - கண்மணியே
      கிடுகிடெண்ணு ஆடுங்குடிசு.

கிடுகிடெண்ணு ஆடினாலும் - கண்ணேஅதுக்குக்
      கெட்டிக்கூரை போட்டதாலே

மழைபெய்தாலும் ஒழுகாதம்மா - கண்ணேஅது
      இடிவந்தாலும் இடியாதம்மா.

இளைத்துப்போன நேரத்திலே - கண்ணேஒரு
      இளநீர்வெட்டிக் கொடுக்கலாமே.

களைத்துப்போன நேரத்திலே - கண்ணேமனிதர்
      கள்இறக்கிக் குடிப்பாங்களாம். 80

தென்னம்பிள்ளை நட்டவங்க - கண்ணேஅதுக்குத்
      தினந்தோறும் தண்ணிஊற்றிப்

புள்ளையைப்போல் பொத்திப்பொத்திக் - கண்ணேநல்ல
      பொறுமையோடே வளர்ப்பாங்களாம்.

இடைக்கிடையே களையெடுத்துக் - கண்ணேஅதை
      இடைவிடாமே பாப்பாங்களாம்.

பட்டமட்டை எல்லாத்தையும் - கண்ணே அவர்
      பதமாத்தானும் தறிப்பாங்களாம்.

ஓலைக்கெல்லாம் காசுதானாம் - கண்ணேஅந்தப்
      பாளைக்கெல்லாம் காசுதானாம். 85

மட்டைக்கெல்லாம் காசுதானாம் - கண்ணேதென்னங்
      கட்டைக்கெல்லாம் காசுதானாம்.

விட்டத்துக்கும் காசுதானாம் - கண்ணேதென்னஞ்
      சட்டத்துக்கும் காசுதானாம்.

சிற்றுத்தேங்காய்க்கும் காசுதானாம் - கண்ணேஅந்த
      நெற்றுத்தேங்காய்க்கும் காசுதானாம்.

அடிதொடங்கி நுனிவரைக்கும் - கண்மணியே
      அல்லாத்துக்கும் காசுதானாம்.

மாங்காயும் தேங்காயும் - கண்மணியே
      மச்சினன் மாமன் போலிருக்காம். 90

மாங்காய்க்கும் கொழுத்தகாசு - கண்மணியே
      தேங்காய்க்கும் கொழுத்தகாசு.

மத்தியான்ன வேளையில்தான் - கண்ணேநல்ல
      மதிப்பிருக்கும் தோப்புக்கெல்லாம்

பொடிபொசுக்கும் நேரமெல்லாம் - கண்ணேமனிதர்
      போவாங்களாம் மாந்தோப்புக்கு.

கானலிலே காட்டுமாங்காய் - கண்மணியே
      கண்டையாடி பொன்மயிலே?

இறங்காத சோற்றைகூடக் கண்மணியே
      இறக்கிடுமாம் அந்தமாங்காய். 95

எலுமிச்சம் ஊறுகாயும் - கண்ணேநல்ல
      கொளுமிச்சம் ஊறுகாயும்

நாரத்தங்காய் ஊறுகாயும் - கண்மணியே
      ஏறத்தாழ ஒண்ணுதானே?

எழுந்திரம்மா கன்றுக்குட்டி - கண்ணேநீ
      இலைபோட்டுச் சோறுதின்ன.

அப்பாவர நேரமாச்சு - கண்ணேநீ
      அழுகாமே சோறுதின்னு.
_________

தோட்டம்

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ.

ஆற்றோரம் தோட்டம்வெட்டி - கண்மணியே
      அதிலேநல்ல பாத்திகட்டி,

பாத்திக்கெல்லாம் தண்ணிபாய்ச்சி - கண்மணியே
      பதனமாத்தான் விதைவிதைத்து,

கன்றுநாற்றைக் கொண்டுவந்து - கண்மணியே
      கானோரம் நட்டுவச்சு

ஆடுமாடு அழிக்காமே - கண்மணியே
      அதைச்சுற்றி வேலிகட்டி 5

நாய்நரிகள் அழிக்காமே - கண்மணியே
      நல்லாமுள்ளு வேலிகட்டிப்

பன்றிகின்றி நுழையாமே - கண்மணியே
      பத்திரமா வேலிகட்டி

இராப்பகலாக் காவல்காக்கக் - கண்மணியே
      நாயக்கன்மாரை வைத்தோமடி.

நல்லபழம் நல்லபழம் - கண்மணியே
      நாமெல்லாம் தின்னும்பழம்.

பறந்துபோற குருவியெல்லாம் - கண்மணியே
      பற்றிநல்லாத் தின்னும்பழம். 10

_________

வீடு கட்டின கதை

குச்சுவீடும் பற்றாமே - கண்மணியே
      கூறைவீடும் பற்றாமே

சின்னவீடும் பற்றாமே - கண்மணியே
      மண்ணுவீடும் பற்றாமே

இரண்டடுக்கும் பற்றாமே - கண்மணியே
      ஏழடுக்கு மெத்தைகட்ட

அப்பாபட்ட பாட்டைப்பார்த்தால் - கண்மணியே
      அழுகைகூட வருதெனக்கு.

காலையிலே எழுந்திருச்சுக் - கண்மணியே
      கால்கையெல்லாம் கங்கையிலே 5

மூஞ்சிமுகம் எல்லாமுமே - கண்மணியே
      முடக்கம்ஒண்ணும் இல்லாமலே

கழுவிச்சுத்தம் பண்ணிக்கிட்டுக் - கண்மணியே
      கடவுளையும் கும்புட்டுட்டுக்

கம்மான்செம்மான் கிட்டப்போய்க் - கண்மணியே
      கட்டடத்தைப் பற்றிப்பேசிப்

போயன்மார்க் கிட்டப்போய்க் - கண்மணியே
      பொழுதெல்லாம் பழமைபேசிச்

சேர்வைகாரர் கிட்டப்போய்க் - கண்மணியே
      சிற்றாளைப் பற்றிப்பேசி 10

மரக்காரர் கிட்டப்போய்க் - கண்மணியே
      மரச்சங்கதி யெல்லாம்பேசிச்

சிவனாண்டி கிட்டப்போய்க் - கண்மணியே
      செங்கல்லைப் பற்றிப்பேசிச்

சுப்ரமணி கிட்டப்போய்க் - கண்மணியே
      சுண்ணாம்பைப் பற்றிப்பேசி

மாயாண்டி கிட்டப்போய்க் - கண்மணியே
      மணலைப்பற்றி யெல்லாம்பேசி

வயிற்றுப்பசி எடுத்ததாலே - கண்மணியே
      வந்தாரம்மா வீடுதேடி. 15

அரண்மனைக்கு மேலேகட்டக் - கண்மணியே
      அகன்றகாலு வச்சாரம்மா.

எசலுப்புப் போட்டுக்கிட்டுக் - கண்மணியே
      எடுத்தாரம்மா பெருத்தவேலை.

ஏழுமெத்தை கட்டணுண்ணு - கண்மணியே
      இறைத்தாரம்மா பணத்தையெல்லாம்.

பணத்தைநல்ல பணமென்றுதான் - கண்மணியே
      பார்க்காமேதான் இறைத்தாரம்மா.

காசைநல்ல காசென்றுதான் - கண்மணியே
      கனவிலேயும் நினைக்காமே 20

கண்டதையம்மா செலவழிச்சுக் - கண்மணியே
      கட்டினார் மெத்தைவீடு.

போயன்மார் பொண்ணுங்கூடக் - கண்மணியே
      பொளந்தாங்களே பாறைகளை.

வாணம்வெட்ட ஆணும்பெண்ணும் - கண்மணியே
      வந்தார்களே வரிசையாத்தான்

பாறைகரும் பாறையாலே - கண்மணியே
      பலிக்கலையாம் வாணவேலை.

ஜம்பர்கம்பி டம்பமாத்தான் - கண்மணியே
      பம்பரம்போல் பாறையைத்தான் 25

தொளைதொளையா எலிவளைபோல் - கண்மணியே
      தொளைச்சுருச்சாம் முழம்முழமா

கருமருந்தும் திரிநெருப்பும் - கண்மணியே
      கணக்கில்லாமே கொண்டாந்துதான்

கருமருந்தைத் தொளைக்குள்ளேதான் - கண்மணியே
      கணக்குப்போலக் கெட்டித்துத்தான்

திரியறுத்து மருந்தில்வச்சுக் - கண்மணியே
      தீக்கொளுத்தத் திடீரெண்ணுதான்

படாருண்ணு வெடிச்சிருச்சாம் - கண்மணியே
      பாறையெல்லாம் சுக்குச்சுக்கா. 30

வாணம்வேலை முடிஞ்சராவு - கண்ணேஅப்பா
      வாணவேடிக்கை காட்டினாரு.

நட்சத்திரம் நாள்எல்லாம்பார்த்துக் - கண்மணியே
      அஸ்திவாரம் போட்டாங்களாம்.

போயன்மாரு எல்லாருக்கும் - கண்ணே அப்பா
      போதுமான பணங்கொடுத்து

ராவேலையும் செய்யச்சொல்லிக் - கண்ணேஅதுக்கும்
      ஞாயமான பணங்கொடுத்துக்

காந்தத்திலே விளக்குப்போட்டுக் - கண்மணியே
      கணக்காவேலை முடிச்சாராம். 35

சொன்னபடி சிவனாண்டியும் - கண்மணியே
      செங்கல்கொண்டுவந் தடுக்கினானாம்.

மலைபோலே மணலைத்தானும் - கண்மணியே
      மாயாண்டியும் குவித்தானாம்.

சுறுசுறுப்பாச் சுப்பிரமணியும் - கண்மணியே
      சுண்ணாம்பெல்லாம் கொண்டாந்தானாம்.

கருப்பட்டியும் கனமுட்டையும் - கண்மணியே
      கலந்தாங்களாம் சாந்துகூட.

கும்மியென்ன கூட்டமென்ன - கண்மணியே
      குனிந்துநிமிர்ந்தும் குத்திக்கிட்டுத் 40

தில்லாலப் பாட்டுஎன்ன - கண்மணியே
      தெம்மாங்குப் பாட்டுஎன்ன

களைத்தவர்கள் நிற்கையிலே - கண்ணேஅப்பா
      காபிகூடக் கொடுத்தாராம்.

மரக்காரர் மரவேலையைக் - கண்ணேஒண்ணும்
      மறக்காமல்தான் முடித்திட்டாராம்.

கணக்கில்லாத கொத்தன்மாரும் - கண்மணியே
      கண்கொள்ளாத சிற்றாட்களும்

சேர்வைகாரர் மூலத்தாலே - கண்ணேஅவர்
      செங்கல்வேலை துவக்கையிலே 45

ஆட்டம்என்ன பாட்டம்என்ன - கண்மணியே
      வேட்டிஎன்ன வேலைக்காரருக்கு!

கதவுநிலை வைக்கையிலே - கண்மணியே
      கடலை அவலும்என்ன

தேங்காய்என்ன பழங்கள்என்ன - கண்மணியே
      தெருவில்வெற்றிலை பாக்குஎன்ன!

அகஸ்மாத்திலே வந்தவங்களுக்கும் - கண்மணியே
      அழகானபூ மாலைஎன்ன

கொட்டுஎன்ன மேளம்என்ன - கண்மணியே
      கொண்டையிலே பூவும்என்ன 50

கதவுகளும் சன்னல்களும் - கண்மணியே
      கணக்காக்கொத்தன்மார் வச்சான்களாம்.

சட்டங்களும் விட்டங்களும் - கண்மணியே
      கட்டடத்திலே கணக்கில்லையாம்.

ஏழுமாசக் கெடுவுவச்சுக் - கண்ணேநாம்
      ஏழுமெத்தை வீட்டை முடிச்சு

அரண்மனையார் அசந்துபோகக் - கண்ணேஅப்பா
      அட்டகாசம் பண்ணினாரே.

________

உறங்கிடம்மா!

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ

சுருட்டைப் புளியமரம் - கண்மணியே
      சூதாடும் நந்தவனம்

பரட்டைப் புளியமரம் - கண்மணியே
      பந்தாடும் நந்தவனம்.

காக்காயும் கத்தக்கத்தக் - கண்ணேரெண்டு
      கன்னிமாரு வாறாங்க.

செம்போத்துக் கத்தக்கத்தக் - கண்ணேரெண்டு
      சேவகரு வாறாங்க. 5

ஆற்றுமண லைப்பரப்பிக் - கண்ணேசோறு
      ஆக்கிவிளை யாடையிலே

ஆக்கிநீ வச்சசோற்றைக் - கண்மணியே
      அழித்திட்டானோ உன்மாமன்?

மாமன் பொதிஅளக்கக் - கண்மணியே
      மச்சினன்மார் கோட்டைகட்டக்

கரும்புருக வேம்புருகக் - கண்மணியே
      கண்டவர்கள் மனமுருக

இரும்புருகப் பெற்றெடுத்த - கண்மணியே
      இருதயத்தை ஆரடித்தார்? 10

அத்தைமக்கள் வாசலுக்குக் - கண்மணியே
      நித்தநித்தம் போகாதே.

பாம்படித்துப் போடுவார்கள் - கண்மணியே
      பழிகார அத்தைமக்கள்.

சோறு அடுப்பிலேதான் - கண்மணியே
      சோலைக்கிளி கையிலேதான்.

பாலும் அடுப்பிலேதான் - கண்மணியே
      பாலைக்கிளி கையிலேதான்.

ஆரு அடித்தார்கள் - கண்ணேஉன்னை
      அரளிப்பூச் செண்டாலே? 15

மச்சினிச்சி அடித்தாளோ - கண்ணேஉன்னை
      மல்லிகைப்பூச் செண்டாலே?

ஒருச்சாய்த்துப் படுத்துநீ - கண்மணியே
      உறங்கிடம்மா தொட்டியிலே.

----------

தாயின் கதை

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
      ஆரிரரோ ஆராரோ.

ஒருத்திக்கொரு மகள்பிறந்தேன் - கண்ணேநான்
      ஒண்டியிலே உலகம்வந்தேன்.

தகப்பன்வந்து தாராபுரம் - கண்ணேஎன்
      தாய்வந்து தர்மபுரி.

அண்ணன் இல்லை தம்பி இல்லை - கண்ணே எனக்கு
      அக்காள் இல்லை தங்கை இல்லை.

பொன்னுண்ணாலும் பொன்னுப்போலே -
      கண்ணேஎன்னைப்
பொத்திப்பொத்தி வளர்த்தாங்களே. 5

காலையிலே ஒருதுணியாம் - கண்ணேஎனக்கு
      மாலையிலே மறுதுணியாம்.

காய்ச்சல்குளிர் ஆட்டப்போய்க் - கண்ணேஎன்
      தாய்க்குப்பால் வற்றப்போய்த்

தாராளமாய்ப் பால்கொடுக்கக் - கண்ணேஎனக்குக்
      காராம்பசு வாங்கினாளாம்.

துணித்தொட்டில் வேணுமிண்ணு - கண்ணேஎனக்கு
      மணிக்கட்டில் வாங்கினாளாம்.

பீத்துணி கசக்கத்தாதி - கண்மணியே
      பால்துணி கசக்கத்தாதி. 10

பொட்டுவைக்க ரெண்டுதாதி - கண்மணியே
      சட்டைபோட மூணுதாதி.

தாங்கித்தாங்கித் தூங்கைவைக்கக் - கண்மணியே
      தாராட்டத் தாதிநாலு.

பாலூட்டத் தாதிநாலு - கண்மணியே
      பசுமேய்க்கத் தாதிநாலு.

ராவெல்லாம் கண்விழித்துக் - கண்மணியே
      காவல்காக்கத் தாதிநாலு

தண்ணிஊற்றத் தாதிநாலு - கண்மணியே
      தலைஉலர்த்தத் தாதிநாலு. 15

சிக்கெடுக்கத் தாதிநாலு - கண்மணியே
      செல்லங்கொஞ்சத் தாதிநாலு.

கையமுக்கத் தாதிநாலு - கண்மணியே
      கால்அமுக்கத் தாதிநாலு

கும்மாளம்போடத் தாதிவேறே - கண்மணியே
      கும்மியடிக்கத் தாதிவேறே.

வீர்வீரென்று அழுகையிலே - கண்மணியே
      வேடிக்கைக்காட்டத் தாதிவேறே.

சத்தம்போட்டு அழுகையிலே - கண்மணியே
      சதிராடத் தாதிவேறே. 20

செல்லங்கொஞ்சி அழுகையிலே - கண்மணியே
      சிரிப்புக்காட்டத் தாதவேறே.

படிக்கட்டிலே விழுந்திடாமே - கண்ணேஎன்னைப்
      பாதுகாக்கத் தாதிநாலு.

பளிங்கிலே வழுக்கிடாமே - கண்மணியே
      பாதுகாக்கத் தாதிநாலு.

கைகால் பிசகிடாமே - கண்மணியே
      கண்டபடி சுளுக்கிடாமே

ஊர்ந்துகிட்டுத் திரிகையிலே - கண்மணியே
      உரல்மேலே மோதிடாமே. 25

பால்குடிக்கும் நேரத்திலே - கண்மணியே
      புறங்காலைப் பாலேறாமே

சின்னச்சின்னப் பிள்ளைகூடக் - கண்மணியே
      சேர்ந்துநான் விளையாடையிலே

சீக்குப்பிணி அண்டிடாமே - கண்மணியே
      சேதம்ஒண்ணும் ஆகிடாமே

ஈயெறும்பு கடிச்சுடாமே - கண்மணியே
      எல்லாம்பார்க்கத் தாதிவேறே.

மருந்தரைக்கத் தாதிவேறே - கண்மணியே
      மருந்துபோடத் தாதிவேறே. 30

தலைகால்என் னமும்வலித்தால் - கண்மணியே
      தைலந்தேய்க்கத் தாதிவேறே.

ஊஞ்சல்கட்டத் தாதிவேறே - கண்மணியே
      ஊஞ்சலாட்டத் தாதிவேறே.

எண்ணெயிலே ஒத்தடமும் - கண்மணியே
      வெந்நீரிலே ஒத்தடமும்

இன்னம்வேறே ஒத்தடமும் - கண்மணியே
      எனக்குக்கொடுக்கத் தாதிவேறே.

செல்வத்தி லேபிறந்தேன் - கண்மணியே
      செல்வத்தி லேவளர்ந்தேன். 35

ஆடுஎன்ன மாடுஎன்ன - கண்மணியே
      காடுஎன்ன வீடுஎன்ன

முத்துஎன்ன ரத்னம்என்ன - கண்மணியே
      சொத்துஎன்ன கெத்துஎன்ன

வகைவகையாய் நகைகள்என்ன - கண்மணியே
      ஜதைஜதையாய் நகைகள்என்ன

சாரட்டுவண்டிஎன்ன - கண்மணியே
      சலங்கைபோட்ட வண்டிஎன்ன

அஞ்சு வயசிலேநான் - கண்மணியே
      அரிசித்தரி படிச்சேனம்மா. 40

பத்துவயசுக் குள்ளேநான் - கண்மணியே
      படிப்பெல்லாம் முடிச்சேனம்மா.

பன்னிரண்டு வயசிலேநான் - கண்மணியே
      பருவமான காலத்திலே

வாலிபப் பிராயத்திலே - கண்மணியே
      வாழ்க்கைப்பட்டேன் உங்கப்பாவுக்கு

வருசம்பத் திருவதுமாச்சு - கண்மணியே
      வாசனைக்கும் பிள்ளையில்லை.

தினைமாவைத் திரித்துவைத்துக் - கண்மணியே
      திரித்தமாவைச் சலித்துவைத்துச் 45

சலித்தமாவை உருட்டிவைத்துக் - கண்மணியே
      சலிப்பில்லாமே இனிப்பும்போட்டு

புள்ளையார்க்கும் கொடுத்துப்பார்த்தேன் - கண்மணியே
      பூசாரிக்கும் கொடுத்துப்பார்த்தேன்.

ஒருபிள்ளைக்குப் பத்துருண்டை - கண்மணியே
      ஊர்ப்பிள்ளைக்கும் கொடுத்துப்பார்த்தேன்.

நேத்திக்கடன் நிறைவேற்றினேன் - கண்மணியே
      நெய்விளக்கு ஏற்றிவைத்தேன்.

தானமெல்லாம் செய்துபார்த்தேன் - கண்மணியே
      தருமமெல்லாம் செய்துபார்த்தேன். 50

காசிதீர்த்தம் செய்துபார்த்தேன் - கண்மணியே
      குற்றாலத்தில் குளித்துப்பார்த்தேன்.

ராமேச்வரம் போய்ப்பார்த்தேன் - கண்மணியே
      பாவநாசமும் போய்ப்பார்த்தேன்.

பழனிமலை மேலிருக்கும் - கண்மணியே
      பழனியாண்ட வனையும்பார்த்தேன்.

கொஞ்சறத்துக்குப் பிள்ளையில்லை - கண்மணியே
      கொள்ளிவைக்கப் பிள்ளையில்லை.

என்னபாவம் செய்தேனோஅம்மா - கண்மணியே
      ஏதுபாவம் செய்தேனோஅம்மா! 55

மெழுகிவைத்த வீட்டுக்குள்ளே - கண்மணியே
      விளையாடப் பிள்ளைஇல்லை.

கூட்டிவைத்த வீட்டுக்குள்ளே - கண்மணியே
      குப்பைபோடப் பிள்ளைஇல்லை.

நிறைத்துவைத்த நிறைகுடத்தைக் - கண்மணியே
      குறைத்துவைக்கப் பிள்ளைஇல்லை.

ஆக்கிவைத்த அண்டாச்சோற்றைக் - கண்மணியே
      அள்ளித்தின்னப் பிள்ளைஇல்லை.

கன்றுபோற வழியிலேநான் - கண்மணியே
      கல்கிணறு கட்டிவைத்தேன். 60

மலடிகைத் தருமமென்று - கண்மணியே
      மாடுதண்ணி குடிக்கலையே!

மாடுபோற வழிமேலேநான் - கண்மணியே
      மணிபோல வைக்கோல்போட்டுவைத்தேன்.

மலடிகைத் தருமமென்று - கண்மணியே
      மாடுவைக்கோல் தின்னலையே!

ஆனிமாசம் வாங்கிவிட்ட - கண்மணியே
      அழகான பசுவும்மலடு.

குப்பையிலே மேய்ந்துவரும் - கண்மணியே
      கோழிகூடத் தான்மலடு. 65

மாமன்மச்சான் ஏசினாங்க - கண்மணியே
      மற்றவர்கள் ஏசினாங்க.

அண்ணன்தம்பி ஏசினாங்க - கண்மணியே
      அக்காஅத்தை ஏசினாங்க.

மதனிகொழுந்தி ஏசினாங்க - கண்மணியே
      சதிநினைத்துப் பேசினாங்க.

சிற்றப்பன்வீட் டாருங்கூடக் - கண்மணியே
      சிரிக்கவும் இடமானேனே!

மந்தையிலே படுத்துறங்கும் - கண்மணியே
      மாடுகன்றெல் லாம்மலடு. 70

வேலிப்பக்கம் மேய்ந்துவரும் - கண்மணியே
      வெள்ளாடெல் லாம்மலடு

காடெல்லாம் சுற்றிவரும் - கண்மணியே
      கருநாயுந் தான்மல.

என்முகத்தி லேவிழித்த - கண்மணியே
      எதிர்த்தவீட்டுப் பெண்மலடி.

அண்டைவீடெல் லாம்மலடு - கண்ணேஎன்னை
      அடுத்தவரெல் லாம்மலடு.

இத்தனையும் மலடாயிருக்கக் - கண்மணியே
      எத்தனைபாவம் நான்செய்தேனோ! 75

உங்கப்பாவும் நானும்சேர்ந்து - கண்மணியே
      உலகமெல்லாம் சுற்றிப்போனோம்.

காடென்ன வனமென்ன - கண்ணேநாங்கள்
      கண்டபடி அலைகையிலே

காட்டுரிஷி கண்ணைமூடிக் - கண்மணியே
      கடவுள் தவம் செய்கையிலே

கண்டோமம்மா தவமுனியைக் - கண்ணேஅவர்
      காலிலேதான் விழுந்தோம்அம்மா

தவம்முடித்து ஜபம்முடித்துக் - கண்மணியே
      தந்தாரம்மா மாங்கனியும். 80

மந்திரமும் உச்சரித்துக் - கண்மணியே
      மாங்கனியைத் தந்தாரம்மா.

வலம்புரியும் இடம்புரியும் - நாங்கள்சுற்றி
      வந்தோமம்மா முனிவர்பக்கம்.

திருநீறையும் பன்னீரையும் - எங்கள்மேலே
      தெளித்தாரம்மா முனிவர்தானும்.

தலைமேலே கையைவச்சுக் - கண்மணியே
      தந்தாரம்மா ஆசீர்வாதம்.

சரியான காலத்திலே - கண்ணேஉன்னைச்
      சந்தோசமாக் கண்டோம்அம்மா. 85

நீபிறந்த நாள்முதலாக் - கண்ணேஎன்
      நிந்தனையும் மாறிற்றம்மா.

மலடிபெற்ற மலட்டுவரம் - கண்மணியே
      மங்கிற்றம்மா அன்றுமுதல்

சீர்குலைக்கப் பார்த்தவங்க - கண்மணியே
      சீரழிந்தார் என்கண் முன்னே.

வெட்கப்படுத்தப் பார்த்தவங்க - கண்மணியே
      வெட்கப்பட்டுப் போனாரம்மா.

வாயினாலே வைதவர்கள் - கண்மணியே
      வருத்தப்பட்டுப் போனாரம்மா. 90

போகவிட்டுப் புறஞ்சொன்னவர் - கண்மணியே
      போனபோக்குத் தெரியலைம்மா.

குசுகுசுண்ணு பேசினவர் - கண்மணியே
      குலையெரிஞ்சு போனாரம்மா.

கேலிபண்ணிச் சிரித்தவர்கள் - கண்மணியே
      கேவலமாய்ப் போனாரம்மா.

பரியாசம்பண்ணிச் சிரித்தவர்கள் - கண்மணியே
      பயத்தோடே போனாரம்மா.

அரண்டார்களே அண்ணன்தம்பி - கண்மணியே
      அக்காதங்கை எல்லோருமே. 95

மறுவார்த்தைகூடப் பேசாமலே - கண்மணியே
      மாமன்மாமி போனார்களம்மா

மச்சான்கொழுந்தன் மதனிகொழுந்தி - கண்மணியே
      மானங்கெட்டுப் போனாரம்மா

அண்டைவீடும் அடுத்தவீடும் - கண்மணியே
      ஆச்சரியப் பட்டாரம்மா

அப்பாவும் நானும்சேர்ந்து - கண்மணியே
      ஆண்டவரைத் தொழுதோம்அம்மா!

________

ராரீ ராரீ

ராரீராரீ ராராரோ - ஏனய்யா
      ராரீ ராராரோ

வண்டாட ரெண்டசைய வள்ளிகை வேலசைய
ராரீராரீ ராராரோ என்கண்ணே - ராரீராரோ

ராரிக்கு ராரிமெத்தை சீராமருக்குப் பஞ்சுமெத்தை
தூரிக்குத் தூரிமெத்தை சீராமருக்குப் பஞ்சுமெத்தை

சங்குமுழங்குதா - சிவ - சங்கரர் கோயிலிலே
சின்னம் முழங்குதா செந்தூராரு கோயிலிலே (ராரீ)

ஏன்அழுதே ஏன்அழுதே ஏலம்பூ வாய்நோக
வம்புக்கு அழுவாளோ - என் அம்மா -
      வாயெல்லாம் தேன்வடிய ( ராரீ)
----------

9. சிறுவர் உலகம்


சாய்ந்தாடுதல்

சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு

சாயக் கிளியே சாய்ந்தாடு

அன்னக் கிளியே சாய்ந்தாடு

ஆவாரம் பூவே சாய்ந்தாடு

குத்து விளக்கே சாய்ந்தாடு

கோயில் புறாவே சாய்ந்தாடு

மயிலே குயிலே சாய்ந்தாடு

மாடப் புறாவே சாய்ந்தாடு.

______

கை வீசுதல்

கைவீ சம்மா கைவீசு

கடைக்குப் போகலாம் கைவீசு

மிட்டாய் வாங்கலாம் கைவீசு

மெதுவாய்த் தின்னலாம் கைவீசு

சொக்காய் வாங்கலாம் கைவீசு

சொகுசாய்ப் போடலாம் கைவீசு.

_______

தோள் வீசுதல்

தோள்வீ சம்மா தோள்வீசு
சுந்தரக் கிளியே தோள்வீசு

பச்சைக் கிளியே தோள்வீசு
பவளக் கொடியே தோள்வீசு

திண்ணையின் கீழே தவழ்ந்து விளையாடும்

தேனே மணியே தோள்வீசு.

_________

கண்ணாமூச்சி 1

கண்ணாம்

கண்ணாம் பூச்சாரே
காதுகாது பூச்சாரே
எத்தனை முட்டை இட்டாய்?
மூணு முட்டை.
மூணு முட்டையுந் தின்னுப்புட்டு
ஒருசம்பா முட்டை கொண்டுவா! 2

தத்தக்கா புத்தக்கா - தவலைச் சோறு
நெற்றிமா நெருங்கமா - பச்சைமரத்திலே பதவலை கட்டப்
பன்றிவந்து சீராடப் - பறையன்வந்து நெல்லுக்குத்த
குண்டுமணி சோறாக்கக் - குருவிவந்து கூப்பிடுது.

__________

பலிஞ் சடுகுடு 1

சக்கு சக்குடி - சரு வொலக்கைடி
      குத் தொலக்கைடி - குமரன் பெண்டாட்டி
      பாளயத்திலே வாழ்க்கைப்பட்ட
      பழனி பெண்டாட்டி. 2

மாப்பிளை மாப்பிளை
      மண்ணாங்கட்டி தோப்புளே
      அரைக்காசு வெற்றிலைக்குக்
      கதிகெட்ட மாப்பிளை. 3

குத்துலக்கை - கோலிக்குண்டு
      வச்செடுப்பான் வாரிக்கொள்வான்
      தப்பைதாளம் - ஏந்திஇறக்கி
      ஏந்தின கையிலே சொக்கி. 4

கவானைக் கவட்டி கவட்டி கவட்டி
      பலிஞ் சடுகுடு. . . . . . . . . . . 5

பலிஞ் சடுகுடு அடிப்பானேன்?
      பல்லு ரெண்டும் போவானேன்?
      உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்
      ரெண்டுபணம் தண்டம் தண்டம் தண்டம். 6

தூதூ நாய்க்குட்டி - தொட்டியத்து நாய்க்குட்டி
வளைச்சுப் போடடா நாய்க்குட்டி
இழுத்துப் போடடா நாய்க்குட்டி
நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி! 7

கிக்கீக்குங் கம்பந் தட்டை
      காசுக்கு ரெண்டு தட்டை
      கருணைக் கிழங்கடா
      வாங்கிப் போடடா வாங்கிப் போடடா. 8

அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை
கல்லிலே போட்டால் சுரைக் குடுக்கை
சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை. . . . . 9

அந்த அரிசி இந்த அரிசி
      நேத்துக் குத்தின கம்பரிசி
      கம்பரிசி கம்பரிசி கம்பரிசி. 10

கருணைக் கிழங்கடா வாழைப் பழமடா
தோலை உரியடா தொண்டைக்குள் அடையடா
அடையடா அடையடா அடையடா! 11

கீச்சுக் கீச்சடா கீரைத் தண்டடா
நட்டு வச்சேண்டா பட்டுப் போச்சடா
பட்டுப் போச்சடா பட்டுப் போச்சடா. 12

கொத்துக் கொத்து ஈச்சங்காய்
      கோடாலி ஈச்சங்காய்
      மதுரைக்குப் போனாலும்
      வாடாத ஈச்சங்காய்
      ஈச்சங்காய் ஈச்சங்காய்.

_______

கல்லாங்காய் விளையாட்டு 1

கொக்குச்சிக் கொக்கு
ரெட்டை சிலாக்கு
மூக்குச் சிலந்தி
நாக்குலா வரணம்
ஐயப்பன் சோலை
ஆறுமுக தாளம்
ஏழுக்குக் கூழு
எட்டுக்கு முட்டி
ஒன்பது கம்பளம்
பத்துப் பழம் சொட்டு. 1.


கட்டை வச்சேன் மரம் பிளந்தேன் 2.


ஈரிரண்டைப் போடடா
இருக்க மாட்டைக் கட்டடா
பருத்திக் கொட்டையை வையடா
பஞ்சணேசா 3.


முக்கட்டு வாணியன் செக்காட
செக்குஞ் செக்கும் சேர்ந்தாட
வாணியன் வந்து வழக்காட
வாணிச்சி வந்து கூத்தாட. 4.


நாலை வைச்சு நாலெடு
நாராயணன் பேரெடு
பேரெடுத்துப் பிச்சையெடு. 5.


ஐவரளி பசுமஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது
பத்தாத மஞ்சள் பசுமஞ்சள். 6.


ஆக்குருத்தலம் குருத்தலம்
அடுப்புத் தண்டலம் தண்டலம்
வேம்பு சுட்டால் வெண்கலம். 7.


ஏழு புத்திர சகாயம்
எங்கள் புத்திர சகாயம்
மாட்டுப் புத்திர சகாயம் மகராஜி. 8.


எட்டும் பொட்டும்
இடக்கண் பொட்டை
வலக்கண் சப்பட்டை. 9.


ஒன்பதுநரி சித்திரத்தை
பேரன் பிறந்தது
பேரிடவாடி பெரியாத்தை. 10.


பத்திரா சித்திரா கோலாட்டம்
பங்குனி மாசம்
ஆடி வெள்ளிக்கிழமை
அம்மன் கொண்டாட்டம். 11.


நானும்வந்தேன் நடுக்கட்டைக்கு
என் தோழிவந்தாய் எடுத்தகட்டைக்கு


தட்டில் அப்பம்கொட்ட
தவலை சம்பாக்கொட்ட


ஒத்தைக் கையால்கொட்ட
ஒசந்த மரக்கட்டை


குத்திக் குத்தித் தாரும்
பொட்டலங் கட்டித் தாரும். 3 1.


ஆலைப் பொறுக்கி - ஆசாரக் கள்ளி
தூக்கந் தெளிந்த - தூவாடைக் காரி
பாக்குமரத்துப் - பாவாடைக் காரி. 2.


வீரி இரண்டெடுக்க வீசுந் தண்டெடுக்க
மாதா மண்எடுக்க. 3.


முக்கோட்டு ராவணன் - முத்துச் சரவணன். 4.


நான்கு நடந்துவர - நாகேந்திரன் தொடர்ந்துவர. 5.


ஐவர் அரைக்கும் மஞ்சள
தேவர் குளிக்கும் தண்ணீர். 6.


ஆக்கோ ரளிவாழை
அண்ணன் தம்பி பெருவாழை. 7.


ஏழண்ணன் காட்டிலே - எங்களண்ணன் வீட்டிலே
மஞ்சள் சரட்டிலே.
பொதைபொதை பொம்பரம்
செட்டி சிதம்பரம்
கொக்கு கோலாட்டம் 4 1.


பொறுக்கி பொறுக்கி
போறாளாம் தண்ணிக்கி
தண்ணிக்குடம் தலைமேலே. 2.


இள இரிச்சிக்கோ
பூவைப் பறிச்சிக்கோ
பொட்டியிலே வச்சுக்கோ. 3.

முக்கோடு தக்கோடு பாகற்காய்
முள்ளில் லாத ஏலக்காய் 4.

நான்கே நடந்து வரப
பாம்பே படர்ந்து வர. 5.
அஞ்சு களாக்காய் தும்பைப்பூ
அதிலே ஒரு ஜன்னல்.
6.
ஆக்கூர் அடிவாழை
அண்ணன் தம்பி பெருவாழை.
7.
ஏழு என்னும் காட்டிலே
எங்கள் அண்ணன் வீட்டிலே
மஞ்சள் சரட்டிலே.
5 1.
காண்டேனி கூண்டு - மத்தேனி மதுரம்
ஒண்ணேனி உலகம்.

2. ரெண்டேனி ரிஷபம். 3.
மூணு முத்தாச்சம் முத்தாச்சம்
பேர்வழி செங்கல் பதிவிரத்தம்
பென்னாரே போட்டி ரத்தப்பட்டுடுத்தி
ரெத்தம்போல் பாவாடை சாத்திரத்தம்.
4. நாலாங் கொல்லையிலே
நாறப் பழம்பழுக்க
நாங்களெல்லாம் வாங்கித்தின்ன
நடுக்கு ஜூரமடிக்க - எங்கம்மா எனைவைய.
5. அஞ்சும் பஞ்சாங்கம்.
6. ஆறோ பாலாறு.
7. ஏழோ விளக்கெரிய.
8. எட்டும் கொட்டாரம்.
9. உத்தர மல்லாறு.
10. பத்தடியோ பாலி

ரெத்து ரெறிதுளசி
வில்லாரக் கொல்லை வீரம்மன் சீரோடே
காயம் கம்போடே கத்திரி முள்ளோடே
அடுப்படிச் சாரங்கம் ஆவுன்னே சிங்கம்
கோவிலிலே லிங்கம் கும்பிடலாம் தங்கம்.

_________

வினா விடை 1

ஓடு ஓடு
என்ன ஓடு? நண்டோடு.
என்ன நண்டு? பால்நண்டு.
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி.
என்ன சதுரம்? நாய்ச்சதுரம்.
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி.
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை.
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளுத்துநத்தை.
என்ன குளம்? பெரியகுளம். 2

வேர் வேர்
என்ன வேர்? வெட்டிவேர்.
என்ன வெட்டி? பனைவெட்டி.
என்ன பனை? தாளிப்பனை.
என்ன தாளி? விருந்தாளி.
என்ன விருந்து? மணவிருந்து.
என்ன மணம்? பூமணம்.
என்ன பூ? மாம்பூ.
என்ன மா? அம்மா. 3

உன்பேர் என்ன? - பேரிக்காய்
உன்ஊர் என்ன? - ஊறுகாய்
உன்ஜாதி என்ன? - ஜாதிக்காய். 4

ஆண்டி ஆண்டி
என்ன ஆண்டி? - பொன்னாண்டி.
என்ன பொன்? - காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? - அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? - பூஅண்டம்.
என்ன பூ? - பனம்பூ.
என்ன பனை? - தாளிப்பனை.
என்ன தாளி? - நாகதாளி.
என்ன நாகம்? - சுத்தநாகம்.
என்ன சுத்தம்? - வீட்டுச்சுத்தம்.
என்ன வீடு? - ஓட்டுவீடு.
என்ன ஓடு? - பாலோடு.
என்ன பால்? - நாய்ப்பால்.
என்ன நாய்? - வேட்டைநாய்.
என்ன வேட்டை? - பன்றிவேட்டை.
என்ன பன்றி? - ஊர்ப்பன்றி.
என்ன ஊர்? - கீரைஊர்.
என்ன கீரை? - அறைக்கீரை.
என்ன அறை? - பள்ளியறை.
என்ன பள்ளி? - மடப்பள்ளி.
என்ன மடம்? - ஆண்டிமடம்.
என்ன ஆண்டி? - பொன்னாண்டி!

கீரை கீரை
என்ன கீரை? - அறைக்கீரை
என்ன அறை? - பொன் அறை.
என்ன பொன்? - காக்காய்ப்பொன்
என்ன காக்காய்? - அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? - பிரம்மாண்டம்.
என்ன பிரம்மா? - சதுர்முகப்பிரம்மா.
என்ன சதுர்? - மாஞ்சதுர்.
என்ன மா? - நெல்லுமா.
என்ன நெல்? - சம்பாநெல்.
என்ன சம்பா? - முத்துச்சம்பா.
என்ன முத்து? - கொட்டைமுத்து.
என்ன கொட்டை? - முந்திரிக்கொட்டை.

________

நிலாப்பாட்டு 1

நிலாநிலா வாவா
      நில்லாமே ஓடிவா
      மலைமேலே ஏறிவா
      மல்லிகைப்பூக் கொண்டுவா! 2

எட்டிஎட்டிப் பார்க்கும்
      வட்டவட்ட நிலாவே
      துள்ளித்துள்ளிச் சிரிக்கும்
      தும்பைப்பூவு நிலாவே. 3

நிலாநிலா எங்கேபோறாய்?
      மண்எடுக்கப் போறேன்.
      மண் என்னத்துக்கு?
      சட்டிபானை செய்ய
      சட்டிபானை என்னத்துக்கு?
      சோறாக்கித் தின்ன. 4

நிலாநிலா எங்கெங்கேபோனாய்?
களிமண்ணுக்குப் போனேன்.

களிமண் என்னத்துக்கு? வீடுகட்ட.
வீடு என்னத்துக்கு? மாடுகட்ட.

மாடு என்னத்துக்கு? சாணிபோட
சாணி என்னத்துக்கு? வீடு மெழுக

வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற
பிள்ளை என்னத்துக்கு?

எண்ணெய்க்குடத்திலே போட்டுப்பிள்ளை
துள்ளித்துள்ளி விளையாட.

__________

வேடிக்கைப் பாட்டுக்கள்

கத்தரிக்காய் திருடப்போனேன்
      கடைத் தெருவிலே - அந்தக்
கடைக்காரன் கண்டுக்கிட்டுப்
      போட்டான் முதுகிலே.
ஒட்டுப்பீடி பொறுக்கப்போனேன்
      பஜார் ரோட்டிலே - அங்கே
பற்றவைக்க நெருப்புக்கேட்டேன்
      பாட்டி வீட்டிலே. 1

* * *

மணிஅடிக்குது மணிஅடிக்குது
      மதுரைக்கோட்டையிலே
ரங்கநாதன் பேர்விளங்குது
      ஆட்டுக் கொட்டகையிலே. 2

மிசிமிசி லொள் - மீனுக்காரன் முள்
அரைமூடி தேங்காய் - கூட்டுக்கறி மாங்காய் 3

      * * *

சின்னக்குட்டி நாத்தனா
      சில்லரையை மாத்துனா
      ராவெல்லாம் பேசினா
      ரயிலுவண்டி ஏறினா. 4

      * * *

ஒண்ணரைக்கண்ணு டோரியா
சென்னபட்டணம் போறியா
பூனைக் கண்ணிநீ
பொழைச்சுக்குவே. 5

* * *

ஜோரான உஸ்கி ஜின்னு
      ஜோரா இருக்குது போடுபோடு
கள்ளுச் சாராயம் வாங்கி
      கலந்தடிக்க மேலே போறேன்.
கோழிக்கறி ரோஸ்டுப்போட்டு
      நாலு ப்ளேட்டுச் சாப்பிட்டேனே
மாட்டுக்கறி ரோஸ்டுப் போட்டு
      நாலு ப்ளேட்டுச் சாப்பிட்டேனே. 6

      * * *

நண்டுசிப்பிக் குள்ளே ரெண்டு
      கண்டெடுத்தேன் குண்டு முத்து
வாசமுள்ள ரோஜாப் பூவே
      வாடாத வாடாப் பூவே. 7

      * * *

மழையும் வருகுது மாங்காயும் காய்க்குது
கிளியும் வருகுது கிண்ணாரம் கொட்டுது. 8

      * * *

கடலோரத்திலே கப்பல்பார்
கப்பலிலே ஆயாபார்

ஆயா கையிலே தட்டைப்பார்
தட்டுமேலே பிள்ளையைப்பார்

பிள்ளைகையில் பழத்தைப்பார்
பழத்துக்குள்ளே பூச்சிபார்

பூச்சிக்குள்ளே கூண்டுபார்
கூண்டுக்குள்ளே கிளியைப்பார்

கிளிவாயிலே பழத்தைப்பார்
பழத்துக்குள்ளே பூச்சிபார்

ஆயாவுக்கு இடுப்பைச்சுற்றிப் பேனைப்பார். 9
* * *

தலைகாணி - உங்கப்பன்
      களவாணி. 10
* * *

கள்ளுக்கடை அண்ணாச்சி
      என்கணக்கு என்னாச்சு?
      வெள்ளிப்பணம் ஒண்ணாச்சு
      விடியற்கால நேரமாச்சு. 11
* * *

ஆரையா கடையிலே
      ஏனையா பேசலே
      போடையா ஒண்ணரை
      பூப்போட்ட கிளாசிலே. 12
* * *

ஏ ஏ கிழவா சண்டைக்கா வாறே?
      வாழைத்தண்டைத் தின்னுப்பிட்டு
      வம்புக்கா வாறே? 13
* * *

ஐயாசாமி கொய்யாப்பழம்
அடுப்பிலே போட்டால் மிய்யா மிய்யா       14
* * *

குஸ்திக்காரன் நானடா - அடேதடிமுண்டா
வெட்டிவேலை செய்யவேண்டா - அடேதடி
முண்டா. 15
* * *

வாடவெற்றிலை வதங்கவெற்றிலை
      வாய்க்கு நல்லால்லை
      குருவிகுடைந்த கொய்யாப்பழம்
      கொண்டைக்கு நல்லால்லை. 16
* * *

துடப்பக்கட்டைப் பூசை -
      அதுலே கொஞ்சம் ஆசை
அம்மா சுட்ட பணியாரம் -
      அப்பா கொண்டாந்த கடியாரம்
அம்மா போட்ட கோலம் -
      அங்கிட்டுப் போனால் பாலம். 17
* * *

வீட்டுமேலே கோழிக்குஞ்சாம்
      கிய்யாம் கிய்யாம்
      ஆற்றுமேலே ரெண்டொதையாம்
      டையாம் டையாம். 18

* * *

சின்ன உலக்கை குத்து குத்து
பெரிய உலக்கை சந்தைக்குப் போ. 19
* * *

மலைமேலே குண்டு
      மல்லிகைப்பூச் செண்டு
      உங்கப்பன் வளர்க்கிற மீசை
      உங்காத்தாள் சுட்ட தோசை. 20
* * *

பச்சைத் தவலை பளபளெங்கப்
பழனி மச்சான் மினுமினுங்க
வாழைத் தண்டை ரெண்டாவெட்டி
வளைய மறையப் பெண்ணாவச்சு
சின்னத் தம்பிக்குத் தாலிகட்டி
ஆலாத்திக் கிண்ணம் போயி
ஆற்றிலே கிணுக்கட்டி
ராட்டினமே ரதக்கிளியே
சுண்ணாம்பே சூரியனே. 21
      * * *

ஆபத்துக்கு ஏற்றாப்போலே
      கரப்பி தந்தாங்க
அவுங்களுக்கு ஏற்றாப்போலே
      இவுங்க வந்தாங்க
ராசாஉள்ளதை நான்
      சொல்ல வந்தேனே. 22
      * * *

உடும்பு தடும்பு
      தத்திலி புத்திலி
      மக்கான் சுக்கான்
      பால் பறங்கி
      லடும் லுடும்
      ஜீ ஜல்! 23
      * * *

ஓரடி ரெண்டடி
      ஒசந்த கண்ணாடி
      மாணிக்கம் மத்தளம்
      சிமிக்கி சிற்றாடை
      பாப்பாரப் பெண்ணுக்குப்
      பத்தினிக் கல்யாணம். 24
      * * *

மாமன் வீட்டுக் கல்யாணம்
மனசுக் குகந்த பாயாசம்
சேமியா விலேசெய்த
சிவப்புச் சர்க்கரை லட்டு
மாமியாள் கையிலே சுட்ட
மரிக்கின் மாவுப் புட்டு. 25
      * * *

மகாராஜ ராஜஸ்ரீ
மண்டையிலே பிளாஸ்திரி
மதுரையிலே ஆஸ்பத்திரி. 26
      * * *

ஒருகுரங்கு மலையிலே
தொங்கினதாம் குருவி
நான்நல்லஒரு வீட்டைக்கட்டி
மினுக்கட்டான்பூச்சி விளக்குவச்சேன். 27
      * * *

ஏச்சுப் புட்டேன்
      கீச்சுப் புட்டேன்
      ஏழுபணம் வாங்கிப்புட்டேன். 28
      * * *

பூபூ புளியம்பூ
      பொட்டியிலே வச்சால் தாழம்பூ
      ஈச்சி எலுமிச்சி
      பலிகொடுத்தாள் பல்லிச்சி. 29
      * * *

வெள்ளிப் பிரம்பெடுத்து
      விளையாடப் போனேன்
      தங்கப் பிரம்பெடுத்துத்
      தாலிகட்டப் போனேன். 30
      * * *

சிமிச் சிமிச்சாம் மொச்சைக் கொட்டையாம்
சும்மா இருக்கிற வள்ளிக் கிழங்காம்
கார வடை பூந்தி லட்டு
ராம் ராம் ராம்
ஆடினேன் - உன்னைப் - பாடினேன்.
சந்திரரே சூரியரே சாதிப் பிராமணரே
இந்திரரை நோக்கியல்லோ
ராம் ராம் ராம்
ஆடினேன் - உன்னைப் - பாடினேன். 31
      * * *

அண்ணன் பெண்ணே ராமக்கா
      அரிசிக் காரன் வந்திட்டான்
      சின்ன வீட்டிலே புகுந்துக்கோ
      சிலுக்குத் தாளம் போட்டுக்கோ
      புட்டைப் பிச்சுத் தின்னுக்கோ
      புருசன் கூடப் பேசிக்கோ! 32
________


10 . புலம்பல்


ஒப்பாரி

கொத்துமல்லி பூப்பூக்க - என்னைப்பெற்ற அம்மா
      கொடிகொடியாக் காய்காய்க்கக்
கோமுட்டி பெற்றபெண்ணு - என்னைப்பெற்ற அம்மா
      குழந்தையிலே அறுக்கிறேனே! 1

வெங்காயம் பூப்பூக்க - என்னைப்பெற்ற அம்மா
      வரிவரியாக் காய்காக்க
வாணிச்சி பெற்றபெண்ணு - என்னைப்பெற்ற அம்மா
      வயசிலே அறுக்கிறேனே! 2

மதுரையிலே கூடாரம் - என்னைப்பெற்ற அம்மா
      மல்லிகைப்பூ வியாபாரம்
மல்லிகைப்பூக் கேட்கப்போனால் - என்னைப்பெற்ற அம்மா
      மரத்துக்கொண்ணு கொடுப்பாரே! 3

சந்தையிலே கூடாரம் - என்னைப்பெற்ற அம்மா
      சாமந்திப்பூ வியாபாரம்
சீதைபோய்ப் பூக்கேட்டால் - என்னைப்பெற்ற அம்மா
      செடிக்குஒண்ணு கொடுப்பாரே! 4

மலைமேலே மாடுமேயும் - என்னைப்பெற்ற அம்மா
      மணிக்குழாய் ஊதிவரும்
மணிக்குழாய்ச் சத்தங்கேட்டு - என்னைப்பெற்ற அம்மா
      மங்கை புலம்புறேனே! 5

செடியோரம் மாடுமேயும் - என்னைப்பெற்ற அம்மா
      சீமைக்குழாய் ஊதிவரும்
சீதை புலம்புறது - என்னைப்பெற்ற அம்மா
      சீமைக்கெல்லாம் கேக்கலையோ! 6

பத்துப் பவுன்வாங்கி - என்னைப்பெற்ற அம்மா
      பர்த்தாவுக்குக் காப்படித்துப்
பத்தூருக் தட்டார்வந்து - என்னைப்பெற்ற அம்மா
      பர்த்தாஎங்கேண்ணு கேட்டார்களே. 7

பத்தடுக்கு மெத்தையிலே - என்னைப்பெற்ற அம்மா
      படிக்கிறாருண்ணு நான்இருந்தேன்
படிப்பை மறந்திட்டாரோ - என்னைப்பெற்ற அம்மா
      பரலோகம்போய்ச் சேர்ந்துட்டாரோ? 8

எட்டுப் பவுன்வாங்கி - என்னைப்பெற்ற அம்மா
      எசமானுக்குக் காப்படித்து
எட்டூருத் தட்டார்வந்து - என்னைப்பெற்ற அம்மா
      எசமானெங்கேண்ணு கேட்டாங்களே! 9

எட்டடுக்கு மெத்தையிலே - என்னைப்பெற்ற அம்மா
      எழுதுறாருண்ணு நானிருந்தேன்
எழுத்தை மறந்துட்டாரோ - என்னைப்பெற்ற அம்மா
      எமலோகம்போய்ச் சேர்ந்துட்டாரோ? 10

தலைவலிக்கு தென்றாரே - என்னைப்பெற்ற அம்மா
      தலைசாய்ந்து படுத்தாரே
தனிச்ச ரெயிலுவருமே - என்னைப்பெற்ற அம்மா
      தனிமருந்து தான்வருமே! 11

நீல வளையல்போட்டு - என்னைப்பெற்ற அம்மா
      நெல்லிக்காய் முகப்புவச்சு
நீலியுடை வாசலிலே - என்னைப்பெற்ற அம்மா
      நெடுநாளு வாழலையே! 12

பச்சை வளையல்போட்டு - என்னைப்பெற்ற அம்மா
      பாகற்காய் முகப்புவச்சுப்
பாவியுடை வாசலிலே - என்னைப்பெற்ற அம்மா
      பாதிநாள் வாழலையே! 13

கட்டைப் புளியமரம் - என்னைப்பெற்ற அம்மா
      கல்கண்டு காய்ச்சமரம்
கல்கண்டு தின்றோமம்மா - என்னைப்பெற்ற அம்மா
      களைசோர்ந்து நிற்கிறோமே!       14

மொட்டைப் புளியமரம் - என்னைப்பெற்ற அம்மா
      முட்டாயி காய்ச்சமரம்
முட்டாயி தின்றோமம்மா - என்னைப்பெற்ற அம்மா
      முகஞ்சோர்ந்து நிற்கிறோமே! 15


சுருட்டைப் புளியமரம் என்னைப்பெற்ற அம்மா
      சூதாடும் நந்தவனம்
சூதாடி வீடுவந்தால் - என்னைப்பெற்ற அம்மா
      சூரியனே கையெடுக்கும். 16

பரட்டைப் புளியமரம் - என்னைப்பெற்ற அம்மா
      பந்தாடும் நந்தவனம்
பந்தாடி வீடுவந்தால் - என்னைப்பெற்ற அம்மா
      பரமசிவன் கையெடுப்பார். 17

தலையெல்லாம் நான்சீவி - என்னைப்பெற்ற அம்மா
      தாழம்பூ வச்சாலும்
தலையிலே போட்டஎழுத்து - என்னைப்பெற்ற அம்மா
      தாய்கூட அறியலையே! 18

மண்டையெல்லாம் நான்வகிர்ந்து - என்னைப்பெற்ற அம்மா
      மல்லிகைப்பூ வச்சாலும்
மண்டையிலே போட்டஎழுத்து - என்னைப்பெற்ற அம்மா
      மாதாகூட அறியலையே! 19

அச்சடிமெல் லியசவுக்கு - என்னைப்பெற்ற அம்மா
      ஆனைமுக முந்தாணி
அண்ணன்தம்பி போட்டகோடி - என்னைப்பெற்ற அம்மா
      அத்தனையும் பட்டாச்சே! 20

முத்தடி மெல்லியசவுக்கு - என்னைப்பெற்ற அம்மா
      குதிரைமுக முந்தாணி
மூத்தார்வந்து போட்டகோடி - என்னைப்பெற்ற அம்மா
      முழங்காலுக்கும் எட்டலையே? 21

தாலிசெய்த தட்டான்கூட - என்னைப்பெற்ற அம்மா
      தகடுவச்சுச் செய்தானே
தாலிக் கொடிக்குப்பதிலாய் - என்னைப்பெற்ற அம்மா
      நூலைக்கோத்துக் கொடுத்தானே! 22

என்னதான் செய்வேனம்மா - என்னைப்பெற்ற அம்மா
      ஏதுதான் செய்வேனம்மா
பொன்னான புருசன்இப்போ - என்னைப்பெற்ற அம்மா
      போயிட்டாரே சிவலோகம்! 23

ஆராத் துயரம்இப்போ - என்னைப்பெற்ற அம்மா
      ஆறுபோலே வருகுதம்மா
தீராத் துயரம் இப்போ - என்னைப்பெற்ற அம்மா
      திரண்டோடி வருகுதம்மா? 24

சந்திரனும் எங்கேபோனான் - என்னைப்பெற்ற அம்மா
      இந்திரனும் எங்கேபோனான்
சூரியனும் எங்கேபோனான் - என்னைப்பெற்ற அம்மா
      சூரரெல்லாம் மறைகையிலே? 25
___________

புலம்பல்

இஞ்சி இளம்இஞ்சி - நீபெற்ற
      இந்திரனும் சின்னவனே - இந்த
      இஞ்சிமுற்றித் தோப்பானால்நீ
      இறந்துபோனால் குற்றமில்லை. 1

பாக்கு பழுத்தபாக்கு - நீபெற்ற
      பாலகனும் சின்னவனே - இந்தப்
      பாக்குமுற்றித் தோப்பானால் - நீ
      பரலோகம் ஏறலாமே! 2

பொன்னுப் புளியங்கொட்டை - இன்றைக்கும்
      பூமியிலாடும் பல்லாங்குழி
      குந்திவிளை யாடும்போது - இன்றைக்குத்
      தங்கரதம் ஏறலாமா? 3

பொன்னு வரகரிசி - இன்றைக்குப்
      பொழுதுஇல்லாமைப் போச்சு
      தங்கப் பச்சரிசி - இன்றைக்குத்
      தங்கப் பொழுதில்லையா? 4

வாய்க்கரிசி கொண்டுவர - இன்றைக்கு
      வழிரொம்ப தூரமாச்சு
      தூரத்திலே விளக்கெரிய - இன்றைக்குச்
      சூறாவளி அமைஞ்சிருச்சே! 5

எட்டுமலைக் கந்தப்பக்கம் - இன்றைக்கு
      இளைப்பாறப் போறாளாம்.
இளனிக்கண்ணு களைத்திறந்து - இன்றைக்கு
      மேலேபார்த்துப் போறாளாம். 6

பத்துமலைக் கந்தப்பக்கம் - இன்றைக்குப்
      பசியாறப் போறாளாம்.
பச்சரிசிச் சோறாக்கி இன்றைக்குப்
      பசியாற்ற முடியலையே! 7

அறைக்கீரை சிறுபாத்திநான் - இந்த
      ஐயருடையதேவி
அரும்பெடுக்கும் நாளையிலே - எங்களை
      அலையவிட்டுப் போகலாமா? 8

முளகாய்க்கீரைச் சிறுபாத்திநான் - இந்த
      முதலியாரு தேவி
மொக்கெடுக்கும் நாளையிலே - எங்களை
      மோசஞ்செய்து போகலாமா? 9

கூடத்தை இன்றைக்குக்கட்டி - இங்கே
      குயிலிரண்டு எழுதலையோ?
கூடம்மாத் திரம்இருக்க - அந்தக்
      குயில்போன மாயம்என்ன? 10

மாடத்தை இன்றைக்குக்கட்டி - இங்கே
      மயிலிரண்டு எழுதலையோ?
மாடம்மாத் திரம்இருக்க - அந்த
      மயில்போன மாயம்என்ன? 11

குளத்தங் கரையோரம்நான் - ஒரு
      குயில்போலக் குந்தியிருந்தேன்
குயிலென்றும் பார்க்காமே - ஒரு
      குண்டுபோட்டுச் சுட்டுட்டானே! 12

ஆற்றங் கரையோரம் - ஒரு
      அன்னம்போல் குந்தியிருந்தேன்
அன்னமென்றும் பார்க்காமே - ஒரு
      அம்பைவைச்சு எய்தானே! 13

பூமியைநான் நம்பியல்லோ - ரெண்டு
      புள்ளைகளைப் பெற்றெடுத்தேன்
பூமிசதி பண்ணிடுச்சே - என்
      புள்ளைதொப்பை வாடிருச்சே!       14

மானத்தைநான் நம்பியல்லோ - ரெண்டு
      மக்களைநான் பெற்றெடுத்தேன்
மானம்சதி தான்பண்ணுதே - என்
      மக்கள்தொப்பை வாடுதே! 15

குருவி சலித்ததென்றால் - அது
      காதத்துக்குக் காதம்போகும்
பொண்ணு சலித்தேனென்றால் - நான்
      எங்கேதான் போய்ஆறுவேன்! 16

காக்காய் சலித்ததென்றால் - அது
      காதத்துக்குக் காதம்போகும்
மங்கை சலித்ததென்றால் - நான்
      எங்கேதான் போய்ஆறுவேன்! 17

மானம் சலித்ததென்றால் - அது
      மண்மேலே மழைஊற்றும்
பொண்ணு சலித்தேனென்றால் - நான்
      எங்கேதான் போய்ஆறுவேன்! 18

சமைந்தபெண் சலித்ததென்றால் - அவள்
      சாக்கடைதூரந் தான்போவாள்
மங்கை சலித்தேனென்றால் - நான்
      எங்கேதான் போய்ஆறுவேன்? 19
__________

ஒப்பாரி

காசிக்குப் போனதுண்டு - நான்
      கைவிளக்கைத் தொட்டதுண்டு
கைவிளக்கைத் தொட்டபாவம் - என்
      கணவனுக்குப் பட்டதம்மா! 1


மதுரைக்குப் போனதுண்டு - நான்
      மணிவிளக்கைத் தொட்டதுண்டு
மணிவிளக்கைத் தொட்டபாவம் - என்
      மன்னவனைப் பட்டதம்மா! 2
* * *

கொத்துமல்லிப் பூப்பூக்கும்
      கொடிகொடியாக் காய்காய்க்கும்
கோபாலன் பெற்றபொண்ணு
      குழந்தையிலே கொல்லலாமா? 1

முந்திரிப் பழம்பழுக்கும்
      முன்னால் குலைசாயும்
முகத்துக்கு முன்னாலே
      முண்டைக்கொடி ஆகலாமா? 2

கத்திரிப் பூப்பூக்கும்
      காசுபோலக் குலைசாயும்
கண்ணுக்கு முன்னாலே
      கருங்கொடி ஆகலாமா? 3
* * *

கண்ணு புளியமரம்
      கைகாட்டி ஆலமரம் - நீ
கைகாட்டி வச்சஇடம்
      கனத்தகொடி ஆகலையே! 1

பொன்னு புளியமரம்
      பொய்காட்டி ஆலமரம் - நீ
பொய்காட்டி வச்சஇடம்
      பெரியகொடி ஆகலையே! 2
      * * *

தாழை மலைஓரம்
      தங்கியிருக்கப் போனாலும்
தாழைமுள்ளுக் குத்துறது
      தங்கியிருக்க முடியலையே! 1

தங்க மலைஓரம்
      தங்கியிருக்கப் போனாலும்
தங்கமுள்ளுக் குத்துறது
      தங்கியிருக்க முடியலையே! 2

பொன்னு மலைஓரம்
      பொழைத்திருக்கப் போனாலும்
பொன்னுமுள்ளுக் குத்துறது
      பொழைத்திருக்க முடியலையே! 3
      * * *

வேலிமேல் கற்றாழை
      வெண்கலமோ என்தாலி
விடியற்காலம் கழற்றலாமோ
      வேண்டியஜனம் பார்க்கலாமோ! 1

கல்லின்மேல் கற்றாழை
      கற்பூரமோ என்காதலி
காலையிலே கழற்றலாமோ
      கழன்றஜனம் பார்க்கலாமோ! 2
      * * *

கல்லுமேல் கல்லடுக்கிக்
      கயிலைமலை போனாலும்
கல்லும் சறுக்கிச்சே
      கயிலைமலை எட்டலையே! 1

ஏணிமேல் ஏணிவச்சு
      யமுனைக்கரை போனாலும்
ஏணி சறுக்கிச்சே
      யமுனைக்கரை எட்டலையே! 2
      * * *

அரிசியை மடியில்கட்டி - நான
      ஆத்திலே இறங்கினாலும்
அரிசியும் நனையலையே - நீங்கள்வச்ச
      ஆத்திரமும் தீரலையே! 1
      * * *
கொள்ளை மடியில்கட்டி - நான்
      குளத்திலே இறங்கினாலும்
கொள்ளு நனையலையே - நீங்கள்வச்ச
      கோபமும் தீரலையே! 2

குளத்தைச்சுற்றிக் கல்பொறுக்கிக்
      குதிரைக்கு லாடங்கட்டிக்
குதிரை நெருஞ்சிமுள்ளு
      குத்துதம்மா தேகமெல்லாம். 1

ஆற்றைச்சுற்றிக் கல்பொறுக்கி
      ஆனைக்கு லாடங்கட்டி
ஆனை நெருஞ்சிமுள்ளு
      அப்புதம்மா தேகமெல்லாம். 2
      * * *

ஊரெங்கும் உன்சேனை - நீ
      உள்ளே பரதேசி
நாடெங்கும் உன்சேனை - நீ
      நடுவே பரதேசி. 1

சுற்றிநின்று மாரடிக்க - உனக்குச்
      சுற்றத்தார் மெத்தஉண்டு
வளைத்துநின்று மாரடிக்க - உனக்கு
      வங்கிசத்தார் மெத்தஉண்டு. 2

வந்தார் அழுவினையோ - உன்
      வங்கிசத்தார் இல்லாமல்
ஊரார் அழுவினையோ - உன்
      உற்றவர்கள் இல்லாமல்! 3

உற்றார் அறியாமல் - உனக்கு
      உடன்மரணம் வந்ததென்ன?
சாதிசனம் அறியாமல் - உனக்குச்
      சதிமரணம் வந்ததென்ன? 4
      * * *

அந்திபட்டோ செத்தசவம் - நீங்கள்
      ஆக்கிஉண்டு வந்தியளோ?
பொழுதுபட்டோ செத்தசவம் - நீங்கள்
      பொங்கிஉண்டு வந்தியளோ? 1

ஊரும் இரண்டாச்சோ - உங்களுக்கு
      ஊடே கடலாச்சோ
நாடும் இரண்டாச்சோ - உங்களுக்கு
      நடுவே கடலாச்சோ? 2

அறிந்திருந்தும் வந்தியளோ
      அறிவுகெட்ட மானிடரே
கேட்டிருந்தும் வந்தியளோ
      கேடுகெட்ட மானிடரே? 3

காகம் பறக்கவில்லை - எங்களுக்குக்
      கண்டவர்கள் சொல்லவில்லை
தேகம் பறக்கவில்லை - எங்களுக்குத்
      தெரிந்தவர்கள் சொல்லவில்லை. 4

கேட்டுவாய் கேட்டுநாங்கள்
      கேட்டறிந்து வந்தோமே
ஊர்வாயைக் கேட்டுநாங்கள்
      ஓடிஓடி வந்தோமே! 5

சீவன் இருக்கையிலே - நீஒரு
      சீட்டெழுதி விட்டாயில்லை
ஆவி பிரியுமுந்தி - நீஒரு
      ஆளனுப்பி விட்டாயில்லை. 6

கத்திரிக்காய் விற்றஇடத்தில் - ஒரு
      காரையூரான் சொன்னானடி
பூசனிக்காய் விற்றஇடத்தில் - ஒரு
      புத்தூரான் சொன்னானடி. 7

அருவிப் புலத்திலேநான்
      ஆளோசை கேட்டுவந்தேன்
குருவிப் புலத்திலேநான்
      குரலோசை கேட்டுவந்தேன். 8
__________


11. கும்மி


நன்னன்னா கொட்டவும் நாளாச்சு - அம்மா
      நாணயமான ஏரிக்குள் ளேதான்
ஏரிக்குள் ளேஒரு படகு போகுது
      ஏலேலம் கொட்டடி கூலிக்காரி. 1

கல்லு மலைமேலே கல்லுருட்டி - அந்தக்
      கல்லுக்கும் கல்லுக்கும் அணைபோட்டு
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டி - நம்ம
      மன்னவன் வாறதைப் பாருங்கடி. 2

இரும்பு நாற்காலி போட்டுக்கிட்டு - அவர்
      எண்ணெயும் தேச்சுத் தலைமுழுகி
எல்லா வேலையும் முடிச்சுக்கிட்டு - அவர்
      எப்போ வருவாரு கச்சேரிக்கு? 3

வாறாரு போறாரு என்றுசொல்லி - அவள்
      வாழை யிலையிலே பொங்கல் வச்சால்
வந்தாப் போலேதான் வந்துகிட் டிருந்து
      வெண்கலக் கூடாரம் அடிச்சாராம். 4

புற்றுமண்ணை வெட்டிப் பொங்கல்வைத்து - அவள்
      புள்ளை தவத்துக்குப் போகையிலே
புள்ளையும் கொடுப்பார் புண்ணிய சாலி
      புன்னை மரமேநீ தான்சாட்சி. 5

வண்ணான் தப்புற கல்லுமேலே - அடா
      வழி நடக்கிற சேவகரே
சித்திரை மாசம் கலியாணம் - நாங்கள்
      சொல்லிவிட்டுப் போனோம் பட்டாளம். 6

கொண்டவனை அடிக்கிற பெண்டுகளா - உங்கள்
      தொண்டைக்கு என்னாங்கடி கம்மலு
தொண்டை வலிக்குச் சாராயம் - அந்தத்
      தொடை வலிக்கு வெந்நீரு. 7

முத்தே முத்தேநீ கும்மியடி - அடி
      மோகன முத்தேநீ கும்மியடி
கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச் சுக்கட்டும்
      கண்ணாடி முத்தேநீ கும்மியடி. 8

ஓடாதே ஓடாதே தொள்ளைக் காதா - நீ
      ஓட்டம் பிடிக்காதே இல்லிக்கண்ணா
மாட்டு எலும்பை எடுத்துக்கிட்டு - நான்உன்
      மார்பெலும்பை யெல்லாம் தட்டிடுவேன். 9

பத்துப் பெண்களும் கூடிக்கிட்டு - நம்ம
      பட்டணம் மைதானம் போகையிலே
பார்த்துக்கிட் டிருந்த பறப்பயல் ஒருத்தன்
      பட்டுமுந் தாணிமேல் ஆசைவைத்தான். 10

ஊரான் ஊரான் தோட்டத்திலே - அங்கே
      ஒருத்தன் போட்டது வெள்ளரிக்காய்
காசுக்கு ஒண்ணொண்ணு விற்கச்சொல்லி - அவன்
      காயிதம் போட்டானாம் வேட்டைக்காரன். 11

வேட்டைக்கா ரன்பணம் வெள்ளிப்பணம் - அது
      வேடிக்கை பார்க்குது சின்னப்பணம்
வெள்ளிப் பணத்துக்கு ஆசைவச்சு- அவள்
      வீராயி வந்தாடி ஆராயி. 12

தேனும் உருளத் தினைஉருள - அந்தத்
      தேங்காய்த் தண்ணீரும் அலைமோத
மாங்காய் கனிந்து விழுகுதுபார் - அந்த
      மகராசன் கட்டின தோட்டத்திலே. 13

இந்தநல்ல நிலா வெளிச்சத்திலே - அம்மா
      என்னைக்கல் லாலே அடிச்சதாரடி
அவர்தாண்டி நம்ம எல்லாருக்கும் மாமன்
      அன்று மாம்பழங் கொடுத்தவரு.                 14

ஆற்று மணலிலே ஊற்றெடுத்து - அம்மா
      அஞ்சாறு மாசமாச் சண்டைசெய்து
வேற்று முகப்பட்டு வாறாரே - அம்மா
      வெள்ளிசங் கங்கட்டி வீசுங்கம்மா. 15

நாகப் பட்டணக் கடற்கரையில் - நம்ம
      நல்லவே ளாங்கண்ணித் தாயாரு
ஆவணிமாசம் பதினெட்டாந் தேதியில்
      அம்மா புதுமையைப் பாருங்கம்மா. 16

குச்சியும் குச்சியும் பொன்னாலே - அந்த
      ஆவாரங் குச்சியும் பொன்னாலே
திருப்பத் தூரு தேவமா தாவுக்குத்
      திருமுடி கூடப் பொன்னாலே. 17

புலியைக் குத்திப் புலிவாங்கி - அந்தப்
      புலிவாயைத் திறந்து மிளகா யரிஞ்சு
சோடிப் புலிகுத்தும் நம்மண்ணன் மாருக்குச்
      சுருளு வருவதைப் பாருங்கம்மா. 18

அக்காதங் கச்சிகள் ஏழுபே ருநாங்கள்
      ஆருக்கும் அடங்காத வேங்கைப்புலி
வெள்ளிப் பிரம்பைத்தான் கையிலே பிடித்தால்
      எங்கேயும் பறக்கும் வேங்கைப்புலி. 19

பாக்கு பட்டையிலே சோறாக்கி - அந்தப்
      பாலத்துக் குமேலே நெய்யுருக்கித்
தேக்கிலையிலே தீனிபோட் டுத்தின்னத்
      தொரைமாரு எப்போ வருவாங்களோ? 20

நடுக்காட்டுக் குள்ளே தீயெரிய - நம்ம
      நாலு துரைமாரும் தீனிதின்ன
இவள்தாண்டி மதுரை மீனாட்சி - சீலை
      இழுத்துப்போர்த் திக்கிட்டு வாறாளடி. 21
      * * *

கும்மிப் பாட்டு

பாட்டறிவும் படிப்பறிவும் எங்கள்
      பள்ளிக்கூ டத்திலே உன்னறிவும்
ஏட்டறிவும் எழுத்தறிவும் தந்து
      எங்கள்வா யில்வந்த சரஸ்வதியே. 1

தயிருக் கூடையைத் தலையிலே வைத்துத்
      தங்கக்கம் பிச்சீலைப் பட்டுடுப்போம்
தயிருக்கூடை தளும்பினா லும்எங்கள்
      தங்கக்கம் பிச்சீலை மங்காது. 2

மோருக் கூடையைத் தலையிலே வைத்து
      முத்துக்கம் பிச்சீலைப் பட்டுடுப்போம்
மோருக் கூடைத ளும்பினா லும்எங்கள்
      முத்துச்சீ லைக்கம்பி மங்காது. 3

கும்மியடிக்கிற பெண்டுக ளாஒரு
      கோளாறு சொல்கிறேன் கேளுங்கடி
அம்மியைத் தூக்கி மடியிலே கட்டி
      ஆழக் கிணற்றில் இறங்குங்கடி. 4

நெல்லு விளைந்ததைப் பாருங்கடி அம்மா
      நெல்லுகள் சாய்ந்ததைப் பாருங்கடி
நேற்றுப் பிறந்தநம் பேரப் பிள்ளைக்கு
      மீசை முளைத்ததைப் பாருங்கடி. 5

ஆற்றிலே தண்ணீர் ஓடாதா - அம்மா
      ஆரால் குஞ்சுகள் மேயாதா?
நேற்றுப் பிறந்த அத்தை மகனுக்கு
      நெற்றியிலே தண்ணீர் பாயாதா? 6

புத்தம் புதுச்சட்டி வாங்குங்கடி - அம்மா
      பூசைக்கு முஸ்தீப்புச் செய்யுங்கடி!
நம்ம மாமனை நல்ல தனம்பண்ணி
      நல்ல ரூபாயைத் தட்டுங்கடி. 7

சித்திரை மாசத்து வெய்யிலிலே - என்னை
      விட்டுட்டுப் போனாயே பர்த்தாவே!
பிள்ளை பிறக்கவும் பல்லு முளைக்கவும்
      பேர்வைக்க வந்தாயோ ராசாவே? 8

ஓடுறதண் ணீரைக் குறுக்காட்டி - ஒரு
      மல்லிகைச் செடியை வளரவைத்துக்
கூடு குலுங்க ரதங்குலுங்க - அம்மா
      கூடப் புறப்பட்டாள் பொம்மியம்மா. 9

மலையைச்சுற் றிநல்ல கூடாரம் - அங்கே
      வந்து இறங்குதாம் பட்டாளம்.
பட்டாளத் தைச்சுற்றி யிருக்கிற ஜனங்கள்
      பட்டாளத் தையெல்லாம் வாழ்த்தினார்கள். 10

அவலு பெருத்தது ஆர்க்காடு - நல்ல
      வெல்லம் பெருத்தது வேலூரு.
பணம்பெ ருத்தநீ லகிரிக்கு நீங்கள்
      பரந்து பாவாடை போடுங்கடி. 11

வந்துஇவ் வளவு நேரமாச்சு - அம்மா
      வள்ளித்தா யேஉங்கள் வாசலுக்கு
காணிக்கை இருந்தால் தந்திடுங்க நாங்கள்
      கடைவீதி யெல்லாம் சுற்றப் போகவேணும். 12

அரைக்காசோ அம்மா ஒருகாசோ - அம்மா
      அதுக்குத் தானா பயந்துக்கிட்டே
பெரிய கடைக்கு வந்தாயென் றால்எங்கள்
      தலையைச் சுற்றிப் பணம் எறிவோம். 13

அரைவெங் காயமும் சிறுவெங் காயமும்
      அடுப்பிலே போட்டுக் கருகவச்சு
தாளித்த சட்டியை வழித்து நக்கின
      வெட்கங்கெட் டமூளி வெளியேவா.       14

மாமரத் துமேலே ஏறிக்கிட்டு - அடி
      மஞ்சள் குளிக்கிற சின்னத்தங்கா!
காம்பரிஞ் சுவச்ச வெற்றிலைக் குஎல்லாம்
      களிப்பாக்குக் கொண்டு வாறானடி. 15

வெள்ளிக் கிழமை ஒருநாளு - அம்மா
      வெள்ளைப் புறாமேலே சீனிகட்டிச்
சொல்லுக் கடங்காத நம்மண்ணன் மாரு
      சொக்கவண் டிமேலே கோலம்வாறார். 16

வெட்டுப்பட் டார்சேசு குத்தும்பட்டார் - அவர்
      வெள்ளிப் பிரம்பால் அடியும்பட்டார்.
பாவிக ளுக்காகப் பாடுபட் டார் - அவர்
      பாரச் சிலுவையைத் தோளில்வைத்தார். 17

வட்டப்பொட் டுகளும் வச்சுக்கிட்டு - அந்த
      வாணியப் பெண்களும் கூட்டிக்கிட்டுச்
சொக்கவண் டிமேலே கோலம்வாறாரு
      சுப்பிர மணிய சாமியாரு. 18

சாராயக் காரா சதிகாரா - அடா
      சாராயம் விற்கிற ராமலிங்கம்!
நீகொடுத் தபட்டைச் சாராயம் - இங்கே
      நித்தமும் சண்டைகள் வாங்குதப்பா. 19

காக்காச் சோளம் கருஞ்சோளம் - எல்லாம்
      கலந்து குத்துற நாளையிலே
துடிது டித்தஎன் துள்ளுமீ சைக்காரன்
      தூங்குறான் பாரம்மா தொட்டியிலே. 20
* * *

வள்ளியம்மை கும்மி

வாங்கடி வாங்கடி தோழிப்பெண்காள் - வள்ளி
      மாமயில் பாட்டைப் படியுங்கடி.
கானலில் இருந்த மாமயிலே - கந்தன்
      கண்ட கதையைப் படியுங்கடி. 1

பொன்மான்பெற் றெடுத்த கண்மணி வள்ளியைக்
      கண்டார்க ளேகாட்டு வேடர்களும்
இன்பமாய் அவர்கள் எடுத்தார்கள் கையிலே
      சுந்தர வள்ளி அம்மனையுந்தான். 2

ஆணிபோல் கயிற்றை நல்லா முறுக்கி
      அழகான தொட்டி ஒண்ணுஞ் செய்து
பேணி வளர்த்தார்கள் கோணா முகத்தோடே
      பொன்னுக்குப் பிறந்த கண்மணியே. 3

கொஞ்சிக் குழந்தையை முத்தமிட் டுஇன்னம்
      கொத்துக்கொத் தாக நகையும்போட்டு
பத்தரை மாற்றுப் பொன்னைப்போ லேரொம்பப்
      பத்திர மாய்வளர்த்து வந்தார்கள். 4

காதுகுத் திப்பஞ்சு தக்கைவைச்சுச் - சின்னக்
      காலுக்குக் காலாழி பீலிமாட்டி
கங்கணம் வேறே கையிலே பூட்டிக்
      கண்கள் ரெண்டுக்கும் மையிட்டார்கள். 5

கைக்குக் கணையாழி மோதிரமும் - பொன்
      கால்கள் ரெண்டுக்கும் காப்புகளும்
கண்டதெல் லாம்போட்டுக் கண்குளி ரப்பார்த்துக்
      காப்பாற்றி வந்தார் கரிசனமாய். 6

மங்கை பெரிய மனுசியாயி - மனம்
      குன்றாமல் காலங் கழிக்கையிலே
மாரியாத் தாள்கூட மனசிரங்கி - மழை
      மட்டில்லாமல் பொழிய வைத்தாள். 7

வெள்ளி முளைத்திட ஓரத்திலே - தினை
      விதைக்க நல்ல நிலம் பார்த்து
வெட்டிப் பயிரிட்டு வேலிகட்டி - அங்கே
      வேடனெல் லாங்கூடிக் காடுசெய்தான். 8

காடு விதைத்துப் பயிராகித் - தினை
      கதிரு வாங்கி மணிபிடித்துக்
காட்டுவெள் ளாமையைப் பார்க்கப்பார்க்க - அவர்
      கண்கள்எல் லாமே கலங்கிப் போச்சு. 9

அண்ணன்மா ருசொல்லைத் தட்டாமல் - வள்ளி
      ஆனந்த மாவேலைக் காரியோடே
திண்ணைமே லெப்போதும் உட்கார்ந்து - நல்ல
      தினைமாவைத் தேனோடே சாப்பிடுவாள். 10

காட்டுத் தினைவயல் காக்கையிலே - வள்ளி
      கல்லுங் கவணும்கை யிலேவைத்துக்
காக்காய் குருவிஎல் லாந்துரத்த - மெத்தக்
      கம்பீர மாகக் கவணெறிந்தாள். 11

ஆலோலம் ஆலோலம் என்றுசொல்லி - வள்ளி
      கோலா கலமாகக் கவணெறிந்தாள்.
காட்டிலே தவஞ்செய்த நாரத முனிதான்
      கண்ணைத் திறந்துஇவ ளைப்பார்த்தான். 12

பூமி புகழும் மனோன்மணியோ - இவள்
      பூலோக ரம்பையோ பொன்மகளோ?
பூமியில் இவளைப்போல் எவளையும் பார்க்கலை
      காமி ரதிக்குச் சரிக்குச்சரி. 13

பேரென்ன ஊரென்ன ஆரம்ம நீசொல்லு
      பேதைய ரேபசுங் கோதையரே!
பூமி பிரமிக்கப் பெற்றெடுத்த - உங்கள்
      தாய்தகப் பன்பேரைச் சொல்லுங்கம்மா.         14

சொல்லுறேன் கேளையா மாமுனியே - நாங்கள்
      சொல்லுத் தவறாக் குறச்சாதி
சொந்தக்கா ரரும்என்னைப் பெற்றவரும் - அந்தச்
      சேரியி லேதான்எப் போதுங்குடி. 15

எங்கப்பன் பேர்வந்து நம்பிராசன் - ஆனால்
      எங்கம்மாள் பேர்வந்து நங்கையம்மா
என்பேரை எல்லோரும் வள்ளிஎன்பார் - ஆனால்
      உங்கள்பே ரைச்சற்றே சொல்லுங்களேன். 16

நாடெல்லாம் புகழ்பெற்ற நாயகியே - வள்ளி
      நாரதன் என்பேரு கேளுங்கம்மா.
நான்வந்து மேல்லோகம் பூலோகம் எல்லாத்தையும்
      நடுநடுங் கவைக்கச் சத்திருக்கு. 17

கேளுங்கம் மாவள்ளிப் பசுங்களி யே உன்னைக்
      காணக்கந் தசாமி காத்திருக்கார்.
கோடானு கோடித்தே வர்களெல் லாம் - அவரைக்
      கொண்டு பணிவாரே தண்டனிட்டு. 18

வேத முனிசிவ ஞானத்தி லேஎன்று
      மெத்தப் பெரியவ னாமதித்தேன்
நாதாரி நாயைப்போல் நீஇப்போ தென்னிடம்
      நங்கு விகடமும் பண்ணவந்தாய். 19

கந்தனைக் கூடிக் கலந்தத னால்உனக்குக்
      கனக்குறை வாகுமோ, குறமகளே!
கபடமா நீஇப்போ கண்ட படிபேசிக்
      கந்தனைப் பழிக்காதே கண்மணியே! 20

வேதத்தி லேசிறந் தமுனி யேஉன்றன்
      வித்தைகள் என்னிடம் செல்லாதேடா!
பேதையைப் போலநீ பேய்க்குணத் தோடிப்போ
      பெண்ணான என்னைஏ மாற்ற வந்தாய். 21

எங்கே பார்த்தாலும் உங்கள் குறச்சாதி
      ஏமாற் றிக்கிட்டுத் திரியலையா?
தங்க மயமான கந்தனை இப்போநீ
      தாறுமா றாகவே பேசுறியோ? 22

துள்ளுறமாடு பொதிசுமந் தகதை
      எள்ளள வாவது கேக்கலையோ
கள்ளனென் றுஎன்னைக் கண்டபடிநீயும்
      கல்கருங் கல்லைப்போல் பேசாதேம்மா. 23

ஆர்சொன்னார் இப்புத்தி நாரத னேநீயும்
      ஆண்பிள்ளை யைப்போலப் பேசுறையே
அண்ணன்மார் இப்பவே வந்திங்கே உன்னையே
      ஆட்டைப்போல் உரிப்பார்கள் நாரதனே. 24

வால சரவண வேலன் உனக்கேற்ற
      மாப்பிள்ளை தான்வள்ளி நாயகியே
மங்கிலி யம்இப்ப வேஉனக் குமாட்டி
      மாலை யிடநல்ல வேளையிது. 25

மெத்தப் படித்தசந் யாசிஎன் றாய் - இப்போ
      சத்தம்போ டாமேநான் சும்மாருக்கேன்.
பத்தினி என்னைப் புத்திமா றாட்டவேநீ
      பதுங்கி வந்தாயாடா பாதகனே? 26

ஆனை புலிகரடி எல்லாம் பயப்படும்
      அண்ணன்மார் ஏழுபே ரும்வருவார்.
அநியாய மாகநீ அவதிப் படுவாயே
      அப்புறம் என்மேலே வருத்தம் வேண்டாம். 27

நல்ல சுபமுகூர்த்த நாளிலே உன்னை
      நாதன் சிவகிரி வேலனுமே
நம்பிக்கை யாஉன்னை மாலையிடும்போது
      நாரதன் வேடிக்கை பார்க்கப்போறேன். 28

வீண்சம் பிரதாயம் பேசாதே நாரதா
      வேறேவே லைஉனக் கில்லையோடா
வேசியென்று நீஎன்னை வீணாக நினைத்துப்
      பேசத் துணிந்தாயா நாசகாலா? 29

எந்தவி தஞ்சொல்லி யும்வள்ளிப் பெண்ணுக்குச்
      சம்மதம் இல்லைஎன்று முனிதிகைச்சு
மந்த மனசை மயக்க முடியாமே
      வானமும் பூமியும் பார்த்துநின்றார். 30

நாரத முனிவன் நாயகி வள்ளியை
      நயந்து கேட்டும் முடியாததால்
வேறொரு தந்திரம் செய்யவே யோசித்து
      வேடர்காட் டைவிட்டுத் தூரப்போனார். 31

வள்ளியைப் போலொரு படம்வ ரைஞ்சு - அதற்கு
      வர்ணப்பூச் சுகளெல் லாம்பூசி
வள்ளைத்தண் டைப்போலக் காதெழுதி - அதில்
      வச்சிரத் தொங்கல் முருகெழுதி 32

செண்பகப் பூவைப்போல் மூக்கெழுதி - அதில்
      சிங்கார முக்குத்தி தானெழுதி
செல்வரா சாத்திபல் லும்எழுதி - பின்னே
      செக்கச் செவேலென் றுதடெழுதி 33

கண்ணகி யைப்போலே கண்ணெழுதி - அந்தக்
      காம ரதிகழுத் தும்மெழுதி
கால்கைஎல் லாத்தையும் சேர்த்தெழுதி - அதில்
      கெண்டைமீன் தாமரைப் பூவெழுதி 34

எல்லா வற்றையும் எழுதிமுடிச்சு - முனி
      வள்ளி யழகையும் பார்த்தபோது
எல்லா உலகமும் படைத்தநா தன்கந்தன்
      எங்கென்று தேடித் திரிந்தானே. 35

காடுமே டெல்லாம் கடந்துபோய்க் கடைசி
      கந்தன் வீடுபோய்ச் சேர்ந்தான்முனி
கந்தனைக் கண்டிட்டுக் காலிலே விழுந்து
      கையிலே கொடுத்தான் படத்தைத்தானே. 36

கந்தன் கையிலே படத்தைவாங் கிக்கொண்டு
      கண்ணிரண் டும்நன்றாய்த் துடைத்துப்பார்த்துக்
காமம்மீ றித்தலைக் கேறிப்பித் துப்பிடித்துக்
      கட்டிலி லேகதறி விழுந்தழுதான். 37

கண்ணேபெண் ணேபொன்னே வள்ளி வள்ளியென்று
      கையிலே படத்தைப் பிடித்துக்கொண்டு
கண்ணைச் சிமிட்டாமல் காதலோ டேபார்த்துக்
      கண்கலங் கிநின்றான் கந்தன்தானே. 38

கட்டிப் பிடித்துச்சேர மாட்டாயோடி - என்
      காதலைக் கண்டும் உருகாயோடி?
கட்டிக் கரும்பே கனியே மணியே - என்
      கவலையைத் தீர்க்கமாட்டா யோடிநீ? 39

பெண்கொடி யேபசுந் தங்கமே நீசற்றே
      பேசினால் வாய்முத்தம் சிந்திடுமோ?
என்மேல் உனக்கென்ன கோபஞ்சொல் கண்மணி
      ஏங்கி யிருக்கேனே உன்மேலேநான். 40

சித்தம் இரங்கி உருகமாட் டாயோ - நான்
      செத்தாலும் உன்னை மறக்கமாட்டேன்
சத்திய மாஉன்னைப் பாதுகாப் பேன் - என்னை
      நிச்சய மாநம்பு நேசக்கண்ணே. 41

வாய்திறந் துபேசு அம்மா ளே - இந்த
      வம்பெல்லாம் செய்யாதே பொன்மானே!
நோயெனக் குவந்து நொந்துபோ னால் - நான்
      நீதான் காரணம் நீலக்குயிலே. 42

பித்துப் பிடித்த மனிதனைப் போல்கந்தன்
      இப்படி யெல்லாம் கதைபேசி
எப்படி யும்வள்ளி யம்மையைத் தேடிக்
      கட்டவே ணும்மென்று சபதஞ்செய்தார். 43

கந்தன் முதல்தாரம் தெய்வா னையம்மா
      கண்டு பிடித்தாள் சங்கதி யெல்லாம்
வந்த வுடனே நாரதனைப் பார்த்தவள்
      கண்ட படியாக் குடைகுடைந்தாள். 44

அன்னைதெய் வானையே கேளுங்கம் மாகொஞ்சம்
      அடியேன் மேலொரு குற்றம்இல்லை
ஆகாசம் பூமியும் பாதாள மும்சாட்சி
      அம்மணி வள்ளியைக் காட்டில்கண்டேன். 45

தேவரெல் லாம்பணி யுங்கந்த சாமியைத்
      தேடியே நானிங்கே ஓடிவந்தேன்
தேவிவள் ளியைக்கண்ட தைத்தவிரநான்
      வேறொன்றும் அவருக்குச் சொல்லலையே. 46

உண்டவீட் டுக்குநீ ரெண்டகம் செய்தாயே
      ஓகெடு வாய்பாவி நாரதனே!
உள்ளாக நீயுந்தான் இல்லாமல் இருந்தால்
      ஒன்றும் நடக்காதே பாதகனே. 47

இத்தனை யுஞ்செய்து கத்திரி நட்டவன்
      இல்லேண்ணு எங்கிட்டே சொல்லவந்தாய்
இதைநீ ஒருகதை மாதிரி சொன்னாலும்
      ஏமாந்து போவேனோ நாறல்நாயே? 48

கோள்குண் டுணிசொல்லிக் குடியெல்லாம் கெடுக்கிற
      கொலைகாரன் உன்னைப்போல் யாருமுண்டோ
குறவள்ளி யைப்போலே படம்ஒன்று வரைந்து
      கொடுக்கவில் லையோடா கந்தனுக்கு? 49

தொட்டியை ஆட்டித் தொடையை அறுக்கிற
      புத்தியைத் தானடா நீகாண்பித்தாய்
சத்தியம் மேலேநீ சத்தியம் செய்தாலும்
      சந்தேகம் தீராதென் நெஞ்சைவிட்டு. 50

தந்திர மாஎன்றன் கந்தசா மிக்குத்
      தந்தவன் நீதான டாபடத்தை
இங்கிருந் திப்போதே போகாவிட் டால்நீ
      ஈக்கும்நாய்க் கும்இரை யாத்தான் போவாய். 51

பஞ்சணை மெத்தைமேல் படுத்தே உறங்கின
      கந்தனைத் தெய்வானை யும்பார்த்து
கந்தரே வள்ளியைக் கட்டணு மென்றுதான்
      இந்த மாதிரி உறங்கிறேண்ணாள். 52

என்னை விடவள்ளி பெரியவ ளோபின்னே
      எதனாலே அவள்மேலே காதல்கொண்டீர்
எதுக்கு நீங்கள்போய்ப் பார்த்துவாங் கஆனால்
      என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். 53

தாகந் தெளிந்து மனங்குளிர்ந் துகந்தன்
      தழுவிமுத் தமிட்டான் தெய்வயானையை
தேனேமா னேதெய்வ யானைஉன் முகத்தைத்
      தெரிசிப்பேன் திங்களி லென்று சொன்னான். 54

வள்ளி யிருக்கும் தினைக்காட்டுக் குஇப்போ
      வழிதெ ரியலை நாரதனே!
எந்த வழியில்நீ வந்தாயோ அதிலே
      என்னையும் கூட்டிப்போ நாரதனே. 55

வேடரா சன்போலே வில்லும்அம் பும்வைத்து
      வேல்முரு காதலையில் முடியும்வைத்து
ஆனைமே லேநீங்கள் அம்பாரி யும்வைத்து
      அடிமையை நம்பியே வாங்கசாமி. 56

அப்படி யேகந்தன் வேடக்கோ லங்கொண்டு
      ஆறு முகத்தையொரு முகமாக்கி
அம்பையும் வில்லையும் அரையி லேசெருகி
      ஆனைமேல் ஏறித்தான் போனாரே. 57

கந்தனும் நாரத னும்வழி கூடியே
      காடு மலையெல்லா மேகடந்து
கன்றுக்குட் டிதினைக் காட்டைக்காத் துவந்த
      கண்மணி வள்ளியைக் கண்டார்களே. 58

கண்ணுக்குள் ளேநின்ற காம ரதிஉன்மேல்
      காதல்கொண் டேனடி மாமயிலே
கண்ணே பசும்பொன்னே இப்போதென் னைநீயும்
      கட்டி ஒருமுத்தம் தரமாட்டையோ? 59

மாரன்விட் டகணை மாரைப் பிளக்குது
      மாதே உனக்கு மனம்இல்லையோ
மன்மத னைப்போலே உன்னைத்தே டிவந்தேன்
      இன்னும்என் கூடநீ ஏன்பேசலை? 60

சொன்னதெல் லாம்காதில் கேட்கலை யோநீ
      என்னையும் கண்ணாலே பார்க்கலையோ
பெண்ணே கண்ணேமனம் புண்ணாகு துசொன்னேன்
      பேரையும் ஊரையும் சொல்லம்மணி. 61

வானம்பூ மிதண்ணீர் எல்லாவற் றுக்கும்நான்
      வஞ்சிமார்த் தாண்டன்போல் ராசாவடி
தேனேநீ இருக்கும் மாமலைக் கும்இன்னம்
      தினைக்காட்டுக் குங்கூட ராசாவடி. 62

ஆசைக்கா ரனுக்கு ரோசமில் லையென்று
      பேசவந் தாயாடா வேடுவனே
ஆசாரம் பாசாரம் ஒன்றுமே இல்லாத
      நீசாஓ டிப்போடா என்னைவிட்டு. 63

வம்புக்குச் சண்டை வளர்க்கமாட் டோம்ஆனால்
      வந்தசண் டையும் விடவே மாட்டோம்
வம்புதும் புநீ செய்யப்பார்த் தாயானால்
      அம்புவந் துன்னைத் துளைக்குமடா. 64

இப்படிப் பேசையில் எப்படி யோவேடர்
      எங்கிருந் தோஇங்கே வந்தார்களே
தப்பும் வழிதம்பி ரான்உட னேசெய்து
      தள்ளாத கிழவனைப் போலானான். 65

தொண்ணூறு வயசுக் கிழவனைப் போல்உடல்
      தொங்கியே கண்கள் பஞ்சடைந்து
தடுமாறித் தடுமாறித் தடியைக்கையி லேபிடித்துத்
      தந்திர மாக்கந்தன் தாளம்போட்டான். 66

கொட்டிய பஞ்சைப்போ லேநரைத் துப்பல்லும்
      கிட்டியே வாயெச்சி லும்ஒழுக
தொட்டியில் இருக்கும் பிள்ளையைப் போலவன்
      தத்திக்குத் திவிழுந் தெழுந்திருந்தான். 67

செம்புலித் தோலைத் தரையிலே விரித்துச்
      செம்பொன்று கையிலே யும்பிடித்துச்
சிவனடை யாளமும் நெற்றியி லேவைத்துச்
      சிவயோகி யைப்போலே உட்கார்ந்தானே. 68

பழுத்த பழம்போலே பாதையில் இருந்த
      பண்டாரத் தைஅண்ணன் மாரும்பார்த்துப்
பணிவாய்க்கிட் டேவந்து இனிமையா வும்பேசி
      பணிந்தார்கள் பண்டாரத் தைத்தானே. 69

ஐயாவே பண்டாரச் சாமிநீ எங்களை
      ஆண்ட குலதெய்வம் போலிருக்கே
அடிமேல் அடிவைத்துத் தடுமாறி இடம்மாறி
      ஆண்டவ னேஇங்கே ஏன்நீவந்தாய்? 70

சொல்கிறேன் கேளுங்கள் ஐயாமா ரேநான்
      தூர வடபக்கம் போய் வாறேன்
தொல்லை பிடித்தஇந்தப் பாழும் உலகிலே
      நல்ல சுகம்இல்லை ஐயாமாரே. 71

உங்களை யேதஞ்சம் மென்றுநம் பிவந்தேன்
      உலகெல்லாம் எனக்கொரு தஞ்சமில்லை
உங்களுக் குஉண்மை யெல்லாம்நான் சொல்லுவேன்
      உங்களை விட்டுப் பிரியமாட்டேன். 72

அப்படி யேஉங்கள் சொற்படி செய்கிறோம்
      இப்படி யேஎங்கள் கூடவாங்க
தப்பாம லேஎங்கள் தங்கச்சி வள்ளியும்
      அப்பான்னு உங்களைக் காப்பாற்றுவாள். 73

அண்ணன்மார் ஆனந்த மாகப்பண் டாரத்தை
      அன்பான வள்ளிகிட் டக்கொண்டுபோய்
அம்மா நம்குல தெய்வம்போல் இவரை
      ஆதரிக்க வேணுன்னு சொன்னார்கள். 74

அண்ணன்மார் சொல்லைத் தட்டாம லேவள்ளி
      ஆதரித் தாளந்தப் பண்டாரத்தை
ஆண்டிக்கு வேண்டிய தேனும் பழமும்
      தினைமாவும் கொண்டாந்து வைத்தாளே. 75

ஐயாவே பண்டார சாமிக ளேநான்
      அன்பாக வைத்த பலகாரத்தைத்
தின்று பசிக்களை ஆறுமை யாஇன்னம்
      தேனும்பா லுந்தரு வேன்னுசொன்னாள். 76

ஆறு முகனான ஆண்டிப்பண் டாரமும்
      அங்கிருந் தபல காரமெல்லாம்
அமைதியா வும்மெத்தப் பெருமையா வுந்தின்று
      ஆசீர்வா தம்செய்தான் வள்ளியையே. 77

இப்படி இருக்கும் போது திடீரென்று
      எப்படி யோகளை வந்துமூடி
அப்படி யேசாய்ந்து ஆவிபோ றாப்போலே
      அரண்டு மிரண்டு புரண்டான் கந்தன். 78

மாவென்று சொல்லிநீ நஞ்சைத்தந் தாய்பாவி
      மருந்தென்று தெரியாமல் நானுந்தின்றேன்
மாதேஎன் தொண்டை வறளுத டிஇப்
      போதேஎன் உயிரும் போகுமடி. 79

எட்டிப் பழமோபா சாணமோ என்னமோ
      என்கிட்டக் கொண்டாந்து வைத்தாயோடி
ஏழை பரதேசிக் கிப்படி யுஞ்செய்து
      எமலோகம் சேர்க்கவும் பார்த்தாயடி. 80

தண்ணீர்வே ணுமென்று தயங்கின தாத்தாவே
      தண்ணீர்கொண் டாந்தேன்தா கத்தைத்தீர்க்கத்
தயவாநீ குடிச்சிட்டுத் தாகத்தைத் தீர்த்திட்டுத்
      தாத்தாஎன் னைவிட்டு நாட்டுக்குப்போ. 81

நீகொண் டாந்ததண்ணீர் என்கண்ணுப் பார்வைக்கு
      நீலமாத் தோணுது நீலிப்பெண்ணே
சாணு வயிற்றுக்கு நீகொடுத் தமாவு
      சந்தேகந் தீராது சண்டாளியே. 82

தண்ணீரி லேநான் நஞ்சு கலந்தேண்ணு
      எண்ணிநீ பேசாதே படுபாவி
கன்னிநான் உனக்கு என்னதீ மைசெய்தேன்
      கேணியில் இறங்கி நீயேகுடி. 83

வள்ளி கிழவனைக் கேணிக்குக் கொண்டுபோய்
      மெள்ளமெள் ளஇறக் கியேவிட்டாள்
தள்ளாடித் தள்ளாடித் தண்ணீருங் குடித்துத்
      தானேதண் ணீரிலே யும்விழுந்தான். 84

தானே விழுந்ததும் இல்லாம லேவள்ளி
      நாயகி யைஅவ தூறும்சொன் னான்
கையைப் பிடித்தென்னைத் தூக்கடி பாவிநான்
      பையப்பை யக்கரை சேர்வேனென்றான். 85

கந்தன்சொன் னசொல்லை எல்லாங்கேட் டுவள்ளி
      காதிலே ரெண்டுகை யையும் வச்சுக்
கருணாகர அருணாசலா குருநாதனே வரமாட்டையா
      அருமையா வந்தென்னை ஆதரின்னாள். 86

கந்தனைப் பார்த்துக் கடுகடுப் பாகவே
      கைரெண்டை யுங்காதை விட்டெடுத்து
கள்ளங் கபடமாக் காட்டுக்கு நீவந்த
      காரணம் கட்டாயம் கஷ்டமென்றாள். 87

மெத்தப் படித்தவன் போலேவந் துஎன்னை
      மெதுவாஏ மாற்றலாம் என்று பார்த்தையோ
பித்துப் பிடித்த வனைப்போலே நீஓட்டம்
      பிடித்தால்தான் தப்புவாய் வேடுவனே. 88

எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி
      கொட்டாவி விட்ட கதைபோலே
ஏங்கிஏங் கிஇன்னம் என்முகத் தைப்பார்த்து
      ஏமாந்து போகாதே வேடுவனே. 89

அண்ணன்மா ரும்இப்போ அம்பும்வில் லுங்கொண்டு
      அந்தாவ றாங்கபார் வேடுவனே
அநியாய மாகநீ அழியாமல் பார்த்துக்கொள்
      ஆகாசத் தில்உன்னை வீசிடுவார். 90

சுற்றிச்சுற் றிவட்டம் போட்டுப்போட் டுநீ
      கத்திக் கழுதைபோல் அலையாதே
திட்டமா நான்சொன்ன சொல்லைநீ கேக்காட்டித்
      தோழியை விட்டுன்னை அடிக்கச் செய்வேன். 91
---------
91. கேக்காட்டி - கேட்காவிட்டால்.
--------
பொந்திலே அகப்பட்ட மந்தியைப் போலுன்னைச்
      சந்துசந் தாகக் கிழிப்பாங்கடா
நிந்தனை என்மேலே சொல்லாதே வேடுவா
      மந்தமா இங்கேநீ தங்காதேடா. 92

ஏது பரியாசம் மிஞ்சுது வேடாஎன்
      சேதி உனக்குத் தெரியாதா
மாதுஎன் மேலேநீ மையல்கொள் ளவேண்டாம்
      தீது வருமடா திட்டமாத்தான். 93

ஆர்குடி யைக்கெடுக் கவேணு மென்றிங்கே
      ஆண்டிவே சம்போட்டு அலைமோதுறாய்
பேர்வழங் கணுமென்றால் ஊர்போய்ச் சேரடா
      பெரியபேச் செல்லாம்நீ பேசாமே. 94

உன்னைப்பார்த் தால்வேட ராசன்போ லிருக்குது
      ஒழுங்கில் லாமல் இங்கே வரலாமா
உனக்கும்உன் பலத்துக்கும் பயப்படு வேனோநான்
      ஓடிப்போ டாதினைக் காட்டைவிட்டு. 95

பாதகி யேபழி காரியே உன்னைநான்
      பார்த்துச்சும் மாபோவேண் ணாநினைத்தாய்
வாதுசெய் யாமேநீ தோதாஎன் னைக்கூடி
      வந்தால் உனக்குத்தான் சந்தோசண்டி. 96

தம்பிஅண் ணன்மாரு அம்புகொண் டாந்தாலும்
      தாதிமார் என்னை அடித்தாலும்
தந்திர மாய்நானும் தப்பிக்க வழியும்
      தம்பிரான் தயவாய்க் கொடுத்திருக்கான். 97

கந்தனும் வள்ளியும் இந்த விதமாகக்
      கைச்சர சம்பண்ணும் வேளையிலே
கந்தன்கை யுங்காலும் குலையும் உதறவே
      கானக் குறவரும் வந்தார்களே. 98

வேடரைப் பார்த்து வெலவெலத் துக்கந்தன்
      வேணுண்ணு வேங்கை மரமானான்
வெயிலெல்லாம் மறைந்து விதம்வித மாய்க்கிளை
      வீசிக்கண் கூசப் பசுமையானான். 99

இந்தவே டிக்கையைக் கண்டவே டரெல்லாம்
      தங்கைவள் ளிஅம்மனைக் கூப்பிட்டு
எங்கேயும் இல்லாத இந்தவேங் கைமரம்
      எப்படி யம்மா முளைத்ததென்றார். 100

தினைமாவு திரிச்சுக் கிட்டிருந் தேன்அண்ணா
      தெரியாது ஒண்ணும் மரத்தைப்பற்றி
வினையாக வேங்கையும் தினைக்காட் டுநடுவே
      வீம்புக்கு முளைத்திருக் கிறதென்றாள். 101

பயப்படா தேமானே வள்ளியம் மாஉனக்குப்
      பரமன் கந்தவேள் துணையிருப்பான்
பட்சமா இப்போது பாங்கிப்பெண் ணோடேநீ
      பயமில் லாமேஇரு பச்சைக்கிளி. 102

இப்படிச் சொல்லிவிட் டண்ணன்மார் காட்டிலே
      தப்பின தினைக்கதி ரைக்கொய்ய
இப்பத்தான் நல்ல சமயம்னு நினைத்துத்
      தப்பாமே ஓடிவந் தானேகந்தன். 103

வேங்கையா நின்ற உருமாறி வந்தந்த
      வேடனை வள்ளியுந் தான்பார்த்து
மாந்திரி கனைப்போல் மாறுவே சம்போட்ட
      மடையா மானமில்லை யாண்ணுசொன்னாள். 104

உன்னை மறக்க முடியலை யேமானே
      உன்னாலே கண்ணுக் குறக்கமில்லை
எந்நாளு மேநாம் சுகமா யிருக்கலாம்
      என்னைக்கை விடாதே பொன்மயிலே. 105
**
----------
** இதற்குமேல் உள்ள கண்ணிகள் கிடைக்கவில்லை.
-------

மாரியம்மன் கும்மி

கும்மி யடியுங்கள் பெண்டுக ளாநீங்கள்
      கூடியே கும்மி அடியுங்கடி
நம்மை ஆளும்நல்ல மாரித் தாயை
      நாடிக் கும்மி அடியுங்கடி. 1

மகமாயித் தாயேஉன் மகிமையை அறிந்த
      மனிசர்கள் ஆருமே இல்லையடி
பகவதி காளியும் காமாட்சி யும்நீயே
      பார்வதி யேஎன்னைக் காப்பாற்றடி. 2

காணிக்கை எல்லாங் கொண்டுவந் தார்களே
      ஆயிரம் பேர்களுன் கோயிலுக்கு
கொஞ்சி விளையாடும் மாரித்தா யேஉன்னைத்
      தஞ்சமென் றவரைக் காப்பாற்றடி. 3

அம்மாஉன் கோவிலைச் சுற்றிவந் தவர்க்கு
      அண்டாது பேய்பிணி எந்த நாளும்
நாளெல்லாம் நாங்கள் வருந்துகி றோம்அம்மா
      காலன் அணுகாமல் காப்பாற்றடி. 4

வேப்பிலைக் காவடி கட்டிவா றாங்களே
      வேடிக்கை யாஓடி வாறாங்களே
வாடிக்கை யாகத்தான் ஞாயிற்றுக் கிழமை
      கோடி சனமங்கே வாறாங்களே. 5

வண்டியி லேஅங்கே வாறகூட் டங்களைக்
      கண்டு விலக முடியாதடி
கொண்டு வாறகோழி ஆடுமாடு எல்லாம்
      கோயிலும் கொள்ளாது பாருங்கடி. 6

பள்ளு பறைபதி னெட்டுச்சா திகளும்
      பார்த்துப் பணிந்திட வேணுமென்று
எல்லை மாரிஎல்லை தங்கிவா றாள்நம்ம
      எல்லைக்குக் காவலா மாரியம்மா. 7

ஆயிரங் கண்ணுமா ரியைப்பார்க் கணுமென்று
      ஆயிரக் கணக்கா வாறாங்களே
ஆருந் துணையில்லை காளியம் மாஎன்னை
      ஆதரிக்க வேணுமே மாரியம்மா. 8
      * * *
-------------



12. தெய்வம்


முத்துமாரி

ஆதியிலே அமைந்த சக்தி
      எங்கள்முத்து மாரி - அம்மா
ஆள்கிறாளாம் பூமி யெல்லாம்
      சிங்கத்துமேல் ஏறி. 1

அடுத்தால் சமயபுரம்
      எங்கள் முத்து மாரி - அம்மா
ஆதிசிவன் பெண்சாதியாம்
      சிங்கத்துமேல் ஏறி. 2

கன்னபுரம் வந்திருப்பாள்
      எங்கள் முத்து மாரி - அம்மா
புன்னை நல்லூர் வந்திருப்பாள்
      சிங்கத்துமேல் ஏறி. 3

தஞ்சா வூரு ராசாவுக்கு
      எங்கள் முத்து மாரி - அம்மா
சஞ்சலத்தைத் தீர்த்தவளாம்
      சிங்கத்துமேல் ஏறி. 4

நார்த்த மலையி லேயிருப்பாள்
      எங்கள் முத்து மாரி - அம்மா
நாராயணன் தங்கச்சியாள்
      சிங்கத்துமேல் ஏறி. 5

வீராம்பட்டணம் வந்திருப்பாள்
      எங்கள் முத்து மாரி - அம்மா
வீரரெல்லாம் கொன்றவளாம்
      சிங்கத்துமேல் ஏறி. 6

தாராபுரம் வந்திருப்பாள்
      எங்கள் முத்து மாரி - அம்மா
தீராப்பிணி தீர்ப்பவளாம்
      சிங்கத்துமேல் ஏறி. 7

கும்மி பாடிக் குப்பம் வருவாள்
      எங்கள் முத்து மாரி - அம்மா
கொலுவிருந்து காப்பவளாம்
      சிங்கத்துமேல் ஏறி. 8

தில்லைநகர்க் காளியம்மா
      எங்கள் முத்து மாரி - அம்மா
பிள்ளைவரம் தந்தவளாம்
      சிங்கத்துமேல் ஏறி. 9

நாச்சியார் கோவில் வந்திருப்பாள்
      எங்கள் முத்து மாரி - அம்மா
ஆச்சரிய மாவருவாள்
      சிங்கத்துமேல் ஏறி. 10

ஒழுக மங்கலம் வந்திருப்பாள்
      எங்கள் முத்து மாரி - அம்மா
பழுதில்லாமே காப்பவளாம்
      சிங்கத்துமேல் ஏறி. 11

கனியாக் குறிச்சி வடிவழகி
      எங்கள் முத்து மாரி - அம்மா
தனிவழியா வாறவளாம்
      சிங்கத்துமேல் ஏறி. 12

நல்லநாகப் பட்டணம் வருவாள்
      எங்கள் முத்து மாரி - அம்மா
நெல்லுக்கடை மாரியம்மா
      சிங்கத்துமேல் ஏறி. 13

கீரந்த குடிவருவாள்
      எங்கள் முத்து மாரி - அம்மா
கோரிக்கைக்கு வரந்தருவாள்
      சிங்கத்துமேல் ஏறி.       14

தீராவினை எல்லாந் தீர்ப்பாள்
      எங்கள் முத்து மாரி - அம்மா
தேசமெல்லாத் தையுங்காப்பாள்
      சிங்கத்துமேல் ஏறி. 15

சமயபுரம் வந்திருக்கும்
      எங்கள் முத்து மாரி - அம்மா
சத்தி யெல்லாம் சாமியடி
      சிங்கத்துமேல் ஏறி. 16

கன்னபுரத்தி லேஇருக்கும்
      பொன்னே முத்து மாரி - அம்மா
      வந்தாயேநீ சீறி
என்ன சொல்வோம் உன் மகிமை
      அம்மா முத்து மாரி? 17

தஞ்சாவூரு புன்னை நல்லூரு
      தாயே முத்து மாரி - உன்னைத்
      தஞ்ச மென்றோம் கோரி
தயவு வைத்துக் காத்தாள் அம்மா
      சிங்கத்துமேல் ஏறி. 18

ஆயிமக மாயி அவள்
      இல்லாத இடம் உண்டா - இந்தப்
      பூமி என்ன ரெண்டா
அனுதினமும் துதிக்காதவர்
      தலைஇரும்புத் துண்டா? 19

நார்த்தா மலையி லேயிருப்பாள்
      சிங்கத்துமேல் அங்கே - அம்மா
      நாராயணன் தங்கை
பார்க்காமலே நீயிருந்தால் நாம்
      பிழைக்கிறது எங்கே? 20

சாதி யில்லை பேதம் இல்லை
      ஆதிபரஞ் சோதி - அம்மே
      வாந்திபேதி வியாதி - இந்தச்
சாதிக் கெல்லாம் நடக்குதம்மா
      உன்தவறா நீதி. 21

மாவிளக்குச் சட்டிகளும்
      காணிக்கையும் கோடி - மகம்
      மாயி உன்னை நாடி
மனப்பத்தியாப் படைச்சிடுவார்
      மக்கள் உன்னைத் தேடி. 22

காளியென்றும் பேச்சியென்றும்
      கணக்கில் லாப்பேர் எடுப்பாள் - யம
      காலனையும் தடுப்பாள்.
அனுதினமும் வணங்கி வந்தால்
      ஆயிசுவரம் கொடுப்பாள். 23

ஒருமனசா நிதநிதமும்
      உன்னையே நாங்கள் நம்பி
      உருகுகிறோமே வெம்பி
மறுகிநீ இருக்கலாமா
      சிங்கத்துமேலே குந்தி? 24
__________

மாரியம்மன் பாட்டு

கண்கண்ட தெய்வம் மாரி அம்மா - நம்ம
      ஈசுவரி மாரி அம்மா
கண்ணன்ராச கோபாலன்
      தங்கச்சியும் நீயே
கலியுகத்தி லேவந்து
      அவதாரம் எடுத் தாயே
என்னநான் சொல்வேன் உன்
      மகிமையைத் தாயே
ஏழைமக்க ளைநீயும்
      ஆதரிப் பாயே. 1

எத்தனையோ பக்தர்கள் உன்னை அடுத்து
ஏறினார்களே சொர்க்கம் பாவத்தைத் தடுத்து
பத்தினியே நீஉன் அருளெல்லாம் கொடுத்து
பார்த்துக்கொள்ள வேணுமே
      ஏழை மக்களைக் காத்து. 2

சிங்கத்து மேலேஏறி எங்கேயும் வருவாள்
தாங்கமுடி யாதஅம்மை பூட்டியே விடுவாள்
நீங்க வேப்பிலை விபூதி எல்லாம் தருவாள்
நினைந்த இடத்துக் கெல்லாம் துணையாத்தான் வருவாள். 3

ஆயிரங்கண் மாரிஇல் லாதஇடம் உண்டா
அவஇருக்கிற பூமி என்னசொல் ரெண்டா
மாயமாத் தான்வருவாள் பறக்கிற வண்டா - அவள்
மகிமை தெரியாத மனிசரும் உண்டா? 4

ஆவணி மாசம் கடைசிக் கிழமை - அவள்
கோயிலுக்கு வாற சனத்தோடே பெருமை
காவடி களையெல்லாம் கட்டிவாற அருமை - அவள்
பாதம் பணிந்திட்டால் தீருமே வறுமை. 5

வந்த சனமெல்லாம் வலப்பக்கம் சுற்றி - வந்து
வரிசை வரிசையாத்தான் தலையிலேபால் ஊற்றி
இளநீர்த் தண்ணியுங்கூட ஏராளமா ஊற்றி
கணக்கில்லா மல்தான்நல்ல காணிக்கையும் கொடுத்து. 6

தீச்சட்டி களைத்தலை மேலே எடுத்து
திருமக மாயிஅம்மா சந்நிதி அடித்து
ஆடுமாடு கோழி தேங்காய் பழமெல்லாம் கொடுக்க
ஆடிஓடிப் பாடிச் சாடித்தேடி வாறாங்க பாரம்மா. 7
________

பூசாரி பாட்டு

ஓம் இண்ணு உச்சரிப்பேன்
ஆம் இண்ணு நிச்சயிப்பேன். 1

ஓதுவேன் மதன் கதையை - என்
மாதுரனே துர்க்கிவீதி. 2

ஓரி மயான ருத்ரி
வாரி காட்டேரி சூரி! 3

ஓகாளி சாமுண்டி
ஜகசண்டி நீலகண்டி! 4

ஒட்டிக்கறுப்பா காலபைரவா
குட்டிச் சாத்தான் தூமாதேவி! 5

ஓடிவா இருசி பகவதி பைரவி
குடியாயி வீராயி மகமாயி! 6

ஒசந்த எல்லக்கா மல்லக்கா
இசைந்த பொம்மக்கா ஜம்மக்கா! 7

உதி்ரக் காட்டேரி கூளி - எங்கள்
பிதிதேவப் பிடாரி! 8

உத்தண்ட குறளி எச்சம்
பத்ர காளி மாரி முத்து! 9

உதவா மூதேவி இருளியா தேவி
ஒளிதரும் சங்கா தேவி! 10

எங்களைப் பலிகொள்ளும் காத்தவ ராயா
ஒண்டிமுனி சண்டை வீரா! 11

சண்டப்பிர சண்ட துண்டா
அண்டமெல்லாம் அடக்குஞ் சண்டா! 12

ஒப்புரவா யிருசா கறுப்பா
அப்பா அநுமந்தா வேதாள பைரவா! 13

ஓடிவா நீங்களெல்லாம் - நாங்கள்
பாடிய பாடலுக்கு.     14

எங்களுக்கு ஒத்தாசை யாயிருந்து
சத்துருக்கள் வந்திடாமே 15

உறுதிசெய்ய வேணுமென்று
உங்களுக்கு மிதக்கமாக 16

ஒன்பது ஈரல்புரட்டி
ஐம்பது ஆட்டுக்கறித் துண்டை 17

ஒருவிதக் குழம்பாக்கி
அறுபது கோழி பொரித்து 18

உருண்டை கைமா கவாப்பு
      தொண்டை ரொட்டியும் கலந்து 19

உப்புக்கரு வாட்டுப் பொரியல்
      அப்பளம் கஞ்சா சுருட்டு 20

ஓர் நிறைந்த பீப்பாயிலே
      நேர் நிறைந்த சாராயம் 21

உதிரத்தை யும்புரட்டி
      உனக்கு முன்னே நான்படைத்தேன். 22

உறுதியா ஓடிவாங்க
      பிரீதியோடே எனக்கு முன்னே. 23
________

கரகப் பாட்டு

ஒண்ணாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
ஓடிவந்து பூசைவாங்கு இப்போ - தாயே 1

ரெண்டாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
ரணகரகம் பொன்னாலே இப்போ - தாயே 2

மூணாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
முத்தாலே பொன்கரகம் இப்போ - தாயே 3

நாலாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
நாடிவரும் பூங்கரகம் இப்போ - தாயே 4

அஞ்சாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
அசைந்தாடும் பொன்கரகம் இப்போ - தாயே 5

ஆறாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
அசைந்தாடும் பூங்கரகம் இப்போ - என்தாயே 6

ஏழாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
எடுத்தாடும் பொன்கரகம் இப்போ - என்தாயே 7

எட்டாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
எடுத்தாடும் பூங்கரகம் இப்போ - தாயே 8

ஒன்பதாம் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
ஓடிவந்து பூசைவாங்கு இப்போ - தாயே 9

பத்தாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
பணிந்தாடும் பென்கரகம் இப்போ - தாயே 10

பத்துஞ்சொல்லி முடிந்ததடி கன்னி - ஓகோ - என்தாயே
பத்தினிஉன் வாசலிலே இப்போ - தாயே! 11

___________

ஆதாம் ஏவாள் கதை (கும்மி)

ஆதியி லேநம்ம ஆண்ட வருவந்து
      ஆதித்தாய் தகப்ப னைப்படைத்துச்
சோதியா னஏதேன் தோட்டத்தை யுந்தந்து
      சொகுசாக வாழவுஞ் சொன்னாரடி. 1

ஆணுக்கா தாமென்றும் பெண்ணுக்கே வாளென்றும்
      அருமையா கஅவர் பேர்கொடுத்து
வெறுமையா அவர்களை விட்டுப்போ காமலே
      வேண்டிய வையெல்லாம் கொடுத்தாரடி. 2

கோடைவெள் ளாமையும் காலவெள் ளாமையும்
      குறையாமல் நன்றாய் விளைந்ததாலே
போட இடங்கூடப் பற்றா ததனாலே
      ஓடையி லேஅதைப் போட்டாங்கடி. 3

ஆறெல்லாந் தண்ணீராம் குளமெல்லாந் தண்ணீராம்
      அழகான ஊற்றிலும் தண்ணீராம்
மாரிகா லத்திலே மழைபெய்த தனாலே
      வாரிஏ ரியெல்லாம் தண்ணீராம். 4

ஆரஞ்சு மாதுளம் கொய்யா பலா - இன்னம்
      அத்தியோ டேகூட முந்திரியும்
மாம்பழம் வாழைசெவ் வாழைப் பழங்களும்
      மம்மாரி யாத்தினம் தின்றார்களாம். 5

தோட்டத்தி லேஒரு தொங்கலி லேநல்ல
      தோதகத் திமரப் பக்கத்திலே
வாட்டமா னஒரு வர்ணப் பழமரம்
      வளர்ந்தி ருந்ததாம் வானமட்டும். 6

தோட்டத்தில் இருந்த மரத்தி லேஅந்தத்
      தோதகத் திகிட்ட இருந்தமரம்
பாதகத் துக்கெல்லாம் காரண மாம் - நம்ம
      பாவியா னதுக்கும் காரணமாம். 7

வாலுங்கொம் பும்முளைத்த பாவிப் பிசாசு
      வந்தானே ஏவாளை ஏமாற்றத்தான்
வர்ணப் பழத்தின்மேல் கண்ணுவைக் கநல்ல
      வழியெல்லாம் சொல்லிக் கொடுத்தானாம். 8

தின்னக்கூ டாதென்று சொன்ன பழத்தைத்
      திரும்பித் திரும்பிப்பாத் தாளாம் ஏவாள்
பளிங்குபோல் மின்னின அந்தப் பழத்தைப்
      பாவிபாட் டிஏவாள் பறித்தாளாம். 9

காடு கரையெல்லாம் பார்க்கப்போ னஆதாம்
      களைப்போ டேவீடு திரும்பையிலே
பாழும்ஏ வாள்வந்து பழத்தைப்பா திதந்து
      தானும்தின் றாள்தன்னை யேமறந்து. 10

இப்படித் தின்றத னாலேஅம் மாநாம்
      இப்போதும் பாவிக ளாயிருக்கோம்
எப்படிப் பாவத்தி லேயிருந் துநாம்
      தப்புவோ மென்று தெரியலைடி. 11

ஆதாம்செய் தபாவத் தாலேநாம் எல்லாம்
      ஆண்டவ ருக்குவி ரோதமானோம்
ஆனா லவர்நம்மை அழிக்காம லேதான்
      ஆதரித் தார்அன்பாய் அற்புதமாய். 12

மார்கழி மாசம் இருபத்தஞ் சாந்தேதி
      மாதா மாரியம்மாள் பெற்றெடுத்த
நீதிசேசு நம்மை நேர்வழி நடத்தப்
      பாதிராத் திரியிலே பிறந்தாரடி. 13

தச்சரோ டேசேர்ந்து தச்சுவே லைசெய்து
      தாய்தகப் பனுக்குக் கஞ்சிஊற்றி
மிச்சமா ஞானமெல் லாம்பெற் றேஅவர்
      மேன்மையாக் காலம் கழித்தாரடி.       14

கூனு குருடுசப் பாணிஊ னருமே
      குஷ்டரோ கியானஎல் லோருக்கும்
இஷ்டம்போ லேசுகம் கொடுத்ததும் இல்லாமே
      கஷ்டத்துக் கும்ஆளு ஆனாரடி. 15

பாவத்தி லிருந்து நம்மைரட் சிக்கப்
      பாவக் குருசிலே பாடுபட்டு
மூன்றுநாள் கல்லறை யில்லிருந் தெழுந்து
      முத்திக்குச் சுத்தமாய்ப் போனாரடி. 16
---------
16. குருசு - Cross; சிலுவை.
----------------------

ஏசு சரிதை (கும்மி)

தன்னன னானன னானானே - தன
னானன னானன னானானே

ஆதாம்ஏ வாள்செய்த அக்கிர மத்தாலே
      அடியோடே நாமெல்லாம் அழியாமே
அன்பாய்அன் னைமரி அம்மாள் வயிற்றிலே
      ஆவியாய் வந்துகர்ப் பந்தரிக்க.
      - தன்னன னானன 1

குடிமதிப் பெழுதும் காலத்தி லேநம்
      குலமக ளும்சூசை மாமுனியும்
பெருமையாத் தானும் குதிரைமே லேறிப்
      பெத்தலே கேமுக்குத் தானும்வர.
      - தன்னன னானன 2

பத்தாமா சமென்று தெரிந்திருந் தும்சேசு
      பாலன் பிறப்பாரென் றறிந்திருந்தும்
பணங்கூட இல்லாமல் பயங்கூட இல்லாமல்
      பிரயாணம் செய்ததைப் பாருங்கடி.
      - தன்னன னானன 3

சத்திரத் தில்கூட ஜாகைஇல் லாமலே
      சங்கடம் மெத்தவும் அநுபவித்து
மயக்கம் மெத்தவர மனமெல்லாங் கலங்க
      மாதாமாட் டுக்கொட்டம் புகுந்தாளடி.
      - தன்னன னானன 4

ராவெல்லாம் போய்நடுச் சாமத்தி லேநம்ம
      ராசாசே சுநாதர் பிறக்கையிலே
நாதியில் லாமலே மாதா தவிக்கையில்
      சோதியா வந்ததாம் சம்மனசு.
      - தன்னன னானன 5

தாராள மாய்வெந்நீர் ஊற்றவு மேஇன்னம்
      காயங் கருப்பட்டி கொடுக்கவுமே
மாயமா வந்த சம்மன சுஎல்லாம்
      மாய்ந்துமாய்ந் துவேலை செய்ததாண்டி.
      - தன்னன னானன 6

புள்ளையை நல்லாக் குளிப்பாட்டி - நல்ல
      புல்மெத்தை மேலே படுக்கவைத்து
மாதா மனங்குளி ரத்தானுமே - நல்ல
      தாலாட்டுப் பாட்டெல்லாம் பாடுச்சாண்டி.
      - தன்னன னானன 7

வானத்தி லேபெரி யமுழக் கம் - அம்மா
      கானத்தி லேபெரி யமுழக்கம்
பூமியி லேபெரி யமுழக் கம் - அம்மா
      சேமமா நம்மளெல் லாமிருக்க.
      - தன்னன னானன 8

சாமி அனுப்பின சம்மன சுஎல்லாம்
      சந்தோச மாக்கீழே பயந்துவந்து
ஆடுமேய்த் தஅந்த ஆட்டிடை யருக்கு
      அற்புதச் சங்கதி சொன்னார்களாம்.
      - தன்னன னானன 9

பிள்ளையைத் துணியிலே தான்சுற்றி - அப்பா
      முன்னணை யிலேதான் பார்க்கிறது
நல்ல அடையாள மென்றுதான் அவர்கள்
      சொல்லிவா னத்துக்குப் போனார்களாம்.
      - தன்னன னானன 10

வெள்ளிஎல் லாத்துக்கும் விடிவெள்ளிக் கும் - நல்ல
      வேடிக்கை யாவந்த ராசாவெள்ளி
வானசாஸ் திரிகள் மூன்றுபே ருக்குமே
      வழிகாட்டி வந்ததாம் மாட்டுக்கொட்டம்.
      - தன்னன னானன 11

காணிக்கை எல்லாங் கையில்எடுத்து - நல்ல
      காரிய மாவந்த சாஸ்திரிகளை
ஏமாற்ற லாமென்று பார்த்தா னாம் - அந்த
      எத்தன்சூ தன்ஏரோ துராசா.
      - தன்னன னானன 12

சாஸ்திரி களைநம்பி மோசம்போ னான்ராசா
      சாமிசொன் னநல்ல தந்திரத்தால்
வேகமாச் சாஸ்திரிகள் சேசுவைப் பாத்திட்டு
      வேறே வழியாத்தான் போனார்களாம்.
      - தன்னன னானன 13
* * *
---------

பன்னெண்டாம் வயசிலே சேசு பாலனும்
      கன்னி மரிசூசை மாமுனியும்
பந்து சனம்உற்றார் பெற்றாரோ டேகூடப்
      பக்கத்து ஊருக்குப் போனார்களாம்.
      - தன்னன னானன 1

பண்டைய காலத்தி லேநம்ம பாட்டன்மார்
      பண்டிகை யெல்லாம்கொண் டாடும்போது
பழுதில் லாமே செம்மறிக் குட்டியைப்
      பலிகொடுப் பார்களாம் பகவானுக்கு.
      - தன்னன னானன 2

கோயிலி லேசனக் கூட்டத் திலேகுரு
      ஆனவ ரெல்லாரு மத்தியிலே
குழந்தை சேசுநாதர் மழலைச்சொல் பேசாமே
      குருக்களுக்கு மேலாப் பேசையிலே.
      - தன்னன னானன 3

ஆசாரி பூசாரி எல்லாரு மேஅவர்
      அதிகார வார்த்தைக ளைக்கேட்டு
ஆச்சரி யத்துக்குமேல் ஆச்சரியப் பட்டு
      அலமந்து போய்அவர் நின்றார்களாம்.
      - தன்னன னானன 4

தீர்க்க தரிசனத் தைஅவர் கள்எல்லாம்
      திருப்பித் திருப்பிஆ ராய்ந்து பார்த்தும்
திட்ட வட்டமா ஒண்ணுந் தெரியாமே
      திகைத்துப்போய் எல்லாம் நின்றார்களாம்.
      - தன்னன னானன 5

பண்டிகை முடிந்து ரெண்டரை நாளாயும்
      பாலனைப் பற்றிக் கவனிக்காமே
பாதி வழியிலே பதைபதைத் துத்தாயும்
      தகப்பனும் திரும்பியே வந்தார்களாம்.
      - தன்னன னானன 6

அப்பா மகனே இப்படிஏன் செஞ்சேண்ணு
      அருமையாத் தான்தாய் கேட்கையிலே
தரும குணத்துடைப் பெருமையில் லாமலே
      தாழ்மையாப் பதிலும் சொன்னாராம்.
      - தன்னன னானன 7

முப்பதாம் வயசுத் துவக்கத்தி லேயவர்
      முழுமனிச னான காலத்திலே
முன்னோர் வழக்கத்தை அநுசரித் தவர்
      முழுக்குஞா னஸ்நானம் பெற்றாராம்.
      - தன்னன னானன 8

மூணு வருசமாப் பூமியி லேவீச
      ரோடே தனியாத் திரிகையிலே
வானவர் செய்யுமற் புதமெல் லாத்தையும்
      வரிசை வரிசையாச் செய்தாராம்.
      - தன்னன னானன 9

கானாஊரு கல்யாணத்தி லிருந்து
      கல்லறைக் கவர் போகுமட்டும்
கணக்குமில் லைஒரு வழக்குமில் லைமனிசர்
      கண்ணுக்கு முன்செய்த அற்புதங்கள்.
      - தன்னன னானன 10

* * *

(வேறு சந்தம்)

தாவீதின் ஊர்தனிலே - சின்னப்பாலகா
      சத்திரத்துப் பக்கத்திலே - சின்னப்பாலகா 1

மாட்டுக் கொட்டத்திலே - சின்னப்பாலகா
      மாடடையும் கொட்டத்திலே - சின்னப்பாலகா 2

அஞ்சாறு மாட்டுக்குள்ளே - சின்னப்பாலகா
      அழுதுநீ பிறக்கையிலே - சின்னப்பாலகா 3

மாடெல்லாம் கதறையிலே - சின்னப்பாலகா
      மனிசரெல்லாம் தூங்கையிலே - சின்னப்பாலகா 4

சம்மனசு வானத்துலே - சின்னப்பாலகா
      சரமாரியா இறங்கையிலே - சின்னப்பாலகா 5

மெய்ம்மறந்து போனார்களே - சின்னப்பாலகா
      மேய்ப்பர்வயற் காட்டிலேயே - சி்ன்னப்பாலகா. 6

சந்திரனும் சூரியனும் - சின்னப்பாலகா
      சமுத்திரமும் பாடையிலே - சின்னப்பாலகா 7

வால்வெள்ளியி னாலேயே - சின்னப்பாலகா
      வானசாஸ்திரி வந்தார்களே - சின்னப்பாலகா. 8

ஆட்டையெல்லாம் காட்டுக்குள்ளே - சின்னப்பாலகா
      அலங்கோலமா விட்டுவிட்டே - சின்னப்பாலகா 9

ஓட்டமா ஓடிவந்தார்கள் - சின்னப்பாலகா
      ஆட்டிடைய ரெல்லாருமே - சின்னப்பாலகா. 10

மார்கழி மாசத்திலே - சின்னப்பாலகா
      மழைசோண்ணு பெய்கையிலே - சின்னப்பாலகா 11

சீலையிலே சுற்றிஉன்னைச் - சின்னப்பாலகா
      தீஅனலில் காட்டையிலே - சின்னப்பாலகா 12

புல்லுப் படுக்கையிலே - சின்னப்பாலகா
      புரண்டுநீ அழுகையிலே - சின்னப்பாலகா 13

செல்ல மடியில் உன்னைச் - சின்னப்பாலகா
      நல்லதாய் வைக்கையிலே - சின்னப்பாலகா         14

பசியெடுக்கும் நேரத்திலே - சின்னப்பாலகா
      பால்கேட் டழுகையிலே - சின்னப்பாலகா 15

காலுரெண்டும் வலிச்சிருச்சோ - சின்னப்பாலகா
      கத்தித்துள்ளி அழுகையிலே - சின்னப்பாலகா. 16

ஞானவான் மூணுபேரு - சின்னப்பாலகா
      காணிக்கை கொடுக்கையிலே - சின்னப்பாலகா 17

ராசாநீ என்றெண்ணியே - சின்னப்பாலகா
      சாஷ்டாங்கமும் செய்தார்களே - சின்னப்பாலகா 18

அவர்கள்மாத் திரமில்லை - சின்னப்பாலகா
      ஆயிரஞ் சம்மனசுமே - சின்னப்பாலகா 19

ஆரவாரஞ் செய்தார்களே - சின்னப்பாலகா
      அளவுங்கூட இல்லாமலே - சின்னப்பாலகா. 20

பல்லு முளைக்கலையோ - சின்னப்பாலகா
      பால்குடி மறக்கலையோ - சின்னப்பாலகா. 21

பாலுக்கட்டி தின்னலையோ - சின்னப்பாலகா
      பருப்புஞ்சோறும் சேரலையோ - சின்னப்பாலகா. 22

மூணுவய சாகலையோ - சின்னப்பாலகா
      முகம்பார்த்துச் சிரிக்கலையோ - சின்னப்பாலகா. 23

மூணுபேர் உனக்கில்லையோ - சின்னப்பாலகா
      மும்மூர்த்தியும் நீயல்லவா - சின்னப்பாலகா. 24

நாலுகாலுப் பாய்ச்சலிலே - சின்னப்பாலகா
      நடக்கஇன்னம் துவக்கலையோ - சின்னப்பாலகா. 25

நாலுவய சாகலையோ - சின்னப்பாலகா
      நல்லாத்தானும் நடக்கணுமே - சின்னப்பாலகா 26

அஞ்சுவய சாகலையோ - சின்னப்பாலகா
      அறியாப் பருவமில்லையோ - சின்னப்பாலகா. 27

கொஞ்சிவிளை யாடலையோ - சின்னப்பாலகா
      குழந்தைசேசு நாதாசாமி - சின்னப்பாலகா. 28

அரவங்கேட்ட நேரத்திலே - சின்னப்பாலகா
      அழுகநீ பார்க்கலையோ - சின்னப்பாலகா. 29

ஆறு வயசுமாச்சே - சின்னப்பாலகா
      அழுகலாமா ஆம்பளையே - சின்னப்பாலகா. 30

அடுத்தவீட்டுப் பிள்ளைகளைச் - சின்னப்பாலகா
      அடித்துவிளை யாடையிலே - சின்னப்பாலகா. 31

அம்மாஉன்னை அடிச்சாங்களா - சின்னப்பாலகா
      அழுகழுக வச்சாங்களா - சின்னப்பாலகா. 32

சட்டிபானை எல்லாம்வச்சுச் - சின்னப்பாலகா
      கூட்டாஞ்சோறு ஆக்கினையா - சின்னப்பாலகா. 33

மட்டிப்பிள்ளை கூடச்சேர்ந்து - சின்னப்பாலகா
      மண்ணிலே விளையாடினையா - சின்னப்பாலகா. 34

ஏழுவய சாகலையோ - சின்னப்பாலகா
      எழுத்தாணி பிடிக்கலையோ - சின்னப்பாலகா. 35

பள்ளிக்கூடம் போகலையோ - சின்னப்பாலகா
      பாடமெல்லாம் படிக்கலையோ - சின்னப்பாலகா. 36

வாரத்துக் கொருதரம் - சின்னப்பாலகா
      வழக்கமாநீ பள்ளிக்கூடம் - சின்னப்பாலகா. 37

போறத்துக் குத்தவறிச் - சின்னப்பாலகா
      பிரம்பிலடி வாங்கினையோ - சின்னப்பாலகா. 38

ஏதுக் கழுகிறாய்நீ - சின்னப்பாலகா
      ஏழுவய சாகிக்கூடச் - சின்னப்பாலகா. 39

கூத லடிக்கிறதோ - சின்னப்பாலகா
      குளிரும் பொறுக்கலையோ - சின்னப்பாலகா. 40

ஏழெட்டு மெத்தையிலே - சின்னப்பாலகா
      இருக்கிறது போகநீ - சின்னப்பாலகா. 41

ஏழையாத் தான்பிறந்து - சின்னப்பாலகா
      ஏழைக்கோலம் ஏன்எடுத்தாய் - சின்னப்பாலகா. 42

தேசமெல்லாம் ஆளுகிற - சின்னப்பாலகா
      ராசனாப் பிறக்காமே - சின்னப்பாலகா. 43

நீசனாநீ ஏன்பிறந்தாய் - சின்னப்பாலகா
      தோசமெல்லாம் சுமக்கச் - சின்னப்பாலகா. 44

தகப்பனுக் குதவிசெய்து - சின்னப்பாலகா
      தாய்க்கும் உதவிசெய்து - சின்னப்பாலகா. 45

எல்லாவே லையுஞ்செய்தையோ - சின்னப்பாலகா
      ஏழாம் வயசிலிருந்து - சின்னப்பாலகா. 46

நாட்டுச்சா மான்கள்வாங்கச் - சின்னப்பாலகா
      நாசரேத் துக்குப்போனையோ - சின்னப்பாலகா. 47

சில்வண்டிச் செலவுவாங்கச் - சின்னப்பாலகா
      சின்னக்கடைக்குப் போனையோ - சின்னப்பாலகா. 48

கொடுமைக்கார ரோடேநீ - சின்னப்பாலகா
      கொல்கதாவுக்குப் போனையோ - சின்னப்பாலகா. 49

கள்ளரோடே சேர்ந்துநீ - சின்னப்பாலகா
      கல்வாரி மலைபோனையோ - சின்னப்பாலகா. 50

எட்டுவய சாகலையோ - சின்னப்பாலகா
      பட்டுச்சட்டை யெல்லாம்போடச் - சின்னப்பாலகா. 51

பட்டுப் பிரியம்இல்லையோ - சின்னப்பாலகா
      ரெட்டுத்தானா ஏற்றதுணி - சின்னப்பாலகா. 52

எட்டாள தேசமெல்லாம் - சின்னப்பாலகா
      எத்தனையோ கோடிப்பேரு - சின்னப்பாலகா. 53

சுத்தமனசா உன்னைப்போலச் - சின்னப்பாலகா
      சத்தியமா நடக்கலையே - சின்னப்பாலகா. 54

ஒன்பது வயசுமாச்சோ - சின்னப்பாலகா
      ஊரெல்லாம் பழக்கமாச்சோ - சின்னப்பாலகா. 55

உற்றார்பெற்றார் எல்லாருமே - சின்னப்பாலகா
      உன்னைமெச்சிக் கொண்டார்களோ - சின்னப்பாலகா. 56

பத்துவய சாய்விட்டதோ - சின்னப்பாலகா
      பக்திஉரு வாய்விட்டதோ - சின்னப்பாலகா. 57

நித்தமும்நீ கோயிலிலே - சின்னப்பாலகா
      சத்தம்போட்டுப் பாடினையோ - சின்னப்பாலகா. 58

ஆளிலே அழகன்நீ - சின்னப்பாலகா
      அருமையான பிள்ளைநீ - சின்னப்பாலகா. 59

நாளுக்கு நாளுநீ - சின்னப்பாலகா
      நல்லவழி போய்வந்தையோ - சின்னப்பாலகா. 60

பதினொருவய சாகலையோ - சின்னப்பாலகா
      பாதிமனிச னாகலையோ - சின்னப்பாலகா. 61

பந்துவிளை யாடலையோ - சின்னப்பாலகா
      பையன்மாரொ டேநீகூடச் - சின்னப்பாலகா. 62

பத்து நரம்புவீணையைச் - சின்னப்பாலகா
      பத்திரமா நீஎடுத்துச் - சின்னப்பாலகா. 63

சித்ரவேலை யெல்லாம்செய்து - சின்னப்பாலகா
      சீவனம் கழிக்கலையோ - சின்னப்பாலகா. 64

அநுபோகம் இல்லாமலே - சின்னப்பாலகா
      அரைநிமிச நேரத்திலே - சின்னப்பாலகா. 65

அற்புதவே லைநீசெய்து - சின்னப்பாலகா
      அப்பனைக்கை தூக்கலையோ - சின்னப்பாலகா. 66

எளியகுடும் பத்தைச்சேர்ந்த - சின்னப்பாலகா
      ஏழைகன்னி மாமரிக்குச் - சின்னப்பாலகா. 67

தொழில்செய்தொவ் வொருநாளும் - சின்னப்பாலகா
      துணையாநீ இருக்கலையா - சின்னப்பாலகா. 68

ஆசாரி வேலையெல்லாம் - சின்னப்பாலகா
      லேசாநீ செய்யலையோ - சின்னப்பாலகா. 69

வாசல் கதவுமுதல் - சின்னப்பாலகா
      வாகனமட்டும் செய்யலையோ - சின்னப்பாலகா. 70

தாடிமீசை முளைக்குமட்டும் - சின்னப்பாலகா
      தாய்க்கடங்கி ஒழுங்குடனே - சின்னப்பாலகா 71

சோடிபோலா னபிறகும் - சின்னப்பாலகா
      சூசைமுனிக் கடங்கலையோ - சின்னப்பாலகா. 72

முப்பது வயசுக்குமேல் - சின்னப்பாலகா
      கப்பலேறிப் போகையிலே - சின்னப்பாலகா 73

மூணுநாலு பேரைக்கண்டு - சின்னப்பாலகா
      மீன்பிடிக்கச் செல்லலையா சின்னப்பாலகா. 74

சோதிக்கவந்த பேயைநீ - சின்னப்பாலகா
      சோட்டடி கொடுத்தாற்போல - சின்னப்பாலகா. 75

காரணமெல் லாஞ்சொல்லிநீ - சின்னப்பாலகா
      கண்ணுக்கப்பால் விரட்டலையா - சின்னப்பாலகா. 76

வருசக்கணக்காய்ப் பேய்பிடித்த - சின்னப்பாலகா
      வாலிப னுக்கிரங்கிச் - சின்னப்பாலகா 77

விரட்டலையோ அப்போதேதான் - சின்னப்பாலகா
      விதவித மானபேய்களைச் - சின்னப்பாலகா. 78

குனிந்துமண்ணில் எச்சில்துப்பிச் - சின்னப்பாலகா
      குழைக்கலையா சேறுபூசச் - சின்னப்பாலகா. 79

குளத்திலேபோய்க் குளித்துவரச் - சின்னப்பாலகா
      குருடனுக்குச் சொல்லலையா - சின்னப்பாலகா. 80

குட்டைய னானதாலே - சின்னப்பாலகா
      குடுகுடென்று ஓடிப்போய்ச் - சின்னப்பாலகா 81

காட்டத்தி மரத்திலேறிச் - சின்னப்பாலகா
      கண்ணாலுன்னைப் பார்க்கையிலே - சின்னப்பாலகா 82

மந்திரக் காரனைப்போல் - சின்னப்பாலகா
      மரத்துக்கிட்ட வந்துநீ - சின்னப்பாலகா. 83

அண்ணாந்து பார்த்தவனைச் - சின்னப்பாலகா
      அருமையாநீ கூப்பிட்டையே - சின்னப்பாலகா. 84

பாவம்அந்தக் குட்டைப்பயல் - சின்னப்பாலகா
      பயந்தருண் டிறங்கையிலே - சின்னப்பாலகா 85

பாவியா அவன்இருந்தும் - சின்னப்பாலகா
      பட்சமாநீ பேசலையோ - சின்னப்பாலகா. 86

இழிவான சாதியென்று - சின்னப்பாலகா
      ஈங்குசமாநீ பேசாமே - சின்னப்பாலகா. 87

தங்கிஅங் கேசாப்பிட்டுச் - சின்னப்பாலகா
      மங்களவாக்குக் கொடுக்கலையோ - சின்னப்பாலகா 88

அஞ்சுரொட்டி யைப்பிச்சுச் - சின்னப்பாலகா
      ரெண்டுமீனைச் சேர்த்துப்பிச்சுச் - சின்னப்பாலகா 89

அஞ்சாயிரம் பேருக்குத்தான் - சின்னப்பாலகா
      அருமையாநீ கொடுக்கலையோ - சின்னப்பாலகா. 90

நாலுநாளாய்க் கல்லறைக்குள்ளே - சின்னப்பாலகா
      நாற்றப்பிணம் இருக்கையிலே - சின்னப்பாலகா. 91

நாற்றத்தைச் சகித்துநீ - சின்னப்பாலகா
      நாடிஅங்கே போகலையா - சின்னப்பாலகா. 92

கல்லறையைப் பார்த்துநீ - சின்னப்பாலகா
      கண்ணீர்விட் டழுகலையோ - சின்னப்பாலகா. 93

கல்லையும் புரட்டச்சொல்லிச் - சின்னப்பாலகா
      கத்தலையா சத்தம்போட்டுச் - சின்னப்பாலகா. 94

வாஅப்பா லாசருவேயென்று - சின்னப்பாலகா
      வற்புறுத்திச் சொல்லலையா - சின்னப்பாலகா. 95

கல்புரட்டச் சொன்னாற்போலே - சின்னப்பாலகா
      கட்டவிழ்க்கச் சொல்லலையா - சின்னப்பாலகா 96

வந்தானே லாசருவும் - சின்னப்பாலகா
      வழக்கம்போல முகத்தைவச்சு - சின்னப்பாலகா 97

தந்தானே தோத்திரந்தான் - சின்னப்பாலகா
      தருமமான உன்செய்கைக்குச் - சின்னப்பாலகா 98

கல்புரட்டின ஆளுகளும் - சின்னப்பாலகா
      கட்டவிழ்த்த ஆளுகளும் - சின்னப்பாலகா 99

அந்தநாள் அதிசயத்தைச் - சின்னப்பாலகா
      எந்தநாளும் பார்க்கலையாம் - சின்னப்பாலகா. 100

கொஞ்சக்காலம் என்றாலும் - சின்னப்பாலகா
      குறையலைஉன் அற்புதங்கள் - சின்னப்பாலகா. 101

மனிசனாநீ பிறந்திருந்தும் - சின்னப்பாலகா
      மறையலைஉன் அற்புதங்கள் - சின்னப்பாலகா. 102

ராசாவாப் பிறந்திருந்தும் - சின்னப்பாலகா
      ராசாவுக்கு நீஅடங்கிச் - சின்னப்பாலகா 103

ரோசம்ஒன்றும் பாராட்டாமே - சின்னப்பாலகா
      தேசவரி கொடுக்கலையோ - சின்னப்பாலகா. 104

ராசாயோக்கி யத்தைநீ - சின்னப்பாலகா
      லேசாஒரு தரம்மாத்திரம் - சின்னப்பாலகா. 105

காட்டக் கழுதைமேல்ஏறிச் - சின்னப்பாலகா
      வாட்டமாநீ போகலையோ - சின்னப்பாலகா. 106

உலகராச்சி யத்தைப்பற்றிச் - சின்னப்பாலகா
      உசத்திஒன்றும் பேசாமேநீ - சின்னப்பாலகா 107

வானராச்சி யத்தைப்பற்றிச் - சின்னப்பாலகா
      வர்ணிச்சுநீ பேசலையோ - சின்னப்பாலகா. 108

_________



13. பல கதம்பம்


13.1. தாது வருஷப் பஞ்சம்

தாது வருஷப் பஞ்சத்திலே - ஓ சாமியே
தாய்வேறே பிள்ளைவேறே - ஓ சாமியே
அறுபது வருசம் போயி - ஓ சாமியே
அடுத்தாப் போலே தாதுதானே - ஓ சாமியே
தைப் பொங்கல் காலத்திலே - ஓ சாமியே
தயிருக்கும் பஞ்சம் வந்ததே - ஓ சாமியே
மாசி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே
மாடுகளும் பட்டினியே - ஓ சாமியே
பங்குனிக் கடைசியிலே - ஓ சாமியே
பால் மாடெல்லாம் செத்துப் போச்சே - ஓ சாமியே 5

சித்திரை மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே
சீரெல்லாம் குலைந்து போச்சே - ஓ சாமியே
வைகாசி மாதத்திலேதான் - ஓ சாமியே
வயிறு எல்லாம் ஒட்டிப் போச்சே - ஓ சாமியே
ஆனி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே
ஆணும் பெண்ணும் அலறலாச்சே - ஓ சாமியே
ஆடி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே
ஆளுக் கெல்லாம் ஆட்ட மாச்சே - ஓ சாமியே
ஆவணி மாசத் துவக்கத்திலே - ஓ சாமியே
ஆட்டம் நின்று ஓட்டமாச்சே - ஓ சாமியே 10

புரட்டாசிக் கடைசியிலே - ஓ சாமியே
புரண்டுதே உலகம் பூரா - ஓ சாமியே
ஐப்பசித் துவக்கத்திலே - ஓ சாமியே
அழுகையுங்கண் ணீருந்தானே - ஓ சாமியே
கார்த்திகைக் கடைசியிலே - ஓ சாமியே
கண்ட இடம் எல்லாம் பிணம் - ஓ சாமியே
மகாராணி புண்ணியத்திலே - ஓ சாமியே
மார்கழிப் பஞ்சம் நின்றதே - ஓ சாமியே
காட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே
வீட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே 15

ரோட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே
மேட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே
ஆற்றிலேயும் தண்ணியில்லை - ஓ சாமியே
குளத்திலேயும் தண்ணியில்லை - ஓ சாமியே
கிணற்றில் பார்த்தால் உப்புத் தண்ணி - ஓ சாமியே
கிழடு கட்டை குடிக்குந் தண்ணி - ஓ சாமியே
தண்ணித்தாகத் தால்வறண்டு - ஓ சாமியே
தவறினது கோடி சனம் - ஓ சாமியே
கஞ்சியில்லா மேதவித்து - ஓ சாமியே
காட்டிலே மாண்டது கோடி - ஓ சாமியே 20

கஞ்சித் தொட்டி போட்டார்களே - ஓ சாமியே
அன்புடனே சலுக்கார்தானே - ஓ சாமியே
காலம்பர கோடி சனம் - ஓ சாமியே
கஞ்சி குடித்துக் களையாத்துச்சே - ஓ சாமியே
பொழுது சாயக் கோடி சனம் - ஓ சாமியே
பொழைச்சுதே உசிர் தப்பித்து - ஓ சாமியே
கஞ்சிக்குக் கடிச்சிக்கிற - ஓ சாமியே
காணத் துவையல் கொடுத்தாங்களே - ஓ சாமியே.
_________

13.2 தொதுவர் பாட்டு

மலைநாட்டு வளப்பங்களை
      மன்னர்களே சொல்லுறேன்கேள்.
இப்பச் சொல்லும் கதைகள் மெத்த
      அற்புதமாய்த் தானிருக்கும்.
செம்மையாச் செவிகொடுத்து
      மன்னர்களே கேளுமையா.
நீலகிரி மலையிலொரு
      பாதைவழி போகையிலே
பாதையோரம் இருந்தரெண்டு
      கூரைவீட்டைக் கண்டேனையா. 5

கூரைவீட்டைப் பார்க்கையிலே
      குடியிருக்கும் ஆளு இல்லை.
வீட்டைச் சுற்றி வளைஞ்சிருக்கும்
      பூண்டுகளைச் சொல்லுறேன்கேள்.

பனிப்பயறு பச்சைப்பயறு
      பசுந்தான கம்பு சோளம்
எந்த இடம் பார்த்தாலும்
      எள்ளு கேப்பை தினைவரகு
குண்டு சம்பா குடகு சம்பா
      கும்பளத்து மிளகு சம்பா 10

சின்னச் சின்னச் சம்பாவும்
      சிறுமணிக் கதிர்களும்
பச்சரிசிக் கதிர்களும் - வெகு
      லட்சணமாம் தானியங்களும்
பலசரக்குத் தானியங்களும்
      அங்கே நானு கண்டேனையா.
பெட்டிகளும் சட்டிகளும்
      குடங்குடமாத் தேனுகளும்
ஆரவள்ளி சூரவள்ளி
      அழகான சக்கரைவள்ளி 15

வெந்தயக் கீரைகளும்
      வெங்காயத் தாளுகளும்
பச்சிலை பருப்புக்கீரை
      பசுந்தான மணலுக்கீரை
இன்னம் இன்னம் பலமாதிரியும்
      மன்னர்களே சொல்கிறேன் கேள்.
இப்படிநான் பார்த்துக்கிட்டு
      அப்புறம்நான் போகையிலே
மன்னா ஒரு புதுமையைஎன்
      கண்ணாலேநான் கண்டேனையா. 20

பத்துத் தொதுவர் ஆண்பெண்ணைப்
      பார்த்தேனையா கானலிலே.
அவுங்களைநான் கண்டதுமே
      திகைத்துப் போய்த்தான் நின்றேனே.
அவுங்களுக்கு ஆடை யில்லை
      அம்மாமார்க்குப் புடைவை யில்லை.
பிறந்த கோலத் தோடேயும்
      பரந்த கோலத் தோடேயும்
வெட்கஞ் சிக்கி இல்லாமலே
      வெளியே வந்து நின்னாங்களே. 25

இப்படிக்கொத் தவங்களைநான்
      எப்படியோ கண்டுக்கிட்டு
என்மனசைத் திடப்படுத்தி
      நான்அவுங்க பக்கம் போயி
ஐயாநீல கிரிக்குப் போற
      பாதை எந்தப் பக்கமிண்ணேன்.
அவங்க வாயி திறக்கவில்லை
      மறுவார்த்தையும் பேசவில்லை.
அவுங்கபாசை யாலே என்னைப்
      பலவி்தமாப் பேசினாங்க. 30

ஐயையோ பாவம் இது
      ஆர்பெற்ற பிள்ளைகளோ?
மானம் போன வுடனேபெரும்
      பாவமிண்ணு நான்நெனச்சு
இந்தத்தர் மத்தை நெனைச்சு
      அந்தப் பொண்ணுக் கிட்டே போயி
அங்கவஸ்தி ரத்தை எடுத்து
      மங்கைமேலே போர்த்தி விட்டு
இந்த மட்டும் போதுமையா
      வந்த ரொக்க மின்னு சொன்னேன். 35

அப்போ தெல்லாம் கூடிக் கிட்டு
      தப்புத் துப்புண் ணடிச்சா ரென்னை.
அதென்னான்னா சங்கதி யின்னு
      மன்னர்களே சொல்லு றேன்கேள்.
புன்னங் கொட்டை யிலேபாதி
      புளியங் கொட்டை யிலேபாதி
கொட்டைகளை வில்லில் வச்சுக்
      கெட்டியாய் அடிச்சா ரென்னை.
அவுக அடிச்ச அடிகளெல்லாம்
      தவறா மெத்தான் பட்டதையா. 40

அந்தஅடிக் குப்பயந்து
      அசைஞ்சுநான் வழிநடந்தேன்.

காபிக் கொட்டை பழம்பழுக்கும்
      தோப்புவழி யாநடந்தேன்
ஈச்சஞ்செடி ஓரமாக்கை
      வீசிக்கிட்டுப் போகையிலே
அங்கே இருந்த குடுவையிலே
      கள் நிறைய இருந்ததையா.
எனக்கிருந்த தாகத்தாலே
      எடுத்தேஅதைக் குடிக்கப் போனேன். 45

கண்டானே கவுண்டன்அவன்
      கொண்டுவந்தா னேதடியை
லட்சம்பொன் வராகன்நகை
      லட்சணமாப் போட்டதைப்போல்
உச்சந் தலைதொடங்கி
      உள்ளங்கால் மட்டுமடிச்சான்.
அப்போதென் தேகமெல்லாம்
      எப்படி இருந்து துண்ணால்
வலியவந்த வண்டிக் காளைக்கு
      வம்பாச் சூடுபோட்டாப் போலே. 50

கள்ளுக்காரன் புண்ணியத்திலே
      கண்ட மட்டும் குடித்தேனையா.
இத்தனை அதிசயத்தை
      சிற்றடியான் கண்டுக்கிட்டு
அத்திபுரம் போனேனையா
      அங்கே கொஞ்சம் நின்றேனையா.
அத்திபுரம் பட்டணத்திலே
      ஆலமரம் ஒண்ணிருக்கு.
ஆலமரத் தடியிலேநான்
      அசந்துபடுத் துறங்கினேனே. 55

அங்கேஒரு பெண்சிறுக்கி
      தங்கக்குடந் தானெடுத்து
அரைக்குடத்து மோரெடுத்து
      நிறைகுடத்தைத் தலையில் வச்சு
மோரோமோர் என்று சொல்லி
      மோர்விலையைக் கூறி வந்தாள்.

அப்போது திடுக்கிட்டுநான்
      படுக்கையைவிட் டெழுந்திருந்து
அம்மாஅம் மாஎனக்கு
      அதிகத் தாகம் எடுக்கு தென்றேன். 60

கல்லாநீ மோரூற்றினால்
      களையெல்லாம் தீருமென்றேன்.
வனத்துச் சிறுக்கிஅவள்
      கனத்த குடம்இறக்கிக்
கல்லாநான் சொன்னபடிகனமா மோரு ஊற்றினாள்.
      மோரைக் குடித்து விட்டு
ஜோராஇளைப் பாறினேன்.
      களையெல்லாம் தீர்ந்த பின்னே
கலயத்தை உடைத்து விட்டேன். 65

_______

13.3. வெள்ளைக்காரன் பாட்டு

இன்னம் என்ன செய்தானையா
      இந்த வெள்ளைக் காரன்?
இன்னம் என்ன செய்தானையா?
      எடுத்துச் சொல்லு கேட்பேன். 1

காணாத தேசமெல்லாம்
      இந்த வெள்ளைக் காரன்
கண்டுபிடிச் சானாமையா
      இந்த வெள்ளைக் காரன். 2

எட்டாள தேசமெல்லாம்
      இந்த வெள்ளைக் காரன்
எட்டிப்பிடிச் சானாமையா
      இந்த வெள்ளைக் காரன். 3

கண்ணுக் கெட்டாத் தூரத்திலே
      இந்த வெள்ளைக் காரன்
கப்ப லேறி வாறானையா
      இந்த வெள்ளைக் காரன். 4

சின்னக் கப்பல் மேலே ஏறி
      இந்த வெள்ளைக் காரன்
சிங்காரமா வாறானையா
      இந்த வெள்ளைக் காரன். 5

பெரிய கப்பல் மேலே ஏறி
      இந்த வெள்ளைக் காரன்
பெருமை யோடே வாறானையா
      இந்த வெள்ளைக் காரன். 6

ராவிலே வாறானையா
      இந்த வெள்ளைக் காரன்
ராச்சியங்க ளைப்பிடிக்க
      இந்த வெள்ளைக் காரன். 7

கோழி கூப்பிட வாறானையா
      இந்த வெள்ளைக் காரன்
கோட்டை யெல்லாம் தான்பிடிக்க
      இந்த வெள்ளைக் காரன். 8

காலம்பர வாறானையா
      இந்த வெள்ளைக் காரன்
காடு மலை யைப்பிடிக்க
      இந்த வெள்ளைக் காரன். 9

மதியத்திலே வாறானையா
      இந்த வெள்ளைக் காரன்
மலைகள் மேலே கோட்டை கட்ட
      இந்த வெள்ளைக் காரன். 10

முதல் சாமம் வாறானையா
      இந்த வெள்ளைக் காரன்.
மூணு ராச்சி யம்பிடிக்க
      இந்த வெள்ளைக் காரன். 11

ரெண்டாஞ் சாமம் வாறானையா
      இந்த வெள்ளைக் காரன்
ரெண்டு ராச்சி யம்பிடிக்க
      இந்த வெள்ளைக் காரன். 12

மூணாஞ் சாமம் வாறானையா
      இந்த வெள்ளைக் காரன்
முஸ்தீப் பாகக் கொடியும் ஏற்ற
      இந்த வெள்ளைக் காரன். 13

சென்னையிலே சேர்ந்தா னையா
      இந்த வெள்ளைக் காரன்

சீரான கோட்டைக் குள்ளே
      இந்த வெள்ளைக் காரன்.       14

வந்தா னையா வந்தா னையா
      இந்த வெள்ளைக் காரன்
வர்ணம் போட்ட கப்பலிலே
      இந்த வெள்ளைக் காரன். 15

வாணவே டிக்கை யோடே
      இந்த வெள்ளைக் காரன்
வந்தானையா சென்னைக் குள்ளே
      இந்த வெள்ளைக் காரன். 16

பட்டாக்கத் திகளென்ன
      இந்த வெள்ளைக் காரன்
பாராபீ ரங்கி யென்ன
      இந்த வெள்ளைக் காரன். 17

சேலத்திலே வேட்டை யாட
      இந்த வெள்ளைக் காரன்
சின்னக் கைத்துப் பாக்கி யென்ன
      இந்த வெள்ளைக் காரன். 18

நீ்லகிரியில் வேட்டை யாட
      இந்த வெள்ளைக் காரன்
நீ்லத்துப் பாக்கியு மென்ன
      இந்த வெள்ளைக் காரன். 19

பெரிய மிருக வேட்டை யாட
      இந்த வெள்ளைக் காரன்
பெரிய துப்பாக் கியுமென்ன
      இந்த வெள்ளைக் காரன். 20

காடுமேடெல் லாமழிச்சு
      இந்த வெள்ளைக் காரன்
கட்டி னானாம் பங்களாவும்
      இந்த வெள்ளைக் காரன். 21

சிங்கம்புலி கரடி யெல்லாம்
      இந்த வெள்ளைக் காரன்.
சின்ன பின்ன மாக்கி னானாம்
      இந்த வெள்ளைக் காரன். 22

ஆனமத ஆனை யெல்லாம்
      இந்த வெள்ளைக் காரன்
அகழி வெட்டி அடக்கினானாம்
      இந்த வெள்ளைக் காரன். 23

கட்டை வண்டிக் குப்பதிலா
      இந்த வெள்ளைக் காரன்
காருவிநோ தமுமென்ன
      இந்த வெள்ளைக் காரன். 24

ரெட்டை மாட்டுக் குப்பதிலா
      இந்த வெள்ளைக் காரன்
ரெயிலுவிநோ தமுமென்ன
      இந்த வெள்ளைக் காரன். 25

சட்கா வண்டிக் குப்பதிலா
      இந்த வெள்ளைக் காரன்.
சைக்கிள் விநோ தமுமென்ன
      இந்த வெள்ளைக் காரன். 26

நாட்டு வண்டிக் குப்பதிலா
      இந்த வெள்ளைக் காரன்
மோட்டாரு விநோத மென்ன
      இந்த வெள்ளைக் காரன். 27

நிண்ணு நிண்ணு போறதுக்கு
      இந்த வெள்ளைக் காரன்
சின்ன டிராம் வண்டியென்ன
      இந்த வெள்ளைக் காரன் 28

அர்ச்சுனன்கா லம்பறந்த
      இந்த வெள்ளைக் காரன்
ஆகாசக் கப்ப லென்ன
      இந்த வெள்ளைக் காரன் 29

விளக்கெண்ணெய் விளக்குக்குப் பதிலா
      இந்த வெள்ளைக் காரன்
எலக்ட்ரிக் விளக்கு மென்ன
      இந்த வெள்ளைக் காரன் 30

தண்ணி சொட்டும் நிற்காமலே
      இந்த வெள்ளைக் காரன்
தார் ரோட்டுப் போட்ட தென்ன
      இந்த வெள்ளைக் காரன்! 31

அகஸ்மாத்தா ஆள்சாகாமே
      இந்த வெள்ளைக் காரன்

ஆஸ்பத்திரி கட்டி னானாம்
      இந்த வெள்ளைக் காரன். 32

தற்குறி கீற லெல்லாம்
      இந்த வெள்ளைக் காரன்
தானே மாற்றி விட்டா னையா
      இந்த வெள்ளைக் காரன். 33

உச்சிக் குடிமி யெல்லாம் போச்சு
      இந்த வெள்ளைக் காரன்
வச்ச நல்ல கிராப்பு மாச்சு
      இந்த வெள்ளைக் காரன். 34

நீரா காரத் தண்ணி போச்சு
      இந்த வெள்ளைக் காரன்
சாதாரணக் காபி யாச்சு
      இந்த வெள்ளைக்காரன். 35

ஒட்டுக்கோ வணமும் போச்சு
      இந்த வெள்ளைக் காரன்
சட்டைதுணி மணியு மாச்சு
      இந்த வெள்ளைக் காரன். 36

நாதி யற்ற பிள்ளைகளை
      இந்த வெள்ளைக் காரன்
ஆத ரிச்சு வாறானையா
      இந்த வெள்ளைக் காரன். 37

இத்தனைநாள் படுத்த பாயி
      இந்த வெள்ளைக் காரன்
மெத்தைங் கிடங் குடுத்திடிச்சு
      இந்த வெள்ளைக் காரன். 38

கண்ணுக் கெட்டுப் போயிட்டாலும்
      இந்த வெள்ளைக் காரன்
கண்கொடுத்து வாறா னையா
      இந்த வெள்ளைக் காரன். 39

வெள்ளெழுத்து மாறிருச்சே
      இந்த வெள்ளைக் காரன்
நல்லெழுத்து வந்தி ருச்சே
      இந்த வெள்ளைக் காரன். 40
-------------


This file was last updated on 20 April 2017
.